Wednesday, September 28, 2016

5.02. சீர் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.02. சீர் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை நிரையசை பல்வகை இணைந்தே
ஓரசை முதலாய் நாலசை வரையில்
உருப்பெறும் சீர்களில் அதிகம் பயில்வன
ஈரசை மூவசை; நாலசை அரிதே. ... 1

சீர்களின் வகைகளை நினைவிற் கொள்ளச்
சீரசை நிரலைக் குறிக்கும் பேரெனும்
சீர்வாய் பாடுகள் திறம்பட உதவுமே. ... 2

சீர்வகைப் பெயர்தன் அசை-தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்றும் ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே. ... 3

அசைச்சீர் என்பது ஓரசைச் சீரே
அகவற் சீரெலாம் ஈரசை வகைகளே
வெண்சீர் என்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீர் என்பது நாலசைச் சீர்களே. ... 4

5.03. ஓரசைச் சீர்
(ஆசிரியத் தாழிசை)

அசையொன்று தனிச்சீராய் இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே. ... 2

நாள்-எனும் மலர்-எனும் இருபெயர் களிலும்
காசு பிறப்பு எனும்பெயர் களிலும்
ஓரசைச் சீரின் வாய்பா டமையுமே. ... 3

நாள்-மலர் காசு பிறப்பு பெயர்பெறும்
குறிகளை ஆய்ந்தால் கிடைக்கும் அசைகள்
தனிநேர் தனிநிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்களே.
வெண்பா ஈற்றடி இறுதிச் சீரென
இவற்றில் ஒன்று மட்டும் வருமே. ... 4

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்குற் றுகரம் நிரைபு. ... 5

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லா நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது காசு
நிரையுடன் அதுவே சேர்வது பிறப்பு. ... 6

அது-எனும் சொல்லசை நேர்பா மலரா?
து-எனும் எழுத்துகுற் றுகர மாயினும்
அ-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
அதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாமே. ... 7

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசு வாய்பா டினிலே வருமே. ... 8

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறில்பின் ஒற்றால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே. ... 9

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு-எனும் சொல்லாய் வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பு வாய்பா டாகி வருமே. ... 10

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

No comments:

Post a Comment