கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
5.05. மூவசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர்ந்தே
மூவசைச் சீர்கள் எட்டென வருமே. ... 1
ஈரசை இறுதியில் நேரசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர். ... 2
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்
என்பன காய்ச்சீர் வாய்பா டாமே
நேரசை யாகும் காய்-எனும் சொல்லே
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 3
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
எனவரும் நால்வகை காய்ச்சீர் வகைகளே. ... 4
(குறள் வெண்செந்துறை)
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
என்பன கனிச்சீர் வாய்பா டாமே. ... 5
நிரையசை யாகும் கனி-எனும் சொல்லே
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 6
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
எனவரும் நால்வகை கனிச்சீர் வகைகளே. ... 7
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பாக் குரியதால் காய்ச்சீர் நான்கும்
வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 8
வஞ்சிப் பாவரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 9
தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க. ... 10
(குறள் வெண்செந்துறை)
பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை ... 11
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை] ... 12
--பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49
காய்கனிச் சீர்களுக் கின்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார் ... 13
ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம். ... 14
(குறள் வெண்பா)
காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே. ... 15
(இன்னிசை அளவியல் வெண்பா)
ஆராரோ ஆரிரரோ ஐயாநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் ஐயாவுன் கண்மூடு
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நான்நின்றே தூங்குமுன்நீ தூங்கு! ... 16
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் காசு ... 17
வஞ்சியுரிக் கனிச்சீரே வந்துநிற்கும் சான்றெனவே
வஞ்சிப்பா அடிகள்கீழ் வருவதனைக் கண்டறிக. ... 18
(குறளடி வஞ்சிப்பாவின் பகுதி)
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் ... 19
--யா.கா. மேற்கோள்
தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி ... 20
*****
No comments:
Post a Comment