கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.21. மூவகை எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலெழுத் தளவொக்கப் பின்வரும் எழுத்துகள்
சீர்முழுதும் ஒன்றினால் தலையா(கு) எதுகை.
இரண்டாம் எழுத்தொன்றி மற்றவை யொன்றாமை
இடையா(கு) எதுகை எனும்பொதுப் பெயர்பெறும்.
சொற்குறை எதுகைகள் கீழ்நிலை யாவதால்
கடையா(கு) எதுகையென் றழைக்கப் படுமே. ... 1
தலையாகு எதுகைச் சான்றுகள்
(குறள் வெண்பா)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
--திருக்குறள் 001:05
(வஞ்சி விருத்தம்)
நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையின னணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயற் சிரபுரமே.
--சம்பந்தர் தேவாரம், 01.109.04
(கலிவிருத்தம்)
கலைநவின்ற பெரும்புலமைக் கவிஞர்களைப் போற்றிசைத்து
நிலைநவின்ற பன்னூல்கள் நேயத் துடனியற்றப்
புலைநவின்ற மெய்யழிந்தும் புகழுடம்பு பெற்றவர்கள்
அலைநவின்ற கடற்புவியில் அனைவரினும் மேலவரே.
--கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.132
இடையாகு எதுகைச் சான்றுகள்
(குறள் வெண்பா)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
--திருக்குறள் 001:06
(சிந்தியல் வெண்பா)
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடையொன்றில்
அங்கண் உலகளித்த லான்.
--சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், மங்கல வாழ்த்து
மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.
--ஔவையார், முதுரை 26
கடையாகு எதுகைச் சான்றுகள்
(குறள் வெண்பா)
(உயிரெதுகை)
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
--திருக்குறள் 003:07
(வருக்க எதுகை)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
--திருக்குறள் 001:09
(இனவெதுகை)
தக்கார் தகவிலர் என்ப ரவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
--திருக்குறள் 012:04
*****
No comments:
Post a Comment