கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.09. அளபெடை யென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளபென் பதுவாம் மாத்திரை அளவு
அளபெடுத் தலாமே மாத்திரை நீளுதல்
அளபெடுத் தேதன் மாத்திரை யளவில்
நீண்டொலிப் பதுவே அளபெடை யாகும்
அளபெடுத் தல்குறி அளபெடு எழுத்தின்
இனவெழுத் தொன்றாய்த் தொடர்ந்து வருமே. ... 1
செய்யுளில் ஓசை குறையும் எனிலே
உயிர்நெடில் எழுத்துகள் ஏழென வருவதும்
ஙஞண நமன வயலள பத்தும்
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும்
தத்தம் மாத்திரை நீண்டொலிப் பதுவே
அளபெடை யென்றே அழைக்கப் படுவதாம்
அளபெடை இருவகை: உயிரே ஒற்றே. ... 2
3.10. உயிரளபெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடில்பின் தக்க குறிலென வந்தே
ஒசை நிரப்பும் உயிரள பெடையிது
மூன்று மாத்திரை யாயொலிப் பதுவாம்
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே. ... 1
அளபெடுக்கும் போதோர் இனவெழுத் தேறுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ. ... 2
3.11. செய்யுளிசை அளபெ>டை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத் தேவர
செய்யுளிசை அளபெடை எனும்பெயர் பெறுமே. ... 1
கீழ்வரும் சான்றுகள் அளபெடை நோக்க
’ஆஅதும் என்னுமவர்’ என்றே முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்றே இடையிலும்,
’நல்ல படாஅ’ என்றே கடையிலும்
செய்யுளிசை அளபெடுத் துறுவது காண்க. ... 2
அதும்-தொழாள்- படா-எனும் சொற்கள் தம்முள்
ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
ஈரசைச் சீர்க ளாக்கி யெழுதி
சீரும் தளையும் குன்றா திருக்கச்
செய்முயல் வாமே செய்யுளிசை யளபெடை. ... 3
சான்றுகள்
திருக்குறள் 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
திருக்குறள் 55
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
திருக்குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
3.12. இன்னிசை அளபெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை எனும்பெயர் பெறுமே. ... 1
’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத் தனவே. ... 2
சான்றுகள்
திருக்குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
திருக்குறள் 1079
உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.
3.13. சொல்லிசை அளபெடை
(நேரிசை ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றெனவே நின்று
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை எனும்பெயர் பெறுமே. ... 1
(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
எனும்பொருள், சொல்லிசை அளபெடைச் சான்றுகள். ... 2
(இணைக்குறள் ஆசிரியப்பா)
"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்றே
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்றே. ... 3
சான்றுகள்
திருக்குறள் 1263
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்.
தொல்காப்பியம், பொருள்.அகத். 39
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
திருக்குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
3.14. ஒற்றள பெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளில் ஓசை குறையு மிடத்து
மெய்யெழுத் தொன்று மிகுந்தொ லித்தே
ஒசை நிரப்புதல் ஒற்றள பெடையாம். ... 1
செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய-இடை கடையள பெடுத்தே
நீண்டொ லித்திடும் பதினோ ரெழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததனால் மீண்டும் எழுதுவர். ... 2
தனிக்குறில் குறிலிணைக் கீழ்வரும் ஒற்றே
இடைகடை அளபெடுத்து மிக்கு வருமே.
’எஃஃகிலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள். ... 3
’எஃஃகிலங்கிய’ என்றது தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க. ... 4
சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளோசை நிறைத்தல் காண்க. ... 5
சான்றுகள்
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
வெஃஃகுவார்க் கில்லைவீடு.
சிதம்பரச் செய்யுட் கோவை 12
பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்
அளபெடைச் சீர்களை அலகிடும் போது
தளைகள் தட்டில் அலகு பெறுமே
தளைகள் ஒன்றின் அலகு பெறாதே. ... 6
அளபெடை மாத்திரை யாதென நோக்கில்
உயிரள பெடையெனில் மும்மாத் திரையிலும்
ஒற்றள பெடையெனில் ஒருமாத் திரையிலும்
தனதியல் பொலியின் மிக்கு வருமே. ... 7
*****
No comments:
Post a Comment