Sunday, November 27, 2016

6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பிடு வோமே
எழுந்திடும் எடுத்துக் காட்டுகள் தந்தே
ஆசிரி யத்தளை அகவற் றளையெனப்
பேசப் படுவதும் நினைவிற் கொள்க. ... 1

நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரொன் றகவற் றளையே தொடரத்
தேமா தேமா தேமா தேமா 
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே. ... 2

நேரொன்றாசிரியத் தளை: தேமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி ... 3

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையொன் றகவற் றளையே தொடரக்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே. ... 4

நிரையொன்றாசிரியத் தளை: கருவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே. ... 5
[விசி=கட்டு]

இயற்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் வெண்டளை இசைந்தே தொடரக்
கீழ்வரும் நிரல்கள் தனிதனிச் சுற்றில்
பயிலும் வகையில் அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா 
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்.
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 6

இயற்சீர் வெண்டளை: புளிமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும். ... 7

இயற்சீர் வெண்டளை: கூவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே. ... 8

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம் 
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே. ... 9

வெண்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெண்சீர் வெண்டளை விளங்கித் தொடரக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 10

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாமே. ... 11

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே. ... 12

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே. ... 13

கலித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கலித்தளை துள்ளிக் கலித்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் 
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் 
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 14

கலித்தளை: புளிமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாமே. ... 15

கலித்தளை: கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாமே. ... 16

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாமே. ... 17

ஒன்றிய வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி 
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி 
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 18

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே. ... 19

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே. ... 20

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே. ... 21

ஒன்றாத வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி 
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி 
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே. ... 22

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும். ... 23

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே. ... 24

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே. ... 25

(நிலைமண்டில ஆசிரியப்பா)
விண்ணும் மண்ணும் நிகழ்த்தும் விந்தையைப்
எண்ணில் ஏழாம் தளைகளில் படித்தே
ஒவ்வொரு வகையிலும் ஒலிவே றாதலை
செவ்விதின் உணர்க விரிவாய்ப் பின்னே. ... 26

*** *** ***

6.04. தளை வாய்பாடுகள், சான்றுகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.04. தளை வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மேலே கண்ட தளைவகை விவரம்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கிட நினைவிற் கொள்வமே. ... 1

மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர்த் தளைவாய் பாடே. ... 2

காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகுமே
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடே. ... 3

6.05. எழுதளைச் சான்றுகள்
நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
மாமுன் நேரென ஒன்றும் அடிகளாய்
"வெற்றி வாழி வீரம் வாழி"
"உண்மை வாழி ஊக்கம் வாழி"
எனவரும் அடிகளில் சீரிடைத் தளைகள்
நேரொன் றாசிரி யத்தளை யாமே. ... 1

வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிதாய்
நேரசைச் சீர்களே பயிலக் காண்க. ... 2

(குறள் வெண்செந்துறை)
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
விளம்முன் நிரையாய் ஒன்றும் அடியென
"மங்கல குணபதி மணக்குளக் கணபதி!"
எனவரும் அடியினில் சீரிடைத் தளைகள்
நிரையொன் றாசிரி யத்தளை யாமே. ... 3

மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா 
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டும் வந்தே
அகவல் ஓசை இருவகை அமைதல்
விரிவாய்ப் பின்னோர் இயலிற் காண்போம். ... 4

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்தே கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளின் ஓட்டம் தடைப்பட
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் மிகவும் காணலாம். ... 5

அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவினில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்குமே. ... 6

இருவகை அகவல் இயற்சீர் வெண்டளை
விரவும் கீழுள சங்கப் பாடல்
சீர்களை அலகிட் டுப்பெயர் நோக்கிக்
கண்டே பாடலின் சீரிடை அடியிடை 
பயிலும் தளைவகை இக்கணம் அறிவீர். ... 7

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
--குறுந்தொகை, செம்புலப் பெனீரார், 40

இயற்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.

கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகளைக் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்தே வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க. ... 8

மேலுள குறட்சீர் வாய்பா டுகளின்
பேர்வகை நிரலே இயற்றளை பயிலும்
குறள்வெண் பாவென் றாதல் காண்க
சீர்களின் பெயர்களை இவ்விதம் நிரலில்
ஓரடி அமைத்தே ஓசை அறியலாம். ... 9

வெண்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிள~காய் தேமாங்காய் காசு

(குறள் வெண்செந்துறை)
வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில் 
சீரிடையே அடியிடையே காய்முன்நேர் வந்திடவே. ... 10

கலித்தளை
(குறள் வெண்செந்துறை)

காய்ச்சீர்முன் நிரைவரவே கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடையே பயில்வதனை எளிதாக அறியலாமே. ... 11

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய 
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள் 

ஒன்றிய வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 12

யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‍ஆகமப் 
---கி.வா.ஜ.

யோ/கத்/தினர் உரை/மறை/யினர் 
ஞா/னத்/தினர் நய/‍ஆ/கமப் 

ஒன்றாத வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)

கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 13

மந்தாநிலம் வந்தசைப்ப...
செந்தாமரை நாண்மலர்மிசை
---யா.கா.வி.

*****

Friday, November 25, 2016

6.03. எழுவகைத் தளைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.03. எழுவகைத் தளைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்முன் சீர்பிணைத் தெழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்தே ஏழெனும் வகையாய்
எழுவது அறிதல் எளிதென் றாமே. ... 1

சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டே. ... 2

இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா விற்கோர் தனிச்சீர் இலையெனில்
கலிப்பா விற்கோர் தனித்தளை யுண்டே. ... 3

நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கெனும் வகையில் அமைந்து வருமே
ஒன்றாத் தளைவகை மூன்றெனும் வகையிலே. ... 4

எழுதளைப் பெயர்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றும் தளைகள் நால்வகைப் பெயர்களாம்
நேரொன்று நிரையொன்று ஆசிரி யத்தளை
வெண்சீர் வெண்டளை ஒன்றிய-வஞ் சித்தளை. ... 5

ஒன்றாத் தளைகள் மூவகைப் பெயர்களாம்
இயற்சீர் வெண்டளை கலித்தளை மற்றும்
ஓன்றாத வஞ்சித் தளையென் றாமே. ... 6

ஈரசைச் சீர்நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை. ... 7

மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே. ... 8

கனிச்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சியே. ... 9

பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தளைகளின் பெயர்களை நோக்கி யறிந்தால்
ஆசிரியப் பாவகைத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவகைத் தளைகள் இரண்டும்
என்றே எழுவகை பிரிதல் காண்பமே. ... 10

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே. ... 11

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீர் காய்ச்சீர் அல்லது கனிச்சீர்
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்தே வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்றறி வோமே.... 12

*****

6.00. தளை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

6.00. தளை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தளைதல் என்றால் தகைத்தல் பிணித்தல்
தளைத்தல் எனினும் கட்டுதல் ஆகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு விலங்கு கயிறு சிலம்பென
ஒட்டிப் பிணைத்தே இசைந்திட வைக்குமே. ... 1

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்றுரு வாவது போலே
சீர்களை இசைவரச் செய்யுளில் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே. ... 2

6.01. தளையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடிகளில்
சீரிடை நின்றே சீர்களைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பே தளையெனப் படுமே.
சீர்களைத் தளைக்கும் தளையெனும் உறுப்பே
செய்யுளின் ஓசையைச் செவியுறச் செய்யுமே. ... 1

செய்யுளில் தளையால் எழுந்திடும் ஓசைகள்
செய்யுள் இயலில் தனித்தோர் இயலாய்
விரிவாய்ப் பின்னர் விளங்கிக் கொள்வமே. ... 2

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் ஆகும்
எதிரில் வருவது வரும்சீர் ஆகுமே. ... 3

இடம்வலம் எழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகுமே. ... 4

’பிறவிப் பெருங்கடல்’ எனும்சீர்த் தொடரில்
’பிறவிப்’ பென்பது இடப்புறம் நின்றசீர்
’பெருங்கடல்’ என்பது வலப்புறம் வரும்சீர். ... 5

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

சீர்க ளிரண்டு தளைப்பது காண
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே. ... 6

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
தளைகள் அடிகளுக் கிடையிலும் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே. ... 7

6.02. தளை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம். ... 1

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

நேர்முன் நேர்வர ஒன்றுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

(தனிச்சொல்)
ஏனெனில் 

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
நின்ற சீரது இயற்சீ ராகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது தேமா புளிமா வாகுமே

அல்லது

நின்ற சீரது மூவசை யாகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது நான்கில் ஒருகாய்ச் சீராம்
வருவது யாதொரு சீரென் றாயினும்
வரும்சீர் முதலசை நேரசை யாகுமே

இதனால்

நேர்முன் நேரசை ஒன்றுதல் குறிக்க
மாமுன் நேரென, காய்முன் நேரென
நின்றசீர் வருமசை நோக்கிக் குறிப்பரே.
தளைவாய் பாடில் ’முன்’எனும் சொல்லுக்
கெதிர்வரும் என்றே பொருள்கொள வேண்டுமே. ... 2

’நாராய் நாராய் செங்கால் நாராய்’
(தேமா தேமா தேமா தேமா )
எனவரும் செய்யுள் அடியின் தளைகளில்
நின்றசீர் மாச்சீர் வரும்சீர் நேர்முதல்
மாமுன் நேரென ஒன்றுதல் காண்க. ... 3

’கற்றதனால் ஆய’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் காய்ச்சீர் வரும்சீர் நேர்முதல்
காய்முன் நேரென ஒன்றுதல் காண்க. ... 4

நிரைமுன் நிரைவர ஒன்றுதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் முன்நிரை யொன்றும் போது
நின்ற சீரது விளச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
விளம்முன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 5

’பழம்படு பனையின்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் விளச்சீர் வரும்சீர் நிரைமுதல்
விளம்முன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 6

நின்ற சீரது கனிச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
கனிமுன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 7

(ஆசிரியத் தாழிசை)
’புனல்பொழிவன சுனையெல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் கனிச்சீர் வரும்சீர் நிரைமுதல்
கனிமுன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 8

நேர்நிரை முன்வர ஒன்றாமை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை யெனும்வாய் பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் யெனும்வாய் பாடும்
தளைகள் அறிய மிகப்பயன் படுமே. ... 9

(ஆசிரியத்துறை)
’அகர முதல’ எனும்சீர்த் தொடரில்
மாமுன் நிரையெனும் ஒன்றாமையும்
’ஒருநோக்கம் பகல்செய்ய’ எனும்சீர்த் தொடரில்
காய்முன் நிரையெனும் ஒன்றாமையும் காண்க. ... 10

’மலர்மிசை ஏகினான்’ எனும்சீர்த் தொடரில்
விளம்முன் நேரெனும் ஒன்றாமையும்
’வரைமூடுவ மஞ்செல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
கனிமுன் நேரெனும் ஒன்றாமையும் காண்க. ... 11

*****