Wednesday, September 28, 2016

5.00. சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.00. சீர்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எத்தனை பொருட்கள் சீரெனும் சொலுக்கு!
அத்தனை யெனவரும் சீரெனும் உறுப்பே
நேரடி யாகவோ மறைமுக மாகவோ. ... 1

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே!
செய்யுள் என்பதோர் செடியெனக் கண்டால்
செடியின் இலைகளே சீர்கள் என்போம்
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் 
அடிகளாய்க் கிளைகளே ஆகி வந்திட
அடிமிசை இணையும் காம்பே தளைகளாம். ... 2

[கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்; 
தொடை=எதுகை, மோனை போன்றவை]

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே. ... 3

சீரே செய்யுளின் செல்வம் அழகு
சீரே செய்யுளின் நன்மை பெருமை
சீரே செய்யுளின் மதிப்பும் புகழும்
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே. ... 4

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேலுள பாப்பொற் காசு 
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே. ... 5

சீர்களே பெரிதும் செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும் 
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓசையில் ஓங்குமே. ... 6

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.

(குறள் வெண்செந்துறை)
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபேர்
ஆரணிய மாய்விரியும் யாப்புறுப் புகளிலே. ... 7

5.01. சீரென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ வருவதில்
இசைந்தே ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே. ... 1

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளக் காற்சுழல் பாணியில் தொடங்குமே 
தாள நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாள முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ டியைப்பரே. ... 2

[காற்சுழல் = காலச்சுழல்]

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளந்து வரலாம்
சீர்வரும் பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே. ... 3

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி யென்று. ... 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளெனக் கேட்பின்
அகர முதல உளது. ... 5

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

No comments:

Post a Comment