கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
1. உறுப்பியல்
1.00. கடவுள் வாழ்த்து
கணபதி தியானம்
(கலிவிருத்தம்: கூவிளம் விளம் விளம் விளம்)
வெண்துகில் உடுத்தவர் வெளியெனப் பரந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் விளங்குநாற் கரத்தினர்
கண்ணுறும் ஓங்காரர் கழல்தியா னித்துநான்
பண்ணுநூல் பொருளுடன் பயனுறப் பணிவனே! ... 1
1.01. அவையடக்கம்
(அளவியல் நேரிசை வெண்பா)
கற்றறிந்தோர் நூல்களைச் சற்றேனும் கற்பதில்
பெற்றசில செய்திகளின் பெற்றியை - மற்றவரும்
பார்த்துப் படித்தறிந்து பாக்கள் முனையவே
யாத்தேன் ’கவிதையில் யாப்பு’. ... 1
கற்றதைச் செய்முறையாய்க் காட்டும் குழந்தைநான்!
குற்றம் பொறுத்தே குறைநிறை கொண்டென்றன்
நூலைப் படித்துநீர் நூதனமாய் யாப்பறிந்தே
கால்நிற்கச் செய்வீர் கவி! ... 2
1.02. பாயிரம்
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)
யாப்பின் இலக்கணம் ஏதோ பிலாக்கணமாய்
ஆப்பை அசைத்த அரியெனவே - மூப்பில்
புதுக்கவிதை என்றே புனையும் கலைப்பு
பொதுவாகும் இற்றைநாள் போக்கு. ... 1
[அரி = குரங்கு; மூப்பில் = பிடிவாதத்தில்]
மென்பொருள் யாப்பதில் மேவும் இலக்கணம்
பின்பற் றுவதில் பெருமையைக் காண்போர்
இலக்கணச் செய்யுள் இயற்று வதிலே
மலைத்தே விலகலெவண் மாண்பு? ... 2
வெண்பா அகவல் விதரணையில் ஓசையின்
பண்பிலே மேவும் பவித்திரம் - எண்ணம்
எழுத்தில் இசைந்தே எழுவதுபோல் இந்த
ஒழுங்கற்ற பாவிலுறு மோ? ... 3
உடைத்தே இடுவதை ஓசையுடன் சொன்னால்
வடிவுறும் யாப்பில் வனப்பாய்க் - கடைத்தேறும்
உள்ளத்தில் சொற்களின் ஓசை மனனமாய்த்
தெள்ளியே காணும் திரு. ... 4
கலைத்தே எழுதியும் கட்ட அகவல்
கலையென் றிணைக்குறள் காணுமே! சற்றுநீர்
சோம்பலை நீக்கியே சொல்வதைக் கட்டினால்
காம்பீரம் கொள்ளும் கவி. ... 5
யாப்பை உரைநடை யாகத் தருவதன்
கோப்பில் உறும்சொல் குறைத்துநான் - யாப்பைக்
கவிதையில் செய்வதில் கல்லாய் மனதில்
கவிந்தே நிலைக்கும் கருத்து. ... 6
அறிமுகமே இன்னூல் அறுதியென் றில்லை
பிறநூல் பழம்நூல் பிடித்தே - அறிவின்
வறுமையைப் போக்கும் வளங்களைக் கண்டே
நிறைவதைக் கொள்ளுவீர் நேர். ... 7
1.03. செய்யுளும் கவிதையும்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
குறிப்பு
வெறும்பா (blank verse) என்பது செந்தொடையாகக்
குறிப்பிட்ட பாவகை/பாவினம் பயிலும் செய்யுள்.
செந்தொடை என்பது, எதுகை, மோனை போன்ற தொடைகள்
இன்றியே சொற்களின் இயல்பான தன்மையால் சொல்லும், ஒலியும்,
பொருளும் அழகுற அமைவது.
யாப்பெனச் சொல்வது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்த தியாப்பே. ... 1
[பிறந்தது + யாப்பே = பிறந்ததியாப்பே = குற்றியலிகரப் புணர்ச்சி]
எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்தே அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். ... 2
செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் சிலநேர் சொல்லே. ... 3
கவிதை என்பது கவினுற விதைத்தல்
கவிஞர் உணர்வைக் கண்படக் கலித்தல்
பாட்டென் பதுவாம் பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. ... 4
[கலித்தல் = ஒலித்தல்]
மலர்மருக் கொழுந்தும் மருவித் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். ... 5
மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் நாரெனச் சொன்னால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம். ... 6
யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாம் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் கருப்பொருள் மனமே. ... 7
கவிதையில் மனத்தைக் கலந்துரை யாட
கவிதையும் மனத்தைக் கவர்ந்துயிர் கொள்ள
செய்யுள் யாக்கையைக் செறிவுடன் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
ஊடக ஓசையை, முழுவதும் துய்ப்போம். ... 8
*** *** ***
வ்வாவ்வ் சூப்பர் ஸார்
ReplyDelete8667896325 சற்குணன் திருச்சி
ReplyDelete