கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.43. சொல் மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொல்காப் பியம்பின் தொன்னூல்கள் மோனையாய்ச்
சொல்லாத இம்மோனை தொன்றமிழிற் பயின்றாலும்
கட்டளைக் கலித்துறை நூற்செய்த தாமோதரர்
கட்டுவண்ண நூற்செய்த தண்டபாணி சுவாமிகள்
பல்வகை மோனையில் இவ்வகை மோனையைச்
சொல்மோனை கள்ள மோனை பெயரிட
உள்ளடங்கு மோனையெனத் திருமுருக னார்சொல
முன்னை நூல்களில் முனைவர் திருஞான
சம்பந்தம் தந்த சான்றும் இலக்கணமும்
இங்குக் கண்டுநாம் இதனொலி யறிவமே. ... 1
[இப்பாடலில் சொன்ன நூல்கள்:
’கட்டளைக் கலித்துறை’, சி.வை. தாமோதரம் பிள்ளை
’அறுவகை இலக்கணம்’, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
’பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி’, முனைவர் ப. திருஞானசம்பந்தம்]
அடிமுதல் எழுத்து பிறசீர் முதலுறாதே
அடிமுதல் எழுத்து பிறசீர் நடுவுறும்
சொல்முதல் எழுத்தாய்ச் சொல்மோனை அமையுமே. ... 2
சொல்மோனை இலக்கியச் சான்றுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்மோனை இலக்கியச் சான்றுக ளாகச்
சொல்லும் முனைவர் கீழ்வரும் அடிகளை
வல்லிதின் வரைவர் தம்நூல் தனிலே. ... 3
கடுங்கதிர் வெங்-கானம் பல்பொருள்-கட் சென்றார்
(கைந்நிலை 15:3 க-கா-க)
விடல்-வேண்டும் தன்கண் வெகுளி யடல்-வேண்டு
(நான்மணிக். 13:3 வி-வே-வே)
வார்குர ரேனல் வளை-வாய்க் கிளிகவரு
(ஐந்திணை எழு. 13:1 வார்-வ)
மானந் தலை-வருவ செய்பவோ - யானை
(நாலடியார் 198:2 மா-வ)
பசுபதியார் தரும் கம்பன் சான்றுகள்:
உலகம் யாவையும் தாம்-உள வாக்கலும்
தலைவர் அன்னவர்க் கே-சரண் நாங்களே.
சொல்மோனைப் புனைவுச் சான்று
(கலிவிருத்தம்)
கல்லை அடித்து-கற் பனை-காண் உருபோலச்
சொல்லைப் பிடித்த-சொற் கவிதை யின்-சுடர்
வில்லம் பாய்-விழுந்து உள்ளுறை பொருள்-விளக்கக்
கல்லா தவன்-களிப் பெய்து-கா ணும்-கவிதை.
8.44. மோனைக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி கடைச்சீர் தொடங்கியே அமைய
அளவிடும் மோனை வகைகள் புறனடை
சீர்நிலை மோனைப் புறனடை யென்றே
நால்வகை மோனைகள் நவிலக் காண்பமே. ... 1
கடையிரு சீர்களில் சீர்நிலை மோனை
கடையிணை மோனையென் றழைக்கப் படுமே.
சீர்கள் நான்கில் இரண்டில் மோனை
பின்மோ னையென் றழைக்கப் படுமே.
இறுதிச் சீர்கள் மூன்றில் மோனை
உறுவது கடைக்கூழை மோனை யாமே
நடுவிரு சீர்களில் அமையும் மோனை
இடைப்புணர் மோனையென் றழைக்கப் படுமே. ... 2
ஒன்று நான்கு சீர்களில் ஒரூஉ
ஒன்று மூன்று நான்கு மேற்கெதுவாய்
ஒன்று இரண்டு நான்கு கீழ்க்கதுவாய்
என்றே அமையும் மோனைகள் முதற்சீரில்
ஒன்றி அமைவதால் புறனடை யாகா
எனவே புறனடை மோனை நான்கே. ... 3
புறனடை மோனை இலக்கியச் சான்றுகள்
திருக்குறள்
கடையிணை மோனை (சீர்கள் 4-3)
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா (10)
ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளாற்கோமா (25)
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் (38)
பின்மோனை (சீர்கள் 4-2)
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி (17)
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் (55)
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த (61)
கடைக்கூழை மோனை (சீர்கள் 4-3-2)
ஒருமையு ளாமபோ லைந்தடக்க லாற்றி (126)
இலனென்று தீயவை செய்யற்க செய்யி (205)
இவறலு மாண்பிறந்த மானமு மாணா (432)
இடைப்புணர் மோனை (சீர்கள் 3-2)
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் (62)
குழலினி தியாழினி தென்பதம் மக்கண் (66)
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் (147)
புறனடை மோனை புனைவுச் சான்று
(கலிவிருத்தம்)
காலம் வலிகளை ஆற்றுவது ஆறுதல் ... (கடையிணை மோனை)
பாலம் அமைக்க மீண்டும் அன்புறும் ... (பின்மோனை)
ஓல மனத்தில் வாழ்வில் வளம்வர ... (கடைக்கூழை மோனை)
ஆலம் விழுகள் வேரென மண்ணிறங்கும். ... (இடைப்புணர் மோனை)
*****
8.45. நெடிலடி, கழிநெடிலடி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அறுவகை இலக்கண நூலும் உரையும்
சிறுவகை மோனையின் சீர்களைப் பேசும்
நெடிலடி கழிநெடில் மோனை அமைப்புகள்
தொடும்பா வுரையின் செய்திகள் அறிவோம். ... 1
அளவடிச் சீர்களில் ஒன்றிலும் மூன்றிலும்
வளமாய் அமையும் பொழிப்பு மோனையே
அளவடி மோனையில் சிறப்பென் றறிக. ... 2
நெடிலடி கழிநெடில் மோனை பலவெனில்
உடன்வரும் பொழிப்பும் ஒலிநயம் கூட்டும்
நெடிலடி மோனை ஒன்றில் ஐந்தில்
கழிநெடி லடிவரக் காணும் மோனைகள்
பொழிவாய் பாடைப் பொறுத்து வருமே. ... 3
அரையடி வாய்பா டறுசீர் விருத்தம்
இருமுறை அதுவே வந்தால் மோனை
சீர்கள் ஒன்றிலும் நான்கிலும் அமையும். ... 4
சான்று
(அறுசீர் விருத்தம்:
. மா மா காய் அரையடி)
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
. வீசும் தென்றற் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
. கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
--கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
அரையடி வாய்பா டறுசீர் விருத்தம்
நான்குகாய் மாதேமா எனவரும் அடிகளில்
மோனை ஒன்றிலும் ஐந்திலும் வருமே. ... 5
சான்று
(அறுசீர் விருத்தம்:
. நான்கு காய் மா தேமா)
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே
. ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும்
. மேவு மாயின்
பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப்
. பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர்
. சிறப்புக் கண்டார்.
--பாரதியார்
எழுசீர் விருத்த மோனை பொதுவில்
வழுவற ஒன்றாம் ஐந்தாம் சீர்களில்
எழுசீர் மிக்கென் றெழுதும் விருத்த
மோனை மூன்று வருதல் வேண்டும்
எண்சீர் விருத்தம் என்றால் மோனை
ஒன்று ஐந்து ஏழுசீர் களிலாம். ... 6
சான்றுகள்
எழுசீர் விருத்தம்
(மோனை சீர்கள் 1-5)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
. அன்பினில் விளைந்தவா ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
. புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளிஹ்த்த
. செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
. எங்கெழுந் தருளுவ தினியே.
-திருவாசகம், மாணிக்க வாசகர்
எண்சீர் விருத்தம்
(மோனை சீர்கள் 1-5-7)
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
. நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
. பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!
. கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
. அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே!
--பட்டினத்தார்
*****
No comments:
Post a Comment