கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.18. இனவெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்துடன்
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்துடன் இனவெழுத் தெனும்வகையில்
ஒன்றி வருதல் இனவெதுகை யாகுமே. ... 1
(ஆசிரியத் துறை)
இனங்களின் வகைகள் நினைவு கூர்ந்திட
கசடதபற வல்லினம் என்றும்
ஙஞணநமன மெல்லினம் என்றும்
யரலவழள இடையினம் என்றும் தெரியும். ... 2
சான்றுகள்
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
--திருக்குறள் 012:04
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
--திருக்குறள் 005:05
தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
--திருக்குறள் 013:09
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வல்லின ற-கரமும் இடையின ர-கரமும்
ஒலிநெருக் கத்தால் இன்றைய பாக்களில்
எதுகைகள் எனவே கருதப் படலாம். ... 3
நாமும் இனவெது கையமைப் போமா?
கீழ்வரும் தனித்தனி அடிகள் இரண்டில்
முதலடிச் சீர்களில் வல்லின எதுகை
இரண்டாம் அடிச்சீர் மெல்லின எதுகையே. ... 4
சீரெதுகை: வல்லினம், மெல்லினம்
மகளவள் கேசம் ஆடப் பாதத் தாபம் ஏறும்
தங்கிடத் தஞ்சம் திண்ணையில் தந்திடும் நம்மூர் நன்மக்கள். ... 5
இடையின எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அயலாரும் வரவேற்க வலம்வரும் அவளது
குழந்தையின் உளறல் கேட்க இனிமை.
முதலாறு சீர்களில் இடையின எதுகையே. ... 6
8.19. உயிரெதுகை
(இணைக்குறள் ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்துடன்
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஒத்த குறிலொலி என்றோ
ஒத்த நெடிலொலி என்றோ
ஒத்த உயிரொலி ஒன்றுவது உயிரெதுகை. ... 1
’பகலும் இரவும்’, ’முகிலின் குளிர்ச்சி’
’பாகலும் பாமரனும்’, ’பாடுவது தேறுமா’
தொடர்களில் உயிரெதுகை குறிலொன்றக் காண்க. ... 2
’உலாவரும் கனாமகள்’, ’மகேசனின் விவேகம்’
’பேசாமல் போகாதே’, ’பூமாவின் பூவார்குழல்’
தொடர்களில் உயிரெதுகை நெடிலொன்றக் காண்க. ... 3
உயிரெதுகைச் சான்று (அடியெதுகை)
(குறள் வெண்பா)
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
--ஔவையார்
உயிரெதுகைச் சான்று (முதலடியில் சீரெதுகை)
(குறள் வெண்பா)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
--திருக்குறள் 040:07
8.20. நெடிலெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
இரண்டாம் எழுத்தொரு நெடிலென் றிருக்க
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஏதேனும் நெடிலொலி ஒன்றுவது நெடிலெதுகை. ... 1
’பலாப்பழ நிவேதனம்’, ’அதேஅதே சபாபதே’
’ஆவேசம் ஆகாதே’, ’வேரோடு தீராதே’
தொடர்களில் ஏதேனும் நெடிலொலி ஒன்றிட
நெடிலெது கையெனப் பயிலல் காண்க. ... 2
நெடிலெதுகைச் சான்று (அடியெதுகை)
(வெளிவிருத்தம்)
ஆவா வென்றே அஞ்சின ராழ்ந்தார் - ஒருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் - ஒருசாரார்.
*****
No comments:
Post a Comment