Monday, February 27, 2017

8.36. உயிர் மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.36. உயிர் மோனை
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் துடனே
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
முதலாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஒத்த குறிலொலி என்றோ
ஒத்த நெடிலொலி என்றோ
ஒத்த உயிரொலி ஒன்றுவ(து) உயிர்மோனை.

உயிர்மோனை இலக்கியச் சான்றுகள்
அடிமோனை

(அ-ப -> ஒத்த குறிலொலி)
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
---திருக்குறள் 001:1

(மோ-நோ -> ஒத்த நெடிலொலி)
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. 
---திருக்குறள் 009:10

உயிர்மோனை இலக்கியச் சான்றுகள்: திருக்குறள்
சீர்நிலை உயிர்மோனை

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் (இணை: அ-வ)
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் (பொழிப்பு: க-ப)
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள் (ஒரூஉ: அ-த)
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க (கூழை: வ-ம-ப)
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் (மேற்கதுவாய்: த-ந-ப)
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச (கீழ்க்கதுவாய்: கெ-னெ-னெ)
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து (முற்று: த-ம-ந-ய)
யாகாவா ராயினு நாகாக்க காவாக்கால் (முற்று: யா-ரா-நா-கா)

உயிர்மோனை புனைவுச் சான்றுகள்
அடிநிலை உயிர்மோனை

(ஒத்த குறிலொலி: அ-த)
அங்கு மிங்கு மெங்கு நோக்கத்
தங்கமாய் மின்னும் சூரிய வொளியே!

(ஒத்த நெடிலொலி: கா-யா)
கார்காலப் போதில் மழைபெய்து நிற்க
யார்யாரோ தெருவில் நடைபயிலக் கண்டேன்.

உயிர்மோனை புனைவுச் சான்றுகள்
சீர்நிலை உயிர்மோனை

இணை (ப-ந, ம-ல)
பண்ணை நகராது கேட்கும் நாயைக்
மண்ணி லமர்ந்தே பார்த்தது குழந்தை.

பொழிப்பு (ம-த, எ-பெ)
மண்ணைத் தோண்டத் தண்ணீர் பெருகும்
எண்ணம் தோண்டப் பெருகு மாசை.

ஒரூஉ (ம-த, எ-பெ)
மண்ணைத் தோண்டப் பெருகுந் தண்ணீர் 
எண்ணந் தோண்ட வாசை பெருகும்.

கூழை (பொ-கொ-யொ, மெ-தெ-தெ)
பொய்யைக் கொள்வதை யொழித்தென் மனமே
மெய்யைத் தெரிவ தென்னா ளறியேன்.

மேற்கதுவாய் (பொ-கொ-யொ, மெ-தெ-லெ)
பொய்யென் மனமே, கொள்வதை யொழித்து
மெய்யை யறிந்து தெளித லெளிதோ?

கீழ்க்கதுவாய் (பொ-கொ-யொ, மெ-வெ-தெ)
பொய்யைக் கொள்வதென் மனமே யொழித்து
மெய்யெது வென்றே அறிந்து தெளிவாய்.

முற்று (க-வ-ம-ந, எ-தெ-தெ-வெ)
கண்முன் வளரும் மரத்தின் நலன்கள்
எண்ணத் தெரியா தெளிதாய் வெட்டினர்.

8.37. நெடில் மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் துடனே
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
முதலாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஏதேனும் நெடிலொலி ஒன்றுவ(து) நெடில்மோனை.

நெடில்மோனை இலக்கியச் சான்றுகள்: திருக்குறள்
அடிமோனை (கோ-றா) 

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.
---திருக்குறள் 001:9

நெடில்மோனை இலக்கியச் சான்றுகள்: திருக்குறள்
சீர்நிலை நெடில்மோனை

ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் (இணை: ஊ-கௌ)
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை (பொழிப்பு: ஆ-கே)
ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை (ஒரூஉ: ஈ-றா)
கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியை (கூழை: கோ-சூ-கா)
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைப் (மேற்கதுவாய்: ஆ-தா-கே)
ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் (கீழ்க்கதுவாய்: ஆ-றோ-கை)
யாதனின் யாதனி னீங்கியா னோத (முற்று: யா-யா-னீ-னோ)

நெடில்மோனை புனைவுச் சான்றுகள்
அடிமோனை (தோ-கே)

தோளி லேறிய சுமையைக் கந்தன்
கேளாம லிறக்கித் தன்வழி சென்றான்.

நெடில்மோனை புனைவுச் சான்றுகள்
சீர்நிலை நெடில்மோனை

இணை (வா-சூ, கா-லோ)
வானத்திற் சூரியன் நிறமாலை கொஞ்சும்
கானத்தி லோர்பசு நிழல்கண்டு தஞ்சம்.

பொழிப்பு (கா-மோ, ஊ-தே)
காண்பதெலாம் பொய்யென மோனத்தில் விளங்கும்
ஊண்விடுத்த மனத்தினிலே தேன்சிந்தும் களிப்பு.

ஒரூஉ (கா-மோ, ஊ-தே)
காண்பதெலாம் பொய்யென விளங்கும் மோனத்தில் 
ஊண்விடுத்த மனத்தினிலே களிப்புத் தேன்சிந்தும்.

கூழை (நீ-வா-கோ, மா, வீ, லே)
நீல வானக் கோலக் கொண்டல்
மாலை வீழலி லேறுஞ் செம்மை.

மேற்கதுவாய் (கா-மோ-மூ, ஈ-கா-னூ)
காதலி லுண்டு மோதலு மூடலும்
ஈதலு மிசைதலும் காதலி னூடே.

கீழ்க்கதுவாய் (நீ-வா-கோ, மா, வீ, லே)
நீல வானக் கொண்டல் கோலம்
மாலை வீழலிற் செம்மை யேறும்.

முற்று மோனை (கா-கே-கோ-மூ, பே-ஊ-யோ-யா)
காணாமல் கேளாமல் கோள்சொல்லும் மூடர்
பேணாதே ஊக்கமா யோங்குகளை யாவர்.

*****

Thursday, February 23, 2017

8.34. வருக்க மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.34. வருக்க மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வருக்கம் பதினெட்டு க-முதல் ன-வரை;
வருக்கத்தில் ஒன்றும் வருக்க மோனை,
குறிலொடு குறிலோ நெடிலொடு நெடிலோ
குறில்நெடில் இணைந்தோ வருவ தாமே. ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
’சாந்தனையுந் தீயெனவே செய்திடினுந் தாமவரை
ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர்’ ஔவையின்
மூதுரையில் சாந்-செய் என்னும் பொழிப்பு
மோனை ச-வருக்கம் காண். ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே’ என்று
ஔவை நல்வழிப் படுத்தும் போது
வீற்-வாழ் என்பது நெடிலொன்றும் மோனை. ... 3

’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்னும்
ஔவையின் மூதுரையில் கற்-காமு என்று
க-வருக்கக் குறில்நெடில் மோனை காண்க. ... 4

அடிநிலை, சீர்நிலை வருக்கமோனை புனைவுச் சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)

அடிமோனை (வ-வி)
வட்ட நிலாவின் வெள்ளொளி காற்றில்
விட்டு விட்டு எழுதும் சித்திரம்!

இணைமோனை (சீர்கள் 1-2)
தமிழைத் தெளிவாய்க் கற்றல் வேண்டும்
தமிழின் தொன்மை அறிதல் வேண்டும்.

பொழிப்பு மோனை (சீர்கள் 1-3)
கல்வி இளமையிற் கொள்வதால் பின்னாள்
செல்வம் வாழ்வுறச் சொகுசாய் வாழ்வமே.

ஒரூஉ மோனை (சீர்கள் 1-4)
மயக்கும் செங்கதிர்க் காலை மெருகில்
தயக்கம் இன்றி நடந்தாள் துணிவுடன்.

கூழை மோனை (சீர்கள் 1-2-3)
கல்வி கரையில கற்பவை நாட்சில
சொல்லில் செயலில் சிறப்பாய் வாழ்வமே.

மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-3-4)
கன்றும் பசுவும் கொட்டிலிற் குப்பன்
நன்றாய் அடைத்தே நிழலடி நுழைந்தான்.

மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-2-4)
கன்றைக் கொட்டிலிற் பசுவுடன் குப்பன்
நன்றாய் நுழைத்தபின் அமர்ந்தான் நிழலடி.

முற்று மோனை (சீர்கள் 1-2-3-4)
கலையும் குறுமுகில் கிழிசலாகும்; கெலித்த
நிலவொளி நன்கு நுழையும் நெகிழ்ந்தே.

8.35. இன மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வல்லினம் என்பது கசட தபற
மெல்லினம் என்பது ஙஞண நமன
இடையினம் என்பது யரல வழள
வல்லின மெல்லின இடையின வகைத்த
இனத்தில் ஒன்றுதல் இனமோனை யாமே. ... 1

இலக்கியச் சான்றுகள்: வல்லின மோனை
ஔவையார்: கொன்றைவேந்தன், மூதுரை

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. ... (இணை 1-2)
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ... (பொழிப்பு 1-3)
சொக்க ரென்பவர் அத்தம் பெறுவர். ... (ஒரூஉ 1-4)
குற்றம் பார்க்கில் சுற்ற மில்லை. ... (கூழை 1-2-3)
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் ... (மேற்கதுவாய் 1-3-4)
கெடுவது செய்யின் விடுவது கருமம். ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
புலையும் களவும் கொலையும் தவிர். ... (முற்று 1-2-3-4)

இலக்கியச் சான்றுகள்: மெல்லின மோனை
ஔவையார்: கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
பழமொழி நானூறு

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி ... (இணை)
நுண்ணிய கருமமு மெண்ணித் துணி. ... (பொழிப்பு)
மருவிய சுற்றமும் வான்பொருளும் நல்ல ... (ஒரூஉ)
மொழிவது மறுக்கி னழிவது கருமம். ... (கூழை)
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் ... (கீழ்க்கதுவாய்)

புனைவுச் சான்றுகள்: சீர்நிலை மெல்லின மோனை

நமது மனங்கொள் துன்பம் பெரிது. ... (இணை 1-2)
நமது செல்வ மென்பதி யாது? ... (பொழிப்பு 1-3)
நமது வாழ்வி லின்ப மேது? ... (ஒரூஉ 1-4)
நமது மனத்தி னறிவு பொய்யே. ... (கூழை 1-2-3)
நமது புலன்களை நெகிழ்த்திடு மாலயம். ... (மேற்கதுவாய் 1-3-4)
நமது மனங்கொ ளன்பில் நெகிழ்வுறும். ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
நமது மனமிது நொடியில் நிலைமாறும். ... (முற்று 1-2-3-4)

இலக்கியச் சான்றுகள்: இடையின மோனை
திருக்குறள்
இடையின அடிமோனை
யாண்டுச்சென் றியாண்டும் உளராகில், வெந்துப்பின் ... (ஒரூஉ 1-4)
வேந்து செறப்பட் டவர்.
---திருக்குறள் 090:05

சீர்நிலை இடையின மோனைகள்
வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் ... (இணை 1-2)
யாமு முளங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் ... (பொழிப்பு 1-3)
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் ... (ஒரூஉ 1-4)
வாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென் ... (கூழை 1-2-3)
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் ... (மேற்கதுவாய் 1-3-4)
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய ... (முற்று 1-2-3-4)

புனைவுச் சான்றுகள்: சீர்நிலை இடையின மோனை

வண்ண விளங்காலைப் பொழுதிற் சாலையில் ... (இணை 1-2)
வண்ண மேவுமி ளங்காலைப் பொழுதிற் ... (பொழிப்பு 1-3)
வண்ண மேவு மிளங்காலை யின்னாள் ... (ஒரூஉ 1-4)
வண்ன விளமாலை யுண்ணு மிருளில் ... (கூழை 1-2-3)
யௌவனம் முகத்துவி ளங்கிடு வாளை ... (மேற்கதுவாய் 1-3-4)
யௌவனமி ளங்குமலர்க் கண்ணா லிசைந்தாள் ... (கீழ்க்கதுவாய் 1-2-4)
யௌவனமி ளங்குமல ரனையாளி வள்காணீர்! ... (முற்று 1-2-3-4)

மோனை யெதுகை யலகிடும் போது
சொற்களைப் புணர்ந்தபி னலகிடல் வேண்டும்
எனும்விதி மேல்வரு மடிகளி லறிக. ... 2

*****

Friday, February 17, 2017

8.30. மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.30. மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மோனை என்றால் முதன்மை எனப்பொருள்
மோனை என்றால் முனையென வுரைப்பர்
முனைந்து முதல்நில் முனையாம் மோனை. ... 1

8.31. மோனை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாமே. ... 1

’மலையும் மடுவும்’, ’மாதவன் மாலை’
தொடர்முதல் எழுத்து முற்றும் ஒன்றக்
குறில்நெடில் மோனைகள் வருவது காண்க.
பலவகைத் தொடைகளில் எதுகையும் மோனையும்
பாக்களில் வருவது சிறப்பென் றுரைப்பரே. ... 2

8.32. மோனை விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே மோனைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே.  ... 1

மோனைத் தொடைச் சான்றுகள்
(குறள் வெண்பா)

அடிமோனை
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. ... 
---திருக்குறள் 006:03

இணைமோனை (சீர்கள் 1-2)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.
---திருக்குறள் 001:4

பொழிப்பு மோனை (சீர்கள் 1-3)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
---திருக்குறள் 001:6

ஒரூஉ மோனை (சீர்கள் 1-4)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
---திருக்குறள் 005:9

கூழை மோனை (சீர்கள் 1-2-3)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்ற விடற்கு. ... அடிமோனை
---திருக்குறள் 035:9

மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-3-4)
வானின் றுலகம் வழங்கி வருதலால் 
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
---திருக்குறள் 002:1

கீழ்க்கதுவாய் மோனை (சீர்கள் 1-2-4)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
---திருக்குறள் 001:5

முற்று மோனை எதுகை (சீர்கள் 1-2-3-4)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:2

8.33. மோனையின் வேறு பிற வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுளில் பொருளின் பெருமை நோக்கி
முற்றிலும் முதலெழுத் தொன்றாத போது
வேறு வகைத்த மோனைகள் வரலாம். ... 1

வருக்கமும் இனமும் உயிரும் நெடிலுமென
வகைத்த எழுத்துகள் மோனை யாகலாம்
மோனைகள் சீர்வழித் தொடர்ந்து வரலாம்
ஈரடிக் கொருமுறை வரலாம் அல்லது
இடையிடை நின்று வரலாம் அத்துடன்
அனுமோ னையெனும் வகையில் வரலாம். ... 2

*****

Thursday, February 16, 2017

8.25. வழியெதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.25. வழியெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபல வற்றில் சீர்பல வற்றில்
ஒன்றுதல் வழியெது கையெனப் படுமே.

சான்று 
(குறள் வெண்பா)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

(இன்னிசை வெண்பா)
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
--நாலடியார், 39

8.26. ஆசிடையிட்ட எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆசு வெனில்பொருள் பற்றுக் கோடாம்
ஆசிடுதல் என்றால் பொன்னின் துகளைப்
பற்ற வைத்துப் பொன்னணி செய்தல்
பற்றாசு என்று இதனைச் சொல்வர்
பற்றாசின் திரிபே தீபாவளிப் பட்டாசு!

முதல்தர எதுகை முடியா விட்டால்
கருத்தைச் சொல்லிட ’ய-ர ல-ழ’
எழுத்தின் ஒற்றிளால் ’பற்ற வைத்தலே’
ஆசிடை யிட்ட எதுகை என்பது.
இந்த நான்கு ஒற்றுகள் இடைவரினும்
ஓசை கெடாது என்பது செய்தி.

’வாய்மை-தீமை’, ’சாக்கடை ஊர்க்கிடை’
’தாவாதே கால்வாயை’, ’யாழ்வகை பாவகை’
தொடர்களில் ஒற்றுகள் ஆசிடுவது காண்க.

அடியிடைப் பயிலும் ஆசிடை எதுகை:
மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளூரா உன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள்?
---காளமேகப் புலவர், வைத்தீஸ்வரன் கோயில் இறைவனைக் குறித்து.

சொக்கன் மதுரையினில் தொண்டர்க்குன் அவிழ்ந்த
பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ?
---காளமேகப் புலவர், வசையும் வசைமீட்சியும்

8.27. எதுகைக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி கடைச்சீர் தொடங்கியே அமைய
அளவிடும் எதுகை வகைகள் புறனடை.
சீர்நிலை எதுகைப் புறனடை யென்றே
நால்வகை எதுகையோ(டு) அடிக்கடை யெதுகையென்(று)
ஐவகை எதுகை வருவதைக் காண்போம்.

கடையாம் இறுதிச் சீர்-அடி யெதுகை
கடையெது கையென் றழைக்கப் படுமே.
கடையிரு சீர்களில் சீர்நிலை எதுகை
கடையிணை யெதுகையென் றழைக்கப் படுமே.
சீர்கள் நான்கில் இரண்டில் எதுகை
பின்னெது கையென் றழைக்கப் படுமே.
இறுதிச் சீர்கள் மூன்றில் எதுகை
உறுவது கடைக்கூழை யெதுகை யாமே
நடுவிரு சீர்களில் அமையும் எதுகை
இடைப்புணர் எதுகையென் றழைக்கப் படுமே.

ஒன்று நான்கு சீர்களில் ஒரூஉ
ஒன்று மூன்று நான்கு மேற்கெதுவாய்
ஒன்று இரண்டு நான்கு கீழ்க்கதுவாய்
என்றே அமையும் எதுகைகள் முதற்சீரில்
ஒன்றி அமைவதால் புறனடை யாகா
எனவே புறனடை யெதுகை ஐந்தே.

புறனடை யெதுகை கீழ்வரும் பாக்களில்
உறுவது முதலடிச் சீர்களில் யென்றவை
அறிந்தும் ஆய்ந்தும் விளங்கிக் கொள்வீர்.

சான்று: கடையெதுகை (அடுத்த இரண்டடி கடைச்சீர்)
(இன்னிசை வெண்பா)

பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலும் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
--நாலடியார், 376

சான்று: கடையிணையெகை (சீர்கள் 4-3)
(இன்னிசை வெண்பா)

ஆய்ந்த அறிவின ரல்லாதார் புல்லுரைக்குக்
காய்தெதிர் சொல்லுபவொ கற்றறிந்தார் தீந்தேன்
முசுக்குத்தி நக்கு மலைநாட தம்மைப்
’பசுக்குத்தின் குத்துவார் இல்’.
--பழமொழி நானூறு, 57

சான்று: பின்னெதுகை (சீர்கள் 4-2)
(நேரிசை வெண்பா)

கெடுவ லெனப்பட்ட கண்ணுந் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத் தீண்டிய
’கல்தேயும் தேயாது சொல்’.
--பழமொழி நானூறு, 39

சான்று: கடைக்கூழை எதுகை (சீர்கள் 4-3-2)
(நேரிசை வெண்பா)

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியார் என்னையன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்
கென்னையோ நாளை எளிது.
--திணைமாலை நூற்றைம்பது, 20

சான்று: இடைப்புணர் எதுகை (சீர்கள் 3-2)
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணமும் குலமுடையார் கூறார் பகைவர்மேல்
பார்த்துப் பல்காற் பயின்று.
--ஆசாரக் கோவை, 71

8.28. இருசீர்-முழுதொன்-றெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முதலெழுத் தளவொக்கப் பின்வரும் எழுத்துகள்
சீர்முழுதும் ஒன்றும் தலையாகு எதுகையில்
முதலிரு சீர்கள் முழுதும் ஒன்றுதல்
இருசீர் முழுதொன் றெதுகை யாமே.

சான்று (நான்கு அடிகளிலும் முதலிரு சீர்கள்)
(இன்னிசை வெண்பா)

கள்ளாமை வேணுங் கடிய வருதலா
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மட்டும் 
கொள்ளாமை வேண்டும் பகை.
--நான்மணிக் கடிகை, 86

சான்று (முதலிரண்டு அடிகளில் முதலிரு சீர்கள்)
(நேரிசை வெண்பா)

பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக் குய்த்து.
--சிறுபஞ்சமூலம், 3

(குறள் வெண்பா)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை ஆரம்.
--திருக்குறள், 008:07

8.29. செவ்வெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

விகற்பமோ இனமோ எதுகையாய் ஒன்றாது
ஓரெழுத் ததுவே ஒன்றும் எதுகை
செவ்வெது கையென் றழைக்கப் படுமே.

சான்றுகள்
(குறள் வெண்பா)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
--திருக்குறள், 001:06

(இன்னிசை வெண்பா)
ஒருவ ருரைப்ப வுரைத்தா லதுகொண்(டு)
இருவரா வாரு மெதிர்மொழியால் பாலா
பெருவரை நாட சிறிதேனும் ’இன்னா(து)
இருவர் இன்னாடல் நாய்’.
--பழமொழி நானூறு, 18

*****

8.22. இருவிகற்ப எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.22. இருவிகற்ப எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முன்னிரு அடிகளில் ஓரெது கையும் 
பின்னிரு அடிகளில் வேறெது கையும் 
நாலடிச் செய்யுளில் அமைந்தே வருவது
இருவிகற்(ப) எதுகை, இரண்டடி எதுகை
என்றிரு பெயர்களில் அழைக்கப் படுமே.
இருவிகற் பெதுகை வெண்பாவில் மிகுவருமே. ... 1

சான்றுகள்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
--ஔவையார், நல்வழி, கடவுள் வாழ்த்து

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதியவி உண்ணவே.
--திருமூலர், திருமந்திரம் 237

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.
--பாரதியார், கண்ணன் திருவடி

8.23. இடையிட்டெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகள் தோறும் வருத லின்றி
அடியொன்று விட்டு மற்றொன்றில் வருகிற
அடியெது கையே இடையிட் டெதுகையாம்.
இப்படி ஒற்றைப்படை இரட்டைப்படை அடிகளில்
ஒப்ப ஓரெதுகை அமைந்து வருமே.
ஒற்றைப்படை அடிகளில் மட்டும் அமைந்தே
மற்றது எதுகை யில்லாதும் வருமே. ... 1

சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)
எட்டுத் தொகைநூல் பெயர்குறிக்கும் பழம்பாட்டில்
கட்டும் எதுகை இடையிட் டெதுகையாம். ... 2

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொ டகம்புறமென்(று)
இத்திறத்த எட்டுத் தொகை.

ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
களிபடைத்த மொழியினாய் வாவாவா
கடுமை கோண்ட தோளினாய் வாவாவா
தெளிவு பெற்ற மதியினாய் வாவாவா
சிறுமை கண்டு பொங்குவாய் வாவாவா
எளிமை கண்டு இரங்குவாய் வாவாவா
ஏறுபோல் நடையினாய் வாவாவா.
--பாரதியார், போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

8.24. மூன்றாம் எழுத்தொன் றெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாவ தல்லாமல்
அடிமுதற் சீரின் மூன்றாம் எழுத்துடன்
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
ஒன்றுதல் மூன்றாம் எழுத்தொன் றெதுகை.

’உமாவும் கலாவும் விழாவுக்குச் சென்றனர்’
’பாடுவது நாலுவகை காணுவது ஆறுவகை’
தொடர்களின் எதுகை மூன்றில் ஒன்றுமே.

சான்று
(குறள் வெண்பா)
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
---திருக்குறள் 002:10

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பண்பி லவர்க்கு.
---திருக்குறள் 002:10

(முதலிரு அடிகளில்)
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
--நாலடியார், 163

*****

8.21. மூவகை எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.21. மூவகை எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முதலெழுத் தளவொக்கப் பின்வரும் எழுத்துகள்
சீர்முழுதும் ஒன்றினால் தலையா(கு) எதுகை.
இரண்டாம் எழுத்தொன்றி மற்றவை யொன்றாமை
இடையா(கு) எதுகை எனும்பொதுப் பெயர்பெறும்.
சொற்குறை எதுகைகள் கீழ்நிலை யாவதால்
கடையா(கு) எதுகையென் றழைக்கப் படுமே. ... 1

தலையாகு எதுகைச் சான்றுகள்
(குறள் வெண்பா)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
--திருக்குறள் 001:05

(வஞ்சி விருத்தம்)
நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையின னணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயற் சிரபுரமே.
--சம்பந்தர் தேவாரம், 01.109.04

(கலிவிருத்தம்)
கலைநவின்ற பெரும்புலமைக் கவிஞர்களைப் போற்றிசைத்து
நிலைநவின்ற பன்னூல்கள் நேயத் துடனியற்றப்
புலைநவின்ற மெய்யழிந்தும் புகழுடம்பு பெற்றவர்கள்
அலைநவின்ற கடற்புவியில் அனைவரினும் மேலவரே.
--கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.132

இடையாகு எதுகைச் சான்றுகள்
(குறள் வெண்பா)

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
--திருக்குறள் 001:06

(சிந்தியல் வெண்பா)
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடையொன்றில்
அங்கண் உலகளித்த லான்.
--சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், மங்கல வாழ்த்து

மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.
--ஔவையார், முதுரை 26

கடையாகு எதுகைச் சான்றுகள்
(குறள் வெண்பா)

(உயிரெதுகை)
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
--திருக்குறள் 003:07

(வருக்க எதுகை)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
--திருக்குறள் 001:09

(இனவெதுகை)
தக்கார் தகவிலர் என்ப ரவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
--திருக்குறள் 012:04

*****

8.18. இனவெதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.18. இனவெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்துடன்
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்துடன் இனவெழுத் தெனும்வகையில்
ஒன்றி வருதல் இனவெதுகை யாகுமே. ... 1

(ஆசிரியத் துறை)
இனங்களின் வகைகள் நினைவு கூர்ந்திட
கசடதபற வல்லினம் என்றும்
ஙஞணநமன மெல்லினம் என்றும்
யரலவழள இடையினம் என்றும் தெரியும். ... 2

சான்றுகள்
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
--திருக்குறள் 012:04

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
--திருக்குறள் 005:05

தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
--திருக்குறள் 013:09

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வல்லின ற-கரமும் இடையின ர-கரமும்
ஒலிநெருக் கத்தால் இன்றைய பாக்களில்
எதுகைகள் எனவே கருதப் படலாம். ... 3

நாமும் இனவெது கையமைப் போமா?
கீழ்வரும் தனித்தனி அடிகள் இரண்டில்
முதலடிச் சீர்களில் வல்லின எதுகை
இரண்டாம் அடிச்சீர் மெல்லின எதுகையே. ... 4

சீரெதுகை: வல்லினம், மெல்லினம் 
மகளவள் கேசம் ஆடப் பாதத் தாபம் ஏறும்
தங்கிடத் தஞ்சம் திண்ணையில் தந்திடும் நம்மூர் நன்மக்கள். ... 5

இடையின எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அயலாரும் வரவேற்க வலம்வரும் அவளது 
குழந்தையின் உளறல் கேட்க இனிமை.
முதலாறு சீர்களில் இடையின எதுகையே. ... 6

8.19. உயிரெதுகை
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்துடன்
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஒத்த குறிலொலி என்றோ
ஒத்த நெடிலொலி என்றோ
ஒத்த உயிரொலி ஒன்றுவது உயிரெதுகை. ... 1

’பகலும் இரவும்’, ’முகிலின் குளிர்ச்சி’
’பாகலும் பாமரனும்’, ’பாடுவது தேறுமா’
தொடர்களில் உயிரெதுகை குறிலொன்றக் காண்க. ... 2

’உலாவரும் கனாமகள்’, ’மகேசனின் விவேகம்’
’பேசாமல் போகாதே’, ’பூமாவின் பூவார்குழல்’
தொடர்களில் உயிரெதுகை நெடிலொன்றக் காண்க. ... 3

உயிரெதுகைச் சான்று (அடியெதுகை)
(குறள் வெண்பா)

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
--ஔவையார்

உயிரெதுகைச் சான்று (முதலடியில் சீரெதுகை)
(குறள் வெண்பா)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
--திருக்குறள் 040:07

8.20. நெடிலெதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
இரண்டாம் எழுத்தொரு நெடிலென் றிருக்க
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்தாய் வருகிற எழுத்தில்
ஏதேனும் நெடிலொலி ஒன்றுவது நெடிலெதுகை. ... 1

’பலாப்பழ நிவேதனம்’, ’அதேஅதே சபாபதே’
’ஆவேசம் ஆகாதே’, ’வேரோடு தீராதே’
தொடர்களில் ஏதேனும் நெடிலொலி ஒன்றிட
நெடிலெது கையெனப் பயிலல் காண்க. ... 2

நெடிலெதுகைச் சான்று (அடியெதுகை)
(வெளிவிருத்தம்)

ஆவா வென்றே அஞ்சின ராழ்ந்தார் - ஒருசாரார் 
கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் 
மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார் 
ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் - ஒருசாரார்.

*****

8.17. வருக்க எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.17. வருக்க எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வருக்கம் என்பது வகுப்பும் ஒழுங்கும்
க-முதல் கௌ-வரை பன்னிரு உயிர்மெய்
க-வருக் கமென அழைக்கப் படுமே
உயிர்மெய் வருக்கம் இங்ஙனம் பதினெட்டே. ... 1

அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்துடன்
பிறவடி முதற்சீர் தன்னடி பிறசீர்
இரண்டாம் எழுத்துடன் வருக்க எழுத்தென
ஒன்றி வருதல் வருக்க எதுகையாம். ... 2

’சிலவகைப் புலிகள்’, ’வியப்பினில் உயிர்ப்பு’,
"பாடாமல் ஆடேனே", "பலாச்சுளை பலேசுவை"
தொடர்களில் வருக்க எதுகை அமைவது காண்க.
தொடர்கள் இவற்றில் குறிலொடு குறிலோ
நெடிலொடு நெடிலோ ஒன்றுதல் காண்க. ... 3

"சிலவகைக் கிலேசம்", "பாடாமல் ஓடுவேன்"
என்றும் வரலாம் குறில்நெடில் ஒன்றி.
எதுகை எழுத்துகள் அளவில் ஒத்திட
எதுகை சிறக்க அமையும் என்பரே. ... 4

வருக்க ஒற்றாம் வல்லின மெய்கள்
வருக்க எதுகையில் தவிர்த்தல் வேண்டும்
எதுகை இலக்கணம் சரியே அமைய.
’சிற்றாடைச் சிறுமகள்’ என்பது கூடாது.
’புன்னகை மனிதன்’ என்பதும் தவிர்க்க. ... 5

இடையின மெல்லின ஒற்றுகள் வருதல்
தடையிலை அவற்றின் வருக்க எதுகையில்
என்பதைக் காட்டும் கம்பரா மாயணம்
மற்றும் வேறு சான்றுகள் கீழே. ... 6

ஈரநீர் படிந்து இன்னிலத் தேசில
கார்கள் என்ன வரும்கரு மேதிகள்
ஊரில் நின்ற கன்றுள்ளிட மென்முலை
தாரை கொள்ளத் தழைப்பன சாலியே.
--கம்பராமாயணம் 1.2.25

ஆயபேர் அன்பெனும் அளக்கர் ஆர்த்தெழ
தேய்விலா முகமதி விளங்கித் தேசுற
தூயவள் உவகை போய்மிகச் சுடர்க்கெலாம்
நாயகம் அனையதோர் மாலை நல்கினாள்.
--கம்பராமாயணம் 2.2.52

ஏணியுஞ் சீப்பு மாற்றி
மாண்விணை யானையு மணிகளைந் தனையே.
--மதுரை வேளாசன், புறநானூறு 305

வருக்க எதுகைச் சான்றுகள்
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
--திருக்குறள் 081:5

எதுகை வருக்கம் இனிவரும் குறளில்
முதலடிச் சீர்களில் நெடிலொடு குறிலும் 
அடுத்ததன் சீர்களில் நெடிலொடு நெடிலும்
அடிகளில் நெடிலும் ஒன்றிடக் காண்க. ... 7

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.
--திருக்குறள் 052:10

ஈது முன்னர் நிகழ்ந்த திவன்துணை
மாத வத்துயர் மாண்புடை யாரிலை;
நீதி வித்தகன் தன்னருள் நேர்ந்தனிர்
யாது உமக்கரி தென்றனன் ஈறிலான்.
--கம்பராமாயணம் 1.10.137

நேரிசை வெண்பாவில் வருக்க எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரிசை வெண்பாவை நிறுவும் தனிச்சொல்லின்
சீரெதுகை வருக்கமாய்த் திகழ்வது சரியென
ஆடலன் பிள்ளையார் அடியாராம் ஔவையார்
பாடல் களிலே பயில்வது காண்பீர். ... 8

ஔவையார், நல்வழி
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா. ... 1

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை. ... 23

*****

நாமும் வருக்கம் அமைத்திடு வோமா?
’இகலில் தகித்து வகுபட்ட பகைவன் கைகொடான்’
க-வகைக் குறில்கள் தொடரில் வரிசையாய்
ஐந்தில் நான்கு வருவது காண்க.
கையெனும் நெடிலும் பகைவன் சொல்லில்
ஐகாரக் குறுக்கமாய்க் குறுகுதல் காண்க. ... 9

வராத கெ-குறில் சேர்க்கச் சொல்லினை
வகையுளி செய்து இப்படிப் பிரிக்கலாம்.
வகையுளி என்பது பேசும் சொல்லினை
சீரசை நோக்கிப் பிரித்தல் ஆகுமே. ... 10

’இகலில் தகித்து வகுபடவெறுப் புகெழுமும் பகைவன் கைகொடான்’
க-வகைக் குறில்கள் தொடரில் வரிசையாய்
ஐந்தும் வருவதன் செயற்கை காண்க. ... 11

வாராக் கெ-யெனும் குறிலினை இரண்டாம்
எழுத்தாக்கி வந்திடும் சொல்லொன் றினையே, 
வகையுளி யின்றித் தொடரில் இங்குப்
’பகைவன்’ முன்பு சேர்த்திடு வோர்க்கு
வேண்டிய வரங்கள் கிட்டுவ தாக! ... 12

இதுபோல் நெடில்கள் வரிசையில் வந்திட
எதுகை வருக்கம் அமைப்பது கடினம்
பொதுவில் இயல்பாய் வராதென் றறிக. ... 13

"பிசாசவள் வசீகர வசூரையினங் கசேனையின் 
அசைவினி லேசோதித் தசௌமியம்!’
என்று சொற்களைப் பிரித்து வகையுளியாக்கி
எழுதினால் செயற்கை யாகி விடுமே! ... 14

[வசூரை=விலைமகள், வேசி]

வகையுளி நீக்கிடப் புரியும் இத்தொடர்:
’பிசாசவள் வசீகர வசூரையின் அங்க சேனையின் 
அசைவினிலே சோதித்த சௌமியம்!’ ... 15

*****

8.15. சொற்குறை எதுகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.15. சொற்குறை எதுகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை விகற்பம் எட்டென வருவது
முதல்தர எதுகைகள் வகையினிற் சேரும்
முதல்தர மோனை விகற்பமும் எட்டே. ... 1

எதுகை விகற்பம் முதல்தர மாக
முதல்வரும் எழுத்தினில் அளவொத் திருக்கப்
பின்வரும் எழுத்துகள் பொருந்தி வருகையில்
ஒன்றென எழுத்துகள் அவையே வருமே. ... 2

’தலை’-யெனும் சொல்லின் எதுகை யானது
’மலை’யென, ’சிலை’யென, ’குலை’யென வரலாம்
இரண்டாம் எழுத்து அதுவே ஆவதால்.
’தலை’-யின் எதுகை ’வலி’யென வராது
இரன்டாம் எழுத்து மாறு படுவதால். ... 3

மரபின் வழியில் கவிதை செய்கையில்
பொருளும் சொல்லும் பார்க்கும் போது
பொருளே சொல்லை விஞ்சுதல் கண்டு
முதல்தரத் தொடைகள் இயலா தாகில்
சற்றே தளர்ந்து தொடைகளின் இலக்கணம் 
மற்ற வகைகள் வந்திட உதவுமே. ... 4

(இணைக்குறள் ஆசிரியப்பா)
இவ்வகைத் தொடைகள் இரண்டாம் தரமே
செவ்விதின் இதனை மனதிற் கொள்க.
பொருளின் முக்கியம் கருதி யிவ்வகை
மரபின் வழியில் பின்னர் அமைந்தன;
சொற்குறை, சிறப்பிலா, ஏனோதானோ, 
மற்றும் பொருள்வகை, பொருள்மேல், என்றிவற்றை
பற்பல கற்பனைப் பெயர்கள் இட்டே
இலக்கண இலக்கிய வகைகளில் அழைக்கலாம். ... 5

8.16. சொற்குறை எதுகை வகைகள்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

சொற்குறை எதுகையிற் பற்பல வகைகளாம்
வருக்க எதுகை, இனவெதுகை, உயிரெதுகை,
நெடிலெதுகை, மூவகை எதுகை, 
இருவிகற்ப எதுகை, இடையிட் டெதுகை,
மூன்றாம் எழுத்தொன் றெதுகை, 
வழியெதுகை, ஆசிடை யிட்ட எதுகை 
யெனப்பல வகைகளில் சொற்குறை அமையுமே. ... 1

*****