கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
4.04. அசை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசையின் வகைகள் ஆகும் இரண்டு
நேரசை நிரையசை அவற்றின் பெயராம்
நேரே தனியே வருவதால் நேரசை
ஓரெழுத் தால்வரும் நேரசை வகையே. ... 1
ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வரின்-அவை
இணைந்தே அசைவதால் நிரையசை யாமே. ... 2
குறிலோ நெடிலோ தனித்தும்-ஒற் றடுத்தும்
வருவது நேரசை எனும்பெயர் பெறுமே
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும்-ஒற் றடுத்தும் வந்தால் நிரையசை.
ஒற்றடுத் தென்பது குறில்-நெடில் பின்னோர்
ஒற்றுடை மெய்யெழுத் துவரல் குறிக்குமே. ... 3
4.05. நேரசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரசை அமையும் வகைகள் நான்கே
ஒருகுறில் தனித்து வந்தால் நேரசை
ஒருகுறில் ஓற்றடுத் துவந்தால் நேரசை
ஒருநெடில் தனித்து வந்தால் நேரசை
ஒருநெடில் ஓற்றடுத் துவந்தால் நேரசை. ... 1
’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2
தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின்
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில்
ஒட்டப் படாது நேரிசை யென்றே
யாப்ப ருங்கலம் வரையறை சொலுமே.
’அஎ உஅம் மூன்றுஞ் சுட்டு’
என்னும் தொடரில் சீர்முதல் தனிக்குறில்
நின்றே தனியாய் ஒலிப்பது விட்டிசை
சீர்முதல் விட்டிசைத் தனிக்குறில் நேரசை. ... 3
ஒற்றுகள் இரண்டாய் ஒன்றன் பின்னே
ஓரெழுத் தடுத்தே வரின்-அவ் வொற்றுகள்
தனியசை யாகா முன்னுள எழுத்துடன்
இணைந்தே நேரோ நிரையோ ஆகுமே. ... 4
’அர்த்தம், பார்த்தன்’ நேர்நேர் ஆகுமே
’பார்ப்பதில் ஆழ்ந்தொரு’ நேர்நிரை ஆகுமே
’படர்க்கை தமிழ்த்தாய்; நிரைநேர் ஆகுமே
’படர்ந்திடும் தமிழ்த்திரு’ நிரைநிரை ஆகுமே. ... 5
4.06. நிரையசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிரையசை அமையும் வகைகள் நான்கே
குறில்கள் இரண்டு வந்தால் நிரையசை
குறிலிணை ஓற்றடுத் துவந்தால் நிரையசை
குறில்நெடில் இணைந்து வந்தால் நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத் துவந்தால் நிரையசை. ... 1
’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுடன்.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2
ஒற்றிலா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றிலை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்திரு நேரசை. ... 3
4.07. அசையும் சொல்லும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் முழுதாய் வருமே
சொல்லொன் றெனவே இரண்டிலும் வரலாம்
பல்-பால் ஒருசொல் நேரசைச் சான்றெனில்
பழம்-மலர் ஒருசொல் நிரையசைச் சான்றே. ... 1
தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நின்றே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளெது மில்லை. ... 2
தனிநெடில் நேரசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 3
குறிலிணை நிரையசை பொருள்தர வரலாம்
குறிலிணை ஒற்றுடன் பொருள்தர வரலாம்
அணி-அணில் என்னும் சொற்கள் சான்றே. ... 4
குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 5
நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பதே
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றே. ... 6
நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றே. ... 7
--ரமணி, மீள்பார்வை: 19/09/2016
*****