கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.25. வழியெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபல வற்றில் சீர்பல வற்றில்
ஒன்றுதல் வழியெது கையெனப் படுமே.
சான்று
(குறள் வெண்பா)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10
(இன்னிசை வெண்பா)
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
--நாலடியார், 39
8.26. ஆசிடையிட்ட எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆசு வெனில்பொருள் பற்றுக் கோடாம்
ஆசிடுதல் என்றால் பொன்னின் துகளைப்
பற்ற வைத்துப் பொன்னணி செய்தல்
பற்றாசு என்று இதனைச் சொல்வர்
பற்றாசின் திரிபே தீபாவளிப் பட்டாசு!
முதல்தர எதுகை முடியா விட்டால்
கருத்தைச் சொல்லிட ’ய-ர ல-ழ’
எழுத்தின் ஒற்றிளால் ’பற்ற வைத்தலே’
ஆசிடை யிட்ட எதுகை என்பது.
இந்த நான்கு ஒற்றுகள் இடைவரினும்
ஓசை கெடாது என்பது செய்தி.
’வாய்மை-தீமை’, ’சாக்கடை ஊர்க்கிடை’
’தாவாதே கால்வாயை’, ’யாழ்வகை பாவகை’
தொடர்களில் ஒற்றுகள் ஆசிடுவது காண்க.
அடியிடைப் பயிலும் ஆசிடை எதுகை:
மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளூரா உன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள்?
---காளமேகப் புலவர், வைத்தீஸ்வரன் கோயில் இறைவனைக் குறித்து.
சொக்கன் மதுரையினில் தொண்டர்க்குன் அவிழ்ந்த
பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ?
---காளமேகப் புலவர், வசையும் வசைமீட்சியும்
8.27. எதுகைக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி கடைச்சீர் தொடங்கியே அமைய
அளவிடும் எதுகை வகைகள் புறனடை.
சீர்நிலை எதுகைப் புறனடை யென்றே
நால்வகை எதுகையோ(டு) அடிக்கடை யெதுகையென்(று)
ஐவகை எதுகை வருவதைக் காண்போம்.
கடையாம் இறுதிச் சீர்-அடி யெதுகை
கடையெது கையென் றழைக்கப் படுமே.
கடையிரு சீர்களில் சீர்நிலை எதுகை
கடையிணை யெதுகையென் றழைக்கப் படுமே.
சீர்கள் நான்கில் இரண்டில் எதுகை
பின்னெது கையென் றழைக்கப் படுமே.
இறுதிச் சீர்கள் மூன்றில் எதுகை
உறுவது கடைக்கூழை யெதுகை யாமே
நடுவிரு சீர்களில் அமையும் எதுகை
இடைப்புணர் எதுகையென் றழைக்கப் படுமே.
ஒன்று நான்கு சீர்களில் ஒரூஉ
ஒன்று மூன்று நான்கு மேற்கெதுவாய்
ஒன்று இரண்டு நான்கு கீழ்க்கதுவாய்
என்றே அமையும் எதுகைகள் முதற்சீரில்
ஒன்றி அமைவதால் புறனடை யாகா
எனவே புறனடை யெதுகை ஐந்தே.
புறனடை யெதுகை கீழ்வரும் பாக்களில்
உறுவது முதலடிச் சீர்களில் யென்றவை
அறிந்தும் ஆய்ந்தும் விளங்கிக் கொள்வீர்.
சான்று: கடையெதுகை (அடுத்த இரண்டடி கடைச்சீர்)
(இன்னிசை வெண்பா)
பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலும் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
--நாலடியார், 376
சான்று: கடையிணையெகை (சீர்கள் 4-3)
(இன்னிசை வெண்பா)
ஆய்ந்த அறிவின ரல்லாதார் புல்லுரைக்குக்
காய்தெதிர் சொல்லுபவொ கற்றறிந்தார் தீந்தேன்
முசுக்குத்தி நக்கு மலைநாட தம்மைப்
’பசுக்குத்தின் குத்துவார் இல்’.
--பழமொழி நானூறு, 57
சான்று: பின்னெதுகை (சீர்கள் 4-2)
(நேரிசை வெண்பா)
கெடுவ லெனப்பட்ட கண்ணுந் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத் தீண்டிய
’கல்தேயும் தேயாது சொல்’.
--பழமொழி நானூறு, 39
சான்று: கடைக்கூழை எதுகை (சீர்கள் 4-3-2)
(நேரிசை வெண்பா)
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்னையன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்
கென்னையோ நாளை எளிது.
--திணைமாலை நூற்றைம்பது, 20
சான்று: இடைப்புணர் எதுகை (சீர்கள் 3-2)
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணமும் குலமுடையார் கூறார் பகைவர்மேல்
பார்த்துப் பல்காற் பயின்று.
--ஆசாரக் கோவை, 71
8.28. இருசீர்-முழுதொன்-றெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலெழுத் தளவொக்கப் பின்வரும் எழுத்துகள்
சீர்முழுதும் ஒன்றும் தலையாகு எதுகையில்
முதலிரு சீர்கள் முழுதும் ஒன்றுதல்
இருசீர் முழுதொன் றெதுகை யாமே.
சான்று (நான்கு அடிகளிலும் முதலிரு சீர்கள்)
(இன்னிசை வெண்பா)
கள்ளாமை வேணுங் கடிய வருதலா
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.
--நான்மணிக் கடிகை, 86
சான்று (முதலிரண்டு அடிகளில் முதலிரு சீர்கள்)
(நேரிசை வெண்பா)
பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக் குய்த்து.
--சிறுபஞ்சமூலம், 3
(குறள் வெண்பா)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை ஆரம்.
--திருக்குறள், 008:07
8.29. செவ்வெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
விகற்பமோ இனமோ எதுகையாய் ஒன்றாது
ஓரெழுத் ததுவே ஒன்றும் எதுகை
செவ்வெது கையென் றழைக்கப் படுமே.
சான்றுகள்
(குறள் வெண்பா)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
--திருக்குறள், 001:06
(இன்னிசை வெண்பா)
ஒருவ ருரைப்ப வுரைத்தா லதுகொண்(டு)
இருவரா வாரு மெதிர்மொழியால் பாலா
பெருவரை நாட சிறிதேனும் ’இன்னா(து)
இருவர் இன்னாடல் நாய்’.
--பழமொழி நானூறு, 18
*****
No comments:
Post a Comment