கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
5.06. நாலசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர
நாலசைச் சீர்வரும் பதினா றெனவே. ... 1
நாலசைச் சீர்பதி னாறில் அமையும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கே. ... 2
நாலசைச் சீர்கள் அமைவதை அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும். ... 3
நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்றே அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்றே அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமே. ... 4
(ஆசிரியத் தாழிசை)
தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ
தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ
என்பன பூச்சீர் வாய்பா டாமே. ... 5
இந்தக் குறிகளின் பூச்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர் ... 6
தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்
என்பன நிழற்சீர் வாய்ப்பா டாமே. ... 7
இந்தக் குறிகளின் நிழற்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை ... 8
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்பத னாலே
பொதுச்சீர் என்பது நாலசைச் சீரே. ... 9
பொதுவெனும் சொல்லிவண் பொதுசனம் போலச்
சிறப்பிலா எளிமை எனும்பொருள் படுமே
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
சிறப்பிலை யெனவே அருகி வருமே. ... 10
நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் எட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் எட்டும் கனிச்சீர் எனவும்
கொண்டல கிட்டுத் தளைகளைக் குறிப்பரே. ... 11
(இணைக்குறள் ஆசிரியப்பா)
சான்றாய் ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே. ... 12
(கலித்தாழிசை)
’அங்கண்வானத் தமரரசரும்’ அலகிட
அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
தேமாந்தண்பூ கருவிளங்கனி யாவது
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே. ... 13
’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித் தளையாம். ... 14
’அந்தரதுந்துபி நின்றியம்ப’ அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித் தளையாம். ... 15
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பா தன்னில் வருதலா காது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராதே. ... 16
பூச்சீர் நிழற்சீர் அமைந்த சொற்றொடர்கள்:
(குறள் வெண்செந்துறை)
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய் ... 17
வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது ... 18
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இப்படிச் சொற்களை முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே. ... 19
*** *** ***
I want all some more information
ReplyDelete