Thursday, April 27, 2017

11.00 வெண்பா

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.00 வெண்பா
(வெண்பா)
(வெறும்பா விரவியது)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வேறேதும் வண்ணம் விரவாத வெண்மையே
மாறாது நிற்பதெனும் மாண்பாகும் - வேறு
தளைகளுடன் சீர்கள் தகையாத தூய்மை
வளமாகும் வெண்பா வனப்பு. ... 1

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்மையே இன்னோர்பேர் வெள்ளைக்கென் றாவதுபோல் 
வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு
வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே
உண்மையாம் அந்த வுயர்வு! ... 2

[ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு;]

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால்
வெண்பாவோர் வன்பா வெனப்படும் - ஒண்ணா
விலக்கும் அயற்சீரால் வேற்றளையால் வெண்பா
புலவர்கள் அஞ்சும் புலி. ... 3

ஔவை சொன்னது:
காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்

பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் 
பாடுவது புலியாம் (அரிய செயல்);  சிறப்பாகப் பேசப்படும் 
உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது 
புலியாம்; ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் 
கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்; மற்றெல்லாப் 
பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் 
(முயற்சி மிக்க செயலாகும்).

கி.வா.ஜ. சொன்னது:
வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
--ஔவையார் மேற்கோள்:’கவி பாடலாம்’, பக்.69

விளக்கம்:
வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் 
கல்லானையும்; வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் 
தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்;
பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; 
அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே;
பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, 
என்னை ஏன் தாக்குகிறாய்?

பாடல் பின்னுள்ள கதை:
https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/amCdNYlwJxo

*****

11.01 வெண்பாவின் பொது இலக்கணம்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

இயற்சீராம் நான்குடன் வெண்சீராம் நான்கும்
இயற்சீராம் வெண்டளையும் வெண்சீராம் வெண்டளையும்
ஈற்றடி சிந்தடியாய் ஏனை அளவடியாய்
ஏற்றது செப்பல் ஒலியென வாகிப்
பயின்று வருகிற பாவகை வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாம்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

வெண்பா இலக்கண விளக்கம்
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வெண்பாவின் சீர்களாய் மாவிளம் காய்ச்சீராம்
வெண்பாவில் நேர்நிரை மாறிவரும் வெண்டளையும்
வெண்பாவில் காய்முன்நேர் வெண்சீரின் வெண்டளையும்
வெண்பாவின் ஓசையென மூவகைச் செப்பலோசை
வெண்பாவின் ஈற்றடி மூன்றுசீர்ச் சிந்தடியாம் 
வெண்பாவின் மற்றவடி நாற்சீர் அளவடியாம்
வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர் நால்வகை
நாள்-மலர் காசு பிறப்பு. ... 2

ஈற்றடி
(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம்
ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம்
ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம்
ஈற்றடியே வெண்பா உயிர். ... 3

ஈற்றுச்சீர்
(ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில்
குற்றுகரம் வந்து முடிதல் அவசியம் 
மற்ற உகரம் அரிது. ... 4
[இறுதல்=முடிதல்]

வராதன
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது
வெண்பாவில் வேறு தளைகள் வராது
அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா
உளத்தினில் வைப்பீர் உகந்து. ... 5

பொழிப்பு மோனை
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

முதற்சீர் வருமெழுத்து மூன்றாம்சீர் ஒன்றும்
விதம்பொழிப்பு மோனையாய் வெண்பா அடிதோறும்
நிற்பதால் ஓசை நிறையும் செவிகளில்
அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது
சிற்சில பாக்களி லே. ... 6

பொழிப்பு எதுகை
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

பொருளின் செறிவில் பொழிப்புமோ னையாய்
வருதலிலை யென்றால் ஒருவெதுகை ஈடாக
அந்த அடிகளில் வந்தபொழிப் பாம்-எதுகை
உந்தி யமைவதும் உண்டு. ... 6

வகையுளி
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வகையுளி யென்று வகுபடும் சொற்கள்
வகையுளி பாவில் வருதல் பொதுவில்
தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம்
சிற்சில போது சிறக்கும் வகையுளி 
முற்றப் பொருளின் நுகம். ... 7
[நுகம்=நுகத்தடி]

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வகையுளி ஈற்றடியில் வந்துநின்று வண்ணம்
தகவுற நிற்கத் தழைக்கும் குறளாம்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... 8

சான்று
(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும்
மேற்கொண்ட வெண்பா வினி. ... 9

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

அலகிடல்: சீர்கள்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு

தளைகள்
இவெ இவெ இவெ வெவெ
வெவெ இவெ வெவெ இவெ
வெவெ வெவெ வெவெ இவெ
வெவெ இவெ

அடிகள்
அளவடி அளவடி அளவடி சிந்தடி

மோனை
பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும்

எதுகை
இருவிகற்ப அடியெதுகை

வகையுளி
ஏதும் எங்கும் இல்லை

இதர சான்றுகள்
(மேலுள்ளது போல அலகிட்டு அறிக)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிவுயிர் வாழ்தல் அறியாமை- தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
--பாரதியார், மஹாசக்தி வெண்பா

*****

10.00. பாவின் அடியும் ஓசையும்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

பகுதி 2. செய்யுளியல்
10.00. பாவின் அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
(வெறும்பா விரவியது)

உறுப்பியல் பகுதியில் உறுப்புக ளாக
எழுத்தசை சீர்தளை அடிதொடை என்னும்
அறுவகை உறுப்புகள் எங்ஙனம் செய்யுளில்
பயின்று வருமெனும் விளக்கம் கண்டபின்
செய்யுள் இயலாம் இந்தப் பகுதியில்
பாவடி யோசை பாவகை பாவினம்
யாவையும் விளக்கிச் சொல்வோம் இனிதே. ... 1

10.01. பாவென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனும் சொல்லின் பலவிதப் பொருள்கள்
பாவினை விளக்கப் புரிந்து கொண்டால்
பாவெனச் சொல்வது யாதென விளங்குமே. ... 1

பாவெனில் முதலில் வருவது நெசவு
பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே
பாவெனும் சொல்லின் ஓர்பொருள் பரப்பு
பாவுதல் என்பது பரவுதல் படர்தல்
பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தலே. ... 2

இத்தனை பொருள்களும் நெசவினில் அடக்கம்
நெய்வது நெசவு செய்வது செய்யுள்
செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம். ... 3

(குறள் வெண்செந்துறை)
ஆடை என்பது நெய்யப் படுவது
செய்யுள் என்பது செய்யப் படுவது. ... 4

ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச்
செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு. ... 5

ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச்
செய்யுளில் ஒருவகைப் பாவே வருவதும் உண்டு. ... 6

ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி]
செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... 7
[வண்ணம்=தாளம்]

நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும்
செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும். ... 8

நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும்
செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும். ... 9

ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில்
செய்யுளின் வனப்பு தளைதரும் ஓசையில். ... 10

அந்நூல் பாவி நடத்தலின் ஆடை
’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’  ... 11
--[இலக்.வி.711]

’அறம் பொருள் இன்பம் வீடு
இவற்றைப் பாவி நடத்தலின் பாவென்பது.’ 
--[யாப்பருங்கலம் உரை]

பாவும் நெசவும் பிணைந்தது போல
நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர். ... 12

நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல்
நூற்றல்* என்பதே செய்யுள் இயற்றலும். ... 13

[*spinning a story என்று ஆங்கிலத்தில் சொல்வது
செய்யுளுக்கும் பொருந்தும். இவ்வாறு நூற்றுச் 
செய்யப்படுவதால்தான் ஒரு புத்தகத்தை 
நூல் எனச் சொல்கிறோம்.]

ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது
பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது. ... 14

ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 15

பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 16
[வண்ணம்=தாளம்]

ஆடையின் அழகு அணிந்திட வருமே
பாவின் அழகு பாடிட வருமே. ... 17

10.02. பாவென்பது சீர், தளை, ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனில் முதலில் சீரினைக் குறிக்கும்.
பாடலைக் குறிப்ப தாகு பெயரால்
பாடலை இயற்றும் ஊடகம் செய்யுளே. ... 1

சீரெனில் பற்பல பொருள்வகை யாவதில்
சீரெனில் பாட்டும் தாளமும் அடங்கும்
சீரைப் பொறுத்தே பாவகை அதுபோல்
பாவைப் பொறுத்தே சீர்வகை யாமே. ... 2

10.03. பாவும் சீரும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் உட்பொருள் சீரே என்பதால்
பாவகை யாமே சீரின் பெயரே
பாவின் பெயரே சீர்வகை யாகுமே 
பாவின் வகைகள் நால்வகை யாகும்
’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... 1 
--[தொல்.செய்.104]

மாச்சீர் விளச்சீர் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
என்றிவ் வாறு பெயர்கள் பெற்று
நான்கில் மூன்று பாவகை சுட்டுமே. ... 2

[தேமா புளிமா கருவிளம் கூவிளம்;
மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு;
மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு]

10.04. பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்களைப் போலவே பாவகை சுட்டலில்
சீரினும் மேலாய்ச் சீர்களால் இயலும்
தளைகள் காட்டிடும் பாவகை நான்கே. ... 1

பாவகை பெயர்கொளும் தளைகள் ஏழில்
மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியம் ... [நானும் நீயும்]
விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியம் .. [அவனும் அவளும்]
ஆகிய தளைகள் ஆசிரியப் பாவிலே. ... 2

மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், ~அவளும் நானும்]
பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்]
இவ்விரு தளைகளும் வெண்பா வகையின. ... 3

கலிப்பா வுக்கெனத் தனிச்சீர் இல்லை
காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்]
கலிப்பா வகைக்கு உரிய தளையே. ... 4

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்]
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்]
வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளே. ... 5

10.05. பாவும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்.
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்.
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்.
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்குமே. ... 1

அகவல் செப்பல் துள்ளல் தூங்கல்
ஓசையொவ் வொன்றும் மூவகை யாமே
ஓசையின் வகைகள் பாவுடன் அறிவோம்
தளைகள் தட்டினால் ஒலிசீர் கெட்டு
பாவரும் செய்யுள் உரைநடை போலாம். ... 2

10.06. பாவகையும் இனமும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடையால் அடியால் இயற்றும் செய்யுள்
பாவே பாவினம் எனவிரண் டாகும்
அறம் பொருள் இன்பம் வீடெனும்
இவற்றைப் பாவி நடத்தலால் பாவாம்
பாவகை யோடே ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... 1

[புடை=முறை, ஒழுங்கு]

10.07. பாவின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் வகைகள் நான்கென் றமையும்
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சி
ஆசிரி யப்பா அகவற் பாவே. ... 1

நால்வகைப் பாவும் இருவகை அடங்கும்
ஆசிரி யப்பா வெண்பா என்றே
அகவல் நடைபோல் அமைவது வஞ்சி
வெண்பா நடையைப் போன்றது கலிப்பா. ... 2

மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலாய் அகவல் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]
பாவகை குறித்த அடிகளால் அமையுமே. ... 3

10.08. பாவின் இனங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவகை நான்கிலும் மூவகை யினமாம்
பாவகை இலக்கணம் முழுமை யின்றிப்
பாவகை ஓசையை ஒட்டி வருவது
பாவகை யதனின் பாவின மாமே
பாவினம் குறித்த அடிகளால் அமையுமே. ... 1

ஒவ்வொரு பாவகை யோடுறும் மூவினம்
’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.] ... 2

பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்
வெண்டா ழிசையும் வெண்டுறை யுடனே
வெளிவிருத் தமெனும் மூன்றாம் இனமாய்
வெண்பா வினங்கள் பெயர்கள் பெறுமே. ... 3

ஆசிரியத் தாழிசை ஆசிரி யத்துறை
ஆசிரிய விருத்தம் என்றமூ வினமாய்
அகவற் பாவினம் பெயர்கள் பெறுமே. ... 4

கலித்தா ழிசையும் கலித் துறையோடு
கலிவிருத் தமென்றே கலிப்பா மூவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 5

வஞ்சித் தாழிசை வஞ்சித் துறையும்
வஞ்சி விருத்தமும் வஞ்சிப் பாவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 6

தாழம் என்பது தாழ்ந்த ஓசை
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை. ... 7

தத்தம் பாவிற்குத் துறைபோல் நெறியுடன்
ஒத்து நடப்பது துறையெனும் பாவினம்.
தத்தம் பாவெனும் ஒழுங்கில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் எனும்பா வினமே. ... 8

10.09. பாவகை அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை. ... 1

பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே. ... 2

யாப்பின் வழக்கில் குறளெனில் இரண்டு
சிந்தெனில் மூன்று அளவெனில் நான்கு
நெடிலெனில் ஐந்து கழிநெடில்
ஐந்தின் அதிகம் எனும்பொரு ளாமே. ... 3

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி 
கழிநெடி லடியெனும் பேரில் முறையே
இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் 
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே. ... 4

பாவடி பற்றிய காரிகை நூற்பா
வெண்பா அகவல் கலிப்பா அளவடி
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி.
--[யா.கா.21]

வெண்பா நாற்சீர் அளவடி கொளுமே
அகவல் நாற்சீர் அளவடி கொளுமே
கலிப்பா நாற்சீர் அளவடி கொளுமே
வஞ்சிப் பாவெனில் இருசீர்க் குறளடி
முச்சீர்ச் சிந்தடி இரண்டும் கொளுமே.
பாவகை யடிகள் பொதுவில் இவையே
பாவகை பொறுத்து வேற்றடி விரவுமே. ... 5

’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே. ... 6

தளைகள் மூலமே ஓசைகள் அமையும்
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... 7

*****

Thursday, April 20, 2017

8.90. செந்தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.90. செந்தொடை
(தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றிய தொடையொடும் விகற்பம் தம்மொடும்
ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே. ... (யாப்பருங்கல விருத்தி)
செவ்விய தொடையொடு வேறுபட் டியலின்
சொல்லியற் புலவரது செந்தொடை என்ப. ... (தொல்காப்பியம்)
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையா தாவது செந்தொடை தானே. ... (பல்காயனார்)
இங்ஙனம்
எவ்விதத் தொடையும் இல்லா திருந்தும்
செவ்விதின் அமைந்து செய்யுளாய்ச் சீர்த்து
நவ்விடும் ஓசை நலன்கள் விளையச்
செய்வது செந்தொடை இலக்கணம் என்போம். ... 1

(ஆசிரியத் தாழிசை)
இயல்பில் மாலையாய் இலங்கும் 
. கடம்பக் கொன்றை மலர்கள் போலச்
செயற்கைத் தொடையேதும் வேண்டாது 
. செய்யுளைச் சிறப்பித்து நிற்றலால் இத்தொடை
செந்தொடை யென்னும் பெயர்தனைப் 
. பெற்றுச் செம்மையாய் நின்றிடும் தொடையாம்.
--யாப்பருங்கலக் காரிகை, குமாரசாமிப் புலவர் உரை, பக்.40

சான்று
பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.
--யா.கா.மேற்கோள்

விளக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பொன்னிறப் பூக்களை உடையது வேங்கை
அந்த மரத்தின் உயர்ந்தவோர் கிளையில்
ஏறிநின்று அகவும் வண்ணமயில் நாடன்
அழகிய நெற்றிக் குறிஞ்சிப் பெண்ணின்
உள்ளம் நிறைந்து நிற்பவன் ஆவனே. ... 2

மேல்வரும் விளக்கம் செய்யுள் ஆயினும்
உரைநடை வழக்கின் சீர்தளை நிறைந்து
ஓசை சிதறி ஒழுங்கற்று நிற்பதால்
செந்தொடை பயிலும் செய்யுள் ஆகாது;
ஆக்குவோம் இதனைச் செந்தொடைச் செய்யுளாய். ... 3

பொன்னிறப் பூநிறை வேங்கை மரத்தின்
வான்கிளை ஏறி அகவுமயி லொன்று
நாடனே எழில்நுதல் குறிஞ்சி மகளின்
மனத்தகத் துறையும் தலைவ னாவனே. ... 4

*****

8.91. செந்தொடை முயற்சி
(குறள் வெண்செந்துறை)

செந்தொடை அடிகளில் பொருணயம் வேண்டும்
அந்த வகையில் முயன்றவை கீழே. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவறை இருட்டு. குத்து விளக்கின்
சுடரொளி எதற்கோ உன்னிக் குதிக்கிறது.
அம்பாள் முகத்தில் புன்னகை கண்டோ?
தாயன்பில் சேய்க்கை நீளுதல் போலவோ? ... 2

(ஆசிரியத்துறை)
சர்ப்பமாய் வளைந்து செல்லும் தார்ச்சாலை.
ஆனைகள் தடுக்க ஒருபுறம் பள்ளம்.
மறுபுறம் மின்கம்பி வேலி.
வெள்ளியங் கிரிமலை நோக்கி யொருகார். ... 3

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சாலையில் காதொற்றும் செல்போன் இடக்கையில். 
வலக்கை பற்றி நடக்கும் குழந்தை.
காட்டாறு வெள்ளமாய் விரையும் வாகனங்கள்.
கணங்கள் ஓடும் நிகழும் உறையுமே. ... 4

எதிரே மாரியம்மன் கோவில் திண்ணை. 
இடப்புறம் ஊராட்சிப் பொதுமேடை. கொடிக்கம்பம்.
பின்புறம் பூங்காவில் வானொலிச் செய்தி.
மணலில் துப்புரவுத் துடைப்பக் கீற்றுகள். ... 5

*****

8.85 இரட்டைத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.85 இரட்டைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே ... (யாப்பருங்கலம்)
இரட்டை வருமொழி அடிமுழு தும்வரும்
அடிமுதற் சீரே அடிபிற சீர்களில்
அதுவே யாகப் பயிலுதல் இரட்டை. ... 1

சான்றுகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீரெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்.

நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்
மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்.
--யாப்பருங்கலம்

(இன்னிசை வெண்பா)
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ 
பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
கோவீற் றிருந்தான் கொடை.
--நேமிநாதம், பக்.30

மேல்வந்த சான்றுகளில் சொல்லும் பொருளும்
வேறு படாது வருதல் காண்க.
சொல்வேறு படாது பொருள்வேறு பட்டு
வருவதும் இரட்டைத் தொகைவகைச் சேரும். ... 2

சான்று:
ஓடையே  ஓடையே ஓடையே ஓடையே 
கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்
மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்
கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்!
நாடி உணர்வார்ப் பெறின்.
--யாப்பருங்கலம்

[ஓடை - குடை வேலமரம், மலைவழி, 
யானை நெற்றிப் பட்டம், நீரோடை எனக் கொள்க.]

இருசீர் திரும்புதல் இரட்டை யல்ல
ஒருசீர் மாறியும் திரும்புதல் இல்லை
ஒருசீர் அதுவே அடிபிற சீர்களில்
திரும்புதல் இரட்டைத் தொடையின் இலக்கணம்.
கீழ்வரும் சான்றுகள் இரட்டை யல்ல. ... 3

இரட்டைத் தொடை யல்ல:
பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
--புறநானூறு 247

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதிலும்
--பாரதியார்

8.86 இரட்டைத் தொடை முயற்சி
(குறள் வெண்செந்துறை)

அதுவென ஒருசீர் அடிமுழு தும்வரும்
விதமாம் இரட்டைத் தொடையை முயல்வமே. ... 1

எழுமின் எழுமின் எழுமின் எழுமின்
உழவர் தொழிலின் உயர்வறி யாதே
மதுவில் அவரை மயங்க வைத்தே
பொதுநலம் குடும்பம் புறக்கணித் தாளும்
இலவச அரசைத் தேர்தலில் வீழ்த்துவோம்
நலமும் வளமும் நடைமுறை யாகவே. ... 2

(குறள் வெண்செந்துறை)
சீரொன்று அதுவே வேறு பொருள்களில்
திரும்பிடும் இரட்டைத் தொடையது கீழே. ... 3

(இன்னிசை வெண்பா)
ஒருகால் ஒருகால் ஒருகால் ஒருகால் 
உருவினில் பேயது வந்ததும் உண்டு
தெருவினில் உள்ளோர் திகிலுடன் நோக்கப்
பெருமிதம் பொங்கிய பேய். ... 4

[முதலடி ஒருகால் சீர்ப் பொருள்கள்:
ஒருமுறை, ஒருவேளை, சிலவேளை, ஒரு காலுடன்]

*****

8.80 விகற்பமிலாத் தொடைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.80 விகற்பமிலாத் தொடைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடைகள் எட்டு வருவன வற்றில்
மோனை எதுகை முரணியை(பு) அளபெடை
ஆனயிவ் வைந்தும் எண்வகை விகற்பம்
பெற்று வருமென உற்று நோக்கினோம்.  ... 1.

எஞ்சி நிற்கும் தொடைகள் மூன்றும்
அந்தாதி இரட்டைச் செந்தொடை யாகும்
இவற்றின் இயல்பு நோக்கும் போது
விகற்பம் ஏதும் பெறவிய லாதென
எளிதில் அறிந்து கொள்வோம் நாமே. ... 2.

அந்தாதி இரட்டைச் செந்தொடை மூன்றும்
விகற்பம் ஏதும் இல்லா திருப்பதால்
விகற்ப மில்லாத் தொடையெனப் படுமே. ... 3.

அந்தம் முதலாத் தொடுப்ப(து) அந்தாதி
வந்தமொழி அடிமுழுதும் வருவது இரட்டை
எந்தத் தொடையும் இல்லாதது செந்தொடை. ... 4.

8.81. அந்தாதித் தொடை
(குறள் வெண்செந்துறை)

அந்தம் முதலாத் தொடுப்ப தந்தாதி
வந்தது திரும்பவும் வகையாய் வருமே. ... 5.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அடியொன்றின் அந்தமென முடியும் எழுத்தோ
எழுத்தை உள்ளிட்ட அசையோ
அசையை உள்ளிட்ட சீரொன்றோ அடியோ
அடுத்த அடியில் முதற்சீரில் முளைத்துத்
தொடர்ந்து வருவ(து) அந்தாதித் தொடையே. ... 6.

அந்தமே ஆதியென வந்திடும் போது
எழுத்தசைச் சீருடன்
அடியே முழுவதும் திரும்புதல் உண்டு
அடியந் தாதி என்னும் பெயரிலே. ... 7.

சான்று (இளம்பூரணார் தொல்காப்பிய உரையில் தருவது)
(நேரிசை ஆசிரியப்பா)

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலிரு அடிகளில் அசையைந் தாதி
இரண்டும் மூன்றும் சீரந் தாதி
மூன்றும் நான்கும் சீரந் தாதி
நான்கும் ஐந்தும் அடியந் தாதி
ஐந்தும் ஆறும் சீரந் தாதி
ஆறும் ஏழும் எழுத்தந் தாதி
ஏழும் எட்டும் எழுத்தந் தாதி
எட்டும் முதலும் சீரந் தாதியே. ... 8.

8.82 அந்தாதித் தொடை முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி கொஞ்சம் எழுதி நாமும்
அடிதோறும் வருகிற அந்தாதி முயன்று
விடியும் காலையில் வேலைகள் உரைப்போம். ... 1.

காலைமுதல் மாலை வரை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

காலையில் எழுந்து காப்பி குடித்து
குடித்த காப்பி மணமுளம் அமர
அமர்ந்து செய்திகள் ஆறப் படித்து
படித்த பேப்பரை மடித்து விட்டு
விட்டு ஒலிக்கும் வினாடியின் ஒலிகள்
ஒலித்து மனத்தில் ஓலம் எழுப்ப
எழுந்து குளியல் விரைவாய் முடித்து
முடியைத் துவட்டி உடைகள் அணிந்து
அணிந்தபின் மேசையில் அமர்ந்து கொரித்துக்
கொரித்ததும் கால்கள் ஓட நடந்து
நடனம் இட்டு சாலை கடந்து
கடையரு கில்லொரு பஸ்ஸில் ஏறி
ஏறி நின்றே பயணம் செய்து
செய்ய வேண்டிடும் வேலைகள் நினைத்து
நினைவுகள் விரட்ட லிஃப்டில் உயர்ந்தே
உயரதி காரியின் முகம்சொல் விரட்டுமுன்
விரட்டும் கணிணியில் வேலை முடிக்க
முடியைப் பிய்த்தே ஓயவரும் மாலை!

*****

8.70. அளபெடைத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.70. அளபெடைத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளபெடை என்பது மாத்திரை நீளுதல்
அளபெடை யிருவகை: உயிரும் ஒற்றும்
’அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே’. 
-- (யாப்பருங்கலம்) ... 1.

உயிரள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
உயிரின் உயிர்மெய் நெடில்கள் ஏழு:
அளபெடுக் கையிலோர் இனவெழுத் தெழுமே
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ. ... 2.

ஒற்றள பெடையில் பயில்வரும் எழுத்துகள்
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுக் கையிலவை மீண்டும் வருமே. ... 3.

உயிரளபெடை
உயிரள பெடைத்தொடை தோன்றும் இடங்கள்:
’தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென
நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே’. 
... (யாப்பருங்கல விளக்கம்) ... 4.

தனிநிலை
முன்பின் எழுத்தின்றி முதற்சீர் நின்று
ஒன்றே எழுத்து அளபெடுத் தொன்றுதல்
தனிநிலை உயிரள பெடையெனப் படுமே.
ஓரெழுத் திப்படி அளபெடுத் தொன்றிட
ஈரடி வேண்டும் என்பதை யறிக. ... 5.

சான்று:
ஏஎ வழங்கும் சிலையாய் இரவாரல்
மாஅ வழங்கும் வரை.
--யாப்பருங்கலம்

முதனிலை
முதற்சீர் நின்று முதலெழுத் தளபெடுத்து
அதன்பின்னும் எழுத்துவந்(து) ஈரடியில் அமைவது 
முதனிலை உயிரள பெடையெனப் படுமே. ... 6.

சான்று
காஅரி கொண்டான் கதச்சோ மதனழித்தான்
ஆஅழி ஏந்தல் அவன்.
--யாப்பருங்கலம்

இறுதிநிலை
முதற்சீர் இறுதிவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இறுதிநிலை உயிரள பெடையெனப் படுமே. ... 7.

சான்று
கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
--யாப்பருங்கலம்

இடைநிலை
முதற்சீர் நடுவரும் எழுத்தள பெடுத்து
அதன்பின் வருமடி முதற்சீரில் ஒன்றுவது
இடைநிலை உயிரள பெடையெனப் படுமே. ... 8.

சான்று
உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ
விராஅய கோதை விளர்ப்பு.
--யாப்பருங்கலம்

ஒற்றளபெடை
குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வருவதால்
இடைகடை வருமே ஒற்றள பெடைத்தொகை. ... 9.

சான்று: இடைநிலை ஒற்று
வண்ண்டு வாழும் மலர்நெடுக் கூந்தலாள்
பண்ண்டை நீர்மை பரிது.
--யாப்பருங்கலம்

சான்று: இறுதிநிலை ஒற்று
உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்
அரண்ண் அவர்திறத் தில்.
--யாப்பருங்கலம்

8.71 அளபெடைத் தொடை விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே அளபெடைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே. ... 1.

அளபெடைத் தொடை விகற்பச் சான்றுகள்
அடியளபெடை தொடை

ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பினோ
டீஇர் இசையுங்கொண் டீரளைப் பள்ளியுள்
தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போல் நறநுதால்
ஓஒ உழைக்கும் துயர்.
--யாப்பருங்கலம்

ஓரடிக்குள் அளபெடைத் தொடை
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

காஅலைப் போஒதில் கால்கள் நடந்திடச் ... 1-2 இணை
சாஅலை யோரத்தில் காஅட்சி இங்ஙனம்: ... 1-3 பொழிப்பு
வேஎலை செல்லும் விழிவழி மாஅதர் ... 1-4 ஒரூஉ
காஅலை மாஅலை சாஅலை ஈர்ப்பரே ... 1-2-3 கூழை
வாஅனம் மீதொரு காஅனம் கேஎட்கும் ... 1-3-4 மேற்கதுவாய் ... 5
சாஅலை யோஒரம் சோலையில் பூஉக்கள் ... 1-2-4 கீழ்க்கதுவாய்
காஅனம் காஅலை வாஅனம் யாஅவும் ... 1-2-3-4 முற்று 
நாணக் குமரியை நல்வர வேற்குமே!
சிக்கும் அளபெடை வெண்பா எழுதியே
திக்கிக் குழன்ன்றே பேசு! ... 10

*****

8.60. இயைபுத் தொடை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.60. இயைபுத் தொடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

புணர்ச்சி இணக்கம் பொருத்தமே இயைபு
இணங்கும் சொற்கள் இசைப்பது இயைபு
இதுகேட்ட பின்னே இதுகேட்கத் தக்கது
என்னும் தொடர்பு முறையாம் இயைபே.

8.61. இயைபுத் தொடை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியின் கடைச்சீர் கடையெழுத் தென்ப(து)
அடியின் பிறசீர் கடையெழுத் துடனோ
பிறவடி கடைச்சீர் கடையெழுத் துடனோ
இயைந்து வருவது இயைபெனப் படுமே.

அடியின் கடைச்சீர் கடைச்சொல் லென்ப(து)
அடியின் பிறசீர் கடைச்சொல் லுடனோ
பிறவடி கடைச்சீர் கடைச்சொல் லுடனோ
இயைந்து வருவதும் இயைபெனப் படுமே.

இறுவாய் ஒப்பினஃ(து) இயைபெனப் படுமென
உறைத்துச் சொல்லும் யாப்பருங் கலமே
இறுதியில் எழுத்தோ சொல்லோ ஒன்றுதல்
இயைபுத் தொடையென விளக்கம் கூறுமே.

’கடலே மணலே’ ஓரெழுத் தியைபு
’காவிரி பூவிரி’ எழுத்துக ளியைபு
’காலை மாலை’ சொல்லின் இயைபு
’சடசட வென்று தடதட வென்று’
என்னும் அடியில் சொற்களின் இயைபே.

சொல்லியை பினில்வரும் சொல்முதல் எழுத்து
சொல்லும் ஒலியில் ஒன்றுதல் காண்க
காலையில் மாலையில் சொல்லியை பாகும்
கலையில் மலையில் சொல்லியை பாகும்
காலையில் மலையில் சொல்லியை பல்ல
கலையில் மாலையில் சொல்லியை பல்ல
எனினுமிச் சொற்கள் எழுத்தில் இயைபாம்.

’காலையும் வேலையும்’ சொல்லியைபல்ல
ஆ-வின் மோனை ’ஐ-ஔ’ ஆவதால்
’காலை வேலை’ எழுத்தியை பாகுமே.

8.62. இயைபு விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே இயைபுத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே
இயைபின் விகற்பம் என்னென் றறிய
இறுதியி லிருந்து எண்ணுதல் வேண்டுமே.

இயைபுத் தொடைச் சான்றுகள்
அடிதோறும் சொல்லியைபு

நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் றாள்வாழ்க
--மாணிக்கவாசகர், திருவாசகம் 1-2

அடிதோறும் ஓரெழுத்து இயைபு
மாணிக்கவாசகர், திருவாசகம் 68-70

ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே.

அடிகளில் எழுத்துகள் இயைபு
திருமூலர், திருமந்திரம் 2

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை

அடிகளில் சொல்லியைபு
யா.கா. மேற்கோள்

சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்;
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்;
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்

ஓரடிக்குள் இயைபு விகற்பங்கள்
(இறுதிச்சீர் முதலெனக் கொண்டு எண்ண வேண்டும்.)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் 
... 1-2 இணை இயைபு (சிலப்பதிகாரம் 1.8.36)
நீரில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் 
... 1-3 பொழிப்பியைபு (ஔவையார், நல்வழி 24)
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 
... 1-4 ஒரூஉ இயைபு (ஔவையார், மூதுரை 1)
அலைசேர் புனலன் னனலன் னமலன் 
... 1-2-3 கூழை இயைபு (அப்பர் தேவாரம் 235)
மன்னனும் அமைச்சனும் இன்னுமோர் புலவனும் 
... 1-3-4 மேற்கதுவாய் இயைபு
மன்னனும் இன்னுமோர் புலவனும் அமைச்சனும் 
... 1-2-4 கீழ்க்கதுவாய் இயைபு
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் 
... 1-2-3-4 முற்று இயைபு (ஔவையார், நல்வழி 38)

புறனடை: கடையியைபுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயைபு விகற்பம் எண்ணும் போது
முதற்சீர் கடைச்சீ ராவத னாலே
பிறசீர் களிலே ஒன்றும் இயைபுகள்
கடையியை பென்னும் வகையில் வருமே.

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே 
... 2-3 இடைப்புணர் இயைபு
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
... 2-4 பின்னியைபு
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் 
... 3-4 கடையிணை இயைபு
மன்னனும் அமைச்சனும் புலவனும் இன்னுமோர் 
... 2-3-4 கடைக்கூழை இயைபு

*****