Wednesday, May 24, 2017

11.08 வெண்பாவின் தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.08 வெண்பாவின் தளை
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை 
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேர்வர
வாகுமே வெண்டளை காண். ... 1

(இருவிகற்பக் குறள்வெண்பா)
வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே
இரண்டு வகைகள் உள. ... 2

(பலவிகற்பச் சிந்தியல் வெண்பா)
இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என. ... 3

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என. ... 4

*****

11.09 வெண்பாவின் அடி
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
வெண்சீர் இயற்சீர் இயன்றிடும் வெண்பாவில்
நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே
ஈற்றடி முச்சீரில் சிந்தடியாய் நின்றிட
ஈற்றுச்சீர் நாள்,மலர் காசு பிறப்பென
மேற்சொன்ன நால்வகை யில். ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழெல்லை யாக இரண்டடி வந்துநிற்க
மேலெல்லை வெண்பா வகைபொறுத்து மாறும்
குறட்பா இரண்டடி மேலெல்லை கீழெல்லை
சிந்தியல் எல்லைகள் மூன்று. ... 2

அளவியல் எல்லைகள் ஆவது நான்கடி 
பஃறொடை ஐந்தும் பனிரெண்டும் எல்லை
கலிவெண்பா பத்துடன் மூன்றடிக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 3

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
மூச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு
முக்கா லடியென்றும் ஓர்பெயர் சொல்லுவர்
ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவியல் எல்லையாம்
பன்னிரண்டு முக்காலாம் பஃறொடை எல்லை
பதிமூன்று முக்கால் கலிவெண்பாக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 4

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா எனும்பேரே நாலடி யாகவரும்
வெண்பாவைச் சுட்டுவ தாய்-இவ் வகையில்
முதல்மூன் றடிகள் அளவடி யாய்வரும்
ஈற்றடி சிந்தடி யாம். ... 5

*****

11.10 செப்பலோசை என்பது
(வெண்பா)

செப்புதல் என்றால் விடையெனக் கூறல்
மறைவின்றித் தானே இயல்பாய் மொழிதல்
மறைத்தொன்றைக் கூறாது செப்பியே கூறுதல்
என்றுநச்சி னார்க்கினியர் நூல்.

இசைகுறித்து வாராமல் செப்புத லாகிய
வாக்கியம் போன்றதாம் ஓசை எனவே
இளம்பூ ரணர்-உரைக் கூற்று.

அகவலும் செப்பலும்
(வெண்பா)

காரிகை சொல்லும் அகவலும் செப்பலும்
சீரினில் இங்ஙனம் வேறு படுவதாம்
சீர்சால் அகவலெனக் காரிகைச் சொல்லாம்
இருவகை என்னும் இயற்சீர் விளம்-மா
வரும்சீர் நிலைச்சீர் இனத்தினில் ஒன்ற
நிறையும் அகவல் ஒலி.

திண்பா மலிசெப்பல் ஓசையெனும் காரிகை
திண்மை செறியும் ஒலியென் றியற்சீரின்
மாவிளம் என்றவை மாறி வருவதும்
காய்முன்நேர் என்று கதித்து வருவதும்
ஆய்ந்தால் விளங்குவ தாம்.

வெள்ளைப்பா என்பதும் வெண்பாவின் பேராக
வெள்ளோசை என்றுமே வெண்பாவின் ஓசையாய்ச்
செப்பலுக் கின்னொரு பேரென் றறிக;
தளைகளே ஓசையின் மூலம் எனவெண்
டளைவரச் செப்பல் எழும்.

அகவல், செப்பலொலி வேறுபடும் சான்றுகள்
(வெண்பா)

நேரொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
கண்ணன் என்னும் மன்னன் பேரை
எண்ணும் உள்ளத் தின்பம்
பண்ணில் ஏற்றிப் பாடும் உள்ளே.

(வெண்பா)
வெண்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

கண்ணனெனும் மன்னவனின் கன்னலன்ன பேரொன்றே
எண்ணமுறும் உள்ளத்தில் இன்பங்கள் சூழ்ந்துகொளும்
பண்ணுறவே துள்ளிவிழும் பாட்டு.

நிரையொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
மலைவிழும் அருவியில் வழிந்துறும் வளமென
அலைவிழும் கடற்கரை அமிழ்கழல்
கலைவிழும் சிலையவள் கருவிழி அலைவதே.

(வெண்பா)
இயற்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

மலைவீழ் அருவி வழியும் வளமாய்
அலைவீழ் கரையில் அமிழும் கழலாய்
கலைவீழ் சிலையாள் விழி.

*****

11.11 செப்பலோசையின் வகைகள்
(வெண்பா)

(பஃறொடை வெண்பா)
மூன்று வகையெழும் செப்பலெனும் ஓசையாம்
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
ஏந்திசை வெண்பா வுரிச்சீரால் மட்டுமே
தூங்கல் இயற்சீரால் மட்டும் ஒழுகிசையில்
இவ்விரு சீர்கள் கலந்து.

(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்தே ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

(பஃறொடை வெண்பா)
நால்வகைக் காய்ச்சீர்கள் வெண்பா வுரிச்சீராம்
நால்வகை மாவிளச்சீர் ஆகும் இயற்சீராம்
காய்முன்னே நேர்வர வெண்சீரின் வெண்டளை
மாமுன் நிரையும் விளமுன்னே நேருமென
மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை
இவ்வா(று) இருதளை எண்சீர் இயன்றுவரும்
செவ்வையே வெண்பா அமைப்பு.

மூவசையா லாகிவந்து நீரலையா யேந்திவந்து
நாவசைய ஓசையெழும் ஏந்திசையின் செப்பலாக
தூங்கிசைச் செப்பல் இயற்சீர் வரவரும்
தூங்கி வருவது தொங்கி வருதல்
இருவகை வெண்டளையும் யாப்பில் கலத்தல்
இருவகை ஓசை ஒழுக்கு.

ஏந்திசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
--திருக்குறள் 040:07

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு

(சிந்தியல் வெண்பா)
விண்ணோரும் மண்ணோரும் வேண்டுமருள் ஈசனவன்
கண்மூன்று கொண்டவனாம் காப்பவனாம் நானிலத்தை
எண்ணவரும் ஈசனருள் இன்று.

தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

(அளவியல் வெண்பா)
ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.
--தனிப்பாடற்றிரட்டு, பகுதி 1 காப்பு வெண்பா

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்

மேல்வந்த வெண்பாக் குறிப்பு
(இன்னிசை வெண்பா)

ஒருசீர் தவிர பிறசீர் களிலே 
வருவது மூவசைக் காய்ச்சீர்கள் ஏந்திசை
போற்றினால் என்பதைப் போற்றிடவே என்றுநாம்
மாற்ற இதுவுமே காய்.

(பஃறொடை வெண்பா)
காலையிளம் சூரியனின் கற்றையொளி கண்ணிறையும் 
சோலையெலாம் பொன்னிறமாய்த் தோன்றியொளிர் காட்சியினில்
புள்ளினத்தின் பண்ணலைகள் போகவரும் காற்றினிலே
அள்ளிவரும் தென்றலிலே ஆர்ந்துவரும் வாசனைகள்
தெள்ளியநீ ரோடையிலே சிற்றலையாய் நீரோட்டம் 
உள்ளமெலாம் பொங்கியெழும் ஊற்று.

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

தூங்கிசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
--திருக்குறள் 040:01

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா நாள்

பாலொடு தேன்கலந் தற்றே மணிமொழி
வாலெயி றூறிய நீர்.
--திருக்குறள் 113:01

கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்

(சிந்தியல் வெண்பா)
இருவிழி காண இறங்கும் உருவாய்
இருசெவி கேட்க இறங்கும் ஒலியாய்
ஒருமனம் ஆழங் கொளும்.

கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்

(அளவியல் வெண்பா)
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
--நாலடியார், 65

புளிமா புளிமா புளிமா கருவிளம்
தேமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்

(பஃறொடை வெண்பா)
கதிரினைக் காணார் நிலவினைக் காணார்
சதியும் பதியும் தனியாய்ப் பயணம்
விடியும் பொழுதில் விளையும் அலுவல்
முடியும் பொழுதினில் முற்றிருள் சூழும்
கடிநகர் வாழ்வின் கயம்.

கருவிளம் தேமா கருவிளம் தேமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா கருவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்

ஒழுகிசைச் செப்பல் சான்றுகள்
குறள் வெண்பா

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு.
--திருக்குறள் 040:06

கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா
கருவிளம் தேமா பிறப்பு

(சிந்தியல் வெண்பா)
பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.
--கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.90

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் நாள்.

(அளவியல் வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

(பஃறொடை வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

*****

No comments:

Post a Comment