கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.15. முற்றிய லுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உகர எழுத்துக் கொருமாத் திரையாம்
உகரம் சொல்லின் இறுதியில் உற்றால்
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் எனும்பெயர் பெறுமே
முற்றாய் ஒலிப்பதால் முற்றிய லுகரமே. ... 1
மாத்திரை குறைந்தே ஒலிக்கும் உகரம்
குற்றிய லுகரம் எனும்பெயர் பெறுமே.
வதுவெனும் சொல்லில் முற்றிய லுகரமாம்
வயது எனவரின் குற்றிய லுகரமாம்
குற்றி ஒலிப்பதால் குற்றிய லுகரமே. ... 2
ஓரெழுத்தில்
உவெனும் தனித்த உயிரெழுத் துடனே
உகர உயிர்மெய் எழுத்துக ளாய்வரும்
உயிர்மெய் குசுடுதுபுறு வல்லின உகரமும்
உயிர்மெய் ஙுஞுணுநுமுனு மெல்லின உகரமும்
உயிர்மெய் யுருலுவுழுளு மெல்லின உகரமும்
தனித்து வந்தால் முற்றிய லுகரமே. ... 3
ஈரெழுத்தில்
தனிக்குறில் அடுத்தோர் உகரம் வந்தால்
தனதுமாத் திரையில் குறைவ தில்லை
குசுடுதுபுறு ணுமுனு யுருலுவுழுளு உகரம்
தனிக்குறில் அடுத்தால் முற்றிய லுகரமே
ஙுஞுநு சொற்கள் இறுதியில் வாரா. ... 4
நகு-பசு தடு-எது விபு-உறு சொற்கள்
அணு-சமு மனு-போல் முடியும் சொற்கள்
மயு-ஒரு வலு-கவு வழு-பளு சொற்கள்
இறுதியில் வருவது முற்றிய லுகரமே. ... 5
தனிநெடில் பின்வரும் உகரம் தனது
மாத்திரை குறைந்தோ நிறைந்தோ ஒலிப்பது
சொல்லைப் பொறுத்தே அமைவது அறிக
சாது எனும்சொல் முற்றிய லுகரம்
மாது என்பதோ குற்றிய லுகரம்
கேது என்பது முற்றிய லுகரம்
கோது என்பதோ குற்றிய லுகரம். ... 6
இத்தகு சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை
உருபைச் சேர்த்தால் வகையை அறியலாம்.
சாது என்பது சாதுவை என்றும்
மாது என்பது மாதை என்றும்
வருகிற புணர்ச்சியால் வகையை அறிக. ... 7
மூன்றோ மேலோ எழுத்துகள்
மூன்றோ மேலோ எழுத்துகள் அமைந்தே
மெல்லின இடையின மெய்தொடர் உகரம்
முற்றிய லுகரமாய் முழுதும் ஒலிக்குமே. ... 8
திங்ஙு நஞ்ஞு மண்ணு, தும்மு
மன்னு ஓய்வு கல்லு சவ்வு
நிகழ்வு பள்ளு என்பன சான்றே. ... 9
மூன்றோ மேலோ எழுத்துறும் சொல்லில்
சொல்லிறும் உகரம் வல்லின மாயின்
குற்றிய லுகரம் என்றே குறையும்
சொல்லிறும் உகரம் வகையில் இடையினம்
மெல்லினம் ஆயின் முற்றிய லுகரமே. ... 10
முனகு வயசு சுவடு மனது
இரிபு பயறு குற்றிய லுகரமே
கரேணு உருமு திலதேனு உகரமும்
சரயு மெய்யுரு மிகவலு கதவு
மூவேழு சரளு இடையின உகரமும்
எல்லாம் முற்றிய லுகர மாமே. ... 1
சொல்லில் எத்தனை எழுத்துகள் ஆயினும்
சொல்லிறும் உகரம் குற்றிய லுகரம்
அல்லது முற்றிய லுகரம் ஆமே. ... 12
*****
No comments:
Post a Comment