Saturday, January 28, 2017

8.12. மேற்கதுவாய் எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.12. மேற்கதுவாய் எதுகை (சீர்கள் 1-3-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதற்சீரில் மூன்றுநான்கில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாததும் மேற்கதுவா யெதுகையாகும். ... 1

சான்றுகள்
உதவி வரைத்தன்று உதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
---திருக்குறள் 11:5

அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
--புகழேந்திப் புலவர், நளவெண்பா 38

8.13. கீழ்க்கதுவாய் எதுகை(சீர்கள் 1-2-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதலிரண்டு சீர்நான்கில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாததும் கீழ்க்கதுவா யெதுகையாகும். ... 1

சான்றுகள்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
--திருக்குறள் 43:8

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 79

8.14. முற்றெதுகை (சீர்கள் 1-2-3-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதல்நான்கு சீர்களிலும்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதாய் அளவடியின் சீரெல்லாம்
இதுபோல ஒன்றுவதே முற்றெதுகை யென்பதாகும். ... 1

சான்றுகள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 2:2

பொங்கலின் மங்கலம் எங்கணும் தங்குக!
அஞ்சுவ தஞ்சும் வஞ்சமில் நெஞ்சம்;
அள்ளும் வெள்ளமாய்த் துள்ளும் உள்ளம்;

*****

Friday, January 27, 2017

8.08. இணை எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.08. இணை எதுகை (சீர்கள் 1-2)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலிரண்டு சீர்களிலே முதலெழுத்தின் அளவொக்க
அதன்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் இணையெதுகை. ... 1

சான்றுகள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 3:6

என்றும் என்தோள் பிரிபு அறியலரே
---கபிலர், நற்றிணை 1

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறியிட்டுத்
---நக்கீரர், நெடுநல்வாடை 76

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
---காரியாசான், சிறுபஞ்சமூலம் 8

தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
---தோலாமொழித் தேவர், சூளாமணி

கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
---இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வேட்டுவ வரி 61

மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானமளிப்பார்
ஆர்‍அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய்---ஊர்‍அறிய
---பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், 
 அழகர் கிள்ளை விடுதூது 55

(ஆசிரியத் தாழிசை)
முதலிரண்டு சீர்தவிர வேறு சீர்களிலும்
எதுகை அமைவதால் கீழ்வரும் அடிகளில்
இணையெதுகை யில்லையென் றறிந்து கொள்க. ... 2

சொல்லிய நல்லவும் தீயவாம் - எல்லாம் 
... [கீழ்க்கதுவாய் எதுகை: 124]
விழியிரண்டில் வழியிருக்கப் பழியஞ்சாள் பாவையவள் 
... [கூழை யெதுகை: 123]
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
... [முற்றெதுகை: 1234]

8.09. பொழிப் பெதுகை (சீர்கள் 1-3)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதற்சீரில் சீர்மூன்றில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் பொழிப்பெதுகை. ... 1

சான்றுகள்
தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.
---திருக்குறள் 24:6

(கலிவிருத்தம்)
பொழிப்பு மோனைகள் இல்லா திடத்தில்
பொழிப்பெது கைகள் பொலிந்து வந்திட
எழுதும் பாட்டின் ஒவ்வொரு அடியும்
எளிதில் மனதில் நிலைப்பது காணீர். ... 2

வீரரும் வேந்தரும் போரினிற் புக்கார்;
மக்களெல் லோரும் தொக்குவாழ்த் தினரே;
வெற்றிமா மகள்கைப் பற்றினன் அரசன்;
சால்விற லின்றித் தோல்வியுற் றவர்கள்
புவியுடல் போட்டன ரவிந்தொழிந் தாரே.
--கி.வா.ஜ. ’கவி பாடலாம்’, பக்.64

(கலிவிருத்தம்)
பாரதி யாரின் பாடலிற் கீழே
ஆர்வது பொழிப்பெது கையென் பதனினும்
தீரச் சேர்ந்தொலிப் பிறவெழுத் துகளால்
ஆர்வது பொழிப்பாம் இயைபென் றறிக. ... 3

ஞானத்தி லேபர மோனத்திலே---உயர்
மானத்தி லேயன்ன தானத்திலே...
தீரத்தி லேபடை வீரத்திலே--நெஞ்சில்
ஈரத்தி லேயுப காரத்திலே...
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே--புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே...
---தேசிய கீதங்கள், பாரத நாடு

8.10. ஒரூஉ வெதுகை (சீர்கள் 1-4)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதற்சீரில் சீர்நான்கில்
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் ஒரூஉவெதுகை. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
குறட்பா பலவின் முதலடி களிலும்
பிறவகை நேரிசை வெண்பா வகைகளில்
இரண்டாம் அடியில் வரும்தனிச் சொல்லும்
ஒரூஉ வெதுகை என்பதை அறிக;
ஒரூஉ வெதுகை என்னும் பெயரில்
அளபெடை யொன்று வருவதைக் காண்க. ... 2

சான்றுகள்
திருக்குறள் ஒரூஉ வெதுகை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. ... 21

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. ... 34

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.  ... 42

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். ... 62

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல். ... 70

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. ... 81

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது. ... 192

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேல்குறட் பாக்களில் ஒரூஉவெது கையொரு
கால்கோள் தனிச்சொல் போல நின்றதன்
முன்னுள சீரில் முடிபொருள் நிறுத்திப்
பின்னடி தனியாய்ப் பிரிப்பதைக் காண்க. ... 3

நேரிசை வெண்பா தனிச்சொல் ஒரூஉ வெதுகை

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கெனென் றிட்டுண்டு இரும்.
---ஔவையார், நல்வழி 11

8.11. கூழை எதுகை (சீர்கள் 1-2-3)
(தரவு கொச்சகக் கலிப்பா)

முதலெழுத்தின் அளவொக்க முதல்மூன்று சீர்களிலே
முதல்பின்னே வருகின்ற எழுத்தொன்று வகையென்றோ
அதுவென்றோ ஒன்றுவதும் மற்றபிற சீர்களிலே
இதுபோல ஒன்றாதே இருத்தலுமாம் கூழையெதுகை. ... 1

சான்றுகள்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
வேலன் பாலன் போலும் நெஞ்சன்
துன்னிய நன்மை என்றும் நிலைபெறும்

(குறள் வெண்செந்துறை)
கூழை யெதுகை ஒவ்வோர் அடியிலும்
கீழுள பாடலில் பயில்வது காண்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சாலையில் மாலியின் கோலம் வியந்தே
காலையில் வேலனின் ஆலயம் கண்டுநான்
வேலைசெய் சேலம் ஆலை நுழைவனே. ... 2
[மாலி = சூரியன்]

*****

Saturday, January 21, 2017

8.07. அடியெதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.07. எதுகை விகற்பங்கள்: அடியெதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியும் இணையும் பொழிப்பு ஒரூஉ 
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றென
எதுகைத் தொடையில் எண்வகை விகற்பமே. ... 1

எதுகையில் மோனையில் எழுத்துகள் ஒன்றுதல்
அதுவே என்றோ வகையே என்றோ
பொதுவில் இரண்டு விதங்களில் வருமே. ... 2

சிகரம் தகரம் என்னும் எதுகையில்
ககர எழுத்தே ஒன்றுதல் காண்க.
சிகரம் சிறப்பு என்னும் மோனையில்
சியெனும் எழுத்தே ஒன்றுதல் காண்க. ... 3

சிலவகைச் சிலைகள் என்னும் எதுகையில்
லகர வருக்கம் ஒன்றுதல் காண்க.
புலவர் பொருநர் என்னும் மோனையில்
பகர வருக்கம் ஒன்றுதல் காண்க. ... 4

விதித்த வகையில் ஒன்றி வருவது
முதல்தர எதுகை மோனை யாகும்
பிறவகை களிலே ஒன்றி வருதலைப்
புறனடை யென்று இலக்கணம் கூறுமே. ... 5

அடியெதுகை
அடிமுதற் சீரின் முதலெழுத் தளவொக்க
அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து
அடிபிற முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியெது கையிலே ஒன்றி வருமே. ... 6

இரண்டடி எதுகைச் சான்றுக் குறள்:
(குறள் வெண்பா)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1

இரண்டடி களுக்கு மேல்வரும் எதுகை:
(வஞ்சி விருத்தம்)

அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையேன்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்
--கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம் 2582

விருத்தப் பாக்களில் அடிகளின் சீர்கள் 
பெருத்து வருவதால் அடிகள் நீள
அதனை எழுதுவர் பலவரி களிலே 
இதனால் அடிகளின் முதற்சீர் தெரிய
அடியெது கையினை அமைத்தே எழுதுவர். ... 7

(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
. . உத்தமர்தம் உறவு வேண்டும்
. . உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
. . உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெரும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
. . பேசா திருக்க வேண்டும்
. . பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
. . பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
. . மறவா திருக்க வேண்டும்
. . மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
. . வாழ்வுநான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
. . தலமோங்கு கந்த வேளே
. . தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
. . சண்முகத் தெய்வ மணியே.
---இராமலிங்க அடிகள், திருவருட்பா 8

பாவகை பாவினம் காட்டுமே எதுகைகள்
பாவகை களிலே ஈரடிக் கொருமுறை
எதுகை யொன்றை அமைத்தல் சிறப்பு
நேரிசை வெண்பா காட்டும் எதுகைகள்
முதலிரண் டடியிலும் இரண்டாம் அடியின்
ஈற்றுச் சீரிலும் அமைந்து வருமே. ... 8

பாவினங் களிலே விருத்தப் பாக்களில்
ஓரெது கையே அடிகளில் அமையுமே
பாவினத் துறைகளில் கலித்துறை தன்னில்
ஓரெது கையே அடிகளில் அமைய
இதர இனங்களில் அடியெது கைகள்
பொதுவில் வருவது ஒலியினிற் சிறக்குமே. ... 9

*****

8.05. எதுகை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.05. எதுகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதிர்கை என்பதே எதுகையா யிருக்கலாம்
என்பதே எதுகையின் வேர்ச்சொல் விளக்கம்.
எதுகை என்றால் எதிர்கொளல் எனப்பொருள்.
எதிர்கொளும் போதோ எதிர்த்தல் இன்றி
எதிர்கொளும் எழுத்துகள் பொருந்தி வருமே. ... 1

நின்றசீர் வரும்சீர் நேசக் காதலர்
ஒன்றிக் கரம்பற் றுதலாம் எதுகை
கரங்கள் பற்றிக் கட்டி யணைத்தே
ஒருமுத் தம்தரல் மோனை என்க! ... 2

எண்வகைத் தொடைகளில் மோனையே முதலில்
எண்ணப் படுவ தாக வரினும்
எதுகையே பாவகை பாவினம் காட்டிட
எதுகையை முதலில் விரித்துக் காண்பமே. ... 3

8.06. எதுகை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே. ... 1

எதுகை அடிகளில் சீர்களில் பயின்றிட
முதல்வரும் எழுத்தள வொத்திட வேண்டும்
குறிலொடு குறிலென நெடிலொடு நெடிலென. ... 2

கட்டு தட்டு சிட்டு சொற்களும்
காட்டு பாட்டு சீட்டு சொற்களும்
முதல்வரும் எழுத்துதன் அளவில் ஒத்திட
முறையாய் அமைந்த எதுகைகள் ஆமே. ... 3

கட்டு பட்டம், மின்னல் பொன்னின்,
முதல்வரும் எழுத்துதன் அளவில் ஒத்திட
இரண்டாம் எழுத்து ஒன்றிடும் எதுகைகள்.
சிகரம் தகரம், பாடல் நாடல்,
இதுபோ லிவையும் எதுகைக ளாமே. ... 4

கட்டு பாட்டு, சிட்டு சீட்டு-- 
சீர்களில் அடிகளில் எதுகைகள் ஆகா
முதலெழுத் தளவில் வேறு படுவதால்.
எதுகை அமைப்பதில் புதியோர் செய்யும்
இதுபோல் தவறுகள் திருத்திக் கொள்ள
எழுதும் செய்யுளின் கவிநயம் சிறக்குமே. ... 5

அடிகளில் சீர்களில் அமைந்திடும் எதுகையில்
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றினால் போதும்.
பின்வரும் எழுத்துகள் ஒன்ற ஒன்ற
ஓசை இனிமையும் நயமும் பெற்றிடும். ... 6

வண்டு உண்டு எதுகைகள் ஓசை
வண்டு உண்ண எதுகைகள் ஓசை
பேச்சில் மூச்சினிலே எதுகைகள் ஓசை
பேச்சினிலே மூச்சினில் எதுகைகள் ஓசை
இவற்றை நோக்கி இனிமை அறிக. ... 7

எண்விகற் பங்களில் எதுகை வருமே
அடியும் இணையும் பொழிப்பும் ஒரூஉம்
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றே
என்னும் எட்டும் அளவடி யில்வரும். ... 8

*****

Sunday, January 15, 2017

8.03. தொடை விகற்பங்கள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.03. தொடை விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நினைவிற் கொள்ள:
தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முர(ண்)இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே. ... 8.02.03

வகையொன் றாவது வேறு படுதலே
விகற்பம் என்னும் பெயரால் வழங்கும்
மேலே சொன்ன தொடைவகை எட்டில்
முதல்வரும் ஐந்தும் வருமிடம் பொறுத்து
எண்வகை விகற்பம் ஏற்று வருமே. ... 1

அடியும் இணையும் பொழிப்பும் ஒரூஉ 
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று
என்பன இந்த எண்வகை விகற்பமே. ... 2

மோனைத் தொடையின் விகற்பம் விரிப்பின்
அடிமோனை இணைமோனை பொழிப்புமோனை ஒரூஉமோனை
கூழைமோனை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் மோனைகள்
முற்றுமோனை என்றே விகற்பம் எட்டே
மற்றத் தொடைகளும் இதுபோல் எட்டென
உற்ற விகற்பம் பெற்று வருமே. ... 3

விகற்ப விளக்கம்
(குறள் வெண்செந்துறை)

அடிகள் தோறும் முதற்சீரில் 
. ஒன்றுதல் அடிவிகற்ப மாகுமே
அடியொன்றில் முதலிரு சீர்களில் ஒன்றுதல் 
. இணைவிகற்ப மாகுமே. ... 4

அடியொன்றில் முதலாம் மூன்றாம் சீர்களில் 
. ஒன்றுதல் பொழிப்பாம்
அடியொன்றில் முதலாம் நான்காம் சீர்களில் 
. ஒன்றுதல் ஒரூஉ. ... 5

அடியொன்றில் முதல்மூன்று சீர்களில் 
. ஒன்றுதல் கூழை விகற்பமே
அடியொன்றில் முதலாம் மூன்றாம் நான்காம் 
. சீரிலொன்றின் மேற்கதுவாய். ... 6

அடியொன்றில் முதலாம் இரண்டாம் நான்காம் 
. சீரிலொன்றின் கீழ்க்கதுவாய்
அடியொன்றில் முதல்நான்கு சீரகளிலும் 
. ஒன்றுதல் முற்று விகற்பமே. ... 7

தொடை விகற்பம் காரணப் பெயர்களே
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடைவகைப் பெயர்கள் காரணப் பெயர்போல்
தொடைகளின் விகற்பமும் காரணப் பெயர்களே.
அடுத்து வருவது அடியெனப் படுவதால்
அடிமுதல் வருவது அடிவிகற்ப மாகுமே.
இணைந்து வருவதால் முதலிரு சீர்களில்
இணைவிகற்ப மென்றிது அழைக்கப் படுமே. ... 8

கணுவெனப் பொருள்படும் பொழிப்பெனப் படுவது
கணுக்கள் கரும்பினைப் பிரித்தல் போல
பிரிக்கும் சீரொன் றிடையில் வரவே
ஒன்றிலும் மூன்றிலும் ஒன்றுதல் பொழிப்பே. ... 9

ஒருவு என்றால் விடுதல் நீங்குதல்
ஒன்றில் தொடங்கி இருசீர் விட்டு
ஒன்றுமே நாலில் ஒரூஉ விகற்பமே. ... 10

கூழை என்றால் குட்டை யானது
கூழைக் கும்பிடு போடும் போது
குழைவது தெரியும் உயரம் சுருக்கி.
கூழை நரிக்கு வாலது குட்டையாம்.
கூழைப் பாம்போ கழுத்தே இன்றித்
தலையும் உடலும் சேரும் குள்ளம். ... 11

அளவடி தன்னில் நாற்சீர் இருக்க
முதற்சீர் தொடங்கி மூன்றாம் சீர்வரை
அமைவது கூழை விகற்ப மாகுமே. ... 12

அளவடி நாற்சீர்த் தலைச்சீர் வடக்கெனில்
இரண்டே கிழக்கு மூன்றே தேற்கு
நான்கே மேற்கு வரைபடத் திசைபோல். ... 13

தலைச்சீர் மூன்று நான்கு, அதாவது
வடக்கு தெற்கு மேற்கில் ஒன்றுதல்
மேற்கது வாயென விகற்பப் பெயரே. ... 14

தலைச்சீர் இரண்டு நான்கு, அதாவது
வடக்கு கிழக்கு மேற்கில் ஒன்றுதல்
கீழ்க்கது வாயென விகற்பப் பெயரே. ... 15

அளவடிச் சீர்கள் நான்கிலும் தப்பாது
முற்றிலும் ஒன்றுதல் பற்றி இதனை
முற்று விகற்பம் என்றே அழைப்பர். ... 16

தொடை விகற்பக் குறியீடுகள்: எண் குறியீடு
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எண்வகை விகற்பம் எளிதாய் விளங்க
எண்களில் அமைத்தே எழுதுவோம் கீழே
ஒவ்வொரு எண்ணும் குரலில் படிக்க
ஒவ்வொரு சீரென வருவது புரியுமே. ... 17

1 என்பது அடிவிகற்ப மாகுமே
1 2 இணைவிகற்ப மாகுமே
1 3 பொழிப்பெனப் படுமே
1 4 ஒரூஉவெனப் படுமே
1 2 3 கூழையே
1 3 4 மேற்கதுவாய்
1 2 4 கீழ்க்கதுவாய்
1 2 3 4
முற்றெனும் விகற்பம் பெற்று வருமே. ... 18

பலவகைத் தொடைகளின் விகற்பம் யாவும்
அளவடி தொட்டே அமைவன ஏனெனில்
அளவடி என்பதே பாவகை யறுதி
நெடிலடி கழிநெடி லடிகள் யாவும்
பாவினங் களிலே பயின்று வருமே. ... 19

*****

8.02. தொடை வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.02. தொடை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுளின் ஓசையும் இனிமையும் அமைவது
செய்யுளின் சீர்தளை நிரல்கள் பொறுத்தெனில்
சீர்களின் ஓசையைச் செய்வது தொடைகளே. ... 1

தொடைகள் எட்டு வகைகளில் வருவன:
மோனை எதுகை முரண்-இயைபு அளபெடை
ஆன-யிவ் வைந்துடன் அந்தாதி இரட்டைச்
செந்தொடை யென்றே மேலும் மூன்றே. ... 2

மோனை எதுகை முரண்தொடை அளபெடை
நான்கும் அடிகளின் முதற்சீ ருடனும்
இயைபெனும் தொடையே இறுதிச்சீ ருடனும்
தொடர்பு கொண்டு தொடுத்து வருவன. ... 3

மோனைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதற்சீர் முதலெழுத் துடனே
அடியின் பிறசீர் முதலெழுத் தொன்றியும்
பிறவடி முதற்சீர் முதலெழுத் தொன்றியும்
உறவுடன் வருவது மோனை யாகுமே. ... 4

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

பழகப் பழகப் பாலும் புளிக்கும்
என்னும் அடியில் சீர்களில் மோனையும்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
என்னும் குறளில் அடிமோ னையுடன்
சீர்களில் மோனையும் காணுதல் எளிதே. ... 5

எதுகைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதலெழுத் தளவொத் திருக்க
அடியின் முதற்சீர் இரண்டாம் எழுத்துடன்
அடியின் பிறசீர் இரண்டாம் எழுத்தும்
பிறவடி முதற்சீர் இரண்டாம் எழுத்தும்
உறவுடன் வருவது எதுகை யாகுமே. ... 6

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

காலையும் மாலையும் ஆலையில் வேலை
என்னும் அடியில் சீரெது கையும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று
என்னும் குறளில் அடியெது கையுடன்
சீர்களில் எதுகையும் காண்பது எளிதே. ... 7

முரண் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் முதற்சீர் சொல்லோ பொருளொ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே. ... 8

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அல்லும் பகலும் சொல்லி மாளாது
என்னும் அடியில் முதலிரு சீர்களில்
பொருள்முரண் காண்க
வெள்ளாடு மேய்ந்த பசுந்தழை எனும்தொடரில்
நிறத்தில் தழையே பசுமை ஆயினும்
நிறத்தில் வெள்ளாடு கருமையென் றாதலால்
பொருள்முர ணின்றிச் சொல்முர ணாகுமே. ... 9

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
என்னும் குறளில் அடிமுரண் பொருளிலும்
அடியெது கையும் சீர்மோ னையும்காணீர். ... 10

அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளில் முதற்சீர் அளபெடுத் தமைந்து
அளபெடை யெழுத்தின் மாத்திரை நீள்வது
அளபெடைத் தொடையெனும் வகையினில் அமையுமே. ... 11

சான்று
(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்
என்னும் குறளடி முதற்சீர் களிலே
அளபெடைத் தொடைவரக் காண்பது எளிதே. ... 12

அந்தாதித் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அடியொன்றின் அந்தமென முடிகின்ற எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே. ... 13

அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே. ... 14

சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே. ... 15

இரட்டைத் தொடை
(இணைக்குறள் ஆசிரியப்பா)

’வந்த மொழியே வருவ திரட்டை’ ... (யா.கா.)
அடியில் முதல்வரும் சொல்லே
மற்றச் சீர்களில் திரும்ப வருவது
இரட்டைத் தொடையென் றழைக்கப் படுமே. ... 16

சான்று
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
--புறநானூறு 247

செந்தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மோனை எதுகை இயைபு முரணுடன்
ஏனை அளபெடை அந்தாதி இரட்டைத்
தொடைகள் எதுவுமே அமைந்து வராது
சொற்களின் இயல்பில் அழுகுற அமைவது
செந்தொடை என்னும் பெயரில் வழங்குமே. ... 17

சான்று
(நேரிசை ஆசிரியப்பா)
பூத்த வேங்கை வியன்சினை ஏறி,
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே
--யா.கா.மேற்கோள்

*****

8.00. தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.00. தொடை
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடையெனும் சொல்லின் பொதுவாம் பொருளே
தொடையின் பங்கினைச் செய்யுளில் காட்டும்.
பின்னுகை தொடர்ச்சி கட்டுகை மாலைவடம் 
கொத்து பூமாலை யாழ்நரம்பு அம்பு 
படிக்கட்டு எனவரும் பொதுப்பொருள் நோக்கியே 
தொடையெனும் அழகிய பெயர்வந் ததுவோ? ... 1

8.01. தொடையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முதலடி முதற்சீர் வருமெழுத் துகளை
பலவடி களிலோ பலசீர் களிலோ 
ஒன்றிடத் தொடுப்பது தொடையெனப் படுமே. ... 1

அடியிடைச் சீரிடை வருவ தாயினும்
அடியிடைத் தொடுப்பினை முதலில் வைத்தே 
’தொடையே அடியிரண் டியையத் தோன்றும்’என
தொடையின் இலக்கணம் யா.கலம் கூறுமே. ... 2 
[யா.கலம் = யாப்பருங்கல விருத்தி]

வகையில் ஒன்று வண்ணம் ஒன்றென
விதவித இழைகள் வெளிவர உட்செலப்
பாங்காய்ப் பின்னிடும் பின்னல் போல
முதலில் இடையில் கடையில் என்று
எழுத்துகள் ஒன்றப் பின்னுகை தொடையாம். ... 3

இடைவெளி விட்டோ பிளவே இன்றியோ
படரும் எழுத்துகள் சீரிடை அடியிடைத்
தொடர்ச்சியாய் ஒன்றத் தொடைகள் தோன்றுமே. ... 4

இப்படி வந்தால் பிளவறத் தொடுப்பது:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
கற்க கசடறக் கற்பவை கற்றபின் ... 5

இப்படி வந்தால் பிளவுறத் தொடுப்பது:
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் ... 6

கொத்தாய்க் கிடக்கும் பலவிதச் சொற்களை
ஒத்த வகைகளில் இயைத்துக் கட்டிப்
பூமாலை யொன்றில் பின்னிய பூக்களாய்ப்
பாமாலை யாக்கிப் பார்க்கவும் கேட்கவும்
யாழ்நரம் பொலிபோல் யாப்பின் ஓசையில்
ஆழித் தேராம் செய்யுளை இழுக்கும்
மாலை வடமெனத் தொடைகள் செயல்படும். ... 7

’அன்றும் இன்றும் என்றும் ஒன்றே’
என்ற தொடரில் இன்ற-ஒலி ஊடுருவி
அம்பெனத் துளைக்கும் தொடைவரப் பொருளினை
அவிழ்த்துக் காட்டுதல் காணுதல் தவறுமோ? ... 8

’மலரது மலர்ந்திட மலர்ந்திடும் முகமே!’
மலரும் முகமும் விரிவதைத் தொடரில்
படிப்படி யாகத் தொடுத்தது காண்பீர்! ... 9

தொடையெனும் சொல்லின் பொதுப்பொருள் இப்படி
அடைவில் வந்து தொடையெனும் உறுப்பால்
படரும் இலக்கண உத்திகள் சுட்டுமே. ... 10

தொடையின் பங்கு செய்யுளில் யாதெனின்
தொடுக்கும் உத்திகள் அடுக்கி வந்தே
செய்யுளின் ஓசையில் இனிமை கூட்டிச்
செய்யுளை மனத்தில் பதிய வைப்பதாம். ... 11

இன்றைய புதுமைக் கவிதை வடிவிலும்
இலக்கணம் விடுத்தும் தொடைகளை விடுகிலர்
தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்
என்னும் பழமொழி இதனை விளக்குமே
இயலிசை நாடகம் முத்தமிழ் அனைத்திலும்
இனிமை கூட்ட வருவது தொடைகளே. ... 12


*****

Monday, January 2, 2017

7.14. கழிநெடிலடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.14. கழிநெடிலடி முயற்சி
(குறள் வெண்செந்துறை)

அளவொத்த அடியிரண்டில் எவ்வடியும் எச்சீரும்
தளையெதுவும் வருவதுவே குறள்வெண்செந் 
. துறைப்பாவினம்.

(ஆசிரியத் தாழிசை)
அளவொத்த அடிமூன்றில் எவ்வடியும் எச்சீரும்
தளையெதுவும் வருகின்ற ஆசிரியத் தாழிசையே
எளிதாக நாமெழுத இன்னொருபா வினமாகும்.

(குறள் வெண்செந்துறை)
இவ்விரு பாவினம் எளிதாய் இயற்றி
செவ்விதின் முயல்வோம் கழிநெடில் அடிவகை.

அறுசீர்
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே ஒன்றே
இன்றே நாமிதை உணர்ந்து கொள்வது நன்றே நன்றே.

எழுசீர்
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே யாகும் பரமே
இன்றே நாமிதை உணர்ந்து கொளவது நன்றே யாகும் நமக்கு.

எண்சீர்
மாடு மனையாள் வீடு செல்வம் கல்வி மட்டில் லாத வாழ்விலும்
பாடு படுவது குறைவென் றில்லை பெண்கள் பத்தாம் பிள்ளை ஒன்றே!

ஒன்பதின் சீர்
காலை எழுந்து ஆவி மணக்கும் 
. காப்பி குடித்து பேப்பர் படித்துக் குளித்து
சாலை ஓய்ந்து காலி யானதும் 
. சற்றே நடந்து கோவில் செல்லும் முன்னே
வேலை எல்லாம் வழியில் முடித்து
. வேண்டும் வங்கியும் செல்ல என்றாள் மனையே!

பதின் சீர்
முகத்தில் சந்திரன் விழிகளில் சூரியன்
. முன்நடை அன்னம் மின்னல் மெல்லிடை
. . கால்களில் சலங்கை கொஞ்ச
அகத்தில் நினைத்ததை விரலபி நயிக்க 
. அரங்கினில் ஆடுவாள் விழிகளில் அணிந்தே
. . நாட்டிய மேதையாம் நங்கை!

பதினொரு சீர்
வானம் பொழிந்து பூமி விளைந்து
. வளங்கள் செழித்து நன்மை விளைந்து
. . மனிதர் யாவரும் மகிழ்ந்தே
தானம் கொடுத்து நெறிகள் தழைத்தே
. தரணியில் மனிதர் அன்புடன் வாழும் 
. . தண்ணருள் தருவாய் இறைவா!

பன்னிரு சீர்
கேட்டது கிடைத்த குழந்தைப் பருவம்!
. குனிந்தே முனைந்தது பள்ளிப் பருவம்!
. . கொண்டது செய்தது இளமைப் பருவம்!
வேட்டது கிடைக்கும் வழிதெரி யாமல்
. வேளையோர் கனவும் பொழுதொரு கவலையும்
. . மேற்பட வாழ்வது இல்லறப் பருவம்!

பதினான்கு சீர்
வருவது ஏற்றுக் கவலைகள் குறைத்து 
. வந்தது போதும் என்றும்
. . மனமிழை சுருக்கித் தன்நெறி காணும்
. . . வாழ்வது வேண்டும் என்றும்
குருவின் வார்த்தை கீதையில் கேட்டு, 
. செய்வது நானல்ல நீயே
. . குதிர்பலன் உனக்கே கண்ணா என்று 
. . . கொள்மனம் ஞானம் பிறக்கும்.

பதினாறு சீர்
வந்தது ஒன்று போனது வேறு
. படித்தது ஒன்று கிடைத்தது வேறு
. . சொன்னது ஒன்று செய்தது வேறு
. . . நினைத்தது ஒன்று நடந்தது வேறு 
பந்தது போலப் பாதம் சிக்கி
. அங்கும் இங்கும் உதைக்கப் பட்டு
. . இலக்கெது என்று புரிந்தி டாமல்
. . . காலச் சுழலில் உழல்கின் றேனே!

*****

7.13. கழிநெடிலடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.13. கழிநெடிலடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆறும் அதற்கு மேளும் சீர்கள்
அமைந்து முடிவது கழிநெடி லடியாம்.
கழிநெடி லடிகளை நீளம் நோக்கி
அடிகளைப் பிரித்து மோனையில் மடக்கிப்
பலவரி களிலே எழுதுதல் வழக்கமாம். ... 1

சீர்கள் மிகுவதால் சரியாய் அளவிட
அடியெது கையினை அமைப்பது வழக்கம்.
அடியெது கையினில் ஒவ்வோர் அடியிலும்
முதலாம் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வருமே. ... 2

அடிகள் தோறும் சீர்களின் நடுவில் 
முதலெழுத் தொன்றும் மோனை யமைத்தால்
செய்யுளின் ஓசை சீர்த்து வருமே. ... 3

கழிநெடி லடிகள் பயிலும் பாவகை
ஆசிரிய விருத்தம் ஆசிரியத் தாழிசை
விருத்தப் பாவகை அடிகள் தம்முள்
சீரெண் அமைப்பில் அளவொத் திருக்கத்
தாழிசைப் பாவகை அடிகள் தம்முள்
சீரெண் மட்டும் அளவொத் திருக்கும்.
ஆசிரி யத்துறை பாவகை அடிகள்
சிற்சில கழிநெடி யாய்வரக் கூடுமே. ... 4

சான்று 1. அறுசீர்க் கழிநெடிலடி
(அடியெதுகை, சீர் மோனை 1-4)

நீரிடை உறங்கும் சங்கம் 
... நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு 
...தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை 
...துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் 
...பொழிலிடை உறங்கும் தோகை.
--கம்பராமாயணம் 1.2.6.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
. இனிதாவது எங்கும் காணோம்
...
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் 
. பரவும்வகை செய்தல் வேண்டும்.
--மஹாகவி பாரதியார், தமிழ்

சான்று 2. எழுசீர்க் கழிநெடிலடி

சீரணி திகழ்திரு மார்பின் வெண்ணூலார் 
. திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையொர் பங்கர்
. மான்மறி ஏந்திய மைந்தர்
--திருஞானசம்பந்தர், திருப்பாம்புரம் தேவாரத் திருப்பதிகம்

சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள் 
மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதிலும்
--மஹாகவி பாரதியார், ஜய பாரத!

சான்று 3. எண்சீர்க் கழிநெடிலடி

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
. வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
--உலகநாதர், உலகநீதி

மங்கியதோர் நிலவினிலே கனவவிலிது கண்டேன்
. வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
. புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
--மஹாகவி பாரதியார், அழகுத் தெய்வம்

சான்று 4. ஒன்பதின் சீரடி விருத்தம்

இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் 
. எதிர்ந்த தானையை இலங்கும் ஆழியின் விலங்கியோன் 
முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை 
. முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோன்
--யாப்பருங்கலக் காரிகை

இடியது விழுந்த தோதான்
. இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி
. . இருசெவி நுழைத்த தோதான்
தடியது கொண்டே எங்கள்
. தலையினில் அடித்த தோதான்
. . தைரியம் பிறந்த தோதான்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, திலகர்

சான்று 5. பதின் சீரடி விருத்தம்

கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு 
 கூடி நீடும் ஓடை நெற்றி 
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத 
 நாத என்று நின்று தாழ
--யாப்பருங்கலம்

கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
 கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
முத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்
 முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட்கோவை 56

சான்று 6. பதினொரு சீரடி விருத்தம்

அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும் 
. அவிர்சோதி மூன்றொ டணியொரு நான்கும் 
. . மதமைந்தும் ஆறு பொருண்மேல் 
மருளாழி போழும் நயமேழும் மேவி 
 . நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்ற 
. . வரதற்கோ பத்தின் மகிழ
--யாப்பருங்கலம்

வீடு கொண்ட நல்லறம் பகர்ந்த மன்ப தைக்கெல்லாம்
. விளங்கு திங்க ணீர்மையால் விரிந்திலங்கும் வன்பினோன்
மோடு கொண்ட வெண்ணு ரைக்க ருங்கடற் செழுஞ்சுடர்
. முளைத் தெழுந்த தென்னவாய் முகிழ்த்திலங்கு போதியின்
--புத்தமித்திரனார், வீரசோழியம்

சான்று 7. பன்னிரு சீரடி விருத்தம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எண்சீர் விருத்தம் மேற்பட இன்று
எழுதப் படுகிற விருத்தம் பொதுவில்
பன்னிரு பதினான்கு பதினாறு வகையே.
பதினொரு சீரின் மேற்படும் அடிகளைப்
இரட்டை விருத்தம் என்று சொல்வரே. ... [வீரசோழிய உரை] ... 5

கருணையின் முழுகிய கயறிரி பசியக ரும்பே வெண்சோதிக்
. கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர் கன்றே யென்றோதும்
திருமகள் கலைகமக டலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை
. தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில் செங்கோ செங்கீரை.
--குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மைப் பிள்லைத் தமிழ் 9

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே
. வான மளந்த தனைத்து மளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே.
--மஹாகவி பாரதியார், தமிழ்மொழி வாழ்த்து

சான்று 8. பதினான்கு சீரடி விருத்தம்

எய்த வம்பு தைக்கு முன்ன மற்றொர் பகழி தொட்டுவேள்
. ஏழை யங்க நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான்
செய்த வம்பு ரிந்தி லாதெ னுய்யு மாறு முண்டுகொல்
. திகழு மாட மதியு ரிஞ்சு கச்சி மேய செம்மலார்
--பூண்டி அரங்கநாத முதலியார், கச்சிக்கலம்பகம் 76

தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! 
...தரணி யெங்கும் இணையி லாத சரிதை கொண்டு செல்லடா! 
அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம் 
...அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, 20. இளந்தமிழனுக்கு

சான்று 9. பதினாறு சீரடி விருத்தம்

ஓங்குகயி லாயபரம் பரைநந்தி யடிகட் 
. குறுமரபெட் டாவதுபிற் றோன்றலா யெங்கள் 
. . உயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற் 
. . . குற்றபத்தொன் பதாவதுமுற் றோன்றலாய்ப் பொலிந்து 
தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து 
. திகழுமா பதிசிவனே குன்றையுற மேவித் 
. . திரிந்துமேர் வளங்கொண்டு பெருமையின்மே லாகித் 
. . . சிறத்தலாற் செம்மேனிக் குமரவே ளத்தும்
--தி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழார்ப் பிள்லைத்தமிழ் 723

சந்தவிருத்தம்
பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் 
. பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
. . பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள் 
. . . படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் 
. எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்
. . இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள் 
. . . எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்
--குமரகுருபரர், வைத்தீஸ்வரன் கோவில் 
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 1.9

*****

7.12. நெடிலடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.12. நெடிலடி முயற்சி
(குறள் வெண்செந்துறை)

அடிகள் தோறும் ஐந்துசீரில் முடியும்
நெடிலடி இயற்ற நாமும் முயல்வோம் ... 1

அளவொத்த எவ்வகை அடியும் எத்தளையும் கொண்டு
அடிகள் இரண்டுவரும் குறள்வெண் செந்துறையில் முனைவோம். ... 2

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)

மண்ணில் வாழும் மரத்தின் அழகும் பயனும்
எண்ணிப் பார்த்தால் என்றன் வாழ்விது வீணே!

கண்ணில் வாழும் காட்சிகள் மாயை என்றே
எண்ணத் தோன்றில் இறையருள் மேவும் உளமே.

இட்லி தோசை இன்னும் மெதுவடை என்றே
சட்னி சாம்பார் தட்டில் ஊற்றிக் கொள்வனே!

அன்றுநீ சொன்னதென் அகத்தில் ஆழப் பதிந்தே
இன்றெனை வருத்தும் என்றே நீயறி வாயோ?

சிட்டுக் குருவிகள் சிலவென் முற்றம் தாழும்
குட்டி அலகால் கொத்திய வுண்டே வாழும்.

முயற்சி 2.
(கலித்துறை)

வந்ததும் இருப்பதும் தெரியும் தெரியுமோ வருவது?
நொந்ததும் நிகழ்ந்ததும் தெரியும் நாளையென் நோவோ?
பந்தைய எலிகள் வாழ்வில் விந்தைகள் பார்ப்பதுண்டோ?
சிந்தனை தறிகெட் டோடச் சாதனை சிறுமதியோ?

முயற்சி 3.
(கலித்துறை)

தென்றலின் அலையில் தலைசாயும் நெற்பயிர்த் தேக்கம்
கன்றுடன் பசுக்கள் தொழுவம் திரும்பிடும் காலம்
மேற்கில் மறையும் கதிரவன் ஒளியின் மெருகு
காற்றில் ஊடுருவிக் கண்களில் பட்டுக் கழியும்.

*****

7.11. நெடிலடி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

7.11. நெடிலடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐந்துசீர் கொண்டு முடிவது நெடிலடி
அளவடி விஞ்சும் சீர்கள் வருதலால்
நெடிலடி என்று பெயர்பெற் றிடுமே
நெடிலடி மற்றும் கழிநெடி லடிகள்
பாவினங் களிலே பெரிதும் வருமே. ... 1

சான்று 1.
(கலித்துறை)

வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினைநீங்கி நின்றார்
--தோலாமொழித் தேவர், சூளாமணி, கடவுள் வாழ்த்து

சான்று 2.
(கலித்துறை)

செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயி னோடும் 
சந்தார்தடந் தோளடும் தாழ்தடக் கைக ளோடும் 
அந்தாரக லத்தொடும் அஞ்சனக் குன்ற மென்ன 
வந்தானிவன் ஆகுமவ் வல்விலி ராம னென்றாள்.
--கம்பராமாயணம், 3.7.3215

சான்று 3.
(கலித்துறை)

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
--அருணகிரிநாதர், கந்தலரங்காரம் 72

*****