Friday, January 27, 2017

8.08. இணை எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.08. இணை எதுகை (சீர்கள் 1-2)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலிரண்டு சீர்களிலே முதலெழுத்தின் அளவொக்க
அதன்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் இணையெதுகை. ... 1

சான்றுகள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 3:6

என்றும் என்தோள் பிரிபு அறியலரே
---கபிலர், நற்றிணை 1

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறியிட்டுத்
---நக்கீரர், நெடுநல்வாடை 76

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
---காரியாசான், சிறுபஞ்சமூலம் 8

தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
---தோலாமொழித் தேவர், சூளாமணி

கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
---இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வேட்டுவ வரி 61

மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானமளிப்பார்
ஆர்‍அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய்---ஊர்‍அறிய
---பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், 
 அழகர் கிள்ளை விடுதூது 55

(ஆசிரியத் தாழிசை)
முதலிரண்டு சீர்தவிர வேறு சீர்களிலும்
எதுகை அமைவதால் கீழ்வரும் அடிகளில்
இணையெதுகை யில்லையென் றறிந்து கொள்க. ... 2

சொல்லிய நல்லவும் தீயவாம் - எல்லாம் 
... [கீழ்க்கதுவாய் எதுகை: 124]
விழியிரண்டில் வழியிருக்கப் பழியஞ்சாள் பாவையவள் 
... [கூழை யெதுகை: 123]
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
... [முற்றெதுகை: 1234]

8.09. பொழிப் பெதுகை (சீர்கள் 1-3)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதற்சீரில் சீர்மூன்றில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் பொழிப்பெதுகை. ... 1

சான்றுகள்
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.
---திருக்குறள் 24:6

(கலிவிருத்தம்)
பொழிப்பு மோனைகள் இல்லா திடத்தில்
பொழிப்பெது கைகள் பொலிந்து வந்திட
எழுதும் பாட்டின் ஒவ்வொரு அடியும்
எளிதில் மனதில் நிலைப்பது காணீர். ... 2

வீரரும் வேந்தரும் போரினிற் புக்கார்;
மக்களெல் லோரும் தொக்குவாழ்த் தினரே;
வெற்றிமா மகள்கைப் பற்றினன் அரசன்;
சால்விற லின்றித் தோல்வியுற் றவர்கள்
புவியுடல் போட்டன ரவிந்தொழிந் தாரே.
--கி.வா.ஜ. ’கவி பாடலாம்’, பக்.64

(கலிவிருத்தம்)
பாரதி யாரின் பாடலிற் கீழே
ஆர்வது பொழிப்பெது கையென் பதனினும்
தீரச் சேர்ந்தொலிப் பிறவெழுத் துகளால்
ஆர்வது பொழிப்பாம் இயைபென் றறிக. ... 3

ஞானத்தி லேபர மோனத்திலே---உயர்
மானத்தி லேயன்ன தானத்திலே...
தீரத்தி லேபடை வீரத்திலே--நெஞ்சில்
ஈரத்தி லேயுப காரத்திலே...
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே--புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே...
---தேசிய கீதங்கள், பாரத நாடு

8.10. ஒரூஉ வெதுகை (சீர்கள் 1-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதற்சீரில் சீர்நான்கில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் ஒரூஉவெதுகை. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
குறட்பா பலவின் முதலடி களிலும்
பிறவகை நேரிசை வெண்பா வகைகளில்
இரண்டாம் அடியில் வரும்தனிச் சொல்லும்
ஒரூஉ வெதுகை என்பதை அறிக;
ஒரூஉ வெதுகை என்னும் பெயரில்
அளபெடை யொன்று வருவதைக் காண்க. ... 2

சான்றுகள்
திருக்குறள் ஒரூஉ வெதுகை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. ... 21

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. ... 34

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.  ... 42

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். ... 62

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல். ... 70

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. ... 81

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது. ... 192

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேல்குறட் பாக்களில் ஒரூஉவெது கையொரு
கால்கோள் தனிச்சொல் போல நின்றதன்
முன்னுள சீரில் முடிபொருள் நிறுத்திப்
பின்னடி தனியாய்ப் பிரிப்பதைக் காண்க. ... 3

நேரிசை வெண்பா தனிச்சொல் ஒரூஉ வெதுகை

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கெனென் றிட்டுண்டு இரும்.
---ஔவையார், நல்வழி 11

8.11. கூழை எதுகை (சீர்கள் 1-2-3)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதல்மூன்று சீர்களிலே
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் கூழையெதுகை. ... 1

சான்றுகள்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
வேலன் பாலன் போலும் நெஞ்சன்
துன்னிய நன்மை என்றும் நிலைபெறும்

(குறள் வெண்செந்துறை)
கூழை யெதுகை ஒவ்வோர் அடியிலும்
கீழுள பாடலில் பயில்வது காண்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சாலையில் மாலியின் கோலம் வியந்தே
காலையில் வேலனின் ஆலயம் கண்டுநான்
வேலைசெய் சேலம் ஆலை நுழைவனே. ... 2
[மாலி = சூரியன்]

*****

No comments:

Post a Comment