கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
6.04. தளை வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேலே கண்ட தளைவகை விவரம்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கிட நினைவிற் கொள்வமே. ... 1
மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர்த் தளைவாய் பாடே. ... 2
காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகுமே
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடே. ... 3
6.05. எழுதளைச் சான்றுகள்
நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
மாமுன் நேரென ஒன்றும் அடிகளாய்
"வெற்றி வாழி வீரம் வாழி"
"உண்மை வாழி ஊக்கம் வாழி"
எனவரும் அடிகளில் சீரிடைத் தளைகள்
நேரொன் றாசிரி யத்தளை யாமே. ... 1
வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா
கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிதாய்
நேரசைச் சீர்களே பயிலக் காண்க. ... 2
(குறள் வெண்செந்துறை)
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.
நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
விளம்முன் நிரையாய் ஒன்றும் அடியென
"மங்கல குணபதி மணக்குளக் கணபதி!"
எனவரும் அடியினில் சீரிடைத் தளைகள்
நிரையொன் றாசிரி யத்தளை யாமே. ... 3
மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டும் வந்தே
அகவல் ஓசை இருவகை அமைதல்
விரிவாய்ப் பின்னோர் இயலிற் காண்போம். ... 4
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்தே கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளின் ஓட்டம் தடைப்பட
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் மிகவும் காணலாம். ... 5
அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவினில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்குமே. ... 6
இருவகை அகவல் இயற்சீர் வெண்டளை
விரவும் கீழுள சங்கப் பாடல்
சீர்களை அலகிட் டுப்பெயர் நோக்கிக்
கண்டே பாடலின் சீரிடை அடியிடை
பயிலும் தளைவகை இக்கணம் அறிவீர். ... 7
யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
--குறுந்தொகை, செம்புலப் பெனீரார், 40
இயற்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகளைக் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்தே வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க. ... 8
மேலுள குறட்சீர் வாய்பா டுகளின்
பேர்வகை நிரலே இயற்றளை பயிலும்
குறள்வெண் பாவென் றாதல் காண்க
சீர்களின் பெயர்களை இவ்விதம் நிரலில்
ஓரடி அமைத்தே ஓசை அறியலாம். ... 9
வெண்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07
யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிள~காய் தேமாங்காய் காசு
(குறள் வெண்செந்துறை)
வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில்
சீரிடையே அடியிடையே காய்முன்நேர் வந்திடவே. ... 10
கலித்தளை
(குறள் வெண்செந்துறை)
காய்ச்சீர்முன் நிரைவரவே கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடையே பயில்வதனை எளிதாக அறியலாமே. ... 11
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை
ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள்
ஒன்றிய வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 12
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நயஆகமப்
---கி.வா.ஜ.
யோ/கத்/தினர் உரை/மறை/யினர்
ஞா/னத்/தினர் நய/ஆ/கமப்
ஒன்றாத வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 13
மந்தாநிலம் வந்தசைப்ப...
செந்தாமரை நாண்மலர்மிசை
---யா.கா.வி.
*****
No comments:
Post a Comment