கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
7.07. சிந்தடி முயற்சி: கட்டளைச் சிந்தடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் சிந்தடி முயன்றிடு வோமா?
ஏழுமுதல் ஒன்பதுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் சிந்தடி புனைவோம் முதலிலே. ... 1
காலம் ஞாலம் பாலம் கோலம்
என்னும் சொல்வகை அடியெது கைவர
மாறுதல் அமைத்தல் வரைதல் நீங்குதல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
பாலங்கள் அமைத்துப்
பாவங்கள் நீக்கி
ஞாலம் நலம்பெறும் ஞானம் அறிவோமே. ... 2
ஏழு எழுத்துக் குறளடி (2 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலம் மாறிடும் உண்மை
ஞாலம் மாறுதல் உண்டோ?
பாலம் அமைக்கும் உள்ளம்
கோலம் வரைந்து பார்க்கும். ... 3
எட்டு எழுத்துக் குறளடி (3 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் இந்த
ஞாலமும் மாறுதல் உண்டோ?
பாலங்கள் அமைத்தல் நன்றே
கோலங்கள் மாறலாம் அன்றோ? ... 4
ஒன்பது எழுத்துக் குறளடி (3 + 3 + 3): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கடல்சூழ்
ஞாலமும் மாறுதல் ஆகுமோ?
பாலங்கள் அமைத்தல் நன்றெனில்
கோலங்கள் மாறலாம் அல்லவோ? ... 5
7.08. சிந்தடி முயற்சி: சீர்வகைச் சிந்தடி
(வஞ்சி விருத்தம்)
பழமொழிகள் இணைத்து:
நல்குர வில்லா நாக்கினை
வல்லிதின் அடக்க விழைவோம்
சொல்லது தேயாது கல்தேயினும்
நல்லதே உரைக்கப் பழகுவோம். ... 1
வஞ்சி விருத்தக் குறட்பாக்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா
வானம் வழங்கா தெனின். ... 2
நாளெல்லாம் நடையாய் நடந்ததில்
தாளெல்லாம் ஆயின திண்ணென;
கோளெல்லாம் கூடும் அற்புத
நாளென்றால் விற்பனை யாகுமோ! ... 3
வேளாண்மைக் குறைவால் பயிர்கள்
தாளாகிப் போகத் தாளாத
வேளாளன் தற்கொலை துணிய
வாளா விருந்தது அரசு. ... 4
*****
No comments:
Post a Comment