கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.34. வருக்க மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வருக்கம் பதினெட்டு க-முதல் ன-வரை;
வருக்கத்தில் ஒன்றும் வருக்க மோனை,
குறிலொடு குறிலோ நெடிலொடு நெடிலோ
குறில்நெடில் இணைந்தோ வருவ தாமே. ... 1
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
’சாந்தனையுந் தீயெனவே செய்திடினுந் தாமவரை
ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர்’ ஔவையின்
மூதுரையில் சாந்-செய் என்னும் பொழிப்பு
மோனை ச-வருக்கம் காண். ... 2
(நிலைமண்டில ஆசிரியப்பா)
’ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே’ என்று
ஔவை நல்வழிப் படுத்தும் போது
வீற்-வாழ் என்பது நெடிலொன்றும் மோனை. ... 3
’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்னும்
ஔவையின் மூதுரையில் கற்-காமு என்று
க-வருக்கக் குறில்நெடில் மோனை காண்க. ... 4
அடிநிலை, சீர்நிலை வருக்கமோனை புனைவுச் சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)
அடிமோனை (வ-வி)
வட்ட நிலாவின் வெள்ளொளி காற்றில்
விட்டு விட்டு எழுதும் சித்திரம்!
இணைமோனை (சீர்கள் 1-2)
தமிழைத் தெளிவாய்க் கற்றல் வேண்டும்
தமிழின் தொன்மை அறிதல் வேண்டும்.
பொழிப்பு மோனை (சீர்கள் 1-3)
கல்வி இளமையிற் கொள்வதால் பின்னாள்
செல்வம் வாழ்வுறச் சொகுசாய் வாழ்வமே.
ஒரூஉ மோனை (சீர்கள் 1-4)
மயக்கும் செங்கதிர்க் காலை மெருகில்
தயக்கம் இன்றி நடந்தாள் துணிவுடன்.
கூழை மோனை (சீர்கள் 1-2-3)
கல்வி கரையில கற்பவை நாட்சில
சொல்லில் செயலில் சிறப்பாய் வாழ்வமே.
மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-3-4)
கன்றும் பசுவும் கொட்டிலிற் குப்பன்
நன்றாய் அடைத்தே நிழலடி நுழைந்தான்.
மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-2-4)
கன்றைக் கொட்டிலிற் பசுவுடன் குப்பன்
நன்றாய் நுழைத்தபின் அமர்ந்தான் நிழலடி.
முற்று மோனை (சீர்கள் 1-2-3-4)
கலையும் குறுமுகில் கிழிசலாகும்; கெலித்த
நிலவொளி நன்கு நுழையும் நெகிழ்ந்தே.
8.35. இன மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வல்லினம் என்பது கசட தபற
மெல்லினம் என்பது ஙஞண நமன
இடையினம் என்பது யரல வழள
வல்லின மெல்லின இடையின வகைத்த
இனத்தில் ஒன்றுதல் இனமோனை யாமே. ... 1
இலக்கியச் சான்றுகள்: வல்லின மோனை
ஔவையார்: கொன்றைவேந்தன், மூதுரை
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. ... (இணை 1-2)
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ... (பொழிப்பு 1-3)
சொக்க ரென்பவர் அத்தம் பெறுவர். ... (ஒரூஉ 1-4)
குற்றம் பார்க்கில் சுற்ற மில்லை. ... (கூழை 1-2-3)
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் ... (மேற்கதுவாய் 1-3-4)
கெடுவது செய்யின் விடுவது கருமம். ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
புலையும் களவும் கொலையும் தவிர். ... (முற்று 1-2-3-4)
இலக்கியச் சான்றுகள்: மெல்லின மோனை
ஔவையார்: கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
பழமொழி நானூறு
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி ... (இணை)
நுண்ணிய கருமமு மெண்ணித் துணி. ... (பொழிப்பு)
மருவிய சுற்றமும் வான்பொருளும் நல்ல ... (ஒரூஉ)
மொழிவது மறுக்கி னழிவது கருமம். ... (கூழை)
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் ... (கீழ்க்கதுவாய்)
புனைவுச் சான்றுகள்: சீர்நிலை மெல்லின மோனை
நமது மனங்கொள் துன்பம் பெரிது. ... (இணை 1-2)
நமது செல்வ மென்பதி யாது? ... (பொழிப்பு 1-3)
நமது வாழ்வி லின்ப மேது? ... (ஒரூஉ 1-4)
நமது மனத்தி னறிவு பொய்யே. ... (கூழை 1-2-3)
நமது புலன்களை நெகிழ்த்திடு மாலயம். ... (மேற்கதுவாய் 1-3-4)
நமது மனங்கொ ளன்பில் நெகிழ்வுறும். ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
நமது மனமிது நொடியில் நிலைமாறும். ... (முற்று 1-2-3-4)
இலக்கியச் சான்றுகள்: இடையின மோனை
திருக்குறள்
இடையின அடிமோனை
யாண்டுச்சென் றியாண்டும் உளராகில், வெந்துப்பின் ... (ஒரூஉ 1-4)
வேந்து செறப்பட் டவர்.
---திருக்குறள் 090:05
சீர்நிலை இடையின மோனைகள்
வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் ... (இணை 1-2)
யாமு முளங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் ... (பொழிப்பு 1-3)
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் ... (ஒரூஉ 1-4)
வாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென் ... (கூழை 1-2-3)
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் ... (மேற்கதுவாய் 1-3-4)
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய ... (முற்று 1-2-3-4)
புனைவுச் சான்றுகள்: சீர்நிலை இடையின மோனை
வண்ண விளங்காலைப் பொழுதிற் சாலையில் ... (இணை 1-2)
வண்ண மேவுமி ளங்காலைப் பொழுதிற் ... (பொழிப்பு 1-3)
வண்ண மேவு மிளங்காலை யின்னாள் ... (ஒரூஉ 1-4)
வண்ன விளமாலை யுண்ணு மிருளில் ... (கூழை 1-2-3)
யௌவனம் முகத்துவி ளங்கிடு வாளை ... (மேற்கதுவாய் 1-3-4)
யௌவனமி ளங்குமலர்க் கண்ணா லிசைந்தாள் ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
யௌவனமி ளங்குமல ரனையாளி வள்காணீர்! ... (முற்று 1-2-3-4)
மோனை யெதுகை யலகிடும் போது
சொற்களைப் புணர்ந்தபி னலகிடல் வேண்டும்
எனும்விதி மேல்வரு மடிகளி லறிக. ... 2
*****
No comments:
Post a Comment