Wednesday, May 24, 2017

11.12 செப்பலோசை வெண்பா முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.12 செப்பலோசை வெண்பா முயற்சி
(வெண்பா)

(இன்னிசை வெண்பா)
ஒருபொருள் பற்றியே மூவகை ஓசை
உருவினில் ஈரடி மூவடி நாலடி
வெண்பா முயல்வினில் வெவ்வே றொலிகாண
எண்ண வெழுந்தன வே.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
பாழடைந்த கேணியொன்றைப் பற்றியழும் பேய்-ஓலம்
காழிருந்தால் அவ்வழி-வை கால்.

(தூங்கிசைச் செப்பல்)
அழிந்த கிணற்றில் அரற்றும் ஒருபேய்
வழியது செல்மனம் வம்பு.

(ஒழுகிசைச் செப்பல்)
அழிந்த கிணற்றில் அரற்றியழும் ஓர்பேய்
வழியது போனாலோ வம்பு.

(ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
மல்லிகைப்பூ முல்லைப்பூ வாசனையாய்ப் பூத்திருக்க
மெல்லியதோர் காற்றலைக்கும் மெல்லிடையாள் மேலாடை
சொல்லினிலே பூத்தாளே தொட்டு.

(தூங்கிசைச் செப்பல்)
மல்லிகை முல்லை மலரும் மணத்துடன்
மெல்லிய காற்றலை மெல்லிடை மேலுடை
சொல்லில் மலர்ந்தனள் தொட்டு.

(ஒழுகிசைச் செப்பல்)
மல்லிகை முல்லை மலர்களெலாம் வாசனையாய்
மெல்லியதோர் காற்றலை மெல்லிடையாள் மேலாடை
சொல்லில் மலர்ந்தாளே தொட்டு.

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
தத்திவரும் ஆழியலை மத்தளத்தின் ஓசையொடு
எத்திவிடும் பாப்பாவின் சென்னியெலாம் மண்துகளாய்
கத்தியுரை யாடுமப்பா காதினிலே கைபேசி
அத்தையுடன் அம்மாவின் பேச்சு.

(தூங்கிசைச் செப்பல்)
தத்தும் கடலலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தை தலையெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் கைபே சியில்செவி
அத்தையும் அன்னையும் பேச்சு.

(ஒழுகிசைச் செப்பல்)
தத்திவரும் ஆழியலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தையின் சென்னியெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் காதினில் கைபேசி
அத்தையுடன் அன்னையின் பேச்சு.

11.13 செப்பலோசை வெண்பாப் பயிற்சி
(வெண்பா)

நினைவிற் கொள்ள:
(இன்னிசை வெண்பா)

ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பா நிரலமைத்தல்
(பஃறொடை வெண்பா)

மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள்
மூன்று கலைந்துள சொற்களில் கீழுள
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும்
ஓர்ந்து அமைத்தே எழுது.

உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை
கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக்
தான்காணான் விடும். கள்வேம் தீதே
மறைமொழி நிலத்து வாறு.
எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி
மாந்தர் காணாதான் கண்டானாம்

பயிற்சி 2. மூவகைச் செப்பலோசைக் குறட்பா எழுதுதல்
(இன்னிசை வெண்பா)

ஏந்திசை தூங்கிசைச் செப்பல் ஒழுகிசை
தேர்ந்திந் நிரல்வர மூன்றுகுறள் வெண்பாக்கள்
ஓர்ந்தே புனைக ஒருபொருள் பற்றியோ
ஆர்ந்த பலபொருளி லோ.

*****

11.14 எதுகையால் வரும் வெண்பா விகற்பம்
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா வகையை அடியெது கைவரும்
எண்ணுடன் சேர்த்துக் குறித்தல் வழக்கம்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா புனைந்தால்
வருமே அடியெதுகை ஒன்று.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப்
பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே
வரும்பாக்கள் கீழுள் ளவை.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
--திருக்குறள் 001:01

(இருவிகற்பக் குறள் வெண்பா)
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.
--திருக்குறள் 007:04

(ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 061

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 003

(ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
--ஔவையார், மூதுரை 012

(இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 012

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 056

*****

11.08 வெண்பாவின் தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.08 வெண்பாவின் தளை
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை 
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேர்வர
வாகுமே வெண்டளை காண். ... 1

(இருவிகற்பக் குறள்வெண்பா)
வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே
இரண்டு வகைகள் உள. ... 2

(பலவிகற்பச் சிந்தியல் வெண்பா)
இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என. ... 3

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என. ... 4

*****

11.09 வெண்பாவின் அடி
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
வெண்சீர் இயற்சீர் இயன்றிடும் வெண்பாவில்
நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே
ஈற்றடி முச்சீரில் சிந்தடியாய் நின்றிட
ஈற்றுச்சீர் நாள்,மலர் காசு பிறப்பென
மேற்சொன்ன நால்வகை யில். ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழெல்லை யாக இரண்டடி வந்துநிற்க
மேலெல்லை வெண்பா வகைபொறுத்து மாறும்
குறட்பா இரண்டடி மேலெல்லை கீழெல்லை
சிந்தியல் எல்லைகள் மூன்று. ... 2

அளவியல் எல்லைகள் ஆவது நான்கடி 
பஃறொடை ஐந்தும் பனிரெண்டும் எல்லை
கலிவெண்பா பத்துடன் மூன்றடிக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 3

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
மூச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு
முக்கா லடியென்றும் ஓர்பெயர் சொல்லுவர்
ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவியல் எல்லையாம்
பன்னிரண்டு முக்காலாம் பஃறொடை எல்லை
பதிமூன்று முக்கால் கலிவெண்பாக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 4

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா எனும்பேரே நாலடி யாகவரும்
வெண்பாவைச் சுட்டுவ தாய்-இவ் வகையில்
முதல்மூன் றடிகள் அளவடி யாய்வரும்
ஈற்றடி சிந்தடி யாம். ... 5

*****

11.10 செப்பலோசை என்பது
(வெண்பா)

செப்புதல் என்றால் விடையெனக் கூறல்
மறைவின்றித் தானே இயல்பாய் மொழிதல்
மறைத்தொன்றைக் கூறாது செப்பியே கூறுதல்
என்றுநச்சி னார்க்கினியர் நூல்.

இசைகுறித்து வாராமல் செப்புத லாகிய
வாக்கியம் போன்றதாம் ஓசை எனவே
இளம்பூ ரணர்-உரைக் கூற்று.

அகவலும் செப்பலும்
(வெண்பா)

காரிகை சொல்லும் அகவலும் செப்பலும்
சீரினில் இங்ஙனம் வேறு படுவதாம்
சீர்சால் அகவலெனக் காரிகைச் சொல்லாம்
இருவகை என்னும் இயற்சீர் விளம்-மா
வரும்சீர் நிலைச்சீர் இனத்தினில் ஒன்ற
நிறையும் அகவல் ஒலி.

திண்பா மலிசெப்பல் ஓசையெனும் காரிகை
திண்மை செறியும் ஒலியென் றியற்சீரின்
மாவிளம் என்றவை மாறி வருவதும்
காய்முன்நேர் என்று கதித்து வருவதும்
ஆய்ந்தால் விளங்குவ தாம்.

வெள்ளைப்பா என்பதும் வெண்பாவின் பேராக
வெள்ளோசை என்றுமே வெண்பாவின் ஓசையாய்ச்
செப்பலுக் கின்னொரு பேரென் றறிக;
தளைகளே ஓசையின் மூலம் எனவெண்
டளைவரச் செப்பல் எழும்.

அகவல், செப்பலொலி வேறுபடும் சான்றுகள்
(வெண்பா)

நேரொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
கண்ணன் என்னும் மன்னன் பேரை
எண்ணும் உள்ளத் தின்பம்
பண்ணில் ஏற்றிப் பாடும் உள்ளே.

(வெண்பா)
வெண்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

கண்ணனெனும் மன்னவனின் கன்னலன்ன பேரொன்றே
எண்ணமுறும் உள்ளத்தில் இன்பங்கள் சூழ்ந்துகொளும்
பண்ணுறவே துள்ளிவிழும் பாட்டு.

நிரையொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
மலைவிழும் அருவியில் வழிந்துறும் வளமென
அலைவிழும் கடற்கரை அமிழ்கழல்
கலைவிழும் சிலையவள் கருவிழி அலைவதே.

(வெண்பா)
இயற்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

மலைவீழ் அருவி வழியும் வளமாய்
அலைவீழ் கரையில் அமிழும் கழலாய்
கலைவீழ் சிலையாள் விழி.

*****

11.11 செப்பலோசையின் வகைகள்
(வெண்பா)

(பஃறொடை வெண்பா)
மூன்று வகையெழும் செப்பலெனும் ஓசையாம்
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
ஏந்திசை வெண்பா வுரிச்சீரால் மட்டுமே
தூங்கல் இயற்சீரால் மட்டும் ஒழுகிசையில்
இவ்விரு சீர்கள் கலந்து.

(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்தே ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

(பஃறொடை வெண்பா)
நால்வகைக் காய்ச்சீர்கள் வெண்பா வுரிச்சீராம்
நால்வகை மாவிளச்சீர் ஆகும் இயற்சீராம்
காய்முன்னே நேர்வர வெண்சீரின் வெண்டளை
மாமுன் நிரையும் விளமுன்னே நேருமென
மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை
இவ்வா(று) இருதளை எண்சீர் இயன்றுவரும்
செவ்வையே வெண்பா அமைப்பு.

மூவசையா லாகிவந்து நீரலையா யேந்திவந்து
நாவசைய ஓசையெழும் ஏந்திசையின் செப்பலாக
தூங்கிசைச் செப்பல் இயற்சீர் வரவரும்
தூங்கி வருவது தொங்கி வருதல்
இருவகை வெண்டளையும் யாப்பில் கலத்தல்
இருவகை ஓசை ஒழுக்கு.

ஏந்திசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
--திருக்குறள் 040:07

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு

(சிந்தியல் வெண்பா)
விண்ணோரும் மண்ணோரும் வேண்டுமருள் ஈசனவன்
கண்மூன்று கொண்டவனாம் காப்பவனாம் நானிலத்தை
எண்ணவரும் ஈசனருள் இன்று.

தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

(அளவியல் வெண்பா)
ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.
--தனிப்பாடற்றிரட்டு, பகுதி 1 காப்பு வெண்பா

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்

மேல்வந்த வெண்பாக் குறிப்பு
(இன்னிசை வெண்பா)

ஒருசீர் தவிர பிறசீர் களிலே 
வருவது மூவசைக் காய்ச்சீர்கள் ஏந்திசை
போற்றினால் என்பதைப் போற்றிடவே என்றுநாம்
மாற்ற இதுவுமே காய்.

(பஃறொடை வெண்பா)
காலையிளம் சூரியனின் கற்றையொளி கண்ணிறையும் 
சோலையெலாம் பொன்னிறமாய்த் தோன்றியொளிர் காட்சியினில்
புள்ளினத்தின் பண்ணலைகள் போகவரும் காற்றினிலே
அள்ளிவரும் தென்றலிலே ஆர்ந்துவரும் வாசனைகள்
தெள்ளியநீ ரோடையிலே சிற்றலையாய் நீரோட்டம் 
உள்ளமெலாம் பொங்கியெழும் ஊற்று.

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

தூங்கிசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
--திருக்குறள் 040:01

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா நாள்

பாலொடு தேன்கலந் தற்றே மணிமொழி
வாலெயி றூறிய நீர்.
--திருக்குறள் 113:01

கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்

(சிந்தியல் வெண்பா)
இருவிழி காண இறங்கும் உருவாய்
இருசெவி கேட்க இறங்கும் ஒலியாய்
ஒருமனம் ஆழங் கொளும்.

கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்

(அளவியல் வெண்பா)
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
--நாலடியார், 65

புளிமா புளிமா புளிமா கருவிளம்
தேமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்

(பஃறொடை வெண்பா)
கதிரினைக் காணார் நிலவினைக் காணார்
சதியும் பதியும் தனியாய்ப் பயணம்
விடியும் பொழுதில் விளையும் அலுவல்
முடியும் பொழுதினில் முற்றிருள் சூழும்
கடிநகர் வாழ்வின் கயம்.

கருவிளம் தேமா கருவிளம் தேமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா கருவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்

ஒழுகிசைச் செப்பல் சான்றுகள்
குறள் வெண்பா

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு.
--திருக்குறள் 040:06

கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா
கருவிளம் தேமா பிறப்பு

(சிந்தியல் வெண்பா)
பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.
--கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.90

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் நாள்.

(அளவியல் வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

(பஃறொடை வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

*****

11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்று

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள்
(வெண்பா)

(குறள் வெண்பா)
கீழ்வரும் சொற்சான்று நோக்கத் தெரியுமே
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட
நாளெனும் வாய்பாடா கும். ... 2

(சிந்தியல் வெண்பா)
கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள்
நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால்
ஆவது என்று உணர். ... 3

படுஎனும் சொல்லில் தனிநிரை யாம்மலர்
பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால்
நேர்பெனும் காசா வது. ... 4

தகாஎனும் சொல்லில் தனிநிரை காண
தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 5

(குறள் வெண்பா)
சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு
சொல்லு, கதவு என. ... 6

(பஃறொடை வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்களாம்
கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு
சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்க
எல்லாமே நேர்பெனும் காசு. ... 7

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள்
முடங்கு குவவு விரைந்து அலங்கு 
பலவு இரவு உறாது இராது
அனைத்தும் நிரைபு பிறப்பு. ... 8

*****

11.06 நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வள்ளுவரின் சான்று சில. ... 1

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்]

வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ... [மலர்]

இருள்சேற் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு]

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு]

*****

11.07 நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள்
(வெண்பா)

(சிந்தியல் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப்
பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது
இறுதி இரண்டடிகள் இங்கு.

(குறள் வெண்பா)
நாள்மலர் காசு பிறப்பு அனைத்து
வகைச்சான்றும் கீழே உள.

கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே
வேறி ரண்டு தவிர்த்து.

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு.
[தனிக்குறில்: நேர்: நாள்]
---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி 
கலைச்சியை இகழ்ந்து பாடியது.

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
[தனிக்குறிலொற்று: நேர்: நாள்]

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
[தனிநெடில்: நேர்: நாள்]

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
[தனிநெடிலொற்று: நேர்: நாள்]

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
[குறிலிணை: நிரை: மலர்]

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேள் இட்ட கலம்.
[குறிலிணையொற்று: நிரை: மலர்]

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
[குறில்நெடில்: நிரை: மலர்]

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
[குறில்நெடிலொற்று: நிரை: மலர்]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.
[தனிக்குறிலொற்று+உகரம்: 
நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.]

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
[தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு]

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
[தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு]

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
[குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு]

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிடம் எல்லாம் சிறப்பு.
[குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு.
[குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு]
---பழமொழி நானூறு 68

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.
[குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

*****

Wednesday, May 3, 2017

11.02 வெண்பாவின் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.02 வெண்பாவின் சீர்
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
அகவற்சீர் நால்வகை யாகும் இயற்சீர்
தகவுடன் வெண்பா வுரிச்சீர் எனப்படும்
காய்ச்சீர்கள் நால்வகையும் காணலாம் வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீராம் ஈற்றடியில்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

தேமா புளிமா கருவிளம் கூவிளமென்
றேமாப் பெயர்-இயற்சீர் ஈரசையாம் நான்குடன்
ஈரசை யோடொரு நேரசை சேரும்
இருவகைக் காய்ச்சீர்கள் நான்கென்று மொத்தமாய்
எண்வகைச் சீர்களும் வந்தமரும் வெண்பாவே
ஒண்பாவாய் நிற்கும் ஒளிர்ந்து. ... 2

(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
கனிச்சீர்கள் நான்கையும் காணாவெண் பாவென்(று)
அனிச்ச மலராய் அறி. ... 3

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
காளமே கப்புலவர் பாடியவிப் பாடலில்
ஆள்கனிச் சீரோ முதலடிச் சீர்மூன்றில்?
தாளம் தவறா? தளைதட்டல் உள்ளதா?
வாளைமீன் போலோர் வழுக்கு! ... 4

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

நாத(ர்)முடி என்றால் இடையின வொற்றாம்-இர்
யாதொன்றும் கொள்ளா(து) அலகெனவே - நாதமுடி;
தாளம் தவறாத் தளைதட்டா வெண்பாவாம்
காளமேகர் வெண்பாக் கவி. ... 5

11.03 வெண்பாவில் ’விளாங்காய்ச்சீர்’

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நிரைநடு வாய்வரும் காய்ச்சீர் இரண்டு
கருவிளங் கூவிளங் காய்ச்சீர் எனவே
நிரையிற் குறிலிணை, ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிற ழாது
நிரையிற் குறில்நெடில், ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிறழ் வாமென
அன்றுநம் முன்னோர் அறிந்துவெண் பாவினில்
நன்றல என்றிவ் வகைப்படும் சீர்கள்
பெரிதும் தவிர்த்தே இயற்றினர் வெண்பா
அரிதெனக் காண்போம் அவை. ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழ்வரும் வெண்பாவில் நாற்சீர் விளாங்காயென்
றாழ்ந்துவரும் ஓசையை ஆய்ந்தறி யும்செவியால்
மாற்றுவோம் பாவை வகயுளி யாகவோ
மாற்றெனச் சீரமைத் தோ. ... 2

ஒருவிகற்பக் குறட்பா
(சிர்கள் 1, 3, 5, 6-இல் விளாங்காய்)

வேர்ப்பலாவின் தீங்கனி வெட்டியேநாம் தேனுடன்
சேர்த்தவாறே உண்பமேயென் றே.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி செய்து விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலா வின்தீங் கனிவெட்டி யேதேனைச்
சேர்த்தவா றேயுண்போம் நாம்.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி யின்றி விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலாத் தீங்கனி வெட்டியே தேன்தடவிச்
சேர்த்தபடி உண்போமே நாம்.

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

11.04 வெண்பாவின் ஈற்றுச்சீர்
(வெண்பா)

அசைச்சீர் வாய்பாடு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நால்வகையில்
பண்பட்டு வந்துநிற்கும் ஓரசையாய் - உண்டாகும்
நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாட்டில்
நால்வகையில் நிற்கும் இசைந்து. ... 1

அசைச்சீரின் அசைகள்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்,நிரை நேர்பு நிரைபு எனவொன்றில்
ஓரசையாய் நிற்கும் உவந்து. ... 2

நாள் மலர்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்தனியே வந்திட நாளென் றறிக
நிரைதனியே வந்தால் மலர். ... 3

[உதாரணம்: நாள்: கு, தா, கல், சொல்]
மலர்: உள, உளம், கலா, கலாம்]

காசு பிறப்பு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம்
சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன்
சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு. ... 4 

தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில்,
அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை
மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது
காசெனும் நேர்பா வது. ... 5

[காசு உதாரணம்: கொக்கு, மூப்பு, வீடு]

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு
நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 6

[பிறப்பு உதாரணம்: சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து]

(இருவிகற்பக் குறள் வெண்பா)
குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு
உயிர்மெய் எழுத்துகள் காண். ... 7

ஈற்றடியில் வாய்பாட்டுச் சொல்
(இருவிகற்பக் குறள் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்? ... 8

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நாளெனும் சொல்நேர் எனவே வரலாம்
மலர்ச்சொல் வரலாம் தனிநிரை யாவதால்
காசுச்சொல் ஆகும்நேர் பின்குற் றுகரம்
பிறப்புச்சொல் ஆகுநிரை பின்குற் றுகரம்
இரண்டும் வருமீற்றுச் சீர். ... 9

(இருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பு. ... 10

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராக நாள்மலர் கூடாது
ஓரசைச்சீர் என்றவை யாவதால் - வேறுவகைப்
பாவிலும் வாரா கலிப்பா உறுப்பான
அம்போத ரங்கம் தவிர்த்து. ... 11

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு
வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ
இங்கு முதலடியில் உள்ளது போலவே
ஈரசைச் சீர்களாகும் காண். ... 12

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வேறடியில் காசு பிறப்பு வரலாம்
நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும்
ஈரசைச் சீர்களாகும் காண். ... 13

ஈற்றுச் சீர் சான்றுகள்
(ஒருவிகற்பக் குறள் வெண்பா)

நாள்மலர் காசு பிறப்பென ஈற்றுச்சொல்
ஆள்குறட் பாவெழுது வோம். ... 14

மடம்பயிர்ப்பு நாணம் மனவச்சம் இன்றி
நடமாடும் பெண்டிரிந் நாள்.

மங்கை தலையமரும் மல்லிகைப் பூவெனில்
மங்கையும் தானே மலர்?

படும்பாட்டில் இல்லாள் பதுக்கியே சேர்த்தாள்
கடுகுச் சிமிழினுள் காசு!

எருமைகள் மேய்த்தாலும் ஈசன்பேர் சொல்லப்
பெருமைகள் சேரும் பிறப்பு.

*****

Thursday, April 27, 2017

11.00 வெண்பா

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.00 வெண்பா
(வெண்பா)
(வெறும்பா விரவியது)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வேறேதும் வண்ணம் விரவாத வெண்மையே
மாறாது நிற்பதெனும் மாண்பாகும் - வேறு
தளைகளுடன் சீர்கள் தகையாத தூய்மை
வளமாகும் வெண்பா வனப்பு. ... 1

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்மையே இன்னோர்பேர் வெள்ளைக்கென் றாவதுபோல் 
வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு
வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே
உண்மையாம் அந்த வுயர்வு! ... 2

[ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு;]

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால்
வெண்பாவோர் வன்பா வெனப்படும் - ஒண்ணா
விலக்கும் அயற்சீரால் வேற்றளையால் வெண்பா
புலவர்கள் அஞ்சும் புலி. ... 3

ஔவை சொன்னது:
காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்

பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் 
பாடுவது புலியாம் (அரிய செயல்);  சிறப்பாகப் பேசப்படும் 
உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது 
புலியாம்; ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் 
கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்; மற்றெல்லாப் 
பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் 
(முயற்சி மிக்க செயலாகும்).

கி.வா.ஜ. சொன்னது:
வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
--ஔவையார் மேற்கோள்:’கவி பாடலாம்’, பக்.69

விளக்கம்:
வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் 
கல்லானையும்; வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் 
தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்;
பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; 
அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே;
பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, 
என்னை ஏன் தாக்குகிறாய்?

பாடல் பின்னுள்ள கதை:
https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/amCdNYlwJxo

*****

11.01 வெண்பாவின் பொது இலக்கணம்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

இயற்சீராம் நான்குடன் வெண்சீராம் நான்கும்
இயற்சீராம் வெண்டளையும் வெண்சீராம் வெண்டளையும்
ஈற்றடி சிந்தடியாய் ஏனை அளவடியாய்
ஏற்றது செப்பல் ஒலியென வாகிப்
பயின்று வருகிற பாவகை வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாம்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

வெண்பா இலக்கண விளக்கம்
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வெண்பாவின் சீர்களாய் மாவிளம் காய்ச்சீராம்
வெண்பாவில் நேர்நிரை மாறிவரும் வெண்டளையும்
வெண்பாவில் காய்முன்நேர் வெண்சீரின் வெண்டளையும்
வெண்பாவின் ஓசையென மூவகைச் செப்பலோசை
வெண்பாவின் ஈற்றடி மூன்றுசீர்ச் சிந்தடியாம் 
வெண்பாவின் மற்றவடி நாற்சீர் அளவடியாம்
வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர் நால்வகை
நாள்-மலர் காசு பிறப்பு. ... 2

ஈற்றடி
(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம்
ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம்
ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம்
ஈற்றடியே வெண்பா உயிர். ... 3

ஈற்றுச்சீர்
(ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில்
குற்றுகரம் வந்து முடிதல் அவசியம் 
மற்ற உகரம் அரிது. ... 4
[இறுதல்=முடிதல்]

வராதன
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது
வெண்பாவில் வேறு தளைகள் வராது
அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா
உளத்தினில் வைப்பீர் உகந்து. ... 5

பொழிப்பு மோனை
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

முதற்சீர் வருமெழுத்து மூன்றாம்சீர் ஒன்றும்
விதம்பொழிப்பு மோனையாய் வெண்பா அடிதோறும்
நிற்பதால் ஓசை நிறையும் செவிகளில்
அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது
சிற்சில பாக்களி லே. ... 6

பொழிப்பு எதுகை
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

பொருளின் செறிவில் பொழிப்புமோ னையாய்
வருதலிலை யென்றால் ஒருவெதுகை ஈடாக
அந்த அடிகளில் வந்தபொழிப் பாம்-எதுகை
உந்தி யமைவதும் உண்டு. ... 6

வகையுளி
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வகையுளி யென்று வகுபடும் சொற்கள்
வகையுளி பாவில் வருதல் பொதுவில்
தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம்
சிற்சில போது சிறக்கும் வகையுளி 
முற்றப் பொருளின் நுகம். ... 7
[நுகம்=நுகத்தடி]

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வகையுளி ஈற்றடியில் வந்துநின்று வண்ணம்
தகவுற நிற்கத் தழைக்கும் குறளாம்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... 8

சான்று
(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும்
மேற்கொண்ட வெண்பா வினி. ... 9

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

அலகிடல்: சீர்கள்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு

தளைகள்
இவெ இவெ இவெ வெவெ
வெவெ இவெ வெவெ இவெ
வெவெ வெவெ வெவெ இவெ
வெவெ இவெ

அடிகள்
அளவடி அளவடி அளவடி சிந்தடி

மோனை
பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும்

எதுகை
இருவிகற்ப அடியெதுகை

வகையுளி
ஏதும் எங்கும் இல்லை

இதர சான்றுகள்
(மேலுள்ளது போல அலகிட்டு அறிக)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிவுயிர் வாழ்தல் அறியாமை- தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
--பாரதியார், மஹாசக்தி வெண்பா

*****

10.00. பாவின் அடியும் ஓசையும்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

பகுதி 2. செய்யுளியல்
10.00. பாவின் அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
(வெறும்பா விரவியது)

உறுப்பியல் பகுதியில் உறுப்புக ளாக
எழுத்தசை சீர்தளை அடிதொடை என்னும்
அறுவகை உறுப்புகள் எங்ஙனம் செய்யுளில்
பயின்று வருமெனும் விளக்கம் கண்டபின்
செய்யுள் இயலாம் இந்தப் பகுதியில்
பாவடி யோசை பாவகை பாவினம்
யாவையும் விளக்கிச் சொல்வோம் இனிதே. ... 1

10.01. பாவென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனும் சொல்லின் பலவிதப் பொருள்கள்
பாவினை விளக்கப் புரிந்து கொண்டால்
பாவெனச் சொல்வது யாதென விளங்குமே. ... 1

பாவெனில் முதலில் வருவது நெசவு
பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே
பாவெனும் சொல்லின் ஓர்பொருள் பரப்பு
பாவுதல் என்பது பரவுதல் படர்தல்
பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தலே. ... 2

இத்தனை பொருள்களும் நெசவினில் அடக்கம்
நெய்வது நெசவு செய்வது செய்யுள்
செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம். ... 3

(குறள் வெண்செந்துறை)
ஆடை என்பது நெய்யப் படுவது
செய்யுள் என்பது செய்யப் படுவது. ... 4

ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச்
செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு. ... 5

ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச்
செய்யுளில் ஒருவகைப் பாவே வருவதும் உண்டு. ... 6

ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி]
செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... 7
[வண்ணம்=தாளம்]

நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும்
செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும். ... 8

நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும்
செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும். ... 9

ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில்
செய்யுளின் வனப்பு தளைதரும் ஓசையில். ... 10

அந்நூல் பாவி நடத்தலின் ஆடை
’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’  ... 11
--[இலக்.வி.711]

’அறம் பொருள் இன்பம் வீடு
இவற்றைப் பாவி நடத்தலின் பாவென்பது.’ 
--[யாப்பருங்கலம் உரை]

பாவும் நெசவும் பிணைந்தது போல
நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர். ... 12

நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல்
நூற்றல்* என்பதே செய்யுள் இயற்றலும். ... 13

[*spinning a story என்று ஆங்கிலத்தில் சொல்வது
செய்யுளுக்கும் பொருந்தும். இவ்வாறு நூற்றுச் 
செய்யப்படுவதால்தான் ஒரு புத்தகத்தை 
நூல் எனச் சொல்கிறோம்.]

ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது
பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது. ... 14

ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 15

பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 16
[வண்ணம்=தாளம்]

ஆடையின் அழகு அணிந்திட வருமே
பாவின் அழகு பாடிட வருமே. ... 17

10.02. பாவென்பது சீர், தளை, ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனில் முதலில் சீரினைக் குறிக்கும்.
பாடலைக் குறிப்ப தாகு பெயரால்
பாடலை இயற்றும் ஊடகம் செய்யுளே. ... 1

சீரெனில் பற்பல பொருள்வகை யாவதில்
சீரெனில் பாட்டும் தாளமும் அடங்கும்
சீரைப் பொறுத்தே பாவகை அதுபோல்
பாவைப் பொறுத்தே சீர்வகை யாமே. ... 2

10.03. பாவும் சீரும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் உட்பொருள் சீரே என்பதால்
பாவகை யாமே சீரின் பெயரே
பாவின் பெயரே சீர்வகை யாகுமே 
பாவின் வகைகள் நால்வகை யாகும்
’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... 1 
--[தொல்.செய்.104]

மாச்சீர் விளச்சீர் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
என்றிவ் வாறு பெயர்கள் பெற்று
நான்கில் மூன்று பாவகை சுட்டுமே. ... 2

[தேமா புளிமா கருவிளம் கூவிளம்;
மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு;
மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு]

10.04. பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்களைப் போலவே பாவகை சுட்டலில்
சீரினும் மேலாய்ச் சீர்களால் இயலும்
தளைகள் காட்டிடும் பாவகை நான்கே. ... 1

பாவகை பெயர்கொளும் தளைகள் ஏழில்
மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியம் ... [நானும் நீயும்]
விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியம் .. [அவனும் அவளும்]
ஆகிய தளைகள் ஆசிரியப் பாவிலே. ... 2

மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், ~அவளும் நானும்]
பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்]
இவ்விரு தளைகளும் வெண்பா வகையின. ... 3

கலிப்பா வுக்கெனத் தனிச்சீர் இல்லை
காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்]
கலிப்பா வகைக்கு உரிய தளையே. ... 4

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்]
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்]
வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளே. ... 5

10.05. பாவும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்.
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்.
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்.
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்குமே. ... 1

அகவல் செப்பல் துள்ளல் தூங்கல்
ஓசையொவ் வொன்றும் மூவகை யாமே
ஓசையின் வகைகள் பாவுடன் அறிவோம்
தளைகள் தட்டினால் ஒலிசீர் கெட்டு
பாவரும் செய்யுள் உரைநடை போலாம். ... 2

10.06. பாவகையும் இனமும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடையால் அடியால் இயற்றும் செய்யுள்
பாவே பாவினம் எனவிரண் டாகும்
அறம் பொருள் இன்பம் வீடெனும்
இவற்றைப் பாவி நடத்தலால் பாவாம்
பாவகை யோடே ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... 1

[புடை=முறை, ஒழுங்கு]

10.07. பாவின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் வகைகள் நான்கென் றமையும்
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சி
ஆசிரி யப்பா அகவற் பாவே. ... 1

நால்வகைப் பாவும் இருவகை அடங்கும்
ஆசிரி யப்பா வெண்பா என்றே
அகவல் நடைபோல் அமைவது வஞ்சி
வெண்பா நடையைப் போன்றது கலிப்பா. ... 2

மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலாய் அகவல் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]
பாவகை குறித்த அடிகளால் அமையுமே. ... 3

10.08. பாவின் இனங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவகை நான்கிலும் மூவகை யினமாம்
பாவகை இலக்கணம் முழுமை யின்றிப்
பாவகை ஓசையை ஒட்டி வருவது
பாவகை யதனின் பாவின மாமே
பாவினம் குறித்த அடிகளால் அமையுமே. ... 1

ஒவ்வொரு பாவகை யோடுறும் மூவினம்
’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.] ... 2

பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்
வெண்டா ழிசையும் வெண்டுறை யுடனே
வெளிவிருத் தமெனும் மூன்றாம் இனமாய்
வெண்பா வினங்கள் பெயர்கள் பெறுமே. ... 3

ஆசிரியத் தாழிசை ஆசிரி யத்துறை
ஆசிரிய விருத்தம் என்றமூ வினமாய்
அகவற் பாவினம் பெயர்கள் பெறுமே. ... 4

கலித்தா ழிசையும் கலித் துறையோடு
கலிவிருத் தமென்றே கலிப்பா மூவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 5

வஞ்சித் தாழிசை வஞ்சித் துறையும்
வஞ்சி விருத்தமும் வஞ்சிப் பாவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 6

தாழம் என்பது தாழ்ந்த ஓசை
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை. ... 7

தத்தம் பாவிற்குத் துறைபோல் நெறியுடன்
ஒத்து நடப்பது துறையெனும் பாவினம்.
தத்தம் பாவெனும் ஒழுங்கில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் எனும்பா வினமே. ... 8

10.09. பாவகை அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை. ... 1

பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே. ... 2

யாப்பின் வழக்கில் குறளெனில் இரண்டு
சிந்தெனில் மூன்று அளவெனில் நான்கு
நெடிலெனில் ஐந்து கழிநெடில்
ஐந்தின் அதிகம் எனும்பொரு ளாமே. ... 3

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி 
கழிநெடி லடியெனும் பேரில் முறையே
இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் 
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே. ... 4

பாவடி பற்றிய காரிகை நூற்பா
வெண்பா அகவல் கலிப்பா அளவடி
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி.
--[யா.கா.21]

வெண்பா நாற்சீர் அளவடி கொளுமே
அகவல் நாற்சீர் அளவடி கொளுமே
கலிப்பா நாற்சீர் அளவடி கொளுமே
வஞ்சிப் பாவெனில் இருசீர்க் குறளடி
முச்சீர்ச் சிந்தடி இரண்டும் கொளுமே.
பாவகை யடிகள் பொதுவில் இவையே
பாவகை பொறுத்து வேற்றடி விரவுமே. ... 5

’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே. ... 6

தளைகள் மூலமே ஓசைகள் அமையும்
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... 7

*****

Thursday, April 20, 2017

8.90. செந்தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.90. செந்தொடை
(தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றிய தொடையொடும் விகற்பம் தம்மொடும்
ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே. ... (யாப்பருங்கல விருத்தி)
செவ்விய தொடையொடு வேறுபட் டியலின்
சொல்லியற் புலவரது செந்தொடை என்ப. ... (தொல்காப்பியம்)
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையா தாவது செந்தொடை தானே. ... (பல்காயனார்)
இங்ஙனம்
எவ்விதத் தொடையும் இல்லா திருந்தும்
செவ்விதின் அமைந்து செய்யுளாய்ச் சீர்த்து
நவ்விடும் ஓசை நலன்கள் விளையச்
செய்வது செந்தொடை இலக்கணம் என்போம். ... 1

(ஆசிரியத் தாழிசை)
இயல்பில் மாலையாய் இலங்கும் 
. கடம்பக் கொன்றை மலர்கள் போலச்
செயற்கைத் தொடையேதும் வேண்டாது 
. செய்யுளைச் சிறப்பித்து நிற்றலால் இத்தொடை
செந்தொடை யென்னும் பெயர்தனைப் 
. பெற்றுச் செம்மையாய் நின்றிடும் தொடையாம்.
--யாப்பருங்கலக் காரிகை, குமாரசாமிப் புலவர் உரை, பக்.40

சான்று
பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.
--யா.கா.மேற்கோள்

விளக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பொன்னிறப் பூக்களை உடையது வேங்கை
அந்த மரத்தின் உயர்ந்தவோர் கிளையில்
ஏறிநின்று அகவும் வண்ணமயில் நாடன்
அழகிய நெற்றிக் குறிஞ்சிப் பெண்ணின்
உள்ளம் நிறைந்து நிற்பவன் ஆவனே. ... 2

மேல்வரும் விளக்கம் செய்யுள் ஆயினும்
உரைநடை வழக்கின் சீர்தளை நிறைந்து
ஓசை சிதறி ஒழுங்கற்று நிற்பதால்
செந்தொடை பயிலும் செய்யுள் ஆகாது;
ஆக்குவோம் இதனைச் செந்தொடைச் செய்யுளாய். ... 3

பொன்னிறப் பூநிறை வேங்கை மரத்தின்
வான்கிளை ஏறி அகவுமயி லொன்று
நாடனே எழில்நுதல் குறிஞ்சி மகளின்
மனத்தகத் துறையும் தலைவ னாவனே. ... 4

*****

8.91. செந்தொடை முயற்சி
(குறள் வெண்செந்துறை)

செந்தொடை அடிகளில் பொருணயம் வேண்டும்
அந்த வகையில் முயன்றவை கீழே. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவறை இருட்டு. குத்து விளக்கின்
சுடரொளி எதற்கோ உன்னிக் குதிக்கிறது.
அம்பாள் முகத்தில் புன்னகை கண்டோ?
தாயன்பில் சேய்க்கை நீளுதல் போலவோ? ... 2

(ஆசிரியத்துறை)
சர்ப்பமாய் வளைந்து செல்லும் தார்ச்சாலை.
ஆனைகள் தடுக்க ஒருபுறம் பள்ளம்.
மறுபுறம் மின்கம்பி வேலி.
வெள்ளியங் கிரிமலை நோக்கி யொருகார். ... 3

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சாலையில் காதொற்றும் செல்போன் இடக்கையில். 
வலக்கை பற்றி நடக்கும் குழந்தை.
காட்டாறு வெள்ளமாய் விரையும் வாகனங்கள்.
கணங்கள் ஓடும் நிகழும் உறையுமே. ... 4

எதிரே மாரியம்மன் கோவில் திண்ணை. 
இடப்புறம் ஊராட்சிப் பொதுமேடை. கொடிக்கம்பம்.
பின்புறம் பூங்காவில் வானொலிச் செய்தி.
மணலில் துப்புரவுத் துடைப்பக் கீற்றுகள். ... 5

*****

8.85 இரட்டைத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.85 இரட்டைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே ... (யாப்பருங்கலம்)
இரட்டை வருமொழி அடிமுழு தும்வரும்
அடிமுதற் சீரே அடிபிற சீர்களில்
அதுவே யாகப் பயிலுதல் இரட்டை. ... 1

சான்றுகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீரெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்.

நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்
மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்.
--யாப்பருங்கலம்

(இன்னிசை வெண்பா)
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ 
பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
கோவீற் றிருந்தான் கொடை.
--நேமிநாதம், பக்.30

மேல்வந்த சான்றுகளில் சொல்லும் பொருளும்
வேறு படாது வருதல் காண்க.
சொல்வேறு படாது பொருள்வேறு பட்டு
வருவதும் இரட்டைத் தொகைவகைச் சேரும். ... 2

சான்று:
ஓடையே  ஓடையே ஓடையே ஓடையே 
கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்
மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்
கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்!
நாடி உணர்வார்ப் பெறின்.
--யாப்பருங்கலம்

[ஓடை - குடை வேலமரம், மலைவழி, 
யானை நெற்றிப் பட்டம், நீரோடை எனக் கொள்க.]

இருசீர் திரும்புதல் இரட்டை யல்ல
ஒருசீர் மாறியும் திரும்புதல் இல்லை
ஒருசீர் அதுவே அடிபிற சீர்களில்
திரும்புதல் இரட்டைத் தொடையின் இலக்கணம்.
கீழ்வரும் சான்றுகள் இரட்டை யல்ல. ... 3

இரட்டைத் தொடை யல்ல:
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
--புறநானூறு 247

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதிலும்
--பாரதியார்

8.86 இரட்டைத் தொடை முயற்சி
(குறள் வெண்செந்துறை)

அதுவென ஒருசீர் அடிமுழு தும்வரும்
விதமாம் இரட்டைத் தொடையை முயல்வமே. ... 1

எழுமின் எழுமின் எழுமின் எழுமின்
உழவர் தொழிலின் உயர்வறி யாதே
மதுவில் அவரை மயங்க வைத்தே
பொதுநலம் குடும்பம் புறக்கணித் தாளும்
இலவச அரசைத் தேர்தலில் வீழ்த்துவோம்
நலமும் வளமும் நடைமுறை யாகவே. ... 2

(குறள் வெண்செந்துறை)
சீரொன்று அதுவே வேறு பொருள்களில்
திரும்பிடும் இரட்டைத் தொடையது கீழே. ... 3

(இன்னிசை வெண்பா)
ஒருகால் ஒருகால் ஒருகால் ஒருகால் 
உருவினில் பேயது வந்ததும் உண்டு
தெருவினில் உள்ளோர் திகிலுடன் நோக்கப்
பெருமிதம் பொங்கிய பேய். ... 4

[முதலடி ஒருகால் சீர்ப் பொருள்கள்:
ஒருமுறை, ஒருவேளை, சிலவேளை, ஒரு காலுடன்]

*****

8.80 விகற்பமிலாத் தொடைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.80 விகற்பமிலாத் தொடைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடைகள் எட்டு வருவன வற்றில்
மோனை எதுகை முரணியை(பு) அளபெடை
ஆனயிவ் வைந்தும் எண்வகை விகற்பம்
பெற்று வருமென உற்று நோக்கினோம்.  ... 1.

எஞ்சி நிற்கும் தொடைகள் மூன்றும்
அந்தாதி இரட்டைச் செந்தொடை யாகும்
இவற்றின் இயல்பு நோக்கும் போது
விகற்பம் ஏதும் பெறவிய லாதென
எளிதில் அறிந்து கொள்வோம் நாமே. ... 2.

அந்தாதி இரட்டைச் செந்தொடை மூன்றும்
விகற்பம் ஏதும் இல்லா திருப்பதால்
விகற்ப மில்லாத் தொடையெனப் படுமே. ... 3.

அந்தம் முதலாத் தொடுப்ப(து) அந்தாதி
வந்தமொழி அடிமுழுதும் வருவது இரட்டை
எந்தத் தொடையும் இல்லாதது செந்தொடை. ... 4.

8.81. அந்தாதித் தொடை
(குறள் வெண்செந்துறை)

அந்தம் முதலாத் தொடுப்ப தந்தாதி
வந்தது திரும்பவும் வகையாய் வருமே. ... 5.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அடியொன்றின் அந்தமென முடியும் எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ அடியோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே. ... 6.

அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே. ... 7.

சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே. ... 8.

8.82 அந்தாதித் தொடை முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி கொஞ்சம் எழுதி நாமும்
அடிதோறும் வருகிற அந்தாதி முயன்று
விடியும் காலையில் வேலைகள் உரைப்போம். ... 1.

காலைமுதல் மாலை வரை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

காலையில் எழுந்து காப்பி குடித்து
குடித்த காப்பி மணமுளம் அமர
அமர்ந்து செய்திகள் ஆறப் படித்து
படித்த பேப்பரை மடித்து விட்டு
விட்டு ஒலிக்கும் வினாடியின் ஒலிகள்
ஒலித்து மனத்தில் ஓலம் எழுப்ப
எழுந்து குளியல் விரைவாய் முடித்து
முடியைத் துவட்டி உடைகள் அணிந்து
அணிந்தபின் மேசையில் அமர்ந்து கொரித்துக்
கொரித்ததும் கால்கள் ஓட நடந்து
நடனம் இட்டு சாலை கடந்து
கடையரு கில்லொரு பஸ்ஸில் ஏறி
ஏறி நின்றே பயணம் செய்து
செய்ய வேண்டிடும் வேலைகள் நினைத்து
நினைவுகள் விரட்ட லிஃப்டில் உயர்ந்தே
உயரதி காரியின் முகம்சொல் விரட்டுமுன்
விரட்டும் கணிணியில் வேலை முடிக்க
முடியைப் பிய்த்தே ஓயவரும் மாலை!

*****

8.70. அளபெடைத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.70. அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளபெடை என்பது மாத்திரை நீளுதல்
அளபெடை யிருவகை: உயிரும் ஒற்றும்
’அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே’. 
-- (யாப்பருங்கலம்) ... 1.

உயிரள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
உயிரின் உயிர்மெய் நெடில்கள் ஏழு:
அளபெடுக் கையிலோர் இனவெழுத் தெழுமே
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ. ... 2.

ஒற்றள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுக் கையிலவை மீண்டும் வருமே. ... 3.

உயிரளபெடை
உயிரள பெடைத்தொடை தோன்றும் இடங்கள்:
’தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென
நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே’. 
... (யாப்பருங்கல விளக்கம்) ... 4.

தனிநிலை
முன்பின் எழுத்தின்றி முதற்சீர் நின்று
ஒன்றே எழுத்து அளபெடுத் தொன்றுதல்
தனிநிலை உயிரள பெடையெனப் படுமே.
ஓரெழுத் திப்படி அளபெடுத் தொன்றிட
ஈரடி வேண்டும் என்பதை யறிக. ... 5.

சான்று:
ஏஎ வழங்கும் சிலையாய் இரவாரல்
மாஅ வழங்கும் வரை.
--யாப்பருங்கலம்

முதனிலை
முதற்சீர் நின்று முதலெழுத் தளபெடுத்து
அதன்பின்னும் எழுத்துவந்(து) ஈரடியில் அமைவது 
முதனிலை உயிரள பெடையெனப் படுமே. ... 6.

சான்று
காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான்
ஆஅழி ஏந்தல் அவன்.
--யாப்பருங்கலம்

இறுதிநிலை
முதற்சீர் இறுதிவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இறுதிநிலை உயிரள பெடையெனப் படுமே. ... 7.

சான்று
கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
--யாப்பருங்கலம்

இடைநிலை
முதற்சீர் நடுவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இடைநிலை உயிரள பெடையெனப் படுமே. ... 8.

சான்று
உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ
விராஅய கோதை விளர்ப்பு.
--யாப்பருங்கலம்

ஒற்றளபெடை
குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வருவதால்
இடைகடை வருமே ஒற்றள பெடைத்தொகை. ... 9.

சான்று: இடைநிலை ஒற்று
வண்ண்டு வாழும் மலர்நெடுக் கூந்தலாள்
பண்ண்டை நீர்மை பரிது.
--யாப்பருங்கலம்

சான்று: இறுதிநிலை ஒற்று
உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்
அரண்ண் அவர்திறத் தில்.
--யாப்பருங்கலம்

8.71 அளபெடைத் தொடை விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே அளபெடைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே. ... 1.

அளபெடைத் தொடை விகற்பச் சான்றுகள்
அடியளபெடை தொடை

ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பினோ
டீஇர் இசையுங்கொண் டீரளைப் பள்ளியுள்
தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போல் நறநுதால்
ஓஒ உழைக்கும் துயர்.
--யாப்பருங்கலம்

ஓரடிக்குள் அளபெடைத் தொடை
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய் ... 5
சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று 
நாணக் குமரியை நல்வர வேற்குமே!
சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
திக்கிக் குழன்ன்றே பேசு! ... 10

*****

8.60. இயைபுத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.60. இயைபுத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

புணர்ச்சி இணக்கம் பொருத்தமே இயைபு
இணங்கும் சொற்கள் இசைப்பது இயைபு
இதுகேட்ட பின்னே இதுகேட்கத் தக்கது
என்னும் தொடர்பு முறையாம் இயைபே.

8.61. இயைபுத் தொடை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் கடைச்சீர் கடையெழுத் தென்ப(து)
அடியின் பிறசீர் கடையெழுத் துடனோ
பிறவடி கடைச்சீர் கடையெழுத் துடனோ
இயைந்து வருவது இயைபெனப் படுமே.

அடியின் கடைச்சீர் கடைச்சொல் லென்ப(து)
அடியின் பிறசீர் கடைச்சொல் லுடனோ
பிறவடி கடைச்சீர் கடைச்சொல் லுடனோ
இயைந்து வருவதும் இயைபெனப் படுமே.

இறுவாய் ஒப்பினஃ(து) இயைபெனப் படுமென
உறைத்துச் சொல்லும் யாப்பருங் கலமே
இறுதியில் எழுத்தோ சொல்லோ ஒன்றுதல்
இயைபுத் தொடையென விளக்கம் கூறுமே.

’கடலே மணலே’ ஓரெழுத் தியைபு
’காவிரி பூவிரி’ எழுத்துக ளியைபு
’காலை மாலை’ சொல்லின் இயைபு
’சடசட வென்று தடதட வென்று’
என்னும் அடியில் சொற்களின் இயைபே.

சொல்லியை பினில்வரும் சொல்முதல் எழுத்து
சொல்லும் ஒலியில் ஒன்றுதல் காண்க
காலையில் மாலையில் சொல்லியை பாகும்
கலையில் மலையில் சொல்லியை பாகும்
காலையில் மலையில் சொல்லியை பல்ல
கலையில் மாலையில் சொல்லியை பல்ல
எனினுமிச் சொற்கள் எழுத்தில் இயைபாம்.

’காலையும் வேலையும்’ சொல்லியைபல்ல
ஆ-வின் மோனை ’ஐ-ஔ’ ஆவதால்
’காலை வேலை’ எழுத்தியை பாகுமே.

8.62. இயைபு விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே இயைபுத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே
இயைபின் விகற்பம் என்னென் றறிய
இறுதியி லிருந்து எண்ணுதல் வேண்டுமே.

இயைபுத் தொடைச் சான்றுகள்
அடிதோறும் சொல்லியைபு

நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க
--மாணிக்கவாசகர், திருவாசகம் 1-2

அடிதோறும் ஓரெழுத்து இயைபு
மாணிக்கவாசகர், திருவாசகம் 68-70

ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே.

அடிகளில் எழுத்துகள் இயைபு
திருமூலர், திருமந்திரம் 2

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை

அடிகளில் சொல்லியைபு
யா.கா. மேற்கோள்

சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்;
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்;
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்

ஓரடிக்குள் இயைபு விகற்பங்கள்
(இறுதிச்சீர் முதலெனக் கொண்டு எண்ண வேண்டும்.)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் 
... 1-2 இணை இயைபு (சிலப்பதிகாரம் 1.8.36)
நீரில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் 
... 1-3 பொழிப்பியைபு (ஔவையார், நல்வழி 24)
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 
... 1-4 ஒரூஉ இயைபு (ஔவையார், மூதுரை 1)
அலைசேர் புனலன் னனலன் னமலன் 
... 1-2-3 கூழை இயைபு (அப்பர் தேவாரம் 235)
மன்னனும் அமைச்சனும் இன்னுமோர் புலவனும் 
... 1-3-4 மேற்கதுவாய் இயைபு
மன்னனும் இன்னுமோர் புலவனும் அமைச்சனும் 
... 1-2-4 கீழ்க்கதுவாய் இயைபு
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் 
... 1-2-3-4 முற்று இயைபு (ஔவையார், நல்வழி 38)

புறனடை: கடையியைபுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயைபு விகற்பம் எண்ணும் போது
முதற்சீர் கடைச்சீ ராவத னாலே
பிறசீர் களிலே ஒன்றும் இயைபுகள்
கடையியை பென்னும் வகையில் வருமே.

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே 
... 2-3 இடைப்புணர் இயைபு
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
... 2-4 பின்னியைபு
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் 
... 3-4 கடையிணை இயைபு
மன்னனும் அமைச்சனும் புலவனும் இன்னுமோர் 
... 2-3-4 கடைக்கூழை இயைபு

*****

Wednesday, March 29, 2017

8.53. முரண்தொடை: புதிய பார்வை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.53. முரண்தொடை: புதிய பார்வை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
(ச. அகத்தியலிங்கம் கட்டுரையிலிருந்து)

தமிழரி மாவெனத் தமிழர் அறியும்
முனைவர் அகத்திய லிங்கனார் கட்டுரை
முரண்தொடை புதிய பார்வையில் விளக்குமே. ... 1

பொருள்முரண் என்பது பருப்பொருள் முரணுடன்
பொருள்முரண் என்பது சொற்பொருள் சேர்வெனப்
பொருந்தும் இலக்கணம் காட்டும் முரண்வகை
அரிமா அகத்திய லிங்கனார் ஆய்வரே. ... 2

1. எதிர்ச்சொல் முரண்வகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதிர்ச்சொல் முரண்வகை யெனவே சொற்கள்
கனவினால் காண்டலின் என்னும் இரண்டும்
கீழ்வரும் குறளில் அமைவது காண்க. ... 3

கனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர் ... 
--திருக்குறள் 122:03

2. எதிர்மறைச் சொல்முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதிர்மறைச் சொல்முரண் கீழ்வரும் குறளில்
அடக்கம் அடங்காமை என்விரு சொற்களில்
பயின்று வருவதைப் பார்த்தறி வீரே. ... 4

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
--திருக்குறள் 013:01

3. பிறவகைச் சொல்முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அருள்-பொருள் சொற்கள் கீழ்வரும் குறளில்
எதிர்ச்சொல் அல்ல எதிர்மறை அல்ல
எனினும் அவையும் முரணெனப் புலவர்
கொள்வதால் பிறவகைச் சொல்முர ணாமே.
அவ்வுல கம்சொல் இவ்வுல கம்சொல்
எதிர்ச்சொல் முரணாய் அமைவதும் காண்க. ... 5

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு.
--திருக்குறள் 025:07

4. பெயரடை முரண்
(பெயரடை = adjective)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பெயர்ச்சொல் ஒன்றை மேலும் விரித்துப்
பண்பை உணர்த்தும் பதமாய்ச் சேர்வது
பெயரடை அல்லது பெயருரிச் சொல்லெனும்
பெயரினைத் தாங்கும் இலக்கணக் கூறாம்.
பெயரடைச் சொற்கள் பெருமை மிக்க
முரண்வகை யாகி மனத்தில் நிற்குமே. ... 6

சான்றுகள்
(சிறுகோட்டுப் பெரும்பழம்)
வேரல் வேலி வேர்கோட் பலவின் 
சார னாட செவ்வியை யாகுமதி  
யாரஃ தறிந்திசி னோரே சாரற் 
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் 
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!
--குறுந்தொகை 18

(சிறியகள் பெரியகள்)
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணும் மன்னே
--புறநானூறு 235

(நல்லொழுக்கம்-தீயொழுக்கம்)
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
--திருக்குறள் 014:08

(சிறுகாப்பிற் பேரிடத்த)
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.
--திருக்குறள் 075:04

5. வினையடை முரண்
(வினையடை = adverb)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வினைச்சொல் ஒன்றை மேலும் விரித்துப்
பண்பை உணர்த்தும் பதமாய்ச் சேர்வது
வினையடை அல்லது வினையுரிச் சொல்லென
விளையும் பெயர்கொளும் இலக்கணக் கூறாம்.
வியையடைச் சொற்கள் வியனுறும் சொற்களாய்
முரண்வகை யாகி மனத்தில் நிற்குமே. ... 7

சான்றுகள்
(கடிதோச்சி-மெல்ல வெறிக)
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.
--திருக்குறள் 057:02

6. எழுவாய் முரண்
(எழுவாய் = subject)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பெயரெனும் முதல்வேற் றுமைகொளும் சொல்லே
எழுவாய் என்பப்படும் என்பதை நோக்கி
எழுவாய் முரண்தொடை எழுவ துண்டே. ... 8

சான்று
(அடக்கம்-அடங்காமை)
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
--திருக்குறள் 013:01

அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.
--திருக்குறள் 043:10

(சிறுமை-பெருமை)
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்.
--திருக்குறள் 046:01

7. பயனிலை முரண்
(பயனிலை = predicate)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுவாய்ச் சொல்லைக் குறிபிற சொற்கள்
பயனிலை என்னும் இலக்கணக் கூறாம்
பயனிலை முரணுதல் பயனினை முரணே. ... 9

(ஆறும்-ஆறாதே)
தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
--திருக்குறள் 013:09

(பெரியர்-சிறியர் = எழுவாய் முரண்;
செய்வார்-செய்கலாதார் = பயனிலை முரண்)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06

8. செயப்படுபொருள் முரண்
(செயப்படுபொருள் = object)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வினைமுத லதுதொழில் பயனடைச் சொல்லே
செயப்படு பொருளென விளக்கப் படுமே
செயப்படு பொருள்முரண் பிறவகை யுடன்வரப்
பின்வரும் குறளில் கண்டறி வீரே. ... 10

(கல்லாதார்-கற்றார் = எழுவாய்-செயப்படுபொருள் முரண்;
மேல்-கீழ் = ஒரூஉ முரண்)
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
--திருக்குறள் 041:09

9. வேற்றுமை முரண்
(வேற்றுமை = case)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செயப்படு பொருள்முத லாயின வாகப்
பெயர்ப்பொருள் வேறு படுத்தும் வேற்றுமை
அமைந்து முரணுதல் வேற்றுமை முரணே. ... 11

சான்றுகள்
இரண்டாம் வேற்றுமை முரண்
(உறங்குவது-விழிப்பது)
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
--திருக்குறள் 034:09

மூன்றாம் வேற்றுமை
(ஒழுக்கத்தின்-இழுக்கத்தின்)
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.
--திருக்குறள் 014:07

நான்காம் வேற்றுமை
(பெருமைக்கும்-சிறுமைக்கும்)
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.
--திருக்குறள் 051:05

ஐந்தாம் வேற்றுமை
(நல்லினத்தின்-தீயினத்தின்)
நல்லினத்தி னூங்குந் துணையில்லைத் தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.
--திருக்குறள் 046:10

ஆறாம் வேற்றுமை
(பிறன்-தன்)
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.
--திருக்குறள் 019:06

ஏழாம் வேற்றுமை
(இம்மையிலும்-மறுமையிலும்)
சிறுமைய் ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்.
--திருக்குறள் 010:08

10. பலவகை முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றின் மிக்கதாய்ப் முரண்பல வகையில்
வந்தே அமைவது பலவகை முரணாம்
இங்ஙன் அமைந்த குறள்பல உண்டே. ... 12

சான்றுகள்
இரண்டு முரண்கள்

(பெரியர்-சிறியர் = பெயரடை, கடையிணை;
செய்வர்-செய்கலாதார் = பயனிலை)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06

(பிறர்க்கு-தமக்கு = நான்காம் வேற்றுமை;
முற்பகல்-பிற்பகல் = பெயரடை)
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.
--திருக்குறள் 032:09

மூன்று முரண்கள்
(மேல்-கீழ் சொற்களை வைத்தே மூன்று முரண்!)
மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.
--திருக்குறள் 098:03

குறிப்பு:
முனைவர் அகத்தியலிங்கம் கட்டுரை மின்தமிழ் கூகிள் குழுமத்தில்:
https://groups.google.com/forum/#!msg/mintamil/QNuU9gGhh7w/Akgfcz9CNNkJ

*****

Tuesday, March 28, 2017

8.50. முரண்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.50. முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணென
மொழியும் தொல்காப் பியநூற் பாவினால்
முரண்தொடை இலக்கணம் விளக்கப் படுவதில்
பொருளெனச் சொல்வது சொல்லின் பொருளிலை
பொருளெனச் சொல்வது பருப்பொருள் குறிக்குமே. ... 1

அடியின் முதற்சீர் சொல்லோ பொருளோ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே. ... 2

பேரா சிரியர் தொல்காப் பியவுரை
ஆராய்ந் தருளும் சொற்பொருள் முரண்தொடை
ஓரைந் தென்னும் வகையில் ஒன்றுமே. ... 3

சொற்பொருள் முரணே ஐவிகற் பத்தன
சொல்லொடு சொல்லும் பொருளொடு பொருளும்
சொற்பொருள் சொல்லொடும் சொற்பொருள் பொருளொடும்
சொற்பொருள் சொற்பொரு ளுடனே முரணென
உற்ற விகற்பம் ஐந்தில் வருமே. ... 4

சான்றுகள்
செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்
[செம்மை-கருமை -- பருப்பொருள் குறிக்காததால் சொல்முரண்]

தீமேய் திறல்வரை நுழை‍இப் பரிம்,எலிந்து
நீர்நசை பெறா‍அ நெடுநல் யானை
[தீ-நீர் -- பருப்பொருள் குறிப்பதால் பொருள்முரண்]

பெருமலைக் குறுமகள் பிறிதோர்த்து நடுங்கலிற்
சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு
[பெருமலை-சிறுமை -- சொற்பொருள் சொல்முரண்]

செந்தீ யன்ன சினந்த யானை
நீர்நசை பெறா‍அக் கானற்
[செந்தீ-நீர்நசை -- சொற்பொருள் பொருள்முரண்]

ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி
செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச்
[ஓங்குமலை-தாழ்கருவி, செங்குரல்-பைங்கிளி 
சொற்பொருள் சொற்பொருள் முரண்]

8.51. முரண் விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே முரண்வகைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே. ... 1

அடிமுரண் சான்று
இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில்
நிலவுகுவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னின் அன்ன நுண்டா திறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே.
--யா.கா.மேற்கோள்

எழுவகை முரண் விகற்பம்
புனைவுச் சான்று

பெண்ணும் ஆணும் நிகரெனக் கொள்வோம் ... [இணை]
மண்ணில் தெரியும் வானம் ஞானிக்கு ... [பொழிப்பு]
என்றோ மறந்தது நினைவில் இன்று ... [ஒரூஉ]
கிழக்கும் மேற்கும் தெற்கில் ஒடுங்கும் ... [கூழை]
அன்னை மற்றும் தந்தை குழந்தை ... [மேற்கதுவாய்]
எலியும் பூனையும் அஞ்சும் நாயிடம் ... [கீழ்க்கதுவாய்]
மனமும் வாக்கும் காயமும் உயிரும் ... [முற்று]

8.52. முரணுக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முதல்தர முரண்வகை தவிர வேறு
இரண்டாம் வகையின முரண்களு முண்டு:
கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென
இவையும் கூறுப ஒருசா ரோரே. ... [யாப்பருங்கலம்] ... 1

கடையிரு சீரும் முரண்படின் கடைமுரண்
கடைச்சீர் இரண்டாம் சீர்வரின் பின்முரண்
இடையிரு சீர்வரின் இடைப்புணர் முரணே
கடைச்சீர் மூன்றிலும் கடைக்கூழை முரண்வரும். ... 2

சான்று
மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு
கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
கோதையிற் றாழ்ந்த ஓங்குவெள் ளருவி
காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
இவ்வடிகளில் கடைவகை முரண்கள் நான்கும்
செவ்விதின் பயின்று வருவது காண்க.

*****

8.43. சொல் மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.43. சொல் மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொல்காப் பியம்பின் தொன்னூல்கள் மோனையாய்ச்
சொல்லாத இம்மோனை தொன்றமிழிற் பயின்றாலும்
கட்டளைக் கலித்துறை நூற்செய்த தாமோதரர்
கட்டுவண்ண நூற்செய்த தண்டபாணி சுவாமிகள்
பல்வகை மோனையில் இவ்வகை மோனையைச்
சொல்மோனை கள்ள மோனை பெயரிட
உள்ளடங்கு மோனையெனத் திருமுருக னார்சொல
முன்னை நூல்களில் முனைவர் திருஞான
சம்பந்தம் தந்த சான்றும் இலக்கணமும்
இங்குக் கண்டுநாம் இதனொலி யறிவமே. ... 1

[இப்பாடலில் சொன்ன நூல்கள்:
’கட்டளைக் கலித்துறை’, சி.வை. தாமோதரம் பிள்ளை
’அறுவகை இலக்கணம்’, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
’பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி’, முனைவர் ப. திருஞானசம்பந்தம்]

அடிமுதல் எழுத்து பிறசீர் முதலுறாதே
அடிமுதல் எழுத்து பிறசீர் நடுவுறும்
சொல்முதல் எழுத்தாய்ச் சொல்மோனை அமையுமே. ... 2

சொல்மோனை இலக்கியச் சான்றுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சொல்மோனை இலக்கியச் சான்றுக ளாகச்
சொல்லும் முனைவர் கீழ்வரும் அடிகளை
வல்லிதின் வரைவர் தம்நூல் தனிலே. ... 3

கடுங்கதிர் வெங்-கானம் பல்பொருள்-கட் சென்றார்
(கைந்நிலை 15:3 க-கா-க)

விடல்-வேண்டும் தன்கண் வெகுளி யடல்-வேண்டு
(நான்மணிக். 13:3 வி-வே-வே)

வார்குர ரேனல் வளை-வாய்க் கிளிகவரு
(ஐந்திணை எழு. 13:1 வார்-வ)

மானந் தலை-வருவ செய்பவோ - யானை
(நாலடியார் 198:2 மா-வ)

பசுபதியார் தரும் கம்பன் சான்றுகள்:
உலகம் யாவையும் தாம்-உள வாக்கலும்
தலைவர் அன்னவர்க் கே-சரண் நாங்களே.

சொல்மோனைப் புனைவுச் சான்று
(கலிவிருத்தம்)

கல்லை அடித்து-கற் பனை-காண் உருபோலச்
சொல்லைப் பிடித்த-சொற் கவிதை யின்-சுடர்
வில்லம் பாய்-விழுந்து உள்ளுறை பொருள்-விளக்கக்
கல்லா தவன்-களிப் பெய்து-கா ணும்-கவிதை.

8.44. மோனைக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி கடைச்சீர் தொடங்கியே அமைய
அளவிடும் மோனை வகைகள் புறனடை
சீர்நிலை மோனைப் புறனடை யென்றே
நால்வகை மோனைகள் நவிலக் காண்பமே. ... 1

கடையிரு சீர்களில் சீர்நிலை மோனை
கடையிணை மோனையென் றழைக்கப் படுமே.
சீர்கள் நான்கில் இரண்டில் மோனை
பின்மோ னையென் றழைக்கப் படுமே.
இறுதிச் சீர்கள் மூன்றில் மோனை
உறுவது கடைக்கூழை மோனை யாமே
நடுவிரு சீர்களில் அமையும் மோனை
இடைப்புணர் மோனையென் றழைக்கப் படுமே. ... 2

ஒன்று நான்கு சீர்களில் ஒரூஉ
ஒன்று மூன்று நான்கு மேற்கெதுவாய்
ஒன்று இரண்டு நான்கு கீழ்க்கதுவாய்
என்றே அமையும் மோனைகள் முதற்சீரில்
ஒன்றி அமைவதால் புறனடை யாகா
எனவே புறனடை மோனை நான்கே. ... 3

புறனடை மோனை இலக்கியச் சான்றுகள்
திருக்குறள்

கடையிணை மோனை (சீர்கள் 4-3)
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா (10)
ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளாற்கோமா (25)
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் (38)

பின்மோனை (சீர்கள் 4-2)
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி (17)
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் (55)
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த (61)

கடைக்கூழை மோனை (சீர்கள் 4-3-2)
ஒருமையு ளாமபோ லைந்தடக்க லாற்றி (126)
இலனென்று தீயவை செய்யற்க செய்யி (205) 
இவறலு மாண்பிறந்த மானமு மாணா (432)

இடைப்புணர் மோனை (சீர்கள் 3-2)
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் (62)
குழலினி தியாழினி தென்பதம் மக்கண் (66)
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் (147)

புறனடை மோனை புனைவுச் சான்று
(கலிவிருத்தம்)

காலம் வலிகளை ஆற்றுவது ஆறுதல் ... (கடையிணை மோனை)
பாலம் அமைக்க மீண்டும் அன்புறும் ... (பின்மோனை)
ஓல மனத்தில் வாழ்வில் வளம்வர ... (கடைக்கூழை மோனை)
ஆலம் விழுகள் வேரென மண்ணிறங்கும். ... (இடைப்புணர் மோனை)

*****

8.45. நெடிலடி, கழிநெடிலடி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அறுவகை இலக்கண நூலும் உரையும்
சிறுவகை மோனையின் சீர்களைப் பேசும்
நெடிலடி கழிநெடில் மோனை அமைப்புகள்
தொடும்பா வுரையின் செய்திகள் அறிவோம். ... 1

அளவடிச் சீர்களில் ஒன்றிலும் மூன்றிலும்
வளமாய் அமையும் பொழிப்பு மோனையே
அளவடி மோனையில் சிறப்பென் றறிக. ... 2

நெடிலடி கழிநெடில் மோனை பலவெனில்
உடன்வரும் பொழிப்பும் ஒலிநயம் கூட்டும்
நெடிலடி மோனை ஒன்றில் ஐந்தில்
கழிநெடி லடிவரக் காணும் மோனைகள்
பொழிவாய் பாடைப் பொறுத்து வருமே. ... 3

அரையடி வாய்பா டறுசீர் விருத்தம்
இருமுறை அதுவே வந்தால் மோனை
சீர்கள் ஒன்றிலும் நான்கிலும் அமையும். ... 4

சான்று
(அறுசீர் விருத்தம்:
. மா மா காய் அரையடி)

வெய்யிற் கேற்ற நிழலுண்டு 
. வீசும் தென்றற் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
. கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
--கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

அரையடி வாய்பா டறுசீர் விருத்தம்
நான்குகாய் மாதேமா எனவரும் அடிகளில்
மோனை ஒன்றிலும் ஐந்திலும் வருமே. ... 5

சான்று
(அறுசீர் விருத்தம்:
. நான்கு காய் மா தேமா)

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே 
. ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும்
. மேவு மாயின்
பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப்
. பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர்
. சிறப்புக் கண்டார்.
--பாரதியார்

எழுசீர் விருத்த மோனை பொதுவில்
வழுவற ஒன்றாம் ஐந்தாம் சீர்களில்
எழுசீர் மிக்கென் றெழுதும் விருத்த
மோனை மூன்று வருதல் வேண்டும்
எண்சீர் விருத்தம் என்றால் மோனை
ஒன்று ஐந்து ஏழுசீர் களிலாம். ... 6

சான்றுகள்
எழுசீர் விருத்தம் 
(மோனை சீர்கள் 1-5)

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே 
. அன்பினில் விளைந்தவா ரமுதே 
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
. புழுத்தலைப் புலையனேன் தனக்குச் 
செம்மையே ஆய சிவபதம் அளிஹ்த்த 
. செல்வமே சிவபெரு மானே 
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
. எங்கெழுந் தருளுவ தினியே.
-திருவாசகம், மாணிக்க வாசகர்

எண்சீர் விருத்தம் 
(மோனை சீர்கள் 1-5-7)

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி 
. நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் 
. பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் 
காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!
. கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே 
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
. அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே! 
--பட்டினத்தார்

*****

8.42. அனுமோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.42. அனுமோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அநுவெனும் வடசொல் அனுவாம் தமிழில்
அனுவதன் பொருளென அண்மை, ஒத்ததாம்
உயிருடன் உயிர்மெய் ஓசையில் எழுத்தில்
முழுதும் ஒன்றாமல் ஒத்த ஒலிகளில்
ஒன்றிட வருவது அனுமோனை யாமே. ... 1

அனுமோனை வாய்பாட்டு வெண்பா
(பஃறொடை வெண்பா)

அனுமோனை வாய்பா(டு) அகத்தில் நிலைக்க
வெனவொரு பண்டைநூல் வெண்பாவொன் றுண்டு:
அகரமோ டாகாரம் ஐகாரம் ஔகான்
இகரமோ டீகாரம் எஏ - உகரமோ
டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
ஆகாத வல்ல அனு. ... 2
--யா.வி. உரை மேற்கோள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்னோர் தந்த-அனு மோனை யெழுத்துகள்
பின்னுள வாறு பிரிதல் காண்க
அஆஐஔ இஈஎஏ உஊஒஓ உயிரெழுத்துகள்
இவ்வுயிர் ஏறிய உயிர்மெய் எழுத்துகள்
ககாகைகௌ கிகீகெகே குகூகொகோ போல்வருமே. ... 3

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சிலமெய் எழுத்துகள் சலுகை பெறுவன,
அவற்றில் தொடங்கும் சொற்களின் குறைவால்:
ச-வும் த-வும் ஓரினம்.
ம-வும் வ-வும் ஓரினம்.
ந-வும் ஞ-வும் ஓரினம்.
யாவிற்(கு) இஈஎஏ மோனை என்பரே. ... 4

புலவர் குழந்தை, பசுபதி யவர்கள்
பரிவது போல இன்றைய வழக்கில் 
ய,ஜ,ர,ஹ,ல முதலெழுத் தென்றே
சொற்கள் பற்பல வருவத னாலே
யா-விற்கு அஆ-ஐஔ மோனை என்றும்
ஜ-வுக்கு ச-த-மோனை என்றும்
ர-ல-விற்கு இ-ஈ-எ-ஏ-மோனை என்றும்
ஹ-விற்கு அ-ஆ-ஐ-ஔ மோனை என்றும்
இன்றைய பாக்களில் எண்ணப் படுமே. ... 5

8.42. அனுமோனைச் சான்றுகள்: உயிர் எழுத்துகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மேலுள அனுமோனை வகைகள் யாவையும்
கீழுள சான்றுகள் குறிப்பது கான்க
மோனை எழுத்துகள் அடைப்புக் குறிகளில். ... 1

அகதிக்கு ஆகாயம் துணையாகும். [அ-ஆ]
அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா? [அ-ஐ]
அஞ்சில் படித்தாலே ஔவைசொல் புரியும். [அ-ஔ]

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் [ஆ-அ]
ஆடுமாடு கொம்பிரண்டு ஐயம் பிடாரிக்கு மூன்று. [ஆ-ஐ]
ஆகாரம் குறைப்பதே தன்னில் ஔடதம். [ஆ-ஔ]

இரந்தோர்க்கு ஈவது உடையார் கடனே. [இ-ஈ]
இடுகிற தெய்வம் எங்கும் இடுமே. [இ-எ]
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் [இ-ஏ]

ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். [ஈ-இ]
ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. [ஈ-எ]
ஈயம் பிடித்தவன் ஏது சொல்லினும் கேளான். [ஈ-ஏ]

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாமோ? [உ-ஊ]
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர் சுகமே. [உ-ஒ]
உறுதியான காரியும் ஓர்போதும் கெடாது. [உ-ஓ]

ஊனினால் உறவு பூணினால் அழகு. [ஊ-உ]
ஊசி ஒருமுழத் துணியாவது கொடுக்கும். [ஊ-ஒ]
ஊருக்கெல்லாம் ஓர்வழி உனக்கோர் வழியா? [ஊ-ஓ]

எங்கும் மடமிருக்க இருக்க இடமில்லை. [எ-இ]
என்ணம் இருந்தால் ஈவது இயலும். [எ-ஈ]
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லாக்கு. [எ-ஏ]

ஏது பிரியம்? இல்லாதது பிரியம். [ஏ-இ]
ஏழை நெஞ்சில் ஈரம் உண்டு. [ஏ-ஈ]
ஏரி பெருகினால் எங்கும் பெருக்கு. [ஏ-எ]

ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக்காசு. [ஐ-அ]
ஐம்பொறி ஆட்சிகொள். [ஐ-ஆ]
ஐப்பசி முதல்நான் ஔவை நோன்பு. [ஐ-ஔ]

ஒருவன் அறிந்தால் உலகம் அறியும். [ஒ-உ]
ஒருபிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம். [ஒ-ஊ]
ஒருகை தட்டினால் ஓசை எழும்புமோ? [ஒ-ஓ]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் [ஓ-உ]
ஓதுவார்க்கு ஊரும் உழுவார்க்கு நிலமும் இல்லையா? [ஓ-ஊ]
ஓயா மழையும் ஒழியாக் காற்றும். [ஓ-ஒ]

ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை. [ஔ-அ]
ஔவையின் ஆத்திச் சூடி குழந்தைகள் அறியும். [ஔ-ஆ]
ஔவை படித்து ஐயம் நீக்குவோம். [ஔ-ஐ]

8.42. அனுமோனைச் சான்றுகள்: உயிர்மெய் எழுத்துகள்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே [க-கா]
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் [க-கை]
கந்தனின் மதமே கௌமாரம் என்பது. [க-கௌ]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் [கா-க]
காக்கை கையில் வந்து அமருமோ? [கா-கை]
காக்கை கௌவிச் சென்ற வறுவல். [கா-கௌ]

கிளியும் கீரியும் ஒன்றாய்க் காணுமோ? [கி-கீ]
கிளியின் பேச்சால் கெட்டது காரியம். [கி-கெ]
கிளியின் பேச்சைக் கேட்பாயோ மன்னா? [கி-கே]

கீழே விழுந்த கிழவன் மாண்டான். [கீ-கி]
கீழே விழுந்தும் கெடுப்பதை விடாதவன். [கீ-கெ]
கீழே விழுந்தால் கேட்பார் இல்லை. [கீ-கே]

குறும்பு செய்தாள் கூடைக் காரி. [கு-கூ]
குலமகட் கழகு கொழுநனைப் பேணுதல். [கு-கொ]
குடந்தை நகரில் கோயில்கள் பலவுண்டு. [கு-கோ]

கூட்டுக் குடும்பத்தில் உள்ளது நன்மை. [கூ-கு]
கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் தெய்வம். [கூ-கொ]
கூடி வாந்தால் கோடி நன்மை. [கூ-கோ]

கெடுவான் கேடு நினைப்பான். [கெ-கே]
கெஞ்சிய கிழவிக்குக் கொடுத்தால் குறையுமோ? [கெ-கி]
கெட்டுப் போன கீரையைத் தூக்கியெறி. [கெ-கீ]

கேணி வெட்டக் கிரையம் என்ன? [கே-கி]
கேள்வி கேட்காமல் கீழ்ப்படி வாயா? [கே-கீ]
கேட்டு அறிவது கெடுதல் ஆகுமோ? [கே-கெ]

கைவினை கரவேல். [கை-க]
கையால் இயல்வது காலால் முடியுமோ? [கை-கா]
கைமாற்று வாங்கில் கௌரவம் குறையும். [கை-கௌ]

கொற்றவன் குடியே கோபத்தால் கெடுமே. [கொ-கு]
கொற்றவன் கூற்றுக்கு மறுபேச் சில்லை. [கொ-கூ]
கொண்டதே கோலமென அலைவார் சிலபேர். [கொ-கோ]

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். [கோ-கு]
கோவிலில் கூடி விழாவினை நடத்துவோம். [கோ-கூ]
கோவிலில் கூட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. [கோ-கொ]

கௌரவருடன் சேர்ந்தாலும் கர்ணனின் கீர்த்தி குன்றவில்லை. [கௌ-க]
கௌவை காணாது வாழ்தல் இனிது. [கௌ-கா]
கௌவருக்கு சூது கைவந்த கலையாம். [கௌ-கை]

8.42. அனுமோனைச் சான்றுகள்: இதர ஓரின எழுத்துகள்

சட்டி கெட்டியா என்று தட்டிப் பார்த்தான். [ச-த]
தள்ளிட முடியாது, சட்டம் கழுதையென்று. [த-ச]

மயிலவள் நடந்தாள் வயல்வழி யாக. [ம-வ]
வந்தான் மன்னன் போரினில் வாகைசூடி. [வ-ம]

நன்றி உள்ள விலங்கு ஞுமலி. [ந-ஞு; ஞுமலி=நாய்]
ஞானம் கூடிட நாடுவோம் குருவினை. [ஞா-நா]

யவனர் இல்லாது சரித்திரம் உண்டா? [ய-இ]
இவனே அவனது யசமானன். [இ-ய]

யக்ஞத்தில் முனிவருக்கு ஈடுபாடு அதிகம். [ய-ஈ]
ஈமக் கடனுக்கோர் யஜ்ஞம் உண்டு. [ஈ-ய]

யவனர் எப்படி நுழைந்தனர் தெரியுமா? [ய-எ]
எவ்வளவு பெருமை யசோதைக்குக் கண்ணனால்! [எ-ய]

யக்ஞம் ஏது தருமம் குன்றிட? [ய-ஏ]
ஏரினால் உழுதவன் யந்திரத்தால் உழுகிறான். [ஏ-ய]

ஜப்பான் நாட்டார் சட்டப்படி நடப்பர். [ஜ-ச]
சத்ரம் சாமரத்துடன் ஜனித்தது குழந்தை. [ச-ஜ]

ஜப்பான் நாட்டில் தஞ்சம் புகுந்தான். [ஜ-த]
தங்கல் நேரிட்டது ஜனனியின் தந்தைக்கு. [த-ஜ]

ரணகளத்தில் இவனோ கூற்றுவன் போல. [ர-இ]
இவனது ரத்தம் என்னவகை தெரியுமா? [இ-ர]

ரத்தம் ஈந்தால் உயிர்கள் பிழிக்கும். [ர-ஈ]
ஈச்சம் பழத்தால் ரத்தம் பெருகும். [ஈ-ர]

ரங்க சுவாமி எங்குதான் இல்லை? [ர-எ]
எழுந்தாள் தேவலோக ரம்பை போல. [எ-ர]

ரவாதோசைக்கு ஏது பணமென் பையில்? [ர-ஏ]
ஏனென்பேனோ ரயிலில் பயணிக்க? [ஏ-ர]

ஹரியென்றும் எழுதலாம் அரியென்றும் எழுதலாம். [ஹ-அ]
ஹரஹர என்பது பெரிதோ ஆண்டிக்கு இடுவது பெரிதோ? [ஹ-ஆ]
ஹரிக்கும் உண்டு ஐவகைத் தொழில்கள். [ஹ-ஐ]
ஹரிபற்றி உண்டோ ஔவையின் பாட்டில்? [ஹ-ஔ]

இத்தனை சலுகைகள் தொடைகளில் இருந்திட
மரபுக் கவிதையில் எதுவும் இயன்றிட
புதுமைக் கவிதை மோகம் ஏனோ?
ஆதலால் மரபிலே ஆக்குவோம் புதுமை! ... 2

*****

Thursday, March 9, 2017

8.38. மூவகை மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.38. மூவகை மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதல் எழுத்தொன்றும் மோனை வகைகளில்
அடிதோறும் சீர்முழுதும் ஒன்றுதல் தலையாகு
அடிதோறும் முதலெழுத் தொன்றுதல் இடையாகு
அடிதோறும் இனத்தில் மாத்திரையில் ஒன்றும்
பிறவகை மோனை கடையாகு மோனை. ... 1

தலையாகு மோனைச் சான்று
(குறள் வெண்பா)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
--திருக்குறள் 035:10

தலையாகு எதுகையில் முதலெழுத் தொன்றாது
தலையாகு மோனையில் அதுவும் ஒன்றி
வந்த சீரே வருமென் றறிக. ... 2

சான்று
தலையாகு எதுகை
அறவாழி யநணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது.
--திருக்குறள் 001:07

தலையாகு மோனை:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06

இடையாகு மோனைச் சான்று
(குறள் வெண்பா)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:09

மாவும் புள்ளும் வதிவயிற் படர 
மாநீர் விரிந்த பூவும் கூம்ப 
மாலை தொடுத்த கோதையும் கமழ 
மாலை வந்த வாடை 
மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே 
--யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்

கடையாகு மோனைச் சான்று
(ஆ-ஓ நெடில்மோனை)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் 
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை
--முதுமொழிக்காஞ்சி

புனைவுச் சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)

தலையாகு மோனை
வண்ணம் பலவாய் மலர்கள் இருப்பினும்
வண்ணம் ஒன்றாம் மரகத இலைகள்.

இடையாகு மோனை
வண்ணம் பலவாய் மலரும் சோலையில்
வண்டுகள் இனிதே மதுவுண் டொலிக்கும்.

கடையாகு மோனை (வ-ப: உயிர்மோனை)
வண்ணம் பலவாய் மலரும் சோலையில்
பண்ணும் ஒலிக்கப் பறவைகள் கூட்டம்.

8.39. இருவிகற்ப மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முன்னிரு அடிகளில் மோனை யொன்றும்
பின்னிரு அடிகளில் மோனை வேறும்
நாலடிச் செய்யுளில் வந்தே அமைவதற்
கேலும் பெயர்-இரு விகற்ப மோனை
இரண்டடி மோனையும் இதன்பெய ராமே.
ஈரடி களுக்கோர் மோனை யென்றே
நாலடி மேற்படும் செய்யுளில் வரலாம். ... 1

இலக்கியச் சான்றுகள்
இருவிகற்ப/இரண்டடி மோனை

(உயிர்மோனை: பா-கே, டா-பா)
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்
டாவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
---ஔவையார், நல்வழி 22

(அதே எழுத்து ஒன்றும் செம்மோனை, நெடில்மோனை)
புலமிக் கவரைப் புலமை தெளிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
’பாம்பறியும் பாம்பின் கால்.’
--பழமொழி நானூறு 7

புனைவுச் சான்றுகள்
இருவிகற்ப/இரண்டடி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மாலை நேரம் சாலை யோரம்
மாலை யாகும் மலர்கள் போல
மங்கையர் பள்ளி மைதா னத்தில்
மங்கும் கதிரொளி மழையில் நனைந்தே.

8.40. இடையிட்ட மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகள் தோறும் தொடர்ந்தோ அல்லது
அடிகள் இரண்டுக் கொருமுறை யென்றோ
அடிகளில் மோனை தொடர்ந்து வராமல்
அடியொன் றுவிட்டு மற்றதில் காணும்
அடிமோனை யின்பெயர் இடையிட்ட மோனை. ... 1

ஒற்றை, இரட்டைப் படிநிரல் எனவின்றி
ஒன்றில் மட்டும் வருவதும் உண்டே
ஓரெழுத் தெனவரும் செம்மோனை யின்றி
வேறு வகையில் அமைவதும் உண்டே. ... 2

இலக்கியச் சான்றுகள்
இடையிட்ட மோனை

பழமொழி நானூறு 
(இன்னிசை வெண்பா)

இம்மைத் தவமும் அறமும் எனவிரண்டும்
தம்மை யுடையர் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
’தம்மைதாம் ஆர்க்குங் கயிறு’. ... 371

ஒற்றைப்படை அடிகளில்
(இன்னிசை வெண்பா)

நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காவலரே காணின்
’உலக்கைமேல் காக்கை’ என்பார். ... 157

இரட்டைப்படை அடிகளில்
(நேரிசை வெண்பா)

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட பிரிவின் றதனால்
’திருவினும் திட்பம் பெறும்’. ... 33

புனைவுச் சான்றுகள்
இடையிட்ட மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

காதல் கொள்ளும் கன்னியும் காளையும்
தாதை தாயின் சம்மத முடன்தம்
காதற் பயிர்மனக் களத்தில் வளர்த்தால்
தாதுறும் மலரெனத் தம்முளம் கனியுமே.

8.41. வழி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளில் சீர்களில் என்றே பாடல்
அடிகள் முழுதிலும் முதலெழுத் தொத்து
நடைபயில் மோனை வழிமோனை யாமே. ... 1

இலக்கியச் சான்று
வழிமோனை
(இன்னிசை வெண்பா)

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
--நாலடியார், 39

புனைவுச் சான்றுகள்
வழிமோனை
(இன்னிசை வெண்பா)

காலைக் கதிரொளியில் கட்டுண்டு கள்வண்டு
காலைக் கடிமலர் காவினிற் கண்டிறக்குங்
காலையங்கு கண்விழித்த காமலர் கட்டவிழ்ந்து
காலையிளங் காற்றாடும் கா.

மாலை மயக்கில் மடுவினில் மஞ்சுநிற
மாலை மடலவிழ மன்னும் மகிழ்ச்சியில்
மாலை மனம்துதிக்க மாவுறை மார்பனின்
மாலை மலர்நீக்கும் மாசு.

*****