கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
6.03. எழுவகைத் தளைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்முன் சீர்பிணைத் தெழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்தே ஏழெனும் வகையாய்
எழுவது அறிதல் எளிதென் றாமே. ... 1
சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டே. ... 2
இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா விற்கோர் தனிச்சீர் இலையெனில்
கலிப்பா விற்கோர் தனித்தளை யுண்டே. ... 3
நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கெனும் வகையில் அமைந்து வருமே
ஒன்றாத் தளைவகை மூன்றெனும் வகையிலே. ... 4
எழுதளைப் பெயர்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றும் தளைகள் நால்வகைப் பெயர்களாம்
நேரொன்று நிரையொன்று ஆசிரி யத்தளை
வெண்சீர் வெண்டளை ஒன்றிய-வஞ் சித்தளை. ... 5
ஒன்றாத் தளைகள் மூவகைப் பெயர்களாம்
இயற்சீர் வெண்டளை கலித்தளை மற்றும்
ஓன்றாத வஞ்சித் தளையென் றாமே. ... 6
ஈரசைச் சீர்நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை. ... 7
மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே. ... 8
கனிச்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சியே. ... 9
பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகளின் பெயர்களை நோக்கி யறிந்தால்
ஆசிரியப் பாவகைத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவகைத் தளைகள் இரண்டும்
என்றே எழுவகை பிரிதல் காண்பமே. ... 10
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே. ... 11
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீர் காய்ச்சீர் அல்லது கனிச்சீர்
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்தே வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்றறி வோமே.... 12
*****
No comments:
Post a Comment