கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
7.12. நெடிலடி முயற்சி
(குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் ஐந்துசீரில் முடியும்
நெடிலடி இயற்ற நாமும் முயல்வோம் ... 1
அளவொத்த எவ்வகை அடியும் எத்தளையும் கொண்டு
அடிகள் இரண்டுவரும் குறள்வெண் செந்துறையில் முனைவோம். ... 2
முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
மண்ணில் வாழும் மரத்தின் அழகும் பயனும்
எண்ணிப் பார்த்தால் என்றன் வாழ்விது வீணே!
கண்ணில் வாழும் காட்சிகள் மாயை என்றே
எண்ணத் தோன்றில் இறையருள் மேவும் உளமே.
இட்லி தோசை இன்னும் மெதுவடை என்றே
சட்னி சாம்பார் தட்டில் ஊற்றிக் கொள்வனே!
அன்றுநீ சொன்னதென் அகத்தில் ஆழப் பதிந்தே
இன்றெனை வருத்தும் என்றே நீயறி வாயோ?
சிட்டுக் குருவிகள் சிலவென் முற்றம் தாழும்
குட்டி அலகால் கொத்திய வுண்டே வாழும்.
முயற்சி 2.
(கலித்துறை)
வந்ததும் இருப்பதும் தெரியும் தெரியுமோ வருவது?
நொந்ததும் நிகழ்ந்ததும் தெரியும் நாளையென் நோவோ?
பந்தைய எலிகள் வாழ்வில் விந்தைகள் பார்ப்பதுண்டோ?
சிந்தனை தறிகெட் டோடச் சாதனை சிறுமதியோ?
முயற்சி 3.
(கலித்துறை)
தென்றலின் அலையில் தலைசாயும் நெற்பயிர்த் தேக்கம்
கன்றுடன் பசுக்கள் தொழுவம் திரும்பிடும் காலம்
மேற்கில் மறையும் கதிரவன் ஒளியின் மெருகு
காற்றில் ஊடுருவிக் கண்களில் பட்டுக் கழியும்.
*****
No comments:
Post a Comment