கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
8.07. எதுகை விகற்பங்கள்: அடியெதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியும் இணையும் பொழிப்பு ஒரூஉ
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றென
எதுகைத் தொடையில் எண்வகை விகற்பமே. ... 1
எதுகையில் மோனையில் எழுத்துகள் ஒன்றுதல்
அதுவே என்றோ வகையே என்றோ
பொதுவில் இரண்டு விதங்களில் வருமே. ... 2
சிகரம் தகரம் என்னும் எதுகையில்
ககர எழுத்தே ஒன்றுதல் காண்க.
சிகரம் சிறப்பு என்னும் மோனையில்
சியெனும் எழுத்தே ஒன்றுதல் காண்க. ... 3
சிலவகைச் சிலைகள் என்னும் எதுகையில்
லகர வருக்கம் ஒன்றுதல் காண்க.
புலவர் பொருநர் என்னும் மோனையில்
பகர வருக்கம் ஒன்றுதல் காண்க. ... 4
விதித்த வகையில் ஒன்றி வருவது
முதல்தர எதுகை மோனை யாகும்
பிறவகை களிலே ஒன்றி வருதலைப்
புறனடை யென்று இலக்கணம் கூறுமே. ... 5
அடியெதுகை
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபிற முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியெது கையிலே ஒன்றி வருமே. ... 6
இரண்டடி எதுகைச் சான்றுக் குறள்:
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1
இரண்டடி களுக்கு மேல்வரும் எதுகை:
(வஞ்சி விருத்தம்)
அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையேன்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்
--கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம் 2582
விருத்தப் பாக்களில் அடிகளின் சீர்கள்
பெருத்து வருவதால் அடிகள் நீள
அதனை எழுதுவர் பலவரி களிலே
இதனால் அடிகளின் முதற்சீர் தெரிய
அடியெது கையினை அமைத்தே எழுதுவர். ... 7
(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
. . உத்தமர்தம் உறவு வேண்டும்
. . உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
. . உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெரும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
. . பேசா திருக்க வேண்டும்
. . பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
. . பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
. . மறவா திருக்க வேண்டும்
. . மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
. . வாழ்வுநான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
. . தலமோங்கு கந்த வேளே
. . தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
. . சண்முகத் தெய்வ மணியே.
---இராமலிங்க அடிகள், திருவருட்பா 8
பாவகை பாவினம் காட்டுமே எதுகைகள்
பாவகை களிலே ஈரடிக் கொருமுறை
எதுகை யொன்றை அமைத்தல் சிறப்பு
நேரிசை வெண்பா காட்டும் எதுகைகள்
முதலிரண் டடியிலும் இரண்டாம் அடியின்
ஈற்றுச் சீரிலும் அமைந்து வருமே. ... 8
பாவினங் களிலே விருத்தப் பாக்களில்
ஓரெது கையே அடிகளில் அமையுமே
பாவினத் துறைகளில் கலித்துறை தன்னில்
ஓரெது கையே அடிகளில் அமைய
இதர இனங்களில் அடியெது கைகள்
பொதுவில் வருவது ஒலியினிற் சிறக்குமே. ... 9
*****
No comments:
Post a Comment