Wednesday, March 29, 2017

8.53. முரண்தொடை: புதிய பார்வை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.53. முரண்தொடை: புதிய பார்வை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
(ச. அகத்தியலிங்கம் கட்டுரையிலிருந்து)

தமிழரி மாவெனத் தமிழர் அறியும்
முனைவர் அகத்திய லிங்கனார் கட்டுரை
முரண்தொடை புதிய பார்வையில் விளக்குமே. ... 1

பொருள்முரண் என்பது பருப்பொருள் முரணுடன்
பொருள்முரண் என்பது சொற்பொருள் சேர்வெனப்
பொருந்தும் இலக்கணம் காட்டும் முரண்வகை
அரிமா அகத்திய லிங்கனார் ஆய்வரே. ... 2

1. எதிர்ச்சொல் முரண்வகை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதிர்ச்சொல் முரண்வகை யெனவே சொற்கள்
கனவினால் காண்டலின் என்னும் இரண்டும்
கீழ்வரும் குறளில் அமைவது காண்க. ... 3

கனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர் ... 
--திருக்குறள் 122:03

2. எதிர்மறைச் சொல்முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதிர்மறைச் சொல்முரண் கீழ்வரும் குறளில்
அடக்கம் அடங்காமை என்விரு சொற்களில்
பயின்று வருவதைப் பார்த்தறி வீரே. ... 4

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
--திருக்குறள் 013:01

3. பிறவகைச் சொல்முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அருள்-பொருள் சொற்கள் கீழ்வரும் குறளில்
எதிர்ச்சொல் அல்ல எதிர்மறை அல்ல
எனினும் அவையும் முரணெனப் புலவர்
கொள்வதால் பிறவகைச் சொல்முர ணாமே.
அவ்வுல கம்சொல் இவ்வுல கம்சொல்
எதிர்ச்சொல் முரணாய் அமைவதும் காண்க. ... 5

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லா தியாங்கு.
--திருக்குறள் 025:07

4. பெயரடை முரண்
(பெயரடை = adjective)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பெயர்ச்சொல் ஒன்றை மேலும் விரித்துப்
பண்பை உணர்த்தும் பதமாய்ச் சேர்வது
பெயரடை அல்லது பெயருரிச் சொல்லெனும்
பெயரினைத் தாங்கும் இலக்கணக் கூறாம்.
பெயரடைச் சொற்கள் பெருமை மிக்க
முரண்வகை யாகி மனத்தில் நிற்குமே. ... 6

சான்றுகள்
(சிறுகோட்டுப் பெரும்பழம்)
வேரல் வேலி வேர்கோட் பலவின் 
சார னாட செவ்வியை யாகுமதி  
யாரஃ தறிந்திசி னோரே சாரற் 
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் 
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!
--குறுந்தொகை 18

(சிறியகள் பெரியகள்)
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணும் மன்னே
--புறநானூறு 235

(நல்லொழுக்கம்-தீயொழுக்கம்)
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
--திருக்குறள் 014:08

(சிறுகாப்பிற் பேரிடத்த)
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.
--திருக்குறள் 075:04

5. வினையடை முரண்
(வினையடை = adverb)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வினைச்சொல் ஒன்றை மேலும் விரித்துப்
பண்பை உணர்த்தும் பதமாய்ச் சேர்வது
வினையடை அல்லது வினையுரிச் சொல்லென
விளையும் பெயர்கொளும் இலக்கணக் கூறாம்.
வியையடைச் சொற்கள் வியனுறும் சொற்களாய்
முரண்வகை யாகி மனத்தில் நிற்குமே. ... 7

சான்றுகள்
(கடிதோச்சி-மெல்ல வெறிக)
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.
--திருக்குறள் 057:02

6. எழுவாய் முரண்
(எழுவாய் = subject)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பெயரெனும் முதல்வேற் றுமைகொளும் சொல்லே
எழுவாய் என்பப்படும் என்பதை நோக்கி
எழுவாய் முரண்தொடை எழுவ துண்டே. ... 8

சான்று
(அடக்கம்-அடங்காமை)
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
--திருக்குறள் 013:01

அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.
--திருக்குறள் 043:10

(சிறுமை-பெருமை)
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்.
--திருக்குறள் 046:01

7. பயனிலை முரண்
(பயனிலை = predicate)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுவாய்ச் சொல்லைக் குறிபிற சொற்கள்
பயனிலை என்னும் இலக்கணக் கூறாம்
பயனிலை முரணுதல் பயனினை முரணே. ... 9

(ஆறும்-ஆறாதே)
தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
--திருக்குறள் 013:09

(பெரியர்-சிறியர் = எழுவாய் முரண்;
செய்வார்-செய்கலாதார் = பயனிலை முரண்)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06

8. செயப்படுபொருள் முரண்
(செயப்படுபொருள் = object)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வினைமுத லதுதொழில் பயனடைச் சொல்லே
செயப்படு பொருளென விளக்கப் படுமே
செயப்படு பொருள்முரண் பிறவகை யுடன்வரப்
பின்வரும் குறளில் கண்டறி வீரே. ... 10

(கல்லாதார்-கற்றார் = எழுவாய்-செயப்படுபொருள் முரண்;
மேல்-கீழ் = ஒரூஉ முரண்)
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
--திருக்குறள் 041:09

9. வேற்றுமை முரண்
(வேற்றுமை = case)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செயப்படு பொருள்முத லாயின வாகப்
பெயர்ப்பொருள் வேறு படுத்தும் வேற்றுமை
அமைந்து முரணுதல் வேற்றுமை முரணே. ... 11

சான்றுகள்
இரண்டாம் வேற்றுமை முரண்
(உறங்குவது-விழிப்பது)
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
--திருக்குறள் 034:09

மூன்றாம் வேற்றுமை
(ஒழுக்கத்தின்-இழுக்கத்தின்)
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.
--திருக்குறள் 014:07

நான்காம் வேற்றுமை
(பெருமைக்கும்-சிறுமைக்கும்)
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.
--திருக்குறள் 051:05

ஐந்தாம் வேற்றுமை
(நல்லினத்தின்-தீயினத்தின்)
நல்லினத்தி னூங்குந் துணையில்லைத் தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.
--திருக்குறள் 046:10

ஆறாம் வேற்றுமை
(பிறன்-தன்)
பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.
--திருக்குறள் 019:06

ஏழாம் வேற்றுமை
(இம்மையிலும்-மறுமையிலும்)
சிறுமைய் ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்.
--திருக்குறள் 010:08

10. பலவகை முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றின் மிக்கதாய்ப் முரண்பல வகையில்
வந்தே அமைவது பலவகை முரணாம்
இங்ஙன் அமைந்த குறள்பல உண்டே. ... 12

சான்றுகள்
இரண்டு முரண்கள்

(பெரியர்-சிறியர் = பெயரடை, கடையிணை;
செய்வர்-செய்கலாதார் = பயனிலை)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06

(பிறர்க்கு-தமக்கு = நான்காம் வேற்றுமை;
முற்பகல்-பிற்பகல் = பெயரடை)
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.
--திருக்குறள் 032:09

மூன்று முரண்கள்
(மேல்-கீழ் சொற்களை வைத்தே மூன்று முரண்!)
மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.
--திருக்குறள் 098:03

குறிப்பு:
முனைவர் அகத்தியலிங்கம் கட்டுரை மின்தமிழ் கூகிள் குழுமத்தில்:
https://groups.google.com/forum/#!msg/mintamil/QNuU9gGhh7w/Akgfcz9CNNkJ

*****

Tuesday, March 28, 2017

8.50. முரண்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.50. முரண்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணென
மொழியும் தொல்காப் பியநூற் பாவினால்
முரண்தொடை இலக்கணம் விளக்கப் படுவதில்
பொருளெனச் சொல்வது சொல்லின் பொருளிலை
பொருளெனச் சொல்வது பருப்பொருள் குறிக்குமே. ... 1

அடியின் முதற்சீர் சொல்லோ பொருளோ
அடியின் பிறசீர் களிலோ அன்றி
பிறவடி களில்வரும் முதற்சீ ருடனோ
முரண்படத் தொடுத்து நயம்பெற அமைவது
முரணெனும் தொடைவகை யெனப்பெயர் பெறுமே. ... 2

பேரா சிரியர் தொல்காப் பியவுரை
ஆராய்ந் தருளும் சொற்பொருள் முரண்தொடை
ஓரைந் தென்னும் வகையில் ஒன்றுமே. ... 3

சொற்பொருள் முரணே ஐவிகற் பத்தன
சொல்லொடு சொல்லும் பொருளொடு பொருளும்
சொற்பொருள் சொல்லொடும் சொற்பொருள் பொருளொடும்
சொற்பொருள் சொற்பொரு ளுடனே முரணென
உற்ற விகற்பம் ஐந்தில் வருமே. ... 4

சான்றுகள்
செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்
[செம்மை-கருமை -- பருப்பொருள் குறிக்காததால் சொல்முரண்]

தீமேய் திறல்வரை நுழை‍இப் பரிம்,எலிந்து
நீர்நசை பெறா‍அ நெடுநல் யானை
[தீ-நீர் -- பருப்பொருள் குறிப்பதால் பொருள்முரண்]

பெருமலைக் குறுமகள் பிறிதோர்த்து நடுங்கலிற்
சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு
[பெருமலை-சிறுமை -- சொற்பொருள் சொல்முரண்]

செந்தீ யன்ன சினந்த யானை
நீர்நசை பெறா‍அக் கானற்
[செந்தீ-நீர்நசை -- சொற்பொருள் பொருள்முரண்]

ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி
செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச்
[ஓங்குமலை-தாழ்கருவி, செங்குரல்-பைங்கிளி 
சொற்பொருள் சொற்பொருள் முரண்]

8.51. முரண் விகற்பங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுகை போலவே முரண்வகைத் தொடையும்
அடியிணை பொழிப்பு ஒரூஉ கூழை
மேற்கது கீழ்க்கது வாய்முற் றென்று
எண்வகை விகற்பம் பெற்று வருமே. ... 1

அடிமுரண் சான்று
இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில்
நிலவுகுவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னின் அன்ன நுண்டா திறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே.
--யா.கா.மேற்கோள்

எழுவகை முரண் விகற்பம்
புனைவுச் சான்று

பெண்ணும் ஆணும் நிகரெனக் கொள்வோம் ... [இணை]
மண்ணில் தெரியும் வானம் ஞானிக்கு ... [பொழிப்பு]
என்றோ மறந்தது நினைவில் இன்று ... [ஒரூஉ]
கிழக்கும் மேற்கும் தெற்கில் ஒடுங்கும் ... [கூழை]
அன்னை மற்றும் தந்தை குழந்தை ... [மேற்கதுவாய்]
எலியும் பூனையும் அஞ்சும் நாயிடம் ... [கீழ்க்கதுவாய்]
மனமும் வாக்கும் காயமும் உயிரும் ... [முற்று]

8.52. முரணுக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முதல்தர முரண்வகை தவிர வேறு
இரண்டாம் வகையின முரண்களு முண்டு:
கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென
இவையும் கூறுப ஒருசா ரோரே. ... [யாப்பருங்கலம்] ... 1

கடையிரு சீரும் முரண்படின் கடைமுரண்
கடைச்சீர் இரண்டாம் சீர்வரின் பின்முரண்
இடையிரு சீர்வரின் இடைப்புணர் முரணே
கடைச்சீர் மூன்றிலும் கடைக்கூழை முரண்வரும். ... 2

சான்று
மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு
கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
கோதையிற் றாழ்ந்த ஓங்குவெள் ளருவி
காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
இவ்வடிகளில் கடைவகை முரண்கள் நான்கும்
செவ்விதின் பயின்று வருவது காண்க.

*****

8.43. சொல் மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.43. சொல் மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொல்காப் பியம்பின் தொன்னூல்கள் மோனையாய்ச்
சொல்லாத இம்மோனை தொன்றமிழிற் பயின்றாலும்
கட்டளைக் கலித்துறை நூற்செய்த தாமோதரர்
கட்டுவண்ண நூற்செய்த தண்டபாணி சுவாமிகள்
பல்வகை மோனையில் இவ்வகை மோனையைச்
சொல்மோனை கள்ள மோனை பெயரிட
உள்ளடங்கு மோனையெனத் திருமுருக னார்சொல
முன்னை நூல்களில் முனைவர் திருஞான
சம்பந்தம் தந்த சான்றும் இலக்கணமும்
இங்குக் கண்டுநாம் இதனொலி யறிவமே. ... 1

[இப்பாடலில் சொன்ன நூல்கள்:
’கட்டளைக் கலித்துறை’, சி.வை. தாமோதரம் பிள்ளை
’அறுவகை இலக்கணம்’, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
’பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி’, முனைவர் ப. திருஞானசம்பந்தம்]

அடிமுதல் எழுத்து பிறசீர் முதலுறாதே
அடிமுதல் எழுத்து பிறசீர் நடுவுறும்
சொல்முதல் எழுத்தாய்ச் சொல்மோனை அமையுமே. ... 2

சொல்மோனை இலக்கியச் சான்றுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சொல்மோனை இலக்கியச் சான்றுக ளாகச்
சொல்லும் முனைவர் கீழ்வரும் அடிகளை
வல்லிதின் வரைவர் தம்நூல் தனிலே. ... 3

கடுங்கதிர் வெங்-கானம் பல்பொருள்-கட் சென்றார்
(கைந்நிலை 15:3 க-கா-க)

விடல்-வேண்டும் தன்கண் வெகுளி யடல்-வேண்டு
(நான்மணிக். 13:3 வி-வே-வே)

வார்குர ரேனல் வளை-வாய்க் கிளிகவரு
(ஐந்திணை எழு. 13:1 வார்-வ)

மானந் தலை-வருவ செய்பவோ - யானை
(நாலடியார் 198:2 மா-வ)

பசுபதியார் தரும் கம்பன் சான்றுகள்:
உலகம் யாவையும் தாம்-உள வாக்கலும்
தலைவர் அன்னவர்க் கே-சரண் நாங்களே.

சொல்மோனைப் புனைவுச் சான்று
(கலிவிருத்தம்)

கல்லை அடித்து-கற் பனை-காண் உருபோலச்
சொல்லைப் பிடித்த-சொற் கவிதை யின்-சுடர்
வில்லம் பாய்-விழுந்து உள்ளுறை பொருள்-விளக்கக்
கல்லா தவன்-களிப் பெய்து-கா ணும்-கவிதை.

8.44. மோனைக்குப் புறனடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளவடி கடைச்சீர் தொடங்கியே அமைய
அளவிடும் மோனை வகைகள் புறனடை
சீர்நிலை மோனைப் புறனடை யென்றே
நால்வகை மோனைகள் நவிலக் காண்பமே. ... 1

கடையிரு சீர்களில் சீர்நிலை மோனை
கடையிணை மோனையென் றழைக்கப் படுமே.
சீர்கள் நான்கில் இரண்டில் மோனை
பின்மோ னையென் றழைக்கப் படுமே.
இறுதிச் சீர்கள் மூன்றில் மோனை
உறுவது கடைக்கூழை மோனை யாமே
நடுவிரு சீர்களில் அமையும் மோனை
இடைப்புணர் மோனையென் றழைக்கப் படுமே. ... 2

ஒன்று நான்கு சீர்களில் ஒரூஉ
ஒன்று மூன்று நான்கு மேற்கெதுவாய்
ஒன்று இரண்டு நான்கு கீழ்க்கதுவாய்
என்றே அமையும் மோனைகள் முதற்சீரில்
ஒன்றி அமைவதால் புறனடை யாகா
எனவே புறனடை மோனை நான்கே. ... 3

புறனடை மோனை இலக்கியச் சான்றுகள்
திருக்குறள்

கடையிணை மோனை (சீர்கள் 4-3)
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா (10)
ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளாற்கோமா (25)
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் (38)

பின்மோனை (சீர்கள் 4-2)
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி (17)
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் (55)
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த (61)

கடைக்கூழை மோனை (சீர்கள் 4-3-2)
ஒருமையு ளாமபோ லைந்தடக்க லாற்றி (126)
இலனென்று தீயவை செய்யற்க செய்யி (205) 
இவறலு மாண்பிறந்த மானமு மாணா (432)

இடைப்புணர் மோனை (சீர்கள் 3-2)
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் (62)
குழலினி தியாழினி தென்பதம் மக்கண் (66)
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் (147)

புறனடை மோனை புனைவுச் சான்று
(கலிவிருத்தம்)

காலம் வலிகளை ஆற்றுவது ஆறுதல் ... (கடையிணை மோனை)
பாலம் அமைக்க மீண்டும் அன்புறும் ... (பின்மோனை)
ஓல மனத்தில் வாழ்வில் வளம்வர ... (கடைக்கூழை மோனை)
ஆலம் விழுகள் வேரென மண்ணிறங்கும். ... (இடைப்புணர் மோனை)

*****

8.45. நெடிலடி, கழிநெடிலடி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அறுவகை இலக்கண நூலும் உரையும்
சிறுவகை மோனையின் சீர்களைப் பேசும்
நெடிலடி கழிநெடில் மோனை அமைப்புகள்
தொடும்பா வுரையின் செய்திகள் அறிவோம். ... 1

அளவடிச் சீர்களில் ஒன்றிலும் மூன்றிலும்
வளமாய் அமையும் பொழிப்பு மோனையே
அளவடி மோனையில் சிறப்பென் றறிக. ... 2

நெடிலடி கழிநெடில் மோனை பலவெனில்
உடன்வரும் பொழிப்பும் ஒலிநயம் கூட்டும்
நெடிலடி மோனை ஒன்றில் ஐந்தில்
கழிநெடி லடிவரக் காணும் மோனைகள்
பொழிவாய் பாடைப் பொறுத்து வருமே. ... 3

அரையடி வாய்பா டறுசீர் விருத்தம்
இருமுறை அதுவே வந்தால் மோனை
சீர்கள் ஒன்றிலும் நான்கிலும் அமையும். ... 4

சான்று
(அறுசீர் விருத்தம்:
. மா மா காய் அரையடி)

வெய்யிற் கேற்ற நிழலுண்டு 
. வீசும் தென்றற் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
. கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
. தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
. வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
--கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

அரையடி வாய்பா டறுசீர் விருத்தம்
நான்குகாய் மாதேமா எனவரும் அடிகளில்
மோனை ஒன்றிலும் ஐந்திலும் வருமே. ... 5

சான்று
(அறுசீர் விருத்தம்:
. நான்கு காய் மா தேமா)

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே 
. ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும்
. மேவு மாயின்
பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப்
. பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர்
. சிறப்புக் கண்டார்.
--பாரதியார்

எழுசீர் விருத்த மோனை பொதுவில்
வழுவற ஒன்றாம் ஐந்தாம் சீர்களில்
எழுசீர் மிக்கென் றெழுதும் விருத்த
மோனை மூன்று வருதல் வேண்டும்
எண்சீர் விருத்தம் என்றால் மோனை
ஒன்று ஐந்து ஏழுசீர் களிலாம். ... 6

சான்றுகள்
எழுசீர் விருத்தம் 
(மோனை சீர்கள் 1-5)

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே 
. அன்பினில் விளைந்தவா ரமுதே 
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
. புழுத்தலைப் புலையனேன் தனக்குச் 
செம்மையே ஆய சிவபதம் அளிஹ்த்த 
. செல்வமே சிவபெரு மானே 
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
. எங்கெழுந் தருளுவ தினியே.
-திருவாசகம், மாணிக்க வாசகர்

எண்சீர் விருத்தம் 
(மோனை சீர்கள் 1-5-7)

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி 
. நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப் 
. பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் 
காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!
. கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே 
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
. அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே! 
--பட்டினத்தார்

*****

8.42. அனுமோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.42. அனுமோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அநுவெனும் வடசொல் அனுவாம் தமிழில்
அனுவதன் பொருளென அண்மை, ஒத்ததாம்
உயிருடன் உயிர்மெய் ஓசையில் எழுத்தில்
முழுதும் ஒன்றாமல் ஒத்த ஒலிகளில்
ஒன்றிட வருவது அனுமோனை யாமே. ... 1

அனுமோனை வாய்பாட்டு வெண்பா
(பஃறொடை வெண்பா)

அனுமோனை வாய்பா(டு) அகத்தில் நிலைக்க
வெனவொரு பண்டைநூல் வெண்பாவொன் றுண்டு:
அகரமோ டாகாரம் ஐகாரம் ஔகான்
இகரமோ டீகாரம் எஏ - உகரமோ
டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
ஆகாத வல்ல அனு. ... 2
--யா.வி. உரை மேற்கோள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்னோர் தந்த-அனு மோனை யெழுத்துகள்
பின்னுள வாறு பிரிதல் காண்க
அஆஐஔ இஈஎஏ உஊஒஓ உயிரெழுத்துகள்
இவ்வுயிர் ஏறிய உயிர்மெய் எழுத்துகள்
ககாகைகௌ கிகீகெகே குகூகொகோ போல்வருமே. ... 3

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சிலமெய் எழுத்துகள் சலுகை பெறுவன,
அவற்றில் தொடங்கும் சொற்களின் குறைவால்:
ச-வும் த-வும் ஓரினம்.
ம-வும் வ-வும் ஓரினம்.
ந-வும் ஞ-வும் ஓரினம்.
யாவிற்(கு) இஈஎஏ மோனை என்பரே. ... 4

புலவர் குழந்தை, பசுபதி யவர்கள்
பரிவது போல இன்றைய வழக்கில் 
ய,ஜ,ர,ஹ,ல முதலெழுத் தென்றே
சொற்கள் பற்பல வருவத னாலே
யா-விற்கு அஆ-ஐஔ மோனை என்றும்
ஜ-வுக்கு ச-த-மோனை என்றும்
ர-ல-விற்கு இ-ஈ-எ-ஏ-மோனை என்றும்
ஹ-விற்கு அ-ஆ-ஐ-ஔ மோனை என்றும்
இன்றைய பாக்களில் எண்ணப் படுமே. ... 5

8.42. அனுமோனைச் சான்றுகள்: உயிர் எழுத்துகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மேலுள அனுமோனை வகைகள் யாவையும்
கீழுள சான்றுகள் குறிப்பது கான்க
மோனை எழுத்துகள் அடைப்புக் குறிகளில். ... 1

அகதிக்கு ஆகாயம் துணையாகும். [அ-ஆ]
அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா? [அ-ஐ]
அஞ்சில் படித்தாலே ஔவைசொல் புரியும். [அ-ஔ]

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் [ஆ-அ]
ஆடுமாடு கொம்பிரண்டு ஐயம் பிடாரிக்கு மூன்று. [ஆ-ஐ]
ஆகாரம் குறைப்பதே தன்னில் ஔடதம். [ஆ-ஔ]

இரந்தோர்க்கு ஈவது உடையார் கடனே. [இ-ஈ]
இடுகிற தெய்வம் எங்கும் இடுமே. [இ-எ]
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் [இ-ஏ]

ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். [ஈ-இ]
ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. [ஈ-எ]
ஈயம் பிடித்தவன் ஏது சொல்லினும் கேளான். [ஈ-ஏ]

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாமோ? [உ-ஊ]
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர் சுகமே. [உ-ஒ]
உறுதியான காரியும் ஓர்போதும் கெடாது. [உ-ஓ]

ஊனினால் உறவு பூணினால் அழகு. [ஊ-உ]
ஊசி ஒருமுழத் துணியாவது கொடுக்கும். [ஊ-ஒ]
ஊருக்கெல்லாம் ஓர்வழி உனக்கோர் வழியா? [ஊ-ஓ]

எங்கும் மடமிருக்க இருக்க இடமில்லை. [எ-இ]
என்ணம் இருந்தால் ஈவது இயலும். [எ-ஈ]
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லாக்கு. [எ-ஏ]

ஏது பிரியம்? இல்லாதது பிரியம். [ஏ-இ]
ஏழை நெஞ்சில் ஈரம் உண்டு. [ஏ-ஈ]
ஏரி பெருகினால் எங்கும் பெருக்கு. [ஏ-எ]

ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக்காசு. [ஐ-அ]
ஐம்பொறி ஆட்சிகொள். [ஐ-ஆ]
ஐப்பசி முதல்நான் ஔவை நோன்பு. [ஐ-ஔ]

ஒருவன் அறிந்தால் உலகம் அறியும். [ஒ-உ]
ஒருபிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம். [ஒ-ஊ]
ஒருகை தட்டினால் ஓசை எழும்புமோ? [ஒ-ஓ]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் [ஓ-உ]
ஓதுவார்க்கு ஊரும் உழுவார்க்கு நிலமும் இல்லையா? [ஓ-ஊ]
ஓயா மழையும் ஒழியாக் காற்றும். [ஓ-ஒ]

ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை. [ஔ-அ]
ஔவையின் ஆத்திச் சூடி குழந்தைகள் அறியும். [ஔ-ஆ]
ஔவை படித்து ஐயம் நீக்குவோம். [ஔ-ஐ]

8.42. அனுமோனைச் சான்றுகள்: உயிர்மெய் எழுத்துகள்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே [க-கா]
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் [க-கை]
கந்தனின் மதமே கௌமாரம் என்பது. [க-கௌ]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் [கா-க]
காக்கை கையில் வந்து அமருமோ? [கா-கை]
காக்கை கௌவிச் சென்ற வறுவல். [கா-கௌ]

கிளியும் கீரியும் ஒன்றாய்க் காணுமோ? [கி-கீ]
கிளியின் பேச்சால் கெட்டது காரியம். [கி-கெ]
கிளியின் பேச்சைக் கேட்பாயோ மன்னா? [கி-கே]

கீழே விழுந்த கிழவன் மாண்டான். [கீ-கி]
கீழே விழுந்தும் கெடுப்பதை விடாதவன். [கீ-கெ]
கீழே விழுந்தால் கேட்பார் இல்லை. [கீ-கே]

குறும்பு செய்தாள் கூடைக் காரி. [கு-கூ]
குலமகட் கழகு கொழுநனைப் பேணுதல். [கு-கொ]
குடந்தை நகரில் கோயில்கள் பலவுண்டு. [கு-கோ]

கூட்டுக் குடும்பத்தில் உள்ளது நன்மை. [கூ-கு]
கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் தெய்வம். [கூ-கொ]
கூடி வாந்தால் கோடி நன்மை. [கூ-கோ]

கெடுவான் கேடு நினைப்பான். [கெ-கே]
கெஞ்சிய கிழவிக்குக் கொடுத்தால் குறையுமோ? [கெ-கி]
கெட்டுப் போன கீரையைத் தூக்கியெறி. [கெ-கீ]

கேணி வெட்டக் கிரையம் என்ன? [கே-கி]
கேள்வி கேட்காமல் கீழ்ப்படி வாயா? [கே-கீ]
கேட்டு அறிவது கெடுதல் ஆகுமோ? [கே-கெ]

கைவினை கரவேல். [கை-க]
கையால் இயல்வது காலால் முடியுமோ? [கை-கா]
கைமாற்று வாங்கில் கௌரவம் குறையும். [கை-கௌ]

கொற்றவன் குடியே கோபத்தால் கெடுமே. [கொ-கு]
கொற்றவன் கூற்றுக்கு மறுபேச் சில்லை. [கொ-கூ]
கொண்டதே கோலமென அலைவார் சிலபேர். [கொ-கோ]

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். [கோ-கு]
கோவிலில் கூடி விழாவினை நடத்துவோம். [கோ-கூ]
கோவிலில் கூட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. [கோ-கொ]

கௌரவருடன் சேர்ந்தாலும் கர்ணனின் கீர்த்தி குன்றவில்லை. [கௌ-க]
கௌவை காணாது வாழ்தல் இனிது. [கௌ-கா]
கௌவருக்கு சூது கைவந்த கலையாம். [கௌ-கை]

8.42. அனுமோனைச் சான்றுகள்: இதர ஓரின எழுத்துகள்

சட்டி கெட்டியா என்று தட்டிப் பார்த்தான். [ச-த]
தள்ளிட முடியாது, சட்டம் கழுதையென்று. [த-ச]

மயிலவள் நடந்தாள் வயல்வழி யாக. [ம-வ]
வந்தான் மன்னன் போரினில் வாகைசூடி. [வ-ம]

நன்றி உள்ள விலங்கு ஞுமலி. [ந-ஞு; ஞுமலி=நாய்]
ஞானம் கூடிட நாடுவோம் குருவினை. [ஞா-நா]

யவனர் இல்லாது சரித்திரம் உண்டா? [ய-இ]
இவனே அவனது யசமானன். [இ-ய]

யக்ஞத்தில் முனிவருக்கு ஈடுபாடு அதிகம். [ய-ஈ]
ஈமக் கடனுக்கோர் யஜ்ஞம் உண்டு. [ஈ-ய]

யவனர் எப்படி நுழைந்தனர் தெரியுமா? [ய-எ]
எவ்வளவு பெருமை யசோதைக்குக் கண்ணனால்! [எ-ய]

யக்ஞம் ஏது தருமம் குன்றிட? [ய-ஏ]
ஏரினால் உழுதவன் யந்திரத்தால் உழுகிறான். [ஏ-ய]

ஜப்பான் நாட்டார் சட்டப்படி நடப்பர். [ஜ-ச]
சத்ரம் சாமரத்துடன் ஜனித்தது குழந்தை. [ச-ஜ]

ஜப்பான் நாட்டில் தஞ்சம் புகுந்தான். [ஜ-த]
தங்கல் நேரிட்டது ஜனனியின் தந்தைக்கு. [த-ஜ]

ரணகளத்தில் இவனோ கூற்றுவன் போல. [ர-இ]
இவனது ரத்தம் என்னவகை தெரியுமா? [இ-ர]

ரத்தம் ஈந்தால் உயிர்கள் பிழிக்கும். [ர-ஈ]
ஈச்சம் பழத்தால் ரத்தம் பெருகும். [ஈ-ர]

ரங்க சுவாமி எங்குதான் இல்லை? [ர-எ]
எழுந்தாள் தேவலோக ரம்பை போல. [எ-ர]

ரவாதோசைக்கு ஏது பணமென் பையில்? [ர-ஏ]
ஏனென்பேனோ ரயிலில் பயணிக்க? [ஏ-ர]

ஹரியென்றும் எழுதலாம் அரியென்றும் எழுதலாம். [ஹ-அ]
ஹரஹர என்பது பெரிதோ ஆண்டிக்கு இடுவது பெரிதோ? [ஹ-ஆ]
ஹரிக்கும் உண்டு ஐவகைத் தொழில்கள். [ஹ-ஐ]
ஹரிபற்றி உண்டோ ஔவையின் பாட்டில்? [ஹ-ஔ]

இத்தனை சலுகைகள் தொடைகளில் இருந்திட
மரபுக் கவிதையில் எதுவும் இயன்றிட
புதுமைக் கவிதை மோகம் ஏனோ?
ஆதலால் மரபிலே ஆக்குவோம் புதுமை! ... 2

*****

Thursday, March 9, 2017

8.38. மூவகை மோனை

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

8.38. மூவகை மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிமுதல் எழுத்தொன்றும் மோனை வகைகளில்
அடிதோறும் சீர்முழுதும் ஒன்றுதல் தலையாகு
அடிதோறும் முதலெழுத் தொன்றுதல் இடையாகு
அடிதோறும் இனத்தில் மாத்திரையில் ஒன்றும்
பிறவகை மோனை கடையாகு மோனை. ... 1

தலையாகு மோனைச் சான்று
(குறள் வெண்பா)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
--திருக்குறள் 035:10

தலையாகு எதுகையில் முதலெழுத் தொன்றாது
தலையாகு மோனையில் அதுவும் ஒன்றி
வந்த சீரே வருமென் றறிக. ... 2

சான்று
தலையாகு எதுகை
அறவாழி யநணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது.
--திருக்குறள் 001:07

தலையாகு மோனை:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
--திருக்குறள் 003:06

இடையாகு மோனைச் சான்று
(குறள் வெண்பா)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:09

மாவும் புள்ளும் வதிவயிற் படர 
மாநீர் விரிந்த பூவும் கூம்ப 
மாலை தொடுத்த கோதையும் கமழ 
மாலை வந்த வாடை 
மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே 
--யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்

கடையாகு மோனைச் சான்று
(ஆ-ஓ நெடில்மோனை)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் 
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை
--முதுமொழிக்காஞ்சி

புனைவுச் சான்றுகள்
(குறள் வெண்செந்துறை)

தலையாகு மோனை
வண்ணம் பலவாய் மலர்கள் இருப்பினும்
வண்ணம் ஒன்றாம் மரகத இலைகள்.

இடையாகு மோனை
வண்ணம் பலவாய் மலரும் சோலையில்
வண்டுகள் இனிதே மதுவுண் டொலிக்கும்.

கடையாகு மோனை (வ-ப: உயிர்மோனை)
வண்ணம் பலவாய் மலரும் சோலையில்
பண்ணும் ஒலிக்கப் பறவைகள் கூட்டம்.

8.39. இருவிகற்ப மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முன்னிரு அடிகளில் மோனை யொன்றும்
பின்னிரு அடிகளில் மோனை வேறும்
நாலடிச் செய்யுளில் வந்தே அமைவதற்
கேலும் பெயர்-இரு விகற்ப மோனை
இரண்டடி மோனையும் இதன்பெய ராமே.
ஈரடி களுக்கோர் மோனை யென்றே
நாலடி மேற்படும் செய்யுளில் வரலாம். ... 1

இலக்கியச் சான்றுகள்
இருவிகற்ப/இரண்டடி மோனை

(உயிர்மோனை: பா-கே, டா-பா)
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்
டாவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
---ஔவையார், நல்வழி 22

(அதே எழுத்து ஒன்றும் செம்மோனை, நெடில்மோனை)
புலமிக் கவரைப் புலமை தெளிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
’பாம்பறியும் பாம்பின் கால்.’
--பழமொழி நானூறு 7

புனைவுச் சான்றுகள்
இருவிகற்ப/இரண்டடி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மாலை நேரம் சாலை யோரம்
மாலை யாகும் மலர்கள் போல
மங்கையர் பள்ளி மைதா னத்தில்
மங்கும் கதிரொளி மழையில் நனைந்தே.

8.40. இடையிட்ட மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகள் தோறும் தொடர்ந்தோ அல்லது
அடிகள் இரண்டுக் கொருமுறை யென்றோ
அடிகளில் மோனை தொடர்ந்து வராமல்
அடியொன் றுவிட்டு மற்றதில் காணும்
அடிமோனை யின்பெயர் இடையிட்ட மோனை. ... 1

ஒற்றை, இரட்டைப் படிநிரல் எனவின்றி
ஒன்றில் மட்டும் வருவதும் உண்டே
ஓரெழுத் தெனவரும் செம்மோனை யின்றி
வேறு வகையில் அமைவதும் உண்டே. ... 2

இலக்கியச் சான்றுகள்
இடையிட்ட மோனை

பழமொழி நானூறு 
(இன்னிசை வெண்பா)

இம்மைத் தவமும் அறமும் எனவிரண்டும்
தம்மை யுடையர் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
’தம்மைதாம் ஆர்க்குங் கயிறு’. ... 371

ஒற்றைப்படை அடிகளில்
(இன்னிசை வெண்பா)

நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காவலரே காணின்
’உலக்கைமேல் காக்கை’ என்பார். ... 157

இரட்டைப்படை அடிகளில்
(நேரிசை வெண்பா)

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட பிரிவின் றதனால்
’திருவினும் திட்பம் பெறும்’. ... 33

புனைவுச் சான்றுகள்
இடையிட்ட மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

காதல் கொள்ளும் கன்னியும் காளையும்
தாதை தாயின் சம்மத முடன்தம்
காதற் பயிர்மனக் களத்தில் வளர்த்தால்
தாதுறும் மலரெனத் தம்முளம் கனியுமே.

8.41. வழி மோனை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளில் சீர்களில் என்றே பாடல்
அடிகள் முழுதிலும் முதலெழுத் தொத்து
நடைபயில் மோனை வழிமோனை யாமே. ... 1

இலக்கியச் சான்று
வழிமோனை
(இன்னிசை வெண்பா)

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
--நாலடியார், 39

புனைவுச் சான்றுகள்
வழிமோனை
(இன்னிசை வெண்பா)

காலைக் கதிரொளியில் கட்டுண்டு கள்வண்டு
காலைக் கடிமலர் காவினிற் கண்டிறக்குங்
காலையங்கு கண்விழித்த காமலர் கட்டவிழ்ந்து
காலையிளங் காற்றாடும் கா.

மாலை மயக்கில் மடுவினில் மஞ்சுநிற
மாலை மடலவிழ மன்னும் மகிழ்ச்சியில்
மாலை மனம்துதிக்க மாவுறை மார்பனின்
மாலை மலர்நீக்கும் மாசு.

*****