Wednesday, May 24, 2017

11.12 செப்பலோசை வெண்பா முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.12 செப்பலோசை வெண்பா முயற்சி
(வெண்பா)

(இன்னிசை வெண்பா)
ஒருபொருள் பற்றியே மூவகை ஓசை
உருவினில் ஈரடி மூவடி நாலடி
வெண்பா முயல்வினில் வெவ்வே றொலிகாண
எண்ண வெழுந்தன வே.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
பாழடைந்த கேணியொன்றைப் பற்றியழும் பேய்-ஓலம்
காழிருந்தால் அவ்வழி-வை கால்.

(தூங்கிசைச் செப்பல்)
அழிந்த கிணற்றில் அரற்றும் ஒருபேய்
வழியது செல்மனம் வம்பு.

(ஒழுகிசைச் செப்பல்)
அழிந்த கிணற்றில் அரற்றியழும் ஓர்பேய்
வழியது போனாலோ வம்பு.

(ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
மல்லிகைப்பூ முல்லைப்பூ வாசனையாய்ப் பூத்திருக்க
மெல்லியதோர் காற்றலைக்கும் மெல்லிடையாள் மேலாடை
சொல்லினிலே பூத்தாளே தொட்டு.

(தூங்கிசைச் செப்பல்)
மல்லிகை முல்லை மலரும் மணத்துடன்
மெல்லிய காற்றலை மெல்லிடை மேலுடை
சொல்லில் மலர்ந்தனள் தொட்டு.

(ஒழுகிசைச் செப்பல்)
மல்லிகை முல்லை மலர்களெலாம் வாசனையாய்
மெல்லியதோர் காற்றலை மெல்லிடையாள் மேலாடை
சொல்லில் மலர்ந்தாளே தொட்டு.

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
தத்திவரும் ஆழியலை மத்தளத்தின் ஓசையொடு
எத்திவிடும் பாப்பாவின் சென்னியெலாம் மண்துகளாய்
கத்தியுரை யாடுமப்பா காதினிலே கைபேசி
அத்தையுடன் அம்மாவின் பேச்சு.

(தூங்கிசைச் செப்பல்)
தத்தும் கடலலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தை தலையெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் கைபே சியில்செவி
அத்தையும் அன்னையும் பேச்சு.

(ஒழுகிசைச் செப்பல்)
தத்திவரும் ஆழியலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தையின் சென்னியெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் காதினில் கைபேசி
அத்தையுடன் அன்னையின் பேச்சு.

11.13 செப்பலோசை வெண்பாப் பயிற்சி
(வெண்பா)

நினைவிற் கொள்ள:
(இன்னிசை வெண்பா)

ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பா நிரலமைத்தல்
(பஃறொடை வெண்பா)

மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள்
மூன்று கலைந்துள சொற்களில் கீழுள
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும்
ஓர்ந்து அமைத்தே எழுது.

உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை
கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக்
தான்காணான் விடும். கள்வேம் தீதே
மறைமொழி நிலத்து வாறு.
எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி
மாந்தர் காணாதான் கண்டானாம்

பயிற்சி 2. மூவகைச் செப்பலோசைக் குறட்பா எழுதுதல்
(இன்னிசை வெண்பா)

ஏந்திசை தூங்கிசைச் செப்பல் ஒழுகிசை
தேர்ந்திந் நிரல்வர மூன்றுகுறள் வெண்பாக்கள்
ஓர்ந்தே புனைக ஒருபொருள் பற்றியோ
ஆர்ந்த பலபொருளி லோ.

*****

11.14 எதுகையால் வரும் வெண்பா விகற்பம்
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா வகையை அடியெது கைவரும்
எண்ணுடன் சேர்த்துக் குறித்தல் வழக்கம்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா புனைந்தால்
வருமே அடியெதுகை ஒன்று.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப்
பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே
வரும்பாக்கள் கீழுள் ளவை.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
--திருக்குறள் 001:01

(இருவிகற்பக் குறள் வெண்பா)
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.
--திருக்குறள் 007:04

(ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 061

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 003

(ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
--ஔவையார், மூதுரை 012

(இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 012

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 056

*****

11.08 வெண்பாவின் தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.08 வெண்பாவின் தளை
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை 
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேர்வர
வாகுமே வெண்டளை காண். ... 1

(இருவிகற்பக் குறள்வெண்பா)
வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே
இரண்டு வகைகள் உள. ... 2

(பலவிகற்பச் சிந்தியல் வெண்பா)
இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என. ... 3

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என. ... 4

*****

11.09 வெண்பாவின் அடி
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
வெண்சீர் இயற்சீர் இயன்றிடும் வெண்பாவில்
நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே
ஈற்றடி முச்சீரில் சிந்தடியாய் நின்றிட
ஈற்றுச்சீர் நாள்,மலர் காசு பிறப்பென
மேற்சொன்ன நால்வகை யில். ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழெல்லை யாக இரண்டடி வந்துநிற்க
மேலெல்லை வெண்பா வகைபொறுத்து மாறும்
குறட்பா இரண்டடி மேலெல்லை கீழெல்லை
சிந்தியல் எல்லைகள் மூன்று. ... 2

அளவியல் எல்லைகள் ஆவது நான்கடி 
பஃறொடை ஐந்தும் பனிரெண்டும் எல்லை
கலிவெண்பா பத்துடன் மூன்றடிக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 3

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
மூச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு
முக்கா லடியென்றும் ஓர்பெயர் சொல்லுவர்
ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவியல் எல்லையாம்
பன்னிரண்டு முக்காலாம் பஃறொடை எல்லை
பதிமூன்று முக்கால் கலிவெண்பாக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 4

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா எனும்பேரே நாலடி யாகவரும்
வெண்பாவைச் சுட்டுவ தாய்-இவ் வகையில்
முதல்மூன் றடிகள் அளவடி யாய்வரும்
ஈற்றடி சிந்தடி யாம். ... 5

*****

11.10 செப்பலோசை என்பது
(வெண்பா)

செப்புதல் என்றால் விடையெனக் கூறல்
மறைவின்றித் தானே இயல்பாய் மொழிதல்
மறைத்தொன்றைக் கூறாது செப்பியே கூறுதல்
என்றுநச்சி னார்க்கினியர் நூல்.

இசைகுறித்து வாராமல் செப்புத லாகிய
வாக்கியம் போன்றதாம் ஓசை எனவே
இளம்பூ ரணர்-உரைக் கூற்று.

அகவலும் செப்பலும்
(வெண்பா)

காரிகை சொல்லும் அகவலும் செப்பலும்
சீரினில் இங்ஙனம் வேறு படுவதாம்
சீர்சால் அகவலெனக் காரிகைச் சொல்லாம்
இருவகை என்னும் இயற்சீர் விளம்-மா
வரும்சீர் நிலைச்சீர் இனத்தினில் ஒன்ற
நிறையும் அகவல் ஒலி.

திண்பா மலிசெப்பல் ஓசையெனும் காரிகை
திண்மை செறியும் ஒலியென் றியற்சீரின்
மாவிளம் என்றவை மாறி வருவதும்
காய்முன்நேர் என்று கதித்து வருவதும்
ஆய்ந்தால் விளங்குவ தாம்.

வெள்ளைப்பா என்பதும் வெண்பாவின் பேராக
வெள்ளோசை என்றுமே வெண்பாவின் ஓசையாய்ச்
செப்பலுக் கின்னொரு பேரென் றறிக;
தளைகளே ஓசையின் மூலம் எனவெண்
டளைவரச் செப்பல் எழும்.

அகவல், செப்பலொலி வேறுபடும் சான்றுகள்
(வெண்பா)

நேரொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
கண்ணன் என்னும் மன்னன் பேரை
எண்ணும் உள்ளத் தின்பம்
பண்ணில் ஏற்றிப் பாடும் உள்ளே.

(வெண்பா)
வெண்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

கண்ணனெனும் மன்னவனின் கன்னலன்ன பேரொன்றே
எண்ணமுறும் உள்ளத்தில் இன்பங்கள் சூழ்ந்துகொளும்
பண்ணுறவே துள்ளிவிழும் பாட்டு.

நிரையொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
மலைவிழும் அருவியில் வழிந்துறும் வளமென
அலைவிழும் கடற்கரை அமிழ்கழல்
கலைவிழும் சிலையவள் கருவிழி அலைவதே.

(வெண்பா)
இயற்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

மலைவீழ் அருவி வழியும் வளமாய்
அலைவீழ் கரையில் அமிழும் கழலாய்
கலைவீழ் சிலையாள் விழி.

*****

11.11 செப்பலோசையின் வகைகள்
(வெண்பா)

(பஃறொடை வெண்பா)
மூன்று வகையெழும் செப்பலெனும் ஓசையாம்
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
ஏந்திசை வெண்பா வுரிச்சீரால் மட்டுமே
தூங்கல் இயற்சீரால் மட்டும் ஒழுகிசையில்
இவ்விரு சீர்கள் கலந்து.

(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்தே ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

(பஃறொடை வெண்பா)
நால்வகைக் காய்ச்சீர்கள் வெண்பா வுரிச்சீராம்
நால்வகை மாவிளச்சீர் ஆகும் இயற்சீராம்
காய்முன்னே நேர்வர வெண்சீரின் வெண்டளை
மாமுன் நிரையும் விளமுன்னே நேருமென
மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை
இவ்வா(று) இருதளை எண்சீர் இயன்றுவரும்
செவ்வையே வெண்பா அமைப்பு.

மூவசையா லாகிவந்து நீரலையா யேந்திவந்து
நாவசைய ஓசையெழும் ஏந்திசையின் செப்பலாக
தூங்கிசைச் செப்பல் இயற்சீர் வரவரும்
தூங்கி வருவது தொங்கி வருதல்
இருவகை வெண்டளையும் யாப்பில் கலத்தல்
இருவகை ஓசை ஒழுக்கு.

ஏந்திசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
--திருக்குறள் 040:07

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு

(சிந்தியல் வெண்பா)
விண்ணோரும் மண்ணோரும் வேண்டுமருள் ஈசனவன்
கண்மூன்று கொண்டவனாம் காப்பவனாம் நானிலத்தை
எண்ணவரும் ஈசனருள் இன்று.

தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

(அளவியல் வெண்பா)
ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.
--தனிப்பாடற்றிரட்டு, பகுதி 1 காப்பு வெண்பா

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்

மேல்வந்த வெண்பாக் குறிப்பு
(இன்னிசை வெண்பா)

ஒருசீர் தவிர பிறசீர் களிலே 
வருவது மூவசைக் காய்ச்சீர்கள் ஏந்திசை
போற்றினால் என்பதைப் போற்றிடவே என்றுநாம்
மாற்ற இதுவுமே காய்.

(பஃறொடை வெண்பா)
காலையிளம் சூரியனின் கற்றையொளி கண்ணிறையும் 
சோலையெலாம் பொன்னிறமாய்த் தோன்றியொளிர் காட்சியினில்
புள்ளினத்தின் பண்ணலைகள் போகவரும் காற்றினிலே
அள்ளிவரும் தென்றலிலே ஆர்ந்துவரும் வாசனைகள்
தெள்ளியநீ ரோடையிலே சிற்றலையாய் நீரோட்டம் 
உள்ளமெலாம் பொங்கியெழும் ஊற்று.

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

தூங்கிசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
--திருக்குறள் 040:01

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா நாள்

பாலொடு தேன்கலந் தற்றே மணிமொழி
வாலெயி றூறிய நீர்.
--திருக்குறள் 113:01

கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்

(சிந்தியல் வெண்பா)
இருவிழி காண இறங்கும் உருவாய்
இருசெவி கேட்க இறங்கும் ஒலியாய்
ஒருமனம் ஆழங் கொளும்.

கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்

(அளவியல் வெண்பா)
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
--நாலடியார், 65

புளிமா புளிமா புளிமா கருவிளம்
தேமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்

(பஃறொடை வெண்பா)
கதிரினைக் காணார் நிலவினைக் காணார்
சதியும் பதியும் தனியாய்ப் பயணம்
விடியும் பொழுதில் விளையும் அலுவல்
முடியும் பொழுதினில் முற்றிருள் சூழும்
கடிநகர் வாழ்வின் கயம்.

கருவிளம் தேமா கருவிளம் தேமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா கருவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்

ஒழுகிசைச் செப்பல் சான்றுகள்
குறள் வெண்பா

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு.
--திருக்குறள் 040:06

கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா
கருவிளம் தேமா பிறப்பு

(சிந்தியல் வெண்பா)
பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.
--கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.90

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் நாள்.

(அளவியல் வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

(பஃறொடை வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

*****

11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்று

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள்
(வெண்பா)

(குறள் வெண்பா)
கீழ்வரும் சொற்சான்று நோக்கத் தெரியுமே
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட
நாளெனும் வாய்பாடா கும். ... 2

(சிந்தியல் வெண்பா)
கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள்
நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால்
ஆவது என்று உணர். ... 3

படுஎனும் சொல்லில் தனிநிரை யாம்மலர்
பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால்
நேர்பெனும் காசா வது. ... 4

தகாஎனும் சொல்லில் தனிநிரை காண
தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 5

(குறள் வெண்பா)
சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு
சொல்லு, கதவு என. ... 6

(பஃறொடை வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்களாம்
கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு
சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்க
எல்லாமே நேர்பெனும் காசு. ... 7

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள்
முடங்கு குவவு விரைந்து அலங்கு 
பலவு இரவு உறாது இராது
அனைத்தும் நிரைபு பிறப்பு. ... 8

*****

11.06 நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வள்ளுவரின் சான்று சில. ... 1

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்]

வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ... [மலர்]

இருள்சேற் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு]

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு]

*****

11.07 நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள்
(வெண்பா)

(சிந்தியல் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப்
பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது
இறுதி இரண்டடிகள் இங்கு.

(குறள் வெண்பா)
நாள்மலர் காசு பிறப்பு அனைத்து
வகைச்சான்றும் கீழே உள.

கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே
வேறி ரண்டு தவிர்த்து.

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு.
[தனிக்குறில்: நேர்: நாள்]
---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி 
கலைச்சியை இகழ்ந்து பாடியது.

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
[தனிக்குறிலொற்று: நேர்: நாள்]

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
[தனிநெடில்: நேர்: நாள்]

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
[தனிநெடிலொற்று: நேர்: நாள்]

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
[குறிலிணை: நிரை: மலர்]

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேள் இட்ட கலம்.
[குறிலிணையொற்று: நிரை: மலர்]

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
[குறில்நெடில்: நிரை: மலர்]

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
[குறில்நெடிலொற்று: நிரை: மலர்]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.
[தனிக்குறிலொற்று+உகரம்: 
நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.]

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
[தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு]

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
[தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு]

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
[குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு]

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிடம் எல்லாம் சிறப்பு.
[குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு.
[குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு]
---பழமொழி நானூறு 68

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.
[குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

*****

Wednesday, May 3, 2017

11.02 வெண்பாவின் சீர்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
11.02 வெண்பாவின் சீர்
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
அகவற்சீர் நால்வகை யாகும் இயற்சீர்
தகவுடன் வெண்பா வுரிச்சீர் எனப்படும்
காய்ச்சீர்கள் நால்வகையும் காணலாம் வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீராம் ஈற்றடியில்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

தேமா புளிமா கருவிளம் கூவிளமென்
றேமாப் பெயர்-இயற்சீர் ஈரசையாம் நான்குடன்
ஈரசை யோடொரு நேரசை சேரும்
இருவகைக் காய்ச்சீர்கள் நான்கென்று மொத்தமாய்
எண்வகைச் சீர்களும் வந்தமரும் வெண்பாவே
ஒண்பாவாய் நிற்கும் ஒளிர்ந்து. ... 2

(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
கனிச்சீர்கள் நான்கையும் காணாவெண் பாவென்(று)
அனிச்ச மலராய் அறி. ... 3

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
காளமே கப்புலவர் பாடியவிப் பாடலில்
ஆள்கனிச் சீரோ முதலடிச் சீர்மூன்றில்?
தாளம் தவறா? தளைதட்டல் உள்ளதா?
வாளைமீன் போலோர் வழுக்கு! ... 4

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

நாத(ர்)முடி என்றால் இடையின வொற்றாம்-இர்
யாதொன்றும் கொள்ளா(து) அலகெனவே - நாதமுடி;
தாளம் தவறாத் தளைதட்டா வெண்பாவாம்
காளமேகர் வெண்பாக் கவி. ... 5

11.03 வெண்பாவில் ’விளாங்காய்ச்சீர்’

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நிரைநடு வாய்வரும் காய்ச்சீர் இரண்டு
கருவிளங் கூவிளங் காய்ச்சீர் எனவே
நிரையிற் குறிலிணை, ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிற ழாது
நிரையிற் குறில்நெடில், ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிறழ் வாமென
அன்றுநம் முன்னோர் அறிந்துவெண் பாவினில்
நன்றல என்றிவ் வகைப்படும் சீர்கள்
பெரிதும் தவிர்த்தே இயற்றினர் வெண்பா
அரிதெனக் காண்போம் அவை. ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழ்வரும் வெண்பாவில் நாற்சீர் விளாங்காயென்
றாழ்ந்துவரும் ஓசையை ஆய்ந்தறி யும்செவியால்
மாற்றுவோம் பாவை வகயுளி யாகவோ
மாற்றெனச் சீரமைத் தோ. ... 2

ஒருவிகற்பக் குறட்பா
(சிர்கள் 1, 3, 5, 6-இல் விளாங்காய்)

வேர்ப்பலாவின் தீங்கனி வெட்டியேநாம் தேனுடன்
சேர்த்தவாறே உண்பமேயென் றே.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி செய்து விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலா வின்தீங் கனிவெட்டி யேதேனைச்
சேர்த்தவா றேயுண்போம் நாம்.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி யின்றி விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலாத் தீங்கனி வெட்டியே தேன்தடவிச்
சேர்த்தபடி உண்போமே நாம்.

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

11.04 வெண்பாவின் ஈற்றுச்சீர்
(வெண்பா)

அசைச்சீர் வாய்பாடு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நால்வகையில்
பண்பட்டு வந்துநிற்கும் ஓரசையாய் - உண்டாகும்
நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாட்டில்
நால்வகையில் நிற்கும் இசைந்து. ... 1

அசைச்சீரின் அசைகள்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்,நிரை நேர்பு நிரைபு எனவொன்றில்
ஓரசையாய் நிற்கும் உவந்து. ... 2

நாள் மலர்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்தனியே வந்திட நாளென் றறிக
நிரைதனியே வந்தால் மலர். ... 3

[உதாரணம்: நாள்: கு, தா, கல், சொல்]
மலர்: உள, உளம், கலா, கலாம்]

காசு பிறப்பு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம்
சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன்
சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு. ... 4 

தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில்,
அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை
மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது
காசெனும் நேர்பா வது. ... 5

[காசு உதாரணம்: கொக்கு, மூப்பு, வீடு]

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு
நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 6

[பிறப்பு உதாரணம்: சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து]

(இருவிகற்பக் குறள் வெண்பா)
குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு
உயிர்மெய் எழுத்துகள் காண். ... 7

ஈற்றடியில் வாய்பாட்டுச் சொல்
(இருவிகற்பக் குறள் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்? ... 8

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நாளெனும் சொல்நேர் எனவே வரலாம்
மலர்ச்சொல் வரலாம் தனிநிரை யாவதால்
காசுச்சொல் ஆகும்நேர் பின்குற் றுகரம்
பிறப்புச்சொல் ஆகுநிரை பின்குற் றுகரம்
இரண்டும் வருமீற்றுச் சீர். ... 9

(இருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பு. ... 10

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராக நாள்மலர் கூடாது
ஓரசைச்சீர் என்றவை யாவதால் - வேறுவகைப்
பாவிலும் வாரா கலிப்பா உறுப்பான
அம்போத ரங்கம் தவிர்த்து. ... 11

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு
வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ
இங்கு முதலடியில் உள்ளது போலவே
ஈரசைச் சீர்களாகும் காண். ... 12

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வேறடியில் காசு பிறப்பு வரலாம்
நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும்
ஈரசைச் சீர்களாகும் காண். ... 13

ஈற்றுச் சீர் சான்றுகள்
(ஒருவிகற்பக் குறள் வெண்பா)

நாள்மலர் காசு பிறப்பென ஈற்றுச்சொல்
ஆள்குறட் பாவெழுது வோம். ... 14

மடம்பயிர்ப்பு நாணம் மனவச்சம் இன்றி
நடமாடும் பெண்டிரிந் நாள்.

மங்கை தலையமரும் மல்லிகைப் பூவெனில்
மங்கையும் தானே மலர்?

படும்பாட்டில் இல்லாள் பதுக்கியே சேர்த்தாள்
கடுகுச் சிமிழினுள் காசு!

எருமைகள் மேய்த்தாலும் ஈசன்பேர் சொல்லப்
பெருமைகள் சேரும் பிறப்பு.

*****