கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.85 இரட்டைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே ... (யாப்பருங்கலம்)
இரட்டை வருமொழி அடிமுழு தும்வரும்
அடிமுதற் சீரே அடிபிற சீர்களில்
அதுவே யாகப் பயிலுதல் இரட்டை. ... 1
சான்றுகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீரெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்.
நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்
மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்.
--யாப்பருங்கலம்
(இன்னிசை வெண்பா)
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
கோவீற் றிருந்தான் கொடை.
--நேமிநாதம், பக்.30
மேல்வந்த சான்றுகளில் சொல்லும் பொருளும்
வேறு படாது வருதல் காண்க.
சொல்வேறு படாது பொருள்வேறு பட்டு
வருவதும் இரட்டைத் தொகைவகைச் சேரும். ... 2
சான்று:
ஓடையே ஓடையே ஓடையே ஓடையே
கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்
மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்
கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்!
நாடி உணர்வார்ப் பெறின்.
--யாப்பருங்கலம்
[ஓடை - குடை வேலமரம், மலைவழி,
யானை நெற்றிப் பட்டம், நீரோடை எனக் கொள்க.]
இருசீர் திரும்புதல் இரட்டை யல்ல
ஒருசீர் மாறியும் திரும்புதல் இல்லை
ஒருசீர் அதுவே அடிபிற சீர்களில்
திரும்புதல் இரட்டைத் தொடையின் இலக்கணம்.
கீழ்வரும் சான்றுகள் இரட்டை யல்ல. ... 3
இரட்டைத் தொடை யல்ல:
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
--புறநானூறு 247
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதிலும்
--பாரதியார்
8.86 இரட்டைத் தொடை முயற்சி
(குறள் வெண்செந்துறை)
அதுவென ஒருசீர் அடிமுழு தும்வரும்
விதமாம் இரட்டைத் தொடையை முயல்வமே. ... 1
எழுமின் எழுமின் எழுமின் எழுமின்
உழவர் தொழிலின் உயர்வறி யாதே
மதுவில் அவரை மயங்க வைத்தே
பொதுநலம் குடும்பம் புறக்கணித் தாளும்
இலவச அரசைத் தேர்தலில் வீழ்த்துவோம்
நலமும் வளமும் நடைமுறை யாகவே. ... 2
(குறள் வெண்செந்துறை)
சீரொன்று அதுவே வேறு பொருள்களில்
திரும்பிடும் இரட்டைத் தொடையது கீழே. ... 3
(இன்னிசை வெண்பா)
ஒருகால் ஒருகால் ஒருகால் ஒருகால்
உருவினில் பேயது வந்ததும் உண்டு
தெருவினில் உள்ளோர் திகிலுடன் நோக்கப்
பெருமிதம் பொங்கிய பேய். ... 4
[முதலடி ஒருகால் சீர்ப் பொருள்கள்:
ஒருமுறை, ஒருவேளை, சிலவேளை, ஒரு காலுடன்]
*****
No comments:
Post a Comment