Sunday, January 15, 2017

8.00. தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.00. தொடை
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடையெனும் சொல்லின் பொதுவாம் பொருளே
தொடையின் பங்கினைச் செய்யுளில் காட்டும்.
பின்னுகை தொடர்ச்சி கட்டுகை மாலைவடம் 
கொத்து பூமாலை யாழ்நரம்பு அம்பு 
படிக்கட்டு எனவரும் பொதுப்பொருள் நோக்கியே 
தொடையெனும் அழகிய பெயர்வந் ததுவோ? ... 1

8.01. தொடையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முதலடி முதற்சீர் வருமெழுத் துகளை
பலவடி களிலோ பலசீர் களிலோ 
ஒன்றிடத் தொடுப்பது தொடையெனப் படுமே. ... 1

அடியிடைச் சீரிடை வருவ தாயினும்
அடியிடைத் தொடுப்பினை முதலில் வைத்தே 
’தொடையே அடியிரண் டியையத் தோன்றும்’என
தொடையின் இலக்கணம் யா.கலம் கூறுமே. ... 2 
[யா.கலம் = யாப்பருங்கல விருத்தி]

வகையில் ஒன்று வண்ணம் ஒன்றென
விதவித இழைகள் வெளிவர உட்செலப்
பாங்காய்ப் பின்னிடும் பின்னல் போல
முதலில் இடையில் கடையில் என்று
எழுத்துகள் ஒன்றப் பின்னுகை தொடையாம். ... 3

இடைவெளி விட்டோ பிளவே இன்றியோ
படரும் எழுத்துகள் சீரிடை அடியிடைத்
தொடர்ச்சியாய் ஒன்றத் தொடைகள் தோன்றுமே. ... 4

இப்படி வந்தால் பிளவறத் தொடுப்பது:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
கற்க கசடறக் கற்பவை கற்றபின் ... 5

இப்படி வந்தால் பிளவுறத் தொடுப்பது:
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் ... 6

கொத்தாய்க் கிடக்கும் பலவிதச் சொற்களை
ஒத்த வகைகளில் இயைத்துக் கட்டிப்
பூமாலை யொன்றில் பின்னிய பூக்களாய்ப்
பாமாலை யாக்கிப் பார்க்கவும் கேட்கவும்
யாழ்நரம் பொலிபோல் யாப்பின் ஓசையில்
ஆழித் தேராம் செய்யுளை இழுக்கும்
மாலை வடமெனத் தொடைகள் செயல்படும். ... 7

’அன்றும் இன்றும் என்றும் ஒன்றே’
என்ற தொடரில் இன்ற-ஒலி ஊடுருவி
அம்பெனத் துளைக்கும் தொடைவரப் பொருளினை
அவிழ்த்துக் காட்டுதல் காணுதல் தவறுமோ? ... 8

’மலரது மலர்ந்திட மலர்ந்திடும் முகமே!’
மலரும் முகமும் விரிவதைத் தொடரில்
படிப்படி யாகத் தொடுத்தது காண்பீர்! ... 9

தொடையெனும் சொல்லின் பொதுப்பொருள் இப்படி
அடைவில் வந்து தொடையெனும் உறுப்பால்
படரும் இலக்கண உத்திகள் சுட்டுமே. ... 10

தொடையின் பங்கு செய்யுளில் யாதெனின்
தொடுக்கும் உத்திகள் அடுக்கி வந்தே
செய்யுளின் ஓசையில் இனிமை கூட்டிச்
செய்யுளை மனத்தில் பதிய வைப்பதாம். ... 11

இன்றைய புதுமைக் கவிதை வடிவிலும்
இலக்கணம் விடுத்தும் தொடைகளை விடுகிலர்
தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்
என்னும் பழமொழி இதனை விளக்குமே
இயலிசை நாடகம் முத்தமிழ் அனைத்திலும்
இனிமை கூட்ட வருவது தொடைகளே. ... 12


*****

No comments:

Post a Comment