கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.53. முரண்தொடை: புதிய பார்வை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
(ச. அகத்தியலிங்கம் கட்டுரையிலிருந்து)
தமிழரி மாவெனத் தமிழர் அறியும்
முனைவர் அகத்திய லிங்கனார் கட்டுரை
முரண்தொடை புதிய பார்வையில் விளக்குமே. ... 1
பொருள்முரண் என்பது பருப்பொருள் முரணுடன்
பொருள்முரண் என்பது சொற்பொருள் சேர்வெனப்
பொருந்தும் இலக்கணம் காட்டும் முரண்வகை
அரிமா அகத்திய லிங்கனார் ஆய்வரே. ... 2
1. எதிர்ச்சொல் முரண்வகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதிர்ச்சொல் முரண்வகை யெனவே சொற்கள்
கனவினால் காண்டலின் என்னும் இரண்டும்
கீழ்வரும் குறளில் அமைவது காண்க. ... 3
கனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர் ...
--திருக்குறள் 122:03
2. எதிர்மறைச் சொல்முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதிர்மறைச் சொல்முரண் கீழ்வரும் குறளில்
அடக்கம் அடங்காமை என்விரு சொற்களில்
பயின்று வருவதைப் பார்த்தறி வீரே. ... 4
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
--திருக்குறள் 013:01
3. பிறவகைச் சொல்முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அருள்-பொருள் சொற்கள் கீழ்வரும் குறளில்
எதிர்ச்சொல் அல்ல எதிர்மறை அல்ல
எனினும் அவையும் முரணெனப் புலவர்
கொள்வதால் பிறவகைச் சொல்முர ணாமே.
அவ்வுல கம்சொல் இவ்வுல கம்சொல்
எதிர்ச்சொல் முரணாய் அமைவதும் காண்க. ... 5
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு.
--திருக்குறள் 025:07
4. பெயரடை முரண்
(பெயரடை = adjective)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பெயர்ச்சொல் ஒன்றை மேலும் விரித்துப்
பண்பை உணர்த்தும் பதமாய்ச் சேர்வது
பெயரடை அல்லது பெயருரிச் சொல்லெனும்
பெயரினைத் தாங்கும் இலக்கணக் கூறாம்.
பெயரடைச் சொற்கள் பெருமை மிக்க
முரண்வகை யாகி மனத்தில் நிற்குமே. ... 6
சான்றுகள்
(சிறுகோட்டுப் பெரும்பழம்)
வேரல் வேலி வேர்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!
--குறுந்தொகை 18
(சிறியகள் பெரியகள்)
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணும் மன்னே
--புறநானூறு 235
(நல்லொழுக்கம்-தீயொழுக்கம்)
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
--திருக்குறள் 014:08
(சிறுகாப்பிற் பேரிடத்த)
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.
--திருக்குறள் 075:04
5. வினையடை முரண்
(வினையடை = adverb)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வினைச்சொல் ஒன்றை மேலும் விரித்துப்
பண்பை உணர்த்தும் பதமாய்ச் சேர்வது
வினையடை அல்லது வினையுரிச் சொல்லென
விளையும் பெயர்கொளும் இலக்கணக் கூறாம்.
வியையடைச் சொற்கள் வியனுறும் சொற்களாய்
முரண்வகை யாகி மனத்தில் நிற்குமே. ... 7
சான்றுகள்
(கடிதோச்சி-மெல்ல வெறிக)
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.
--திருக்குறள் 057:02
6. எழுவாய் முரண்
(எழுவாய் = subject)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பெயரெனும் முதல்வேற் றுமைகொளும் சொல்லே
எழுவாய் என்பப்படும் என்பதை நோக்கி
எழுவாய் முரண்தொடை எழுவ துண்டே. ... 8
சான்று
(அடக்கம்-அடங்காமை)
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
--திருக்குறள் 013:01
அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.
--திருக்குறள் 043:10
(சிறுமை-பெருமை)
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்.
--திருக்குறள் 046:01
7. பயனிலை முரண்
(பயனிலை = predicate)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுவாய்ச் சொல்லைக் குறிபிற சொற்கள்
பயனிலை என்னும் இலக்கணக் கூறாம்
பயனிலை முரணுதல் பயனினை முரணே. ... 9
(ஆறும்-ஆறாதே)
தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
--திருக்குறள் 013:09
(பெரியர்-சிறியர் = எழுவாய் முரண்;
செய்வார்-செய்கலாதார் = பயனிலை முரண்)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06
8. செயப்படுபொருள் முரண்
(செயப்படுபொருள் = object)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வினைமுத லதுதொழில் பயனடைச் சொல்லே
செயப்படு பொருளென விளக்கப் படுமே
செயப்படு பொருள்முரண் பிறவகை யுடன்வரப்
பின்வரும் குறளில் கண்டறி வீரே. ... 10
(கல்லாதார்-கற்றார் = எழுவாய்-செயப்படுபொருள் முரண்;
மேல்-கீழ் = ஒரூஉ முரண்)
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
--திருக்குறள் 041:09
9. வேற்றுமை முரண்
(வேற்றுமை = case)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செயப்படு பொருள்முத லாயின வாகப்
பெயர்ப்பொருள் வேறு படுத்தும் வேற்றுமை
அமைந்து முரணுதல் வேற்றுமை முரணே. ... 11
சான்றுகள்
இரண்டாம் வேற்றுமை முரண்
(உறங்குவது-விழிப்பது)
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
--திருக்குறள் 034:09
மூன்றாம் வேற்றுமை
(ஒழுக்கத்தின்-இழுக்கத்தின்)
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.
--திருக்குறள் 014:07
நான்காம் வேற்றுமை
(பெருமைக்கும்-சிறுமைக்கும்)
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.
--திருக்குறள் 051:05
ஐந்தாம் வேற்றுமை
(நல்லினத்தின்-தீயினத்தின்)
நல்லினத்தி னூங்குந் துணையில்லைத் தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.
--திருக்குறள் 046:10
ஆறாம் வேற்றுமை
(பிறன்-தன்)
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.
--திருக்குறள் 019:06
ஏழாம் வேற்றுமை
(இம்மையிலும்-மறுமையிலும்)
சிறுமைய் ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்.
--திருக்குறள் 010:08
10. பலவகை முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றின் மிக்கதாய்ப் முரண்பல வகையில்
வந்தே அமைவது பலவகை முரணாம்
இங்ஙன் அமைந்த குறள்பல உண்டே. ... 12
சான்றுகள்
இரண்டு முரண்கள்
(பெரியர்-சிறியர் = பெயரடை, கடையிணை;
செய்வர்-செய்கலாதார் = பயனிலை)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06
(பிறர்க்கு-தமக்கு = நான்காம் வேற்றுமை;
முற்பகல்-பிற்பகல் = பெயரடை)
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.
--திருக்குறள் 032:09
மூன்று முரண்கள்
(மேல்-கீழ் சொற்களை வைத்தே மூன்று முரண்!)
மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.
--திருக்குறள் 098:03
குறிப்பு:
முனைவர் அகத்தியலிங்கம் கட்டுரை மின்தமிழ் கூகிள் குழுமத்தில்:
https://groups.google.com/forum/#!msg/mintamil/QNuU9gGhh7w/Akgfcz9CNNkJ
*****
No comments:
Post a Comment