கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
7.03. குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒருதளை யடுத்திரு சீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனவே. ... 1.
வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாது வரும்குற ளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தெனச் சொல்லுவர்
தொல்காப் பியர்தம் செய்யுள் இயலிலே. ... 2.
[தொல்.சூத்.35]
கட்டளைக் குறளடிச் சான்று
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே. ... 3.
பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242
இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும். ... 4.
நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738
குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே. ... 5.
கரிய கவசம்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... [நறுமை=வாசனை]
மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில்
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே. ... 6.
[ஏலுதல்=பொருந்துதல்]
சீர்வகைக் குறளடிச் சான்று
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே. ... 7.
சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64
இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே.
*****
No comments:
Post a Comment