கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.16. குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரம் குற்றிய லுகரமே. ... 1
குசுடு துபுறு எனவரும் உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுக ரமெனத்
தனிக்குறில் அல்லா மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே. ... 2
வல்லின உயிர்மெய் உகரம் ஆறினில்
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் ஆறினில்
உகரம் குன்றி ஒலிப்பது இலையே. ... 3
தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே. ... 4
கு=பூமி சு=சுகம் து=புசி என்று
கு-சு-து என்னும்-ஓர் எழுத்துச் சொற்கள்
தனிக்குறி லாகத் தனதுமாத் திரையில்
குறையா தொலிக்கக் குற்றிய லுகரம்
ஆகா தெனவே முற்றிய லுகரமாம். ... 5
தனக்கு முன்னால் வரும்-அயல் எழுத்தின்
வகையைப் பொறுத்து வரும்குற் றுகரம்
வகைகளில் ஆறு தொடர்களில் அமையுமே.
ஈற்றுறும் உகரம் ஈற்றயல் எழுத்தின்
தோற்றம் ஓட்டிய தொடரில் அமையுமே. ... 6
வன்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
வல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சுக்கு மச்சு பட்டு
பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு
கூத்து காப்பு உற்று’
என்பன வன்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 7
மென்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
மெல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சங்கு பஞ்சு வண்டு
பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு
சாந்து பாம்பு சான்று’
என்பன மென்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 8
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
இடையின மெய்யை ஈற்றயல் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாமே.
’தேய்கு ஆர்கு அல்கு
--வ்கு மாழ்கு தெள்கு’ ... ... ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து
--வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு
--வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 9
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இடைத்தொடர் வகையில் சு-டு-று உகரம்
இடையின மெய்யை ஈற்றயல் தாங்கி
அமையும் சொற்கள் இலையெனக் காண்க. ... 10
கு-து-பு என்னும் குற்றிய லுகரமும்
இடையின மெய்கள் அனைத்தையும் ஈற்றயல்
கொள்வ தில்லை என்றும் காண்க. ... 11
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
உயிர்மெய் யெழுத்தை ஈற்றயல் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாமே.
உயிர்மெய் யெழுத்தில் மெய்யின் பின்னே
உயிரெழுத் தாகச் சேர்ந்து வருவதால்
உயிர்த்தொடர்க் குற்றிய லுகரப் பெயராம்.
’படகு நகாசு அகடு
தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 12
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநெடி லெழுத்தை ஈற்றயல் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’பாகு காசு நாடு
காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 13
நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத் துச்சொல்.
’தகாது ஆகாது’ போன்ற சொற்களில்
இரண்டை விஞ்சிய எழுத்துகள் வரவே
உகரம் ஈற்றயல் நெடில்நின் றாலும்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராமே. ... 14
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆய்த எழுத்தை ஈற்றயல் கொண்டவை
ஆய்தத் தொடர்க்குற் றியலுகர மாமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத் தொடர்க்குற் றியலுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 15
குற்றியலுகரச் செயல்பாடு
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
குற்றிய லுகரம் செயல்படும் விதத்தைப்
பற்றியோர் மொழியியல் கருத்துண் டாமே
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
சொல்வது எளிதாய் அமைவ தில்லை
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா? ... 16
எனவே
காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாய்
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே. ... 17
ஆங்கிலச் சொற்கள் நம் வழக்கில்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஆங்கிலம் பயிலும் இன்றைய தமிழில்
ஓங்குதல் காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட்
ஷாப் டேப் பார்
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்தே
சாக்கு பாசு போட்டு
ஶாப்பு டேப்பு பாரு
என்றுநம் பேச்சினில் ஒலித்திடும் அன்றோ? ... 18
[chalk pass boat shop tape bar]
3.17. குற்றியலிகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்
உகரம் இகர மாகத் திரிந்தே
அரைமாத் திரையாய்க் குறைந்தே ஒலித்துக்
குற்றிய லிகரம் ஆகி விடுமே. ... 1
குற்றிய லிகரம் இருவகைப் படுமே:
நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் வருவது
புணர்மொழிக் குற்றிய லிகரம் ஆமே.
தனியொரு சொல்லில் குறையும் இகரம்
தனிமொழிக் குற்றிய லிகர மாமே. ... 2
நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
கண்டேன் + யான் = கண்டேனியான் என்றும்
வருவது புணர்மொழிக் குற்றிய லிகரமே. ... 3
மியாவெனும் முன்னிலை அசைச்சொல் உண்டு
மியாவெனும் சொல்வரும் மி-எனும் இகரம்
அதன்பின் யகரம் வருவதால் குன்றி
தனிமொழிக் குற்றிய லிகரம் ஆமே. ... 4
கேள் + மியா = கேண்மியா என்பதும்
செல் + மியா = சென்மியா என்பதும்
தனிமொழிக் குற்றிய லிகரச் சான்றே. ... 5
*****
ஆங்கில எடுத்துக்காட்டுகள் அற்புதம். குற்றியலுகரம் பற்றி மக்கள் எளிதாய் புரிந்துக்கொளவர்.
ReplyDeleteசரண்யா