Friday, September 16, 2016

3.18. ஐகாரக் குறுக்கம்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.18. ஐகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐ-யெனும் உயிர்மொழி தனித்தே வந்தால்
இருமாத் திரையள வாக ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பதே
ஐகாரக் குறுக்கம் எனும்பெயர் பெறுமே. ... 1

ஐயெனும் நெடிலே அய்யென் பதுபோல்
சொல்முதல் ஒலியில் ஒன்றரை மாத்திரை
சொல்லிடை கடையில் ஒருமாத் திரையாம்.. ... 2

ஐப்பசி, வைகல் முதல்-ஐ குறுகும்
தலைவன், இறைவன் இடை-ஐ குறுகும்
மழை-மலை நகை-கடை கடை-ஐ குறுகும்
இவை-ஐ காரக் குறுக்கமென் அறிகவே. ... 3

நசைஇ அசைஇ அளபெடைச் சொற்களில்
ஐகா ரம்கொளும் இருமாத் திரையாம்
இகரம் கொள்ளும் ஒரு மாத்திரையே. ... 4

3.19. ஔகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஔ-வெனும் உயிர்மொழி தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வருகிற போதும்
அளபெடை யாகி வருகிற போதும்
தன்னிரு மாத்திரை குன்றா தொலிக்குமே. ... 1

ஔ-எனும் தனிச்சொல் அழைத்தல் பொருளாம்
கௌ-எனும் ஔ-சேர் உயிர்மெய் கொள்ளும்
ஔஉ என்பது அளபெடை யாமே
இங்ஙனம் ஔ-வரின் முழுதாய் ஒலிக்குமே. ... 2

உயிரெழுத் துயிர்மெய் பின்வரும் ஔ-எனில்
முதலில் மட்டுமே நிற்கும் ஔ-வென
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்தே
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே. ... 3

ஔவெனும் நெடிலே அவ்வென் பதுபோல்
சொல்லின் முதலில் நின்றே ஒலித்தால்
ஔகாரக் குறுக்கமாய் ஒன்றரை மாத்திரை
அளவில் ஒலிக்கும் என்றுளம் கொள்வீர்
ஔவை வௌவால் கௌதாரி சான்றே. ... 4

3.20. மகரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ணகர னகர மெய்களின் முன்னும்
வகரம் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பதே. ... 1

கேண்ம்-எனும் சொற்பொருள் கேளும் ஆகும்
போன்ம்-எனில் போலும் சென்ம்-எனில் செல்லும்
மருண்ம்-எனில் மருளும் போன்ம்-எனில் போலும்
என்பன தனிமொழி மகரக் குறுக்கமே. ... 2

வரும்-வண்டி தரும்-வளவன் வாழும்-வழி வளம்-வரும்
என்றே வகரம் பின்வரும் மகரம்
புணர்மொழி மகரக் குறுக்கம் ஆமே. ... 3

3.21. ஆய்தக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பதே ஆய்தக் குறுக்கம் என்பதாம். ... 1

அல்+திணை சேர அஃறிணை ஆய்தமும்
கல்+தீது சேர கஃறீது ஆய்தமும்
முள்+தீது சேர முஃடீது ஆய்தமும்
கால்மாத் திரையொலி ஆய்தக் குறுக்கமே. ... 2

[சார்பெழுத்து வகைகளின் மாத்திரை விவரம் காண: 3.01. மாத்திரை]

3.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்தெனப் படுவது தனியெழுத் தாக
மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
கற்றையாய்ச் சேர்ந்தே சொல்லென் றாகி
மனதில் உள்ளதை வாக்கில் கொணர்ந்தே
கனவினை விதைக்கும் கனிவிதை யாமே. ... 1

எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்;
செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே. ... 2

எழுத்தென் பதுவே உருவிலோ ஒலியிலோ
மோனை எதுகை முரணெனும் வகைகளில்
தொடையெனும் உறுப்பினில் தொடுக்க உதவுமே. ... 3

இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பென் றசைந்து வருமே. ... 4

3.23. எழுத்தியல் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

*****

No comments:

Post a Comment