கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
7.00. அடி
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியெனும் சொல்லின் அர்த்தமென் றாகும்
அடிக்கால் பாதம் ஆதி என்பன
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே. ... 1
[அடிக்கால்=காலின் அடிப்பாகம்]
செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் புரிதல் பொருளினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே. ... 2
சீர்களும் தளைகளும் பாவகைப் பெயர்பெற
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென. ... 3
[பாவகை = அகவல், வெண்பா, கலி, வஞ்சிப் பாக்கள்]
7.01. அடியென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியெனச் சொல்வரே. ... 1
முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே. ... 2
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
சீர்-தளை அடிகளில் எண்ணிப் பார்த்தால்
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் மொத்தம் வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினிற் சமமே.
இங்ஙனம்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க. ... 3
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
(நேரிசை ஆசிரியப்பா)
மேல்வரும் குறட்பாச் சீர்களை எண்ணிட
1அகர 2முதல 3எழுத்தெல்லாம் 4ஆதி
5பகவன் 6முதற்றே 7உலகு.
மொத்தம் ஏழு வருவது காண்க. ... 4
மேல்வரும் குறட்பாத் தளைகளை எண்ணிட
அகர1 முதல2 எழுத்தெல்லாம்3 ஆதி
4பகவன் 5முதற்றே 6உலகு.
மொத்தம் ஆறே வருவது காண்க. ... 5
*****
No comments:
Post a Comment