கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.03. எழுத்தின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுத்தெனப் படுவது எழுதப் படுவது
என்றே இலக்கண நூல்குறிப் பாமே. ... 1
எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
உயிரும் மெய்யும் சார்பும் என்றே.
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
முதலைச் சார்ந்தது சார்பெழுத் தாமே. ... 2
முதலாய் வருவது மொத்தம் முப்பது
உயிரெழுத் துகளாய்ப் பன்னிரண் டாமே
மெய்யெழுத் துகளாய்ப் பதினெட் டாமே. ... 3
3.04. உயிரின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
உயிரெழுத் துகளில் மூவகை யுண்டு
குறிலும் நெடிலும் அளபெடை யுமென்று.
குறில்கள் ஐந்தாம்: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழாம்: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.
அளபெடை வகைகள் அறிவோம் பின்னே. ... 1
3.05. மெய்யின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
மெய்யெழுத் துகளில் மூவகை யுண்டு
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே. ... 1
கசட தபற வல்லின மாகும்
ஙஞண நமன மெல்லின மாகும்
யரல வழள இடையின மாகும்
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே. ... 2
3.06. சார்பின் வகைகள்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
சார்பெழுத் தென்பது வகையில் பத்தே
உயிர்மெய் ஆய்தம்
உயிரள பெடையும் ஒற்றள பெடையும்
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன அந்தப் பத்து வகையே. ... 1
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலெழுத் துகளைச் சார்ந்தே வருதலால்
சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
மேலுள பத்து வகையாய் வருமே. ... 2
3.07. உயிர்மெய்
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்தே
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாய்
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகுமே
சான்றாக
ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
கௌ-எனக் க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே. ... 1
3.08. ஆய்தம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உயிரில் மெய்யில் உயிர்மெய்யில் சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்தே
முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
என்று வேறு பெயர்களும் பெறுமே. ... 1
முன்னொரு குறிலுடன் பின்னொரு வல்லினம்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
சான்றாய் அஃது, எஃகு, எனவரும்.
தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய் தமாகும். ... 2
*****
No comments:
Post a Comment