கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
7.10. அளவடி முயற்சிி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி நாமும் முயன்றிடு வோமா?
அளவடி பயிலும் பாவகை அனைத்தும்
ஒருகை பார்ப்போம் சிறுகை யாயினும்! ... 1
ஆசிரியப்பா முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அகவற் பாவொன்று தகவுடன் புனைய
குறைந்தது மூன்று அடிகள் தன்னில்
மாமுன் நேரும் விளமுன் நிரைவரும்
ஆசிரியத் தளைகள் சீரிடை அடியிடை
மாசற ஒன்றிப் பிறதளை விரவுமே! ... 2
உள்ளுவ தனைத்திலு முயர்ந்ததே உறைந்து
தள்ளுவ தனைத்தும் தள்ளி வாழ்ந்தால்
வளமாய் மண்ணில் வாழ்க்கை நடக்குமே. ... 3
கூவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா தேமா
புளிமா தேமா தேமா கருவிளம்
உள்/ளுவ(து) (நிஆ) அனைத்/திலு(ம்) (நிஆ)
உயர்ந்/ததே (நிஆ) உறைந்/து (நேஆ)
தள்/ளுவ(து) (நிஆ) அனைத்/தும் (நேஆ)
தள்/ளி (நேஆ) வாழ்ந்/தால் (இவெ)
வள/மாய் (நேஆ) மண்/ணில் (நேஆ)
வாழ்க்/கை (இவெ) நடக்/குமே.
வெண்பா முயற்சி
(இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றுதற்கு வெண்டளை யாம்தளையே;
வெண்டளையால் தானே விளைந்திடும் செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேருமென்
ஆமெனில் வெண்டளை யாம். ... 4
வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமென வே. ... 5
(சிந்தியல் வெண்பா)
அடிகள் இரண்டில் குறள்வெண்பா மற்றும்
அடிகளில் நாலாம் அளவியல் வெண்பா
வடித்துத்தான் பார்ப்போமே நாம். ... 6
குறள் வெண்பா முயற்சி
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ ஐயா! ... 7
தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா
ஏற்ற வகைகளில் வெண்டளை வந்தாலும்
ஈற்றசையின் வாய்பாடு தப்பு. ... 8
திருத்தியது
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல். ... 9
தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்
இன்னும் இயல்பாக
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்லு? ... 10
தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் காசு
எல்/லோ/ரும் (வெவெ) நல்/லவர் (இவெ)
என்/றா/கிப் (வெவெ) போ/னா/லே (வெவெ)
தொல்/லுல/கம் (வெவெ) தாங்/குமோ (இவெ) சொல்/லு.
இன்னிசை வெண்பா
(அலகிட்டுத் தளைகளை அறிக)
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலப் பல்வகையில் சேர்ந்துவந்(து)
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு. ... 11
நேரிசை வெண்பா
(இப்படி எழுதுவது இன்னும் சிறப்பு)
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலச் சேர்ந்துவந்து - பல்வகையில்
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு. ... 12
கலிப்பா முயற்சி
(குறள் வெண்செந்துறை)
கலித்தளையே பெரிதுவரப் பிறதளைகள் விரவிவந்தால்
கலிப்பாவின் அடிகளாகித் துள்ளலோசை பயின்றுவரும். ... 13
(தரவு கொச்சகக் கலிப்பா)
நீலவானப் பெருவெளியில் நிறவகைகள் கோலமிடும்
மாலையிலே தொடுத்திட்ட மலர்கள்போல் பலநிறங்கள்
காலையிலே எழுந்ததுமே கண்ணிறைக்கும் சிவந்தவானில்
ஆலயத்தின் மணியோசை ஆர்த்துந்து அமைதிதரும். ... 14
கூவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளஙாய் புளிமாங்காய் தேமாங்காய் கருவிளங்காய்
நீ/லவா/னப் (கத) பெரு/வெளி/யில் (கத)
நிற/வகை/கள் (வெவெ) கோ/லமி/டும் (வெவெ)
மா/லையி/லே (கத) தொடுத்/திட்/ட (கத)
மலர்/கள்/போல் (கத) பல/நிறங்/கள் (வெவெ)
கா/லையி/லே (கத) எழுந்/தது/மே (வெவெ)
கண்/ணிறைக்/கும் (கத) சிவந்/தவா/னில் (வெவெ)
ஆ/லயத்/தின் (கத) மணி/யோ/சை (வெவெ)
ஆர்த்/துவந்/து (கத) அமை/தித/ரும்.
*****
No comments:
Post a Comment