Thursday, April 27, 2017

11.00 வெண்பா

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.00 வெண்பா
(வெண்பா)
(வெறும்பா விரவியது)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வேறேதும் வண்ணம் விரவாத வெண்மையே
மாறாது நிற்பதெனும் மாண்பாகும் - வேறு
தளைகளுடன் சீர்கள் தகையாத தூய்மை
வளமாகும் வெண்பா வனப்பு. ... 1

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்மையே இன்னோர்பேர் வெள்ளைக்கென் றாவதுபோல் 
வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு
வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே
உண்மையாம் அந்த வுயர்வு! ... 2

[ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு;]

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால்
வெண்பாவோர் வன்பா வெனப்படும் - ஒண்ணா
விலக்கும் அயற்சீரால் வேற்றளையால் வெண்பா
புலவர்கள் அஞ்சும் புலி. ... 3

ஔவை சொன்னது:
காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்

பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் 
பாடுவது புலியாம் (அரிய செயல்);  சிறப்பாகப் பேசப்படும் 
உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது 
புலியாம்; ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் 
கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்; மற்றெல்லாப் 
பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் 
(முயற்சி மிக்க செயலாகும்).

கி.வா.ஜ. சொன்னது:
வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
--ஔவையார் மேற்கோள்:’கவி பாடலாம்’, பக்.69

விளக்கம்:
வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் 
கல்லானையும்; வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் 
தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்;
பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; 
அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே;
பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, 
என்னை ஏன் தாக்குகிறாய்?

பாடல் பின்னுள்ள கதை:
https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/amCdNYlwJxo

*****

11.01 வெண்பாவின் பொது இலக்கணம்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

இயற்சீராம் நான்குடன் வெண்சீராம் நான்கும்
இயற்சீராம் வெண்டளையும் வெண்சீராம் வெண்டளையும்
ஈற்றடி சிந்தடியாய் ஏனை அளவடியாய்
ஏற்றது செப்பல் ஒலியென வாகிப்
பயின்று வருகிற பாவகை வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாம்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

வெண்பா இலக்கண விளக்கம்
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வெண்பாவின் சீர்களாய் மாவிளம் காய்ச்சீராம்
வெண்பாவில் நேர்நிரை மாறிவரும் வெண்டளையும்
வெண்பாவில் காய்முன்நேர் வெண்சீரின் வெண்டளையும்
வெண்பாவின் ஓசையென மூவகைச் செப்பலோசை
வெண்பாவின் ஈற்றடி மூன்றுசீர்ச் சிந்தடியாம் 
வெண்பாவின் மற்றவடி நாற்சீர் அளவடியாம்
வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர் நால்வகை
நாள்-மலர் காசு பிறப்பு. ... 2

ஈற்றடி
(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம்
ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம்
ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம்
ஈற்றடியே வெண்பா உயிர். ... 3

ஈற்றுச்சீர்
(ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில்
குற்றுகரம் வந்து முடிதல் அவசியம் 
மற்ற உகரம் அரிது. ... 4
[இறுதல்=முடிதல்]

வராதன
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது
வெண்பாவில் வேறு தளைகள் வராது
அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா
உளத்தினில் வைப்பீர் உகந்து. ... 5

பொழிப்பு மோனை
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

முதற்சீர் வருமெழுத்து மூன்றாம்சீர் ஒன்றும்
விதம்பொழிப்பு மோனையாய் வெண்பா அடிதோறும்
நிற்பதால் ஓசை நிறையும் செவிகளில்
அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது
சிற்சில பாக்களி லே. ... 6

பொழிப்பு எதுகை
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

பொருளின் செறிவில் பொழிப்புமோ னையாய்
வருதலிலை யென்றால் ஒருவெதுகை ஈடாக
அந்த அடிகளில் வந்தபொழிப் பாம்-எதுகை
உந்தி யமைவதும் உண்டு. ... 6

வகையுளி
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வகையுளி யென்று வகுபடும் சொற்கள்
வகையுளி பாவில் வருதல் பொதுவில்
தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம்
சிற்சில போது சிறக்கும் வகையுளி 
முற்றப் பொருளின் நுகம். ... 7
[நுகம்=நுகத்தடி]

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வகையுளி ஈற்றடியில் வந்துநின்று வண்ணம்
தகவுற நிற்கத் தழைக்கும் குறளாம்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... 8

சான்று
(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும்
மேற்கொண்ட வெண்பா வினி. ... 9

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

அலகிடல்: சீர்கள்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு

தளைகள்
இவெ இவெ இவெ வெவெ
வெவெ இவெ வெவெ இவெ
வெவெ வெவெ வெவெ இவெ
வெவெ இவெ

அடிகள்
அளவடி அளவடி அளவடி சிந்தடி

மோனை
பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும்

எதுகை
இருவிகற்ப அடியெதுகை

வகையுளி
ஏதும் எங்கும் இல்லை

இதர சான்றுகள்
(மேலுள்ளது போல அலகிட்டு அறிக)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிவுயிர் வாழ்தல் அறியாமை- தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
--பாரதியார், மஹாசக்தி வெண்பா

*****

No comments:

Post a Comment