Friday, September 30, 2016

5.04. ஈரசைச் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

5.04. ஈரசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இங்ஙனம் நான்கே. ... 1

ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே. ... 2

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பது ஈரசைச் சீர்வாய் பாடாம்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நால்வகை ஈரசைச் சீர்களே
சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே. ... 3

அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர். ... 4
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’

தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே. ... 5

அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்பெயர் பெறுமே.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே. ... 6

அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே. ... 7

இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ... 8

இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் புளிமா
புளிமா புளிமா மலர்-என அறிக. ... 9

*****

No comments:

Post a Comment