Thursday, December 15, 2016

7.10. அளவடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.10. அளவடி முயற்சிி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி நாமும் முயன்றிடு வோமா?
அளவடி பயிலும் பாவகை அனைத்தும்
ஒருகை பார்ப்போம் சிறுகை யாயினும்! ... 1

ஆசிரியப்பா முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அகவற் பாவொன்று தகவுடன் புனைய
குறைந்தது மூன்று அடிகள் தன்னில்
மாமுன் நேரும் விளமுன் நிரைவரும்
ஆசிரியத் தளைகள் சீரிடை அடியிடை
மாசற ஒன்றிப் பிறதளை விரவுமே! ... 2

உள்ளுவ தனைத்திலு முயர்ந்ததே உறைந்து
தள்ளுவ தனைத்தும் தள்ளி வாழ்ந்தால்
வளமாய் மண்ணில் வாழ்க்கை நடக்குமே. ... 3

கூவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா தேமா
புளிமா தேமா தேமா கருவிளம்

உள்/ளுவ(து) (நிஆ) அனைத்/திலு(ம்) (நிஆ) 
 உயர்ந்/ததே (நிஆ) உறைந்/து (நேஆ)
தள்/ளுவ(து) (நிஆ) அனைத்/தும் (நேஆ) 
 தள்/ளி (நேஆ) வாழ்ந்/தால் (இவெ)
வள/மாய் (நேஆ) மண்/ணில் (நேஆ) 
 வாழ்க்/கை (இவெ) நடக்/குமே.

வெண்பா முயற்சி
(இன்னிசை வெண்பா)

வெண்பா இயற்றுதற்கு வெண்டளை யாம்தளையே;
வெண்டளையால் தானே விளைந்திடும் செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேருமென்
ஆமெனில் வெண்டளை யாம். ... 4

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமென வே. ... 5

(சிந்தியல் வெண்பா)
அடிகள் இரண்டில் குறள்வெண்பா மற்றும்
அடிகளில் நாலாம் அளவியல் வெண்பா
வடித்துத்தான் பார்ப்போமே நாம். ... 6

குறள் வெண்பா முயற்சி
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ ஐயா! ... 7

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா

ஏற்ற வகைகளில் வெண்டளை வந்தாலும்
ஈற்றசையின் வாய்பாடு தப்பு. ... 8

திருத்தியது
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல். ... 9

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

இன்னும் இயல்பாக
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்லு? ... 10

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் காசு

எல்/லோ/ரும் (வெவெ) நல்/லவர் (இவெ) 
 என்/றா/கிப் (வெவெ) போ/னா/லே (வெவெ) 
தொல்/லுல/கம் (வெவெ) தாங்/குமோ (இவெ) சொல்/லு.

இன்னிசை வெண்பா 
(அலகிட்டுத் தளைகளை அறிக)

நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலப் பல்வகையில் சேர்ந்துவந்(து)
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு. ... 11

நேரிசை வெண்பா 
(இப்படி எழுதுவது இன்னும் சிறப்பு)

நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலச் சேர்ந்துவந்து - பல்வகையில் 
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு. ... 12

கலிப்பா முயற்சி
(குறள் வெண்செந்துறை)

கலித்தளையே பெரிதுவரப் பிறதளைகள் விரவிவந்தால்
கலிப்பாவின் அடிகளாகித் துள்ளலோசை பயின்றுவரும். ... 13

(தரவு கொச்சகக் கலிப்பா)
நீலவானப் பெருவெளியில் நிறவகைகள் கோலமிடும் 
மாலையிலே தொடுத்திட்ட மலர்கள்போல் பலநிறங்கள்
காலையிலே எழுந்ததுமே கண்ணிறைக்கும் சிவந்தவானில்
ஆலயத்தின் மணியோசை ஆர்த்துந்து அமைதிதரும். ... 14

கூவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளஙாய் புளிமாங்காய் தேமாங்காய் கருவிளங்காய்

நீ/லவா/னப் (கத) பெரு/வெளி/யில் (கத) 
 நிற/வகை/கள் (வெவெ) கோ/லமி/டும் (வெவெ) 
மா/லையி/லே (கத) தொடுத்/திட்/ட (கத) 
 மலர்/கள்/போல் (கத) பல/நிறங்/கள் (வெவெ)
கா/லையி/லே (கத) எழுந்/தது/மே (வெவெ) 
 கண்/ணிறைக்/கும் (கத) சிவந்/தவா/னில் (வெவெ) 
ஆ/லயத்/தின் (கத) மணி/யோ/சை (வெவெ) 
 ஆர்த்/துவந்/து (கத) அமை/தித/ரும்.

*****

7.09. அளவடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.09. அளவடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நாற்சீர் அமைந்தே முடிவது அளவடி
நாற்சீர் அடியின் இயல்பென் றாவதால்
அளவடி யென்றே அழைக்கப் பட்டது
நேரடி என்றும் இதனை அழைப்பரே. ... 1

பழந்தமிழ் இலக்கியப் பனுவல் பலவும்
அளவடி கொண்டே அமைந்து வருவன.
அகவல் வெண்பா கலிப்பா என்னும்
மூவகைப் பாக்களில் அளவடி வருமே. ... 2
[அகவற்பா=ஆசிரியப்பா]

(ஆசிரியத் தாழிசை)
அளவடிச் சான்றுகள் எளிதில் காணலாம்.
அளவடி அமைத்தால் அழகுறும் கவிதை.
அளவடி யோசை செவியில் ஆர்க்குமே. ... 3

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ(டு) இணங்க வேண்டாம்.
--உலகநாதர், உலகநீதி

ஆசிரியப்பா சான்றுகள்
(நேரிசை ஆசிரியப்பா)

பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.
--கபிலர், புறநானூறு 107

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ
--சிலப்பதிகாரம், 1.2.73-79

தானமும் தருமமும் தவமும் தன்மைசேர் 
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும் 
மானவ வையம் நின்மகற்கு வைகலும்
ஈனமில் செல்வம் வந்தியைக என்னே
--கம்பராமாயணம் 2.1.80

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
--மகாகவி பாரதியார்

வெண்பாச் சான்றுகள் (ஈற்றடி சிந்தடி)
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--திருக்குறள் 1

(நேரிசை வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

(இன்னிசை வெண்பா)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
--நாலடியார் 36

கலிப்பா சான்றுகள்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
--மாணிக்கவாசகர், திருவாசகம் 19

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.
--இராமலிங்க அடிகள், ஆளுடைய அடிகள் அருள்மாலை 7

*****

7.07. சிந்தடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.07. சிந்தடி முயற்சி: கட்டளைச் சிந்தடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)

நாமும் சிந்தடி முயன்றிடு வோமா?
ஏழுமுதல் ஒன்பதுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் சிந்தடி புனைவோம் முதலிலே. ... 1

காலம் ஞாலம் பாலம் கோலம்
என்னும் சொல்வகை அடியெது கைவர
மாறுதல் அமைத்தல் வரைதல் நீங்குதல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
பாலங்கள் அமைத்துப்
பாவங்கள் நீக்கி
ஞாலம் நலம்பெறும் ஞானம் அறிவோமே. ... 2

ஏழு எழுத்துக் குறளடி (2 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலம் மாறிடும் உண்மை
ஞாலம் மாறுதல் உண்டோ?
பாலம் அமைக்கும் உள்ளம்
கோலம் வரைந்து பார்க்கும். ... 3

எட்டு எழுத்துக் குறளடி (3 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் இந்த
ஞாலமும் மாறுதல் உண்டோ?
பாலங்கள் அமைத்தல் நன்றே
கோலங்கள் மாறலாம் அன்றோ? ... 4

ஒன்பது எழுத்துக் குறளடி (3 + 3 + 3): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கடல்சூழ்
ஞாலமும் மாறுதல் ஆகுமோ?
பாலங்கள் அமைத்தல் நன்றெனில்
கோலங்கள் மாறலாம் அல்லவோ? ... 5

7.08. சிந்தடி முயற்சி: சீர்வகைச் சிந்தடி
(வஞ்சி விருத்தம்)

பழமொழிகள் இணைத்து:
நல்குர வில்லா நாக்கினை
வல்லிதின் அடக்க விழைவோம்
சொல்லது தேயாது கல்தேயினும்
நல்லதே உரைக்கப் பழகுவோம். ... 1

வஞ்சி விருத்தக் குறட்பாக்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா 
வானம் வழங்கா தெனின். ... 2

நாளெல்லாம் நடையாய் நடந்ததில்
தாளெல்லாம் ஆயின திண்ணென;
கோளெல்லாம் கூடும் அற்புத
நாளென்றால் விற்பனை யாகுமோ! ... 3

வேளாண்மைக் குறைவால் பயிர்கள்
தாளாகிப் போகத் தாளாத
வேளாளன் தற்கொலை துணிய
வாளா விருந்தது அரசு. ... 4

*****

7.06. சிந்தடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.06. சிந்தடிி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இருதளை யடுத்தே இயலும் சிந்தடி
சீர்வகை யாயின் முச்சீர் அமையும்
எழுத்தடி யாயின் ஏழெட் டொன்பதே. ... 1

வஞ்சிப் பாவிற் குரித்தென் றமையினும்
வெண்பா ஈற்றடி சிந்தடி யாய்வரும்
நேரிசை யகவலின் ஈற்றய லடியிலும்
இணைக்குற ளகவலின் இடையிலும் வருமே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா 
 தனிச்சொல்லுடன்)
தொல்காப் பியம்தரும் அடிகளின் பெயர்கள்
எழுத்துகள் கொண்டும் இயல்வன வாயினும்
சங்க காலம் தொட்டே பாக்கள்
சீர்வகை அடிகளில் யாக்கப் பட்டன
இதனால்
சீர்களை எண்ணியே அடிகளின் பெயர்களைக் 
காரிகை போன்ற நூல்களும் குறித்தன
எழுத்துகள் எண்ணும் கட்டளை அடிகள்
வழக்கில் வந்தன பிற்கா லத்தே. ... 3

கட்டளைச் சிந்தடிச் சான்று
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகள் தோறும் எழுத்துகள் ஒன்பதில்
முடிவுறும் சிந்தடிச் சான்று கீழே.
இவ்வகை அடிகள் வருவன அரிதே. ... 4

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 736

சீர்வகைச் சிந்தடிச் சான்று
வாளா வார்கழல் வீக்கிய
தாளார் தாமுடைந் தோடினார்
நாளை நாணுடை மங்கைமார்
தோளை நாணிலர் தோயவே.
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 1355

நீறணி மேனியன் நீள்மதியோ 
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரம்
சேறணி வளவயற் சிரபுரமே
---சம்பந்தர் தேவாரம், 1177

பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி.
---இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், 
புகார்க் காண்டம், கானல் வரி, 26

வள்ளி யப்பா பாப்பாப் பாட்டில்
அள்ளும் எளிய சொற்கள் வேய்ந்த
சிந்தடி சீராய்ச் சிரிப்பது காண்பீர். ... 5

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒண்ணு வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பந்து போல ஆனது
பலமாய் நானும் ஊதினேன்
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தாள் பார்க்கலாம்--அல்லது
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்!
---குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

வெண்பா ஈற்றடிச் சான்றுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெண்ணிறப் பாவிலும் வண்ணம் இறைக்கும்
வெண்பா ஈற்றடி பலவகை ரசங்களில்
கண்ணையும் கருத்தையும் கவரும் சான்றுகள்
திண்ணைப் பேச்செனப் பகிர்ந்து கொள்வோமே. ... 6

திருக்குறள்
என்புதோல் போர்த்த உடம்பு.
இம்மையும் இன்பம் தரும்.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
ஞாலத்தின் மாணப் பெரிது.
அன்றே மறப்பது நன்று. 5
எச்சத்தாற் காணப் படும்.
பிறவும் தமபோல் செயின்.
ஆரிருள் உயித்து விடும்.
மலையிணும் மாணப் பெரிது.
நாவினாற் சுட்ட வடு. 10
என்றும் இடும்பை தரும்.
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
அழுக்காறு இல்லாத இயல்பு.
தீவினை என்னும் செருக்கு.
தீயினும் அஞ்சப் படும். 15
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
எல்லா உயிருந் தொழும்.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மூக்கிற் கரியார் உடைத்து. 20

ஔவையார்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
குலத்தளவே ஆகுமாம் குணம்.
எல்லார்க்கும் பெய்யும் மழை.
தீதொழிய நன்மை செயல். 5
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
பாவிகாள் அந்தப் பணம்.
எனையாளும் ஈசன் செயல்.
கல்லாதான் கற்ற கவி.
முற்பவத்தில் செய்த வினை. 10

ஈற்றடிப் பழமொழிகள்: முன்றுறை அரையனார்
கற்றலிற் கேட்டலே நன்று.
பாம்பறியும் பாம்பின் கால்.
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
திருவினும் திட்பம் பெறும். 5
கல்தேயும் தேயாது சொல்.
நாவிற்கு நல்குரவு இல்.
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
தங்களை நாய்குரைத் தற்று. 10
நுணலும்தன் வாயால் கெடும்.
இருதலைக் கொள்ளியென் பார்.
மகனறிவு தந்தை அறிவு.
தமக்கு மருதுவர் தாம்.
தட்டாமல் செல்லாது உளி. 15
கண்டதூஉம் எண்ணிச் சொல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
முறைமைக்கு மூப்பிளமை இல்.
ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அஞ்சுவார்க் கில்லை அரண். 20
தனிமரம் காடாதல் இல்.
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
ஒன்றுக் குதவாத ஒன்று.
தாய்மிதித்(து) ஆகா முடம்.
இறைத்தோறும் ஊறும் கிணறு. 25

தனிப்பாடல் ஈற்றடிகள்
ஔவையார்
கொடையும் பிறவிக் குணம்.
கீச்சுக்கீச் சென்னுங் கிளி.
கூறாமல் சந்நியாசங் கொள்.
எறும்புந்தன் கையாலெண் சாண்.
புலவர்க்கும் வெண்பா புலி.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

திருவள்ளுவ நாயனார்
வருவது தானே வரும்.
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
அப்பாலும் பாழென் றரி.

காளமேகப் புலவர்
பாம்பாகும் வாழைப் பழம்.
ஆடுபரி காவிரியா மே.
துப்பாக்கி யோலைச் சுருள்.
பூசணிக்காய் ஈசனெனப் போற்று.
குடத்திலே கங்கையடங் கும். 5
போட்டாளே வேலயற்றுப் போய்.
அன்னமிறங் காமலலை வாள்.
எலியிழுத்துப் போகிற தென்.
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
குதிரை விற்றவனைக் கொண்டு. 10

*****

Saturday, December 3, 2016

7.04. குறளடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.04. குறளடி முயற்சி: கட்டளைக் குறளடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)

நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே. ... 1.

கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து 
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே. ... 2.

நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான். ... 3.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்:
எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]

ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே! ... 4.
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை 
நேரொன்றாசிரியம்; ஓசை: ஒழுகிசை யகவல்]

ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனத்தில்
விந்தைகள் செய்வானே! ... 5.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, 
ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே! ... 6.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் 
வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]

ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனத்திலே
விந்தைகள் செய்திடுவான். ... 7.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, 
ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

7.05. குறளடி முயற்சி: சீர்வகைக் குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே. ... 1.

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய ... 2.

வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துக் கீழே காண்போம். ... 3.

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ? ... 4.

இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை கீழே முடிப்போம். ... 5.

*****

(குறளடி வஞ்சிப்பா)
பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி! ... 1

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?
ஆனால்
குழந்தை கொஞ்சமும் அஞ்சிட வில்லை
குழந்தை பார்த்தது காணொளி யன்றோ? ... 2

*****

7.03. குறளடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.03. குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒருதளை யடுத்திரு சீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனவே. ... 1.

வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாது வரும்குற ளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தெனச் சொல்லுவர்
தொல்காப் பியர்தம் செய்யுள் இயலிலே.  ... 2.
[தொல்.சூத்.35]

கட்டளைக் குறளடிச் சான்று
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே. ... 3.

பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242

இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும். ... 4.

நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738

குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே. ... 5.

கரிய கவசம்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... [நறுமை=வாசனை]

மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில் 
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே. ... 6.
[ஏலுதல்=பொருந்துதல்]

சீர்வகைக் குறளடிச் சான்று
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே. ... 7.

சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64

இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே.

*****

Thursday, December 1, 2016

7.02. அடி வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.02. அடி வகைகள்
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும் 
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே. ... 1

கட்டளை அடிகள்
கட்டளைக் கலித்துறை கலிப்பா வினமாம்
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினா றெழுத்தாம்
நிரையில் தொடங்கின் பதினே ழெழுத்தே. ... 2

எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிர்மெய் உயிருமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த வெழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனின்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியின் அளவினைச் சொல்லுமே. ... 3
--[தொல்.சூத்.8.42]

தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி குறைந்தது நான்கெழுத் துகளில்
குறளடி உச்சம் ஆறெழுத் துகளாம்
சிந்தடி குறைந்தது ஏழெழுத் துகளாம்
சிந்தடி உச்சம் ஒன்பதாம் எழுத்துகள்
அளவடி குறைந்தது பத்தெழுத் துகளாம்
அளவடி உச்சம் பதினான் கெழுத்துகள்
நெடிலடி குறைந்தது பதினைந் தெழுத்துகள்
நெடிலடி உச்சம் பதினே ழெழுத்துகள்
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே. ... 4

எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே. ... 5

’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே. ... 6

’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே. ... 7

’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன-லூ-ர என்னும்
பத்தெழுத் துவரும் நேரடி யாமே. ... [நேரடி=அளவடி] ... 8

’அணிநகை நசை‍இய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே. ... 9

’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம். ... 10

[*Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]

சீர்வகை அடிகள்
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் எனவரும் வகைகள் ஐந்தே. ... 11

சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது  சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது  அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது  நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடில்
சீர்கள் நான்கில் முடியும்  அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே. ... 12

அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனாம் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்றே
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனர். ... 13

’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... [தொல்.சூத்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... [தொல்.சூத்.34]

அளவடி தொட்டே பிறவகை அடிகள் 
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும். 
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன மூவகைப் பாக்கள்
அகவல் வெண்பா கலிப்பா எனவே.
குறளடி சிந்தடி வஞ்சியில் வருமே. ... 14

சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்காய் எழுதப் படுமே. ... 15

*****

7.00. அடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.00. அடி
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியெனும் சொல்லின் அர்த்தமென் றாகும்
அடிக்கால் பாதம் ஆதி என்பன
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே. ... 1

[அடிக்கால்=காலின் அடிப்பாகம்]

செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் புரிதல் பொருளினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே. ... 2

சீர்களும் தளைகளும் பாவகைப் பெயர்பெற
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென. ... 3

[பாவகை = அகவல், வெண்பா, கலி, வஞ்சிப் பாக்கள்]

7.01. அடியென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியெனச் சொல்வரே. ... 1

முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

சீர்-தளை அடிகளில் எண்ணிப் பார்த்தால்
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் மொத்தம் வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினிற் சமமே.
இங்ஙனம்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க. ... 3

(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

(நேரிசை ஆசிரியப்பா)
மேல்வரும் குறட்பாச் சீர்களை எண்ணிட
1அகர 2முதல 3எழுத்தெல்லாம் 4ஆதி
5பகவன் 6முதற்றே 7உலகு.
மொத்தம் ஏழு வருவது காண்க. ... 4

மேல்வரும் குறட்பாத் தளைகளை எண்ணிட
அகர1 முதல2 எழுத்தெல்லாம்3 ஆதி
4பகவன் 5முதற்றே 6உலகு.
மொத்தம் ஆறே வருவது காண்க. ... 5

*****

Sunday, November 27, 2016

6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பிடு வோமே
எழுந்திடும் எடுத்துக் காட்டுகள் தந்தே
ஆசிரி யத்தளை அகவற் றளையெனப்
பேசப் படுவதும் நினைவிற் கொள்க. ... 1

நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரொன் றகவற் றளையே தொடரத்
தேமா தேமா தேமா தேமா 
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே. ... 2

நேரொன்றாசிரியத் தளை: தேமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி ... 3

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையொன் றகவற் றளையே தொடரக்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே. ... 4

நிரையொன்றாசிரியத் தளை: கருவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே. ... 5
[விசி=கட்டு]

இயற்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் வெண்டளை இசைந்தே தொடரக்
கீழ்வரும் நிரல்கள் தனிதனிச் சுற்றில்
பயிலும் வகையில் அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா 
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்.
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 6

இயற்சீர் வெண்டளை: புளிமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும். ... 7

இயற்சீர் வெண்டளை: கூவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே. ... 8

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம் 
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே. ... 9

வெண்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெண்சீர் வெண்டளை விளங்கித் தொடரக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 10

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாமே. ... 11

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே. ... 12

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே. ... 13

கலித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கலித்தளை துள்ளிக் கலித்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் 
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் 
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 14

கலித்தளை: புளிமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாமே. ... 15

கலித்தளை: கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாமே. ... 16

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாமே. ... 17

ஒன்றிய வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி 
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி 
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 18

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே. ... 19

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே. ... 20

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே. ... 21

ஒன்றாத வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி 
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி 
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 22

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும். ... 23

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே. ... 24

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே. ... 25

(நிலைமண்டில ஆசிரியப்பா)
விண்ணும் மண்ணும் நிகழ்த்தும் விந்தையைப்
எண்ணில் ஏழாம் தளைகளில் படித்தே
ஒவ்வொரு வகையிலும் ஒலிவே றாதலை
செவ்விதின் உணர்க விரிவாய்ப் பின்னே. ... 26

*** *** ***

6.04. தளை வாய்பாடுகள், சான்றுகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.04. தளை வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மேலே கண்ட தளைவகை விவரம்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கிட நினைவிற் கொள்வமே. ... 1

மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர்த் தளைவாய் பாடே. ... 2

காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகுமே
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடே. ... 3

6.05. எழுதளைச் சான்றுகள்
நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
மாமுன் நேரென ஒன்றும் அடிகளாய்
"வெற்றி வாழி வீரம் வாழி"
"உண்மை வாழி ஊக்கம் வாழி"
எனவரும் அடிகளில் சீரிடைத் தளைகள்
நேரொன் றாசிரி யத்தளை யாமே. ... 1

வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிதாய்
நேரசைச் சீர்களே பயிலக் காண்க. ... 2

(குறள் வெண்செந்துறை)
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
விளம்முன் நிரையாய் ஒன்றும் அடியென
"மங்கல குணபதி மணக்குளக் கணபதி!"
எனவரும் அடியினில் சீரிடைத் தளைகள்
நிரையொன் றாசிரி யத்தளை யாமே. ... 3

மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா 
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டும் வந்தே
அகவல் ஓசை இருவகை அமைதல்
விரிவாய்ப் பின்னோர் இயலிற் காண்போம். ... 4

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்தே கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளின் ஓட்டம் தடைப்பட
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் மிகவும் காணலாம். ... 5

அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவினில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்குமே. ... 6

இருவகை அகவல் இயற்சீர் வெண்டளை
விரவும் கீழுள சங்கப் பாடல்
சீர்களை அலகிட் டுப்பெயர் நோக்கிக்
கண்டே பாடலின் சீரிடை அடியிடை 
பயிலும் தளைவகை இக்கணம் அறிவீர். ... 7

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
--குறுந்தொகை, செம்புலப் பெனீரார், 40

இயற்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.

கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகளைக் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்தே வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க. ... 8

மேலுள குறட்சீர் வாய்பா டுகளின்
பேர்வகை நிரலே இயற்றளை பயிலும்
குறள்வெண் பாவென் றாதல் காண்க
சீர்களின் பெயர்களை இவ்விதம் நிரலில்
ஓரடி அமைத்தே ஓசை அறியலாம். ... 9

வெண்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிள~காய் தேமாங்காய் காசு

(குறள் வெண்செந்துறை)
வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில் 
சீரிடையே அடியிடையே காய்முன்நேர் வந்திடவே. ... 10

கலித்தளை
(குறள் வெண்செந்துறை)

காய்ச்சீர்முன் நிரைவரவே கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடையே பயில்வதனை எளிதாக அறியலாமே. ... 11

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய 
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள் 

ஒன்றிய வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 12

யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‍ஆகமப் 
---கி.வா.ஜ.

யோ/கத்/தினர் உரை/மறை/யினர் 
ஞா/னத்/தினர் நய/‍ஆ/கமப் 

ஒன்றாத வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)

கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 13

மந்தாநிலம் வந்தசைப்ப...
செந்தாமரை நாண்மலர்மிசை
---யா.கா.வி.

*****

Friday, November 25, 2016

6.03. எழுவகைத் தளைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.03. எழுவகைத் தளைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்முன் சீர்பிணைத் தெழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்தே ஏழெனும் வகையாய்
எழுவது அறிதல் எளிதென் றாமே. ... 1

சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டே. ... 2

இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா விற்கோர் தனிச்சீர் இலையெனில்
கலிப்பா விற்கோர் தனித்தளை யுண்டே. ... 3

நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கெனும் வகையில் அமைந்து வருமே
ஒன்றாத் தளைவகை மூன்றெனும் வகையிலே. ... 4

எழுதளைப் பெயர்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றும் தளைகள் நால்வகைப் பெயர்களாம்
நேரொன்று நிரையொன்று ஆசிரி யத்தளை
வெண்சீர் வெண்டளை ஒன்றிய-வஞ் சித்தளை. ... 5

ஒன்றாத் தளைகள் மூவகைப் பெயர்களாம்
இயற்சீர் வெண்டளை கலித்தளை மற்றும்
ஓன்றாத வஞ்சித் தளையென் றாமே. ... 6

ஈரசைச் சீர்நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை. ... 7

மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே. ... 8

கனிச்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சியே. ... 9

பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தளைகளின் பெயர்களை நோக்கி யறிந்தால்
ஆசிரியப் பாவகைத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவகைத் தளைகள் இரண்டும்
என்றே எழுவகை பிரிதல் காண்பமே. ... 10

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே. ... 11

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீர் காய்ச்சீர் அல்லது கனிச்சீர்
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்தே வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்றறி வோமே.... 12

*****

6.00. தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.00. தளை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தளைதல் என்றால் தகைத்தல் பிணித்தல்
தளைத்தல் எனினும் கட்டுதல் ஆகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு விலங்கு கயிறு சிலம்பென
ஒட்டிப் பிணைத்தே இசைந்திட வைக்குமே. ... 1

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்றுரு வாவது போலே
சீர்களை இசைவரச் செய்யுளில் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே. ... 2

6.01. தளையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடிகளில்
சீரிடை நின்றே சீர்களைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பே தளையெனப் படுமே.
சீர்களைத் தளைக்கும் தளையெனும் உறுப்பே
செய்யுளின் ஓசையைச் செவியுறச் செய்யுமே. ... 1

செய்யுளில் தளையால் எழுந்திடும் ஓசைகள்
செய்யுள் இயலில் தனித்தோர் இயலாய்
விரிவாய்ப் பின்னர் விளங்கிக் கொள்வமே. ... 2

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் ஆகும்
எதிரில் வருவது வரும்சீர் ஆகுமே. ... 3

இடம்வலம் எழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகுமே. ... 4

’பிறவிப் பெருங்கடல்’ எனும்சீர்த் தொடரில்
’பிறவிப்’ பென்பது இடப்புறம் நின்றசீர்
’பெருங்கடல்’ என்பது வலப்புறம் வரும்சீர். ... 5

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

சீர்க ளிரண்டு தளைப்பது காண
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே. ... 6

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
தளைகள் அடிகளுக் கிடையிலும் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே. ... 7

6.02. தளை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம். ... 1

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

நேர்முன் நேர்வர ஒன்றுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

(தனிச்சொல்)
ஏனெனில் 

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
நின்ற சீரது இயற்சீ ராகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது தேமா புளிமா வாகுமே

அல்லது

நின்ற சீரது மூவசை யாகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது நான்கில் ஒருகாய்ச் சீராம்
வருவது யாதொரு சீரென் றாயினும்
வரும்சீர் முதலசை நேரசை யாகுமே

இதனால்

நேர்முன் நேரசை ஒன்றுதல் குறிக்க
மாமுன் நேரென, காய்முன் நேரென
நின்றசீர் வருமசை நோக்கிக் குறிப்பரே.
தளைவாய் பாடில் ’முன்’எனும் சொல்லுக்
கெதிர்வரும் என்றே பொருள்கொள வேண்டுமே. ... 2

’நாராய் நாராய் செங்கால் நாராய்’
(தேமா தேமா தேமா தேமா )
எனவரும் செய்யுள் அடியின் தளைகளில்
நின்றசீர் மாச்சீர் வரும்சீர் நேர்முதல்
மாமுன் நேரென ஒன்றுதல் காண்க. ... 3

’கற்றதனால் ஆய’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் காய்ச்சீர் வரும்சீர் நேர்முதல்
காய்முன் நேரென ஒன்றுதல் காண்க. ... 4

நிரைமுன் நிரைவர ஒன்றுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் முன்நிரை யொன்றும் போது
நின்ற சீரது விளச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
விளம்முன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 5

’பழம்படு பனையின்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் விளச்சீர் வரும்சீர் நிரைமுதல்
விளம்முன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 6

நின்ற சீரது கனிச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
கனிமுன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 7

(ஆசிரியத் தாழிசை)
’புனல்பொழிவன சுனையெல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் கனிச்சீர் வரும்சீர் நிரைமுதல்
கனிமுன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 8

நேர்நிரை முன்வர ஒன்றாமை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை யெனும்வாய் பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் யெனும்வாய் பாடும்
தளைகள் அறிய மிகப்பயன் படுமே. ... 9

(ஆசிரியத்துறை)
’அகர முதல’ எனும்சீர்த் தொடரில்
மாமுன் நிரையெனும் ஒன்றாமையும்
’ஒருநோக்கம் பகல்செய்ய’ எனும்சீர்த் தொடரில்
காய்முன் நிரையெனும் ஒன்றாமையும் காண்க. ... 10

’மலர்மிசை ஏகினான்’ எனும்சீர்த் தொடரில்
விளம்முன் நேரெனும் ஒன்றாமையும்
’வரைமூடுவ மஞ்செல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
கனிமுன் நேரெனும் ஒன்றாமையும் காண்க. ... 11

*****

Friday, September 30, 2016

5.06. நாலசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.06. நாலசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர
நாலசைச் சீர்வரும் பதினா றெனவே. ... 1

நாலசைச் சீர்பதி னாறில் அமையும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கே. ... 2

நாலசைச் சீர்கள் அமைவதை அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும். ... 3

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்றே அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்றே அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமே. ... 4

(ஆசிரியத் தாழிசை)
தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ
தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ
என்பன பூச்சீர் வாய்பா டாமே. ... 5

இந்தக் குறிகளின் பூச்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர் ... 6

தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்
என்பன நிழற்சீர் வாய்ப்பா டாமே. ... 7

இந்தக் குறிகளின் நிழற்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை ... 8

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்பத னாலே
பொதுச்சீர் என்பது நாலசைச் சீரே. ... 9

பொதுவெனும் சொல்லிவண் பொதுசனம் போலச்
சிறப்பிலா எளிமை எனும்பொருள் படுமே
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
சிறப்பிலை யெனவே அருகி வருமே. ... 10

நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் எட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் எட்டும் கனிச்சீர் எனவும் 
கொண்டல கிட்டுத் தளைகளைக் குறிப்பரே. ... 11

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சான்றாய் ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே. ... 12

(கலித்தாழிசை)
’அங்கண்வானத் தமரரசரும்’ அலகிட 
அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
தேமாந்தண்பூ கருவிளங்கனி யாவது
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே. ... 13

’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித் தளையாம். ... 14

’அந்தரதுந்துபி நின்றியம்ப’ அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித் தளையாம். ... 15

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பா தன்னில் வருதலா காது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராதே. ... 16

பூச்சீர் நிழற்சீர் அமைந்த சொற்றொடர்கள்:
(குறள் வெண்செந்துறை)
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய் ... 17

வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது ... 18

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இப்படிச் சொற்களை முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே. ... 19

*** *** ***

5.05. மூவசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.05. மூவசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர்ந்தே
மூவசைச் சீர்கள் எட்டென வருமே. ... 1

ஈரசை இறுதியில் நேரசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர். ... 2

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்
என்பன காய்ச்சீர் வாய்பா டாமே
நேரசை யாகும் காய்-எனும் சொல்லே 
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 3

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
எனவரும் நால்வகை காய்ச்சீர் வகைகளே. ... 4

(குறள் வெண்செந்துறை)
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
என்பன கனிச்சீர் வாய்பா டாமே. ... 5

நிரையசை யாகும் கனி-எனும் சொல்லே 
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 6

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
எனவரும் நால்வகை கனிச்சீர் வகைகளே. ... 7

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பாக் குரியதால் காய்ச்சீர் நான்கும் 
வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 8

வஞ்சிப் பாவரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 9

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க. ... 10

(குறள் வெண்செந்துறை)
பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை ... 11

என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை] ... 12
--பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

காய்கனிச் சீர்களுக் கின்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார் ... 13

ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம். ... 14

(குறள் வெண்பா)
காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே. ... 15

(இன்னிசை அளவியல் வெண்பா)
ஆராரோ ஆரிரரோ ஐயாநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் ஐயாவுன் கண்மூடு
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நான்நின்றே தூங்குமுன்நீ தூங்கு! ... 16

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் காசு ... 17

வஞ்சியுரிக் கனிச்சீரே வந்துநிற்கும் சான்றெனவே
வஞ்சிப்பா அடிகள்கீழ் வருவதனைக் கண்டறிக. ... 18

(குறளடி வஞ்சிப்பாவின் பகுதி) 
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் ... 19
--யா.கா. மேற்கோள்

தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி ... 20

*****

5.04. ஈரசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.04. ஈரசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இங்ஙனம் நான்கே. ... 1

ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே. ... 2

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பது ஈரசைச் சீர்வாய் பாடாம்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நால்வகை ஈரசைச் சீர்களே
சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே. ... 3

அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர். ... 4
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’

தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே. ... 5

அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்பெயர் பெறுமே.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே. ... 6

அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே. ... 7

இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ... 8

இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் புளிமா
புளிமா புளிமா மலர்-என அறிக. ... 9

*****

Wednesday, September 28, 2016

5.02. சீர் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.02. சீர் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை நிரையசை பல்வகை இணைந்தே
ஓரசை முதலாய் நாலசை வரையில்
உருப்பெறும் சீர்களில் அதிகம் பயில்வன
ஈரசை மூவசை; நாலசை அரிதே. ... 1

சீர்களின் வகைகளை நினைவிற் கொள்ளச்
சீரசை நிரலைக் குறிக்கும் பேரெனும்
சீர்வாய் பாடுகள் திறம்பட உதவுமே. ... 2

சீர்வகைப் பெயர்தன் அசை-தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்றும் ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே. ... 3

அசைச்சீர் என்பது ஓரசைச் சீரே
அகவற் சீரெலாம் ஈரசை வகைகளே
வெண்சீர் என்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீர் என்பது நாலசைச் சீர்களே. ... 4

5.03. ஓரசைச் சீர்
(ஆசிரியத் தாழிசை)

அசையொன்று தனிச்சீராய் இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே. ... 2

நாள்-எனும் மலர்-எனும் இருபெயர் களிலும்
காசு பிறப்பு எனும்பெயர் களிலும்
ஓரசைச் சீரின் வாய்பா டமையுமே. ... 3

நாள்-மலர் காசு பிறப்பு பெயர்பெறும்
குறிகளை ஆய்ந்தால் கிடைக்கும் அசைகள்
தனிநேர் தனிநிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்களே.
வெண்பா ஈற்றடி இறுதிச் சீரென
இவற்றில் ஒன்று மட்டும் வருமே. ... 4

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்குற் றுகரம் நிரைபு. ... 5

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லா நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது காசு
நிரையுடன் அதுவே சேர்வது பிறப்பு. ... 6

அது-எனும் சொல்லசை நேர்பா மலரா?
து-எனும் எழுத்துகுற் றுகர மாயினும்
அ-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
அதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாமே. ... 7

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசு வாய்பா டினிலே வருமே. ... 8

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறில்பின் ஒற்றால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே. ... 9

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு-எனும் சொல்லாய் வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பு வாய்பா டாகி வருமே. ... 10

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

5.00. சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.00. சீர்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எத்தனை பொருட்கள் சீரெனும் சொலுக்கு!
அத்தனை யெனவரும் சீரெனும் உறுப்பே
நேரடி யாகவோ மறைமுக மாகவோ. ... 1

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே!
செய்யுள் என்பதோர் செடியெனக் கண்டால்
செடியின் இலைகளே சீர்கள் என்போம்
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் 
அடிகளாய்க் கிளைகளே ஆகி வந்திட
அடிமிசை இணையும் காம்பே தளைகளாம். ... 2

[கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்; 
தொடை=எதுகை, மோனை போன்றவை]

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே. ... 3

சீரே செய்யுளின் செல்வம் அழகு
சீரே செய்யுளின் நன்மை பெருமை
சீரே செய்யுளின் மதிப்பும் புகழும்
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே. ... 4

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேலுள பாப்பொற் காசு 
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே. ... 5

சீர்களே பெரிதும் செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும் 
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓசையில் ஓங்குமே. ... 6

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.

(குறள் வெண்செந்துறை)
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபேர்
ஆரணிய மாய்விரியும் யாப்புறுப் புகளிலே. ... 7

5.01. சீரென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ வருவதில்
இசைந்தே ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே. ... 1

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளக் காற்சுழல் பாணியில் தொடங்குமே 
தாள நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாள முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ டியைப்பரே. ... 2

[காற்சுழல் = காலச்சுழல்]

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளந்து வரலாம்
சீர்வரும் பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே. ... 3

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி யென்று. ... 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளெனக் கேட்பின்
அகர முதல உளது. ... 5

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

Wednesday, September 21, 2016

4.04. அசை வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.04. அசை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசையின் வகைகள் ஆகும் இரண்டு
நேரசை நிரையசை அவற்றின் பெயராம்
நேரே தனியே வருவதால் நேரசை
ஓரெழுத் தால்வரும் நேரசை வகையே. ... 1

ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வரின்-அவை
இணைந்தே அசைவதால் நிரையசை யாமே. ... 2

குறிலோ நெடிலோ தனித்தும்-ஒற் றடுத்தும்
வருவது நேரசை எனும்பெயர் பெறுமே
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும்-ஒற் றடுத்தும் வந்தால் நிரையசை.
ஒற்றடுத் தென்பது குறில்-நெடில் பின்னோர்
ஒற்றுடை மெய்யெழுத் துவரல் குறிக்குமே. ... 3

4.05. நேரசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை அமையும் வகைகள் நான்கே
ஒருகுறில் தனித்து வந்தால் நேரசை
ஒருகுறில் ஓற்றடுத் துவந்தால் நேரசை
ஒருநெடில் தனித்து வந்தால் நேரசை
ஒருநெடில் ஓற்றடுத் துவந்தால் நேரசை. ... 1

’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2

தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின் 
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில்
ஒட்டப் படாது நேரிசை யென்றே
யாப்ப ருங்கலம் வரையறை சொலுமே.
’அஎ உஅம் மூன்றுஞ் சுட்டு’
என்னும் தொடரில் சீர்முதல் தனிக்குறில்
நின்றே தனியாய் ஒலிப்பது விட்டிசை
சீர்முதல் விட்டிசைத் தனிக்குறில் நேரசை. ... 3

ஒற்றுகள் இரண்டாய் ஒன்றன் பின்னே
ஓரெழுத் தடுத்தே வரின்-அவ் வொற்றுகள்
தனியசை யாகா முன்னுள எழுத்துடன்
இணைந்தே நேரோ நிரையோ ஆகுமே. ... 4

’அர்த்தம், பார்த்தன்’ நேர்நேர் ஆகுமே
’பார்ப்பதில் ஆழ்ந்தொரு’ நேர்நிரை ஆகுமே
’படர்க்கை தமிழ்த்தாய்; நிரைநேர் ஆகுமே
’படர்ந்திடும் தமிழ்த்திரு’ நிரைநிரை ஆகுமே. ... 5

4.06. நிரையசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையசை அமையும் வகைகள் நான்கே
குறில்கள் இரண்டு வந்தால் நிரையசை
குறிலிணை ஓற்றடுத் துவந்தால் நிரையசை
குறில்நெடில் இணைந்து வந்தால் நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத் துவந்தால் நிரையசை. ... 1

’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுடன்.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2

ஒற்றிலா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றிலை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்திரு நேரசை. ... 3

4.07. அசையும் சொல்லும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் முழுதாய் வருமே
சொல்லொன் றெனவே இரண்டிலும் வரலாம்
பல்-பால் ஒருசொல் நேரசைச் சான்றெனில்
பழம்-மலர் ஒருசொல் நிரையசைச் சான்றே. ... 1

தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நின்றே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளெது மில்லை. ... 2

தனிநெடில் நேரசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 3

குறிலிணை நிரையசை பொருள்தர வரலாம்
குறிலிணை ஒற்றுடன் பொருள்தர வரலாம்
அணி-அணில் என்னும் சொற்கள் சான்றே. ... 4

குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 5

நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பதே
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றே. ... 6

நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றே. ... 7

--ரமணி, மீள்பார்வை: 19/09/2016

*****

4.00. அசை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.00. அசை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசையா தணுவும் அவனின் றியென்பர்
அசைவெனில் இங்கே அதிர்வெனும் பொருளாம்
அணுக்கள் தனியே அசைதல் அதிர்வெனில்
அணுக்கள் சேர்ந்தே அதிர்வொரு மித்தே
குணத்தில் மூலக் கூறென் றசையுமே. ... 1

அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கியும் விரிந்தும் ... [நுடங்கியும் = மெலிந்தும்]
இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பே. ... 2

4.01. யாப்பின் அசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே. ... 1

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்தே சீர்களில் இணைந்தும் 
தளைகளில் தழைத்தும் 
தொடைகளில் தொடுத்தும்
செழிக்கும் யாப்பில் செய்யுளாய் மிளிர்ந்தும்
இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் அசையெனப் படுமே
ஒன்றோ பலவோ அசைகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் சீரெனப் படுமே
ஒன்றோ பலவோ சீர்கள் இணைந்தே
ஒன்றாய் ஒலிப்பது அடியெனப் படுமே. ... 3

இரண்டோ மேலோ யாப்பில் அடிகள்
திரண்டு வருவது செய்யுள் ஆகுமே
செய்யுளின் ஓசை சீர்களைக் கட்டிச்
செயல்படும் தளையால் செவிகளில் விழுமே.
செய்யுள் படிப்பது உள்ளம் நிற்கச்
செய்யும் எதுகை மோனைத் தொடுப்பே. ... 4

இங்ஙனம் யாத்த செய்யுளின் சொற்களில்
தங்கும் பொருளதன் உயிராய் ஆள்வதில்
பொங்கும் உவகையாய்ப் பூக்கும் கவிதையே. ... 5

4.02. எழுத்தும் அசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்தே அசைந்திடும் போதோ
ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே. ... 1

’தாஅ’ என்று கேட்கும் போது
தாவெழுத் தோசை முழுவதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்வதில் ஒலிகள் மழுங்கி
’தா’வெழுத் தோசை சற்றே குறையுமே. ... 2

’குயி’எனச் சொல்லும் போதவ் வெழுத்துகள்
வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
பொருளெது மின்றிக் கேட்கும் அசைந்தே. ... 3

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போதோ
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்தே
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் கூட்டிசை கேட்குமே! ... 4

தனியெழுத் தொன்றும் தானே அசையும்
தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
தனித்தனி அசையென் றாகிட முடியும்.
தனிவரும் ஒற்றை எழுத்தே
தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே. ... 5

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
’அ’வெனச் சுட்டும் ’தீ’யெனச் சுடுமே
’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால் 
’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 6

4.03. அசைகளின் தொகையொலி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே. ... 1

அசைகள் ஒலிக்கும் மாத்திரைக் காலம்
அசையெழுத் துகளின் மாத்திரைத் தொகையாம்
இயற்பா வகையில் இவ்வெழுத் துகளொலி
செயல்படும் எழுத்தின் வகையைப் பொறுத்தே
அளவிற் குறைந்தோ மிக்கோ ஒலிக்குமே. ... 2

கதவு சொல்லில் மூன்றுயிர் மெய்யெனும்
விதத்தில் எழுத்துகள் மாத்திரை மூன்றெனில்
குற்றிய லுகரம் இறுதியில் வருவதால்
குற்றிய லுகரம் மாத்திரை அரையாய்
கதவெனும் சொல்லின் அசைகளில் பயிலும்
தொகையொலி மாத்திரை இரண்டரை யாமே. ... 3

இயற்பா ஆகா இசைப்பாக் களிலே
செயல்படும் அசைகளில் சீர்ப்படும் சந்தம்
தனிக்குறில் மாத்திரை அளவொன் றெனவும்
தனிநெடில், தனிக்குறில் பின்வரும் ஒற்றுடன்
தனிநெடில் பின்வரும் ஒற்றுடன் அளவில் 
இரண்டு மாத்திரை என்றிலக் கணமே. ... 4

*****

Friday, September 16, 2016

3.18. ஐகாரக் குறுக்கம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.18. ஐகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐ-யெனும் உயிர்மொழி தனித்தே வந்தால்
இருமாத் திரையள வாக ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பதே
ஐகாரக் குறுக்கம் எனும்பெயர் பெறுமே. ... 1

ஐயெனும் நெடிலே அய்யென் பதுபோல்
சொல்முதல் ஒலியில் ஒன்றரை மாத்திரை
சொல்லிடை கடையில் ஒருமாத் திரையாம்.. ... 2

ஐப்பசி, வைகல் முதல்-ஐ குறுகும்
தலைவன், இறைவன் இடை-ஐ குறுகும்
மழை-மலை நகை-கடை கடை-ஐ குறுகும்
இவை-ஐ காரக் குறுக்கமென் அறிகவே. ... 3

நசைஇ அசைஇ அளபெடைச் சொற்களில்
ஐகா ரம்கொளும் இருமாத் திரையாம்
இகரம் கொள்ளும் ஒரு மாத்திரையே. ... 4

3.19. ஔகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஔ-வெனும் உயிர்மொழி தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வருகிற போதும்
அளபெடை யாகி வருகிற போதும்
தன்னிரு மாத்திரை குன்றா தொலிக்குமே. ... 1

ஔ-எனும் தனிச்சொல் அழைத்தல் பொருளாம்
கௌ-எனும் ஔ-சேர் உயிர்மெய் கொள்ளும்
ஔஉ என்பது அளபெடை யாமே
இங்ஙனம் ஔ-வரின் முழுதாய் ஒலிக்குமே. ... 2

உயிரெழுத் துயிர்மெய் பின்வரும் ஔ-எனில்
முதலில் மட்டுமே நிற்கும் ஔ-வென
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்தே
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே. ... 3

ஔவெனும் நெடிலே அவ்வென் பதுபோல்
சொல்லின் முதலில் நின்றே ஒலித்தால்
ஔகாரக் குறுக்கமாய் ஒன்றரை மாத்திரை
அளவில் ஒலிக்கும் என்றுளம் கொள்வீர்
ஔவை வௌவால் கௌதாரி சான்றே. ... 4

3.20. மகரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ணகர னகர மெய்களின் முன்னும்
வகரம் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பதே. ... 1

கேண்ம்-எனும் சொற்பொருள் கேளும் ஆகும்
போன்ம்-எனில் போலும் சென்ம்-எனில் செல்லும்
மருண்ம்-எனில் மருளும் போன்ம்-எனில் போலும்
என்பன தனிமொழி மகரக் குறுக்கமே. ... 2

வரும்-வண்டி தரும்-வளவன் வாழும்-வழி வளம்-வரும்
என்றே வகரம் பின்வரும் மகரம்
புணர்மொழி மகரக் குறுக்கம் ஆமே. ... 3

3.21. ஆய்தக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பதே ஆய்தக் குறுக்கம் என்பதாம். ... 1

அல்+திணை சேர அஃறிணை ஆய்தமும்
கல்+தீது சேர கஃறீது ஆய்தமும்
முள்+தீது சேர முஃடீது ஆய்தமும்
கால்மாத் திரையொலி ஆய்தக் குறுக்கமே. ... 2

[சார்பெழுத்து வகைகளின் மாத்திரை விவரம் காண: 3.01. மாத்திரை]

3.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்தெனப் படுவது தனியெழுத் தாக
மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
கற்றையாய்ச் சேர்ந்தே சொல்லென் றாகி
மனதில் உள்ளதை வாக்கில் கொணர்ந்தே
கனவினை விதைக்கும் கனிவிதை யாமே. ... 1

எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்;
செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே. ... 2

எழுத்தென் பதுவே உருவிலோ ஒலியிலோ
மோனை எதுகை முரணெனும் வகைகளில்
தொடையெனும் உறுப்பினில் தொடுக்க உதவுமே. ... 3

இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பென் றசைந்து வருமே. ... 4

3.23. எழுத்தியல் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

Thursday, September 8, 2016

3.16. குற்றியலுகரம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.16. குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரம் குற்றிய லுகரமே. ... 1

குசுடு துபுறு எனவரும் உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுக ரமெனத்
தனிக்குறில் அல்லா மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே. ... 2

வல்லின உயிர்மெய் உகரம் ஆறினில் 
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் ஆறினில்
உகரம் குன்றி ஒலிப்பது இலையே. ... 3

தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே. ... 4

கு=பூமி சு=சுகம் து=புசி என்று
கு-சு-து என்னும்-ஓர் எழுத்துச் சொற்கள்
தனிக்குறி லாகத் தனதுமாத் திரையில்
குறையா தொலிக்கக் குற்றிய லுகரம்
ஆகா தெனவே முற்றிய லுகரமாம். ... 5

தனக்கு முன்னால் வரும்-அயல் எழுத்தின்
வகையைப் பொறுத்து வரும்குற் றுகரம்
வகைகளில் ஆறு தொடர்களில் அமையுமே.
ஈற்றுறும் உகரம் ஈற்றயல் எழுத்தின்
தோற்றம் ஓட்டிய தொடரில் அமையுமே. ... 6

வன்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

வல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சுக்கு மச்சு பட்டு 
பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு 
கூத்து காப்பு உற்று’
என்பன வன்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 7

மென்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

மெல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சங்கு பஞ்சு வண்டு 
பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு 
சாந்து பாம்பு சான்று’
என்பன மென்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 8

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

இடையின மெய்யை ஈற்றயல் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாமே.
’தேய்கு ஆர்கு அல்கு 
--வ்கு மாழ்கு தெள்கு’ ... ... ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து 
--வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு 
--வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 9

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இடைத்தொடர் வகையில் சு-டு-று உகரம்
இடையின மெய்யை ஈற்றயல் தாங்கி
அமையும் சொற்கள் இலையெனக் காண்க. ... 10

கு-து-பு என்னும் குற்றிய லுகரமும்
இடையின மெய்கள் அனைத்தையும் ஈற்றயல்
கொள்வ தில்லை என்றும் காண்க. ... 11

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

உயிர்மெய் யெழுத்தை ஈற்றயல் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாமே.
உயிர்மெய் யெழுத்தில் மெய்யின் பின்னே
உயிரெழுத் தாகச் சேர்ந்து வருவதால்
உயிர்த்தொடர்க் குற்றிய லுகரப் பெயராம்.
’படகு நகாசு அகடு 
தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 12

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

தனிநெடி லெழுத்தை ஈற்றயல் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’பாகு காசு நாடு 
காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 13

நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத் துச்சொல்.
’தகாது ஆகாது’ போன்ற சொற்களில்
இரண்டை விஞ்சிய எழுத்துகள் வரவே
உகரம் ஈற்றயல் நெடில்நின் றாலும்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராமே. ... 14

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆய்த எழுத்தை ஈற்றயல் கொண்டவை
ஆய்தத் தொடர்க்குற் றியலுகர மாமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத் தொடர்க்குற் றியலுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 15

குற்றியலுகரச் செயல்பாடு
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

குற்றிய லுகரம் செயல்படும் விதத்தைப்
பற்றியோர் மொழியியல் கருத்துண் டாமே
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
சொல்வது எளிதாய் அமைவ தில்லை
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா? ... 16

எனவே

காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாய்
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே. ... 17

ஆங்கிலச் சொற்கள் நம் வழக்கில்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஆங்கிலம் பயிலும் இன்றைய தமிழில்
ஓங்குதல் காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் 
ஷாப் டேப் பார்
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்தே
சாக்கு பாசு போட்டு 
ஶாப்பு டேப்பு பாரு
என்றுநம் பேச்சினில் ஒலித்திடும் அன்றோ? ... 18

[chalk pass boat shop tape bar]

3.17. குற்றியலிகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்
உகரம் இகர மாகத் திரிந்தே
அரைமாத் திரையாய்க் குறைந்தே ஒலித்துக் 
குற்றிய லிகரம் ஆகி விடுமே. ... 1

குற்றிய லிகரம் இருவகைப் படுமே:
நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் வருவது
புணர்மொழிக் குற்றிய லிகரம் ஆமே.
தனியொரு சொல்லில் குறையும் இகரம்
தனிமொழிக் குற்றிய லிகர மாமே. ... 2

நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
கண்டேன் + யான் = கண்டேனியான் என்றும்
வருவது புணர்மொழிக் குற்றிய லிகரமே. ... 3

மியாவெனும் முன்னிலை அசைச்சொல் உண்டு
மியாவெனும் சொல்வரும் மி-எனும் இகரம்
அதன்பின் யகரம் வருவதால் குன்றி
தனிமொழிக் குற்றிய லிகரம் ஆமே. ... 4

கேள் + மியா = கேண்மியா என்பதும்
செல் + மியா = சென்மியா என்பதும்
தனிமொழிக் குற்றிய லிகரச் சான்றே. ... 5

*****