கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.12. மேற்கதுவாய் எதுகை (சீர்கள் 1-3-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)
முதலெழுத்தின் அளவொக்க முதற்சீரில் மூன்றுநான்கில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாததும் மேற்கதுவா யெதுகையாகும். ... 1
சான்றுகள்
உதவி வரைத்தன்று உதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
---திருக்குறள் 11:5
அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
--புகழேந்திப் புலவர், நளவெண்பா 38
8.13. கீழ்க்கதுவாய் எதுகை(சீர்கள் 1-2-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)
முதலெழுத்தின் அளவொக்க முதலிரண்டு சீர்நான்கில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாததும் கீழ்க்கதுவா யெதுகையாகும். ... 1
சான்றுகள்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
--திருக்குறள் 43:8
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 79
8.14. முற்றெதுகை (சீர்கள் 1-2-3-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)
முதலெழுத்தின் அளவொக்க முதல்நான்கு சீர்களிலும்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதாய் அளவடியின் சீரெல்லாம்
இதுபோல ஒன்றுவதே முற்றெதுகை யென்பதாகும். ... 1
சான்றுகள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 2:2
பொங்கலின் மங்கலம் எங்கணும் தங்குக!
அஞ்சுவ தஞ்சும் வஞ்சமில் நெஞ்சம்;
அள்ளும் வெள்ளமாய்த் துள்ளும் உள்ளம்;
*****
No comments:
Post a Comment