11.12 செப்பலோசை வெண்பா முயற்சி (வெண்பா) (இன்னிசை வெண்பா) ஒருபொருள் பற்றியே மூவகை ஓசை உருவினில் ஈரடி மூவடி நாலடி வெண்பா முயல்வினில் வெவ்வே றொலிகாண எண்ண வெழுந்தன வே. (ஒருவிகற்பக் குறள் வெண்பா) (ஏந்திசைச் செப்பல்) பாழடைந்த கேணியொன்றைப் பற்றியழும் பேய்-ஓலம் காழிருந்தால் அவ்வழி-வை கால். (தூங்கிசைச் செப்பல்) அழிந்த கிணற்றில் அரற்றும் ஒருபேய் வழியது செல்மனம் வம்பு. (ஒழுகிசைச் செப்பல்) அழிந்த கிணற்றில் அரற்றியழும் ஓர்பேய் வழியது போனாலோ வம்பு. (ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) (ஏந்திசைச் செப்பல்) மல்லிகைப்பூ முல்லைப்பூ வாசனையாய்ப் பூத்திருக்க மெல்லியதோர் காற்றலைக்கும் மெல்லிடையாள் மேலாடை சொல்லினிலே பூத்தாளே தொட்டு. (தூங்கிசைச் செப்பல்) மல்லிகை முல்லை மலரும் மணத்துடன் மெல்லிய காற்றலை மெல்லிடை மேலுடை சொல்லில் மலர்ந்தனள் தொட்டு. (ஒழுகிசைச் செப்பல்) மல்லிகை முல்லை மலர்களெலாம் வாசனையாய் மெல்லியதோர் காற்றலை மெல்லிடையாள் மேலாடை சொல்லில் மலர்ந்தாளே தொட்டு. (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா) (ஏந்திசைச் செப்பல்) தத்திவரும் ஆழியலை மத்தளத்தின் ஓசையொடு எத்திவிடும் பாப்பாவின் சென்னியெலாம் மண்துகளாய் கத்தியுரை யாடுமப்பா காதினிலே கைபேசி அத்தையுடன் அம்மாவின் பேச்சு. (தூங்கிசைச் செப்பல்) தத்தும் கடலலை மத்தள ஓசையில் எத்தும் குழந்தை தலையெலாம் மண்துகள் கத்தும் தகப்பனின் கைபே சியில்செவி அத்தையும் அன்னையும் பேச்சு. (ஒழுகிசைச் செப்பல்) தத்திவரும் ஆழியலை மத்தள ஓசையில் எத்தும் குழந்தையின் சென்னியெலாம் மண்துகள் கத்தும் தகப்பனின் காதினில் கைபேசி அத்தையுடன் அன்னையின் பேச்சு. 11.13 செப்பலோசை வெண்பாப் பயிற்சி (வெண்பா) நினைவிற் கொள்ள: (இன்னிசை வெண்பா) ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச் செவ்விதின் யாப்பில் எழும். பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பா நிரலமைத்தல் (பஃறொடை வெண்பா) மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள் மூன்று கலைந்துள சொற்களில் கீழுள ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும் ஓர்ந்து அமைத்தே எழுது. உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக் தான்காணான் விடும். கள்வேம் தீதே மறைமொழி நிலத்து வாறு. எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி மாந்தர் காணாதான் கண்டானாம் பயிற்சி 2. மூவகைச் செப்பலோசைக் குறட்பா எழுதுதல் (இன்னிசை வெண்பா) ஏந்திசை தூங்கிசைச் செப்பல் ஒழுகிசை தேர்ந்திந் நிரல்வர மூன்றுகுறள் வெண்பாக்கள் ஓர்ந்தே புனைக ஒருபொருள் பற்றியோ ஆர்ந்த பலபொருளி லோ. ***** 11.14 எதுகையால் வரும் வெண்பா விகற்பம் (வெண்பா) (பலவிகற்ப இன்னிசை வெண்பா) வெண்பா வகையை அடியெது கைவரும் எண்ணுடன் சேர்த்துக் குறித்தல் வழக்கம் ஒருவிகற்ப இன்னிசை வெண்பா புனைந்தால் வருமே அடியெதுகை ஒன்று. (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப் பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே வரும்பாக்கள் கீழுள் ளவை. (ஒருவிகற்பக் குறள் வெண்பா) அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. --திருக்குறள் 001:01 (இருவிகற்பக் குறள் வெண்பா) அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள் சிறுகை யளாவிய கூழ். --திருக்குறள் 007:04 (ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) வான்முறை யான்வந்த நான்மறை யாளரை மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல் நூன்முறை யாளர் துணிவு. --பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 061 (பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா) தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும் முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்யாக்கால் எப்பாலும் ஆகா கெடும். --பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 003 (ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா) நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. --ஔவையார், மூதுரை 012 (இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா) ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம் உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. ---ஔவையார், நல்வழி 012 (பலவிகற்பப் பஃறொடை வெண்பா) முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார் துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக் கானந் தமியர் இயங்கார் துளியஃகி நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே தொல்வரவின் தீர்ந்த தொழில். --பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 056 *****
Wednesday, May 24, 2017
11.12 செப்பலோசை வெண்பா முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment