கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.05. எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதிர்கை என்பதே எதுகையா யிருக்கலாம்
என்பதே எதுகையின் வேர்ச்சொல் விளக்கம்.
எதுகை என்றால் எதிர்கொளல் எனப்பொருள்.
எதிர்கொளும் போதோ எதிர்த்தல் இன்றி
எதிர்கொளும் எழுத்துகள் பொருந்தி வருமே. ... 1
நின்றசீர் வரும்சீர் நேசக் காதலர்
ஒன்றிக் கரம்பற் றுதலாம் எதுகை
கரங்கள் பற்றிக் கட்டி யணைத்தே
ஒருமுத் தம்தரல் மோனை என்க! ... 2
எண்வகைத் தொடைகளில் மோனையே முதலில்
எண்ணப் படுவ தாக வரினும்
எதுகையே பாவகை பாவினம் காட்டிட
எதுகையை முதலில் விரித்துக் காண்பமே. ... 3
8.06. எதுகை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே. ... 1
எதுகை அடிகளில் சீர்களில் பயின்றிட
முதல்வரும் எழுத்தள வொத்திட வேண்டும்
குறிலொடு குறிலென நெடிலொடு நெடிலென. ... 2
கட்டு தட்டு சிட்டு சொற்களும்
காட்டு பாட்டு சீட்டு சொற்களும்
முதல்வரும் எழுத்துதன் அளவில் ஒத்திட
முறையாய் அமைந்த எதுகைகள் ஆமே. ... 3
கட்டு பட்டம், மின்னல் பொன்னின்,
முதல்வரும் எழுத்துதன் அளவில் ஒத்திட
இரண்டாம் எழுத்து ஒன்றிடும் எதுகைகள்.
சிகரம் தகரம், பாடல் நாடல்,
இதுபோ லிவையும் எதுகைக ளாமே. ... 4
கட்டு பாட்டு, சிட்டு சீட்டு--
சீர்களில் அடிகளில் எதுகைகள் ஆகா
முதலெழுத் தளவில் வேறு படுவதால்.
எதுகை அமைப்பதில் புதியோர் செய்யும்
இதுபோல் தவறுகள் திருத்திக் கொள்ள
எழுதும் செய்யுளின் கவிநயம் சிறக்குமே. ... 5
அடிகளில் சீர்களில் அமைந்திடும் எதுகையில்
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றினால் போதும்.
பின்வரும் எழுத்துகள் ஒன்ற ஒன்ற
ஓசை இனிமையும் நயமும் பெற்றிடும். ... 6
வண்டு உண்டு எதுகைகள் ஓசை
வண்டு உண்ண எதுகைகள் ஓசை
பேச்சில் மூச்சினிலே எதுகைகள் ஓசை
பேச்சினிலே மூச்சினில் எதுகைகள் ஓசை
இவற்றை நோக்கி இனிமை அறிக. ... 7
எண்விகற் பங்களில் எதுகை வருமே
அடியும் இணையும் பொழிப்பும் ஒரூஉம்
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றே
என்னும் எட்டும் அளவடி யில்வரும். ... 8
*****
No comments:
Post a Comment