கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.60. இயைபுத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
புணர்ச்சி இணக்கம் பொருத்தமே இயைபு
இணங்கும் சொற்கள் இசைப்பது இயைபு
இதுகேட்ட பின்னே இதுகேட்கத் தக்கது
என்னும் தொடர்பு முறையாம் இயைபே.
8.61. இயைபுத் தொடை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் கடைச்சீர் கடையெழுத் தென்ப(து)
அடியின் பிறசீர் கடையெழுத் துடனோ
பிறவடி கடைச்சீர் கடையெழுத் துடனோ
இயைந்து வருவது இயைபெனப் படுமே.
அடியின் கடைச்சீர் கடைச்சொல் லென்ப(து)
அடியின் பிறசீர் கடைச்சொல் லுடனோ
பிறவடி கடைச்சீர் கடைச்சொல் லுடனோ
இயைந்து வருவதும் இயைபெனப் படுமே.
இறுவாய் ஒப்பினஃ(து) இயைபெனப் படுமென
உறைத்துச் சொல்லும் யாப்பருங் கலமே
இறுதியில் எழுத்தோ சொல்லோ ஒன்றுதல்
இயைபுத் தொடையென விளக்கம் கூறுமே.
’கடலே மணலே’ ஓரெழுத் தியைபு
’காவிரி பூவிரி’ எழுத்துக ளியைபு
’காலை மாலை’ சொல்லின் இயைபு
’சடசட வென்று தடதட வென்று’
என்னும் அடியில் சொற்களின் இயைபே.
சொல்லியை பினில்வரும் சொல்முதல் எழுத்து
சொல்லும் ஒலியில் ஒன்றுதல் காண்க
காலையில் மாலையில் சொல்லியை பாகும்
கலையில் மலையில் சொல்லியை பாகும்
காலையில் மலையில் சொல்லியை பல்ல
கலையில் மாலையில் சொல்லியை பல்ல
எனினுமிச் சொற்கள் எழுத்தில் இயைபாம்.
’காலையும் வேலையும்’ சொல்லியைபல்ல
ஆ-வின் மோனை ’ஐ-ஔ’ ஆவதால்
’காலை வேலை’ எழுத்தியை பாகுமே.
8.62. இயைபு விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை போலவே இயைபுத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே
இயைபின் விகற்பம் என்னென் றறிய
இறுதியி லிருந்து எண்ணுதல் வேண்டுமே.
இயைபுத் தொடைச் சான்றுகள்
அடிதோறும் சொல்லியைபு
நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க
--மாணிக்கவாசகர், திருவாசகம் 1-2
அடிதோறும் ஓரெழுத்து இயைபு
மாணிக்கவாசகர், திருவாசகம் 68-70
ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே.
அடிகளில் எழுத்துகள் இயைபு
திருமூலர், திருமந்திரம் 2
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
அடிகளில் சொல்லியைபு
யா.கா. மேற்கோள்
சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்;
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்;
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்
ஓரடிக்குள் இயைபு விகற்பங்கள்
(இறுதிச்சீர் முதலெனக் கொண்டு எண்ண வேண்டும்.)
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
... 1-2 இணை இயைபு (சிலப்பதிகாரம் 1.8.36)
நீரில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
... 1-3 பொழிப்பியைபு (ஔவையார், நல்வழி 24)
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
... 1-4 ஒரூஉ இயைபு (ஔவையார், மூதுரை 1)
அலைசேர் புனலன் னனலன் னமலன்
... 1-2-3 கூழை இயைபு (அப்பர் தேவாரம் 235)
மன்னனும் அமைச்சனும் இன்னுமோர் புலவனும்
... 1-3-4 மேற்கதுவாய் இயைபு
மன்னனும் இன்னுமோர் புலவனும் அமைச்சனும்
... 1-2-4 கீழ்க்கதுவாய் இயைபு
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
... 1-2-3-4 முற்று இயைபு (ஔவையார், நல்வழி 38)
புறனடை: கடையியைபுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இயைபு விகற்பம் எண்ணும் போது
முதற்சீர் கடைச்சீ ராவத னாலே
பிறசீர் களிலே ஒன்றும் இயைபுகள்
கடையியை பென்னும் வகையில் வருமே.
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
... 2-3 இடைப்புணர் இயைபு
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
... 2-4 பின்னியைபு
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
... 3-4 கடையிணை இயைபு
மன்னனும் அமைச்சனும் புலவனும் இன்னுமோர்
... 2-3-4 கடைக்கூழை இயைபு
*****
No comments:
Post a Comment