கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
3.00 அடிப்படை உறுப்புகள்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவிற் கொணர
அளவும் பாவும் அடியும் சீரும்
அசையும் எழுத்தும் மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழென் றறிவீர். ... 1
[பார்க்க 2.01.05]
(தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்களைத் தளைத்தலால் எழுந்திடும் ஒலியாய்ச்
சீர்களின் இடையே பயில்வரும் தளையும்
செய்யுள் அடிகள் மனதில் நிற்கச்
செய்யும் எதுகை மோனை போன்ற
தொடைகளும் அடிப்படை உறுப்பாய்ச் சேருமே.
இங்ஙனம்
மாத்திரை, எழுத்தும், அசையும் சீரும்
தளையும் அடியும் தொடையும் என்னும்
உறுப்புகள் யாவும் உறுப்பிய லாமே. ... 2
3.01. மாத்திரை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாத்திரை என்பது கால அளவாம்
கண்ணிமை கைநொடிச் செயலின் காலம்
மாத்திரை ஒன்றாம் என்பதை அறிக. ... 1
எழுத்தொலிக் காலமாய் யாப்பின் மாத்திரை
எழுத்தினம் பொறுத்தே எழுந்திடும் அளவில்;
எழுத்தின் மாத்திரை இவ்வகை யாகுமே. ... 2
உயிரின் குறிலும் உயிர்மெய்க் குறிலும்
ஒருமாத் திரையெனும் அளவில் ஒலிக்க,
உயிரின் நெடிலும் உயிர்மெய் நெடிலும்
இருமாத் திரையெனும் அளவில் ஒலிக்க,
மெய்யெனும் ஒற்றுள எழுத்துகள் மற்றும்
ஆய்த எழுத்தும் அரைமாத் திரையாம். ... 3
உயிரள பெடையின் மாத்திரை மூன்றே
ஒற்றள பெடையொலி ஒருமாத் திரையாம்
ஐ-ஔ காரக் குறுக்கம் ஒலியும்
அளவில் ஒருமாத் திரையாய் ஒலிக்கும்
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
அரைமாத் திரையெனும் அளவில் ஒலிக்கும்
மகர ஆய்தக் குறுக்கம் இரண்டும்
அளவில் கால்மாத் திரையாய் ஒலிக்குமே. ... 4
3.02. எழுத்து
(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாய்
எழுத்தெனும் சொல்லது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே. ... 1
எண்ணம் உருப்பெறத் தோன்றுவ தெழுத்தாம்.
உருவறு ஒலியாய்க் கேட்டதை வரைந்தே
உருவுடன் பார்க்க வைப்ப(து) எழுத்தே. ... 2
எண்ணம் அலைமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணம் விரிந்தே காண்மனம் நிறைக்கும்.
எழுத்தென் பதின்றேல் இலக்கியம் இல்லை. ... 3
எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்குவ தாமே
எழுத்தே முதலில் ஒலிவரி வடிவே. ... 4
எழுது வதையும் எழுதி யதையும்
எண்ணம் உருப்பெறச் செய்யும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்தே. ... 5
எண்ணென் பவேனை யெழுத்தென் பவென்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போதில்
இலக்கணம் என்றே பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமே
என்றே ஔவையும் குறள்வழிக் கூறுவார். ... 6
எழுதும் எழுத்து வரிவடி வென்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரம் சுட்டுமே. ... 7
கண்மை யெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனத்தில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனத்தில் எழுதுமே. ... 8
*****
No comments:
Post a Comment