கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.38. மூவகை மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதல் எழுத்தொன்றும் மோனை வகைகளில்
அடிதோறும் சீர்முழுதும் ஒன்றுதல் தலையாகு
அடிதோறும் முதலெழுத் தொன்றுதல் இடையாகு
அடிதோறும் இனத்தில் மாத்திரையில் ஒன்றும்
பிறவகை மோனை கடையாகு மோனை. ... 1
தலையாகு மோனைச் சான்று
(குறள் வெண்பா)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
--திருக்குறள் 035:10
தலையாகு எதுகையில் முதலெழுத் தொன்றாது
தலையாகு மோனையில் அதுவும் ஒன்றி
வந்த சீரே வருமென் றறிக. ... 2
சான்று
தலையாகு எதுகை
அறவாழி யநணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது.
--திருக்குறள் 001:07
தலையாகு மோனை:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06
இடையாகு மோனைச் சான்று
(குறள் வெண்பா)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:09
மாவும் புள்ளும் வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவும் கூம்ப
மாலை தொடுத்த கோதையும் கமழ
மாலை வந்த வாடை
மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே
--யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்
கடையாகு மோனைச் சான்று
(ஆ-ஓ நெடில்மோனை)
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை
--முதுமொழிக்காஞ்சி
புனைவுச் சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)
தலையாகு மோனை
வண்ணம் பலவாய் மலர்கள் இருப்பினும்
வண்ணம் ஒன்றாம் மரகத இலைகள்.
இடையாகு மோனை
வண்ணம் பலவாய் மலரும் சோலையில்
வண்டுகள் இனிதே மதுவுண் டொலிக்கும்.
கடையாகு மோனை (வ-ப: உயிர்மோனை)
வண்ணம் பலவாய் மலரும் சோலையில்
பண்ணும் ஒலிக்கப் பறவைகள் கூட்டம்.
8.39. இருவிகற்ப மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்னிரு அடிகளில் மோனை யொன்றும்
பின்னிரு அடிகளில் மோனை வேறும்
நாலடிச் செய்யுளில் வந்தே அமைவதற்
கேலும் பெயர்-இரு விகற்ப மோனை
இரண்டடி மோனையும் இதன்பெய ராமே.
ஈரடி களுக்கோர் மோனை யென்றே
நாலடி மேற்படும் செய்யுளில் வரலாம். ... 1
இலக்கியச் சான்றுகள்
இருவிகற்ப/இரண்டடி மோனை
(உயிர்மோனை: பா-கே, டா-பா)
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்
டாவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
---ஔவையார், நல்வழி 22
(அதே எழுத்து ஒன்றும் செம்மோனை, நெடில்மோனை)
புலமிக் கவரைப் புலமை தெளிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
’பாம்பறியும் பாம்பின் கால்.’
--பழமொழி நானூறு 7
புனைவுச் சான்றுகள்
இருவிகற்ப/இரண்டடி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாலை நேரம் சாலை யோரம்
மாலை யாகும் மலர்கள் போல
மங்கையர் பள்ளி மைதா னத்தில்
மங்கும் கதிரொளி மழையில் நனைந்தே.
8.40. இடையிட்ட மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் தோறும் தொடர்ந்தோ அல்லது
அடிகள் இரண்டுக் கொருமுறை யென்றோ
அடிகளில் மோனை தொடர்ந்து வராமல்
அடியொன் றுவிட்டு மற்றதில் காணும்
அடிமோனை யின்பெயர் இடையிட்ட மோனை. ... 1
ஒற்றை, இரட்டைப் படிநிரல் எனவின்றி
ஒன்றில் மட்டும் வருவதும் உண்டே
ஓரெழுத் தெனவரும் செம்மோனை யின்றி
வேறு வகையில் அமைவதும் உண்டே. ... 2
இலக்கியச் சான்றுகள்
இடையிட்ட மோனை
பழமொழி நானூறு
(இன்னிசை வெண்பா)
இம்மைத் தவமும் அறமும் எனவிரண்டும்
தம்மை யுடையர் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
’தம்மைதாம் ஆர்க்குங் கயிறு’. ... 371
ஒற்றைப்படை அடிகளில்
(இன்னிசை வெண்பா)
நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காவலரே காணின்
’உலக்கைமேல் காக்கை’ என்பார். ... 157
இரட்டைப்படை அடிகளில்
(நேரிசை வெண்பா)
அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட பிரிவின் றதனால்
’திருவினும் திட்பம் பெறும்’. ... 33
புனைவுச் சான்றுகள்
இடையிட்ட மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
காதல் கொள்ளும் கன்னியும் காளையும்
தாதை தாயின் சம்மத முடன்தம்
காதற் பயிர்மனக் களத்தில் வளர்த்தால்
தாதுறும் மலரெனத் தம்முளம் கனியுமே.
8.41. வழி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளில் சீர்களில் என்றே பாடல்
அடிகள் முழுதிலும் முதலெழுத் தொத்து
நடைபயில் மோனை வழிமோனை யாமே. ... 1
இலக்கியச் சான்று
வழிமோனை
(இன்னிசை வெண்பா)
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
--நாலடியார், 39
புனைவுச் சான்றுகள்
வழிமோனை
(இன்னிசை வெண்பா)
காலைக் கதிரொளியில் கட்டுண்டு கள்வண்டு
காலைக் கடிமலர் காவினிற் கண்டிறக்குங்
காலையங்கு கண்விழித்த காமலர் கட்டவிழ்ந்து
காலையிளங் காற்றாடும் கா.
மாலை மயக்கில் மடுவினில் மஞ்சுநிற
மாலை மடலவிழ மன்னும் மகிழ்ச்சியில்
மாலை மனம்துதிக்க மாவுறை மார்பனின்
மாலை மலர்நீக்கும் மாசு.
*****
No comments:
Post a Comment