Friday, February 17, 2017

8.30. மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.30. மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மோனை என்றால் முதன்மை எனப்பொருள்
மோனை என்றால் முனையென வுரைப்பர்
முனைந்து முதல்நில் முனையாம் மோனை. ... 1

8.31. மோனை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாமே. ... 1

’மலையும் மடுவும்’, ’மாதவன் மாலை’
தொடர்முதல் எழுத்து முற்றும் ஒன்றக்
குறில்நெடில் மோனைகள் வருவது காண்க.
பலவகைத் தொடைகளில் எதுகையும் மோனையும்
பாக்களில் வருவது சிறப்பென் றுரைப்பரே. ... 2

8.32. மோனை விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே மோனைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே.  ... 1

மோனைத் தொடைச் சான்றுகள்
(குறள் வெண்பா)

அடிமோனை
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. ... 
---திருக்குறள் 006:03

இணைமோனை (சீர்கள் 1-2)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.
---திருக்குறள் 001:4

பொழிப்பு மோனை (சீர்கள் 1-3)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
---திருக்குறள் 001:6

ஒரூஉ மோனை (சீர்கள் 1-4)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
---திருக்குறள் 005:9

கூழை மோனை (சீர்கள் 1-2-3)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்ற விடற்கு. ... அடிமோனை
---திருக்குறள் 035:9

மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-3-4)
வானின் றுலகம் வழங்கி வருதலால் 
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
---திருக்குறள் 002:1

கீழ்க்கதுவாய் மோனை (சீர்கள் 1-2-4)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
---திருக்குறள் 001:5

முற்று மோனை எதுகை (சீர்கள் 1-2-3-4)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:2

8.33. மோனையின் வேறு பிற வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுளில் பொருளின் பெருமை நோக்கி
முற்றிலும் முதலெழுத் தொன்றாத போது
வேறு வகைத்த மோனைகள் வரலாம். ... 1

வருக்கமும் இனமும் உயிரும் நெடிலுமென
வகைத்த எழுத்துகள் மோனை யாகலாம்
மோனைகள் சீர்வழித் தொடர்ந்து வரலாம்
ஈரடிக் கொருமுறை வரலாம் அல்லது
இடையிடை நின்று வரலாம் அத்துடன்
அனுமோ னையெனும் வகையில் வரலாம். ... 2

*****

No comments:

Post a Comment