Thursday, February 16, 2017

8.15. சொற்குறை எதுகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.15. சொற்குறை எதுகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை விகற்பம் எட்டென வருவது
முதல்தர எதுகைகள் வகையினிற் சேரும்
முதல்தர மோனை விகற்பமும் எட்டே. ... 1

எதுகை விகற்பம் முதல்தர மாக
முதல்வரும் எழுத்தினில் அளவொத் திருக்கப்
பின்வரும் எழுத்துகள் பொருந்தி வருகையில்
ஒன்றென எழுத்துகள் அவையே வருமே. ... 2

’தலை’-யெனும் சொல்லின் எதுகை யானது
’மலை’யென, ’சிலை’யென, ’குலை’யென வரலாம்
இரண்டாம் எழுத்து அதுவே ஆவதால்.
’தலை’-யின் எதுகை ’வலி’யென வராது
இரன்டாம் எழுத்து மாறு படுவதால். ... 3

மரபின் வழியில் கவிதை செய்கையில்
பொருளும் சொல்லும் பார்க்கும் போது
பொருளே சொல்லை விஞ்சுதல் கண்டு
முதல்தரத் தொடைகள் இயலா தாகில்
சற்றே தளர்ந்து தொடைகளின் இலக்கணம் 
மற்ற வகைகள் வந்திட உதவுமே. ... 4

(இணைக்குறள் ஆசிரியப்பா)
இவ்வகைத் தொடைகள் இரண்டாம் தரமே
செவ்விதின் இதனை மனதிற் கொள்க.
பொருளின் முக்கியம் கருதி யிவ்வகை
மரபின் வழியில் பின்னர் அமைந்தன;
சொற்குறை, சிறப்பிலா, ஏனோதானோ, 
மற்றும் பொருள்வகை, பொருள்மேல், என்றிவற்றை
பற்பல கற்பனைப் பெயர்கள் இட்டே
இலக்கண இலக்கிய வகைகளில் அழைக்கலாம். ... 5

8.16. சொற்குறை எதுகை வகைகள்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

சொற்குறை எதுகையிற் பற்பல வகைகளாம்
வருக்க எதுகை, இனவெதுகை, உயிரெதுகை,
நெடிலெதுகை, மூவகை எதுகை, 
இருவிகற்ப எதுகை, இடையிட் டெதுகை,
மூன்றாம் எழுத்தொன் றெதுகை, 
வழியெதுகை, ஆசிடை யிட்ட எதுகை 
யெனப்பல வகைகளில் சொற்குறை அமையுமே. ... 1

*****

No comments:

Post a Comment