கவிதையில் யாப்பு
ரமணி
முன்னுரை
கற்கச் சிறந்தவழி கற்பித்தல் என்றுசொல்வர் கற்கையில் கற்பிக்கும் கற்பனை - உற்றெதெனில் கற்பதில் நுண்மைகள் கண்டே விரிக்குமுளம் விற்பனம் கொள்ளும் மிளிர்ந்து.
இவற்றுடன் தமிழ் இணையுப் பல்கலைக் கழகத்தில் உள்ள அமிதசாகரானின் ’யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை’ மற்றும் வைத்தியநாத தேசிகரின் ’இலக்கண விளக்கம்’ போன்ற புத்தகங்களையும் பார்வையிட்டேன். இந்த முயற்சியும் ’சந்தவசந்தம்’ குழும அறிஞர்களின் வழிகாட்டலும், அடிப்படை யாப்பிலக்கணம் அறிந்து சொந்தமாக மரபுக் கவிதைகள் புனையும் ஊக்கத்தையும் ஆற்றலையும் எனக்குத் தந்தன.
இந்தப் புத்தகங்களை நான் பயின்றபோது, இவற்றில் உள்ள செய்திகள் நினைவில் நிற்கும் வகையிலும், ஒரு மாணவனின் கையேடாகவும், யாப்பிலக்கணக் கூறுகளை நானே செய்யுள் வடிவில் எழுதிப் பார்த்தால் என்ன தோன்றியது. பலவிதப் பாவகைகள், பாவினங்கள் முயன்றுபார்க்க இது ஒரு பயிற்சியாகவும் இருக்கும் என்று தோன்றவே, யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்புகள், வெண்பா, ஆசிரியப்பா மற்றும் இவற்றின் பாவினங்கள் வரையில் இலக்கணச் செய்யுட்கள் எழுதிவைத்தேன். இவற்றை ஒரு தொடராகவும் ’ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்’ போன்ற வலைதளங்களில் வெளியிட்டேன்.
இப்போது தொடரப் படித்துப்பார்க்கும் போது, அது நன்றாக வந்திருப்பது தெரிகிறது. எனவே, இது புதிதாக மரபுக் கவிதை முனையும் மாணவர்களுக்கு ஒரு கையேடாகப் பயன்படலாம் என்று கருதி இதை இக்குழுமத்தில் தவணை முறையில் வெளியிடுகிறேன். தொடரில் உள்ள செய்யுட்கள் பெரிதும் எதுகை-மோனை இல்லாத, செந்தொடை அமைந்த வெறும்பா (blank verse) வடிவில் எழுதி, அவை உரைநடைக்கு அருகில் இருக்குமாறும், எளிதில் மனதில் நிற்குமாறும் அமைத்துள்ளேன்.
தொடரில் வரும் பயிற்சிகள் பலவற்றைக் கணினி மூலம் செய்துபார்க்கும் ஒரு புது முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதற்கான மென்பொருள் செயலிகள் எழுதித்தந்த என் மகன் திரு. பிரஷாந்த் குருமூர்த்திக்கு என் நன்றி.
தொடர் முடிந்ததும், தவணைகளை முறையாகத் தொகுத்து ஒரு மின்னூல் ஆக்கவும் திட்டம் உள்ளது. என் முயற்சிகளுக்குத் திருவருளும், குருவருளும், அறிஞர்கள் மற்றும் மரபுக் கவிதை திறம்பட எழுதும் அன்பர்கள் சொல்லும் பிழை திருத்தங்களும், புதிதாகக் கற்போரின் பங்கேற்பும் பின்னூட்டமும் துணைநிற்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
--ரமணி, 02/08/2016 கலி. 18/04/5117 --மீள்பார்வை: 23/11/2016*** *** ***
No comments:
Post a Comment