கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
7.02. அடி வகைகள்
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும்
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே. ... 1
கட்டளை அடிகள்
கட்டளைக் கலித்துறை கலிப்பா வினமாம்
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினா றெழுத்தாம்
நிரையில் தொடங்கின் பதினே ழெழுத்தே. ... 2
எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிர்மெய் உயிருமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த வெழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனின்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியின் அளவினைச் சொல்லுமே. ... 3
--[தொல்.சூத்.8.42]
தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி குறைந்தது நான்கெழுத் துகளில்
குறளடி உச்சம் ஆறெழுத் துகளாம்
சிந்தடி குறைந்தது ஏழெழுத் துகளாம்
சிந்தடி உச்சம் ஒன்பதாம் எழுத்துகள்
அளவடி குறைந்தது பத்தெழுத் துகளாம்
அளவடி உச்சம் பதினான் கெழுத்துகள்
நெடிலடி குறைந்தது பதினைந் தெழுத்துகள்
நெடிலடி உச்சம் பதினே ழெழுத்துகள்
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே. ... 4
எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே. ... 5
’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே. ... 6
’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே. ... 7
’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன-லூ-ர என்னும்
பத்தெழுத் துவரும் நேரடி யாமே. ... [நேரடி=அளவடி] ... 8
’அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே. ... 9
’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம். ... 10
[*Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]
சீர்வகை அடிகள்
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் எனவரும் வகைகள் ஐந்தே. ... 11
சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடில்
சீர்கள் நான்கில் முடியும் அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே. ... 12
அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனாம் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்றே
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனர். ... 13
’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... [தொல்.சூத்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... [தொல்.சூத்.34]
அளவடி தொட்டே பிறவகை அடிகள்
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும்.
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன மூவகைப் பாக்கள்
அகவல் வெண்பா கலிப்பா எனவே.
குறளடி சிந்தடி வஞ்சியில் வருமே. ... 14
சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்காய் எழுதப் படுமே. ... 15
*****
No comments:
Post a Comment