Monday, August 15, 2016

3.09. அளபெடை யென்பது

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.09. அளபெடை யென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளபென் பதுவாம் மாத்திரை அளவு
அளபெடுத் தலாமே மாத்திரை நீளுதல்
அளபெடுத் தேதன் மாத்திரை யளவில்
நீண்டொலிப் பதுவே அளபெடை யாகும்
அளபெடுத் தல்குறி அளபெடு எழுத்தின்
இனவெழுத் தொன்றாய்த் தொடர்ந்து வருமே. ... 1

செய்யுளில் ஓசை குறையும் எனிலே
உயிர்நெடில் எழுத்துகள் ஏழென வருவதும் 
ஙஞண நமன வயலள பத்தும் 
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும் 
தத்தம் மாத்திரை நீண்டொலிப் பதுவே
அளபெடை யென்றே அழைக்கப் படுவதாம்
அளபெடை இருவகை: உயிரே ஒற்றே. ... 2

3.10. உயிரளபெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நெடில்பின் தக்க குறிலென வந்தே
ஒசை நிரப்பும் உயிரள பெடையிது
மூன்று மாத்திரை யாயொலிப் பதுவாம்
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே. ... 1

அளபெடுக்கும் போதோர் இனவெழுத் தேறுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ. ... 2

3.11. செய்யுளிசை அளபெ>டை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத் தேவர
செய்யுளிசை அளபெடை எனும்பெயர் பெறுமே. ... 1

கீழ்வரும் சான்றுகள் அளபெடை நோக்க
’ஆஅதும் என்னுமவர்’ என்றே முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்றே இடையிலும்,
’நல்ல படாஅ’ என்றே கடையிலும்
செய்யுளிசை அளபெடுத் துறுவது காண்க. ... 2

அதும்-தொழாள்- படா-எனும் சொற்கள் தம்முள்
ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
ஈரசைச் சீர்க ளாக்கி யெழுதி
சீரும் தளையும் குன்றா திருக்கச்
செய்முயல் வாமே செய்யுளிசை யளபெடை. ... 3

சான்றுகள்
திருக்குறள் 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

திருக்குறள் 55
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

திருக்குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

3.12. இன்னிசை அளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை எனும்பெயர் பெறுமே. ... 1

’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’ 
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத் தனவே. ... 2

சான்றுகள்
திருக்குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

திருக்குறள் 1079
உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.

3.13. சொல்லிசை அளபெடை
(நேரிசை ஆசிரியப்பா)

ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றெனவே நின்று
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை எனும்பெயர் பெறுமே. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
எனும்பொருள், சொல்லிசை அளபெடைச் சான்றுகள். ... 2

(இணைக்குறள் ஆசிரியப்பா)
"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்றே
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்றே. ... 3

சான்றுகள்
திருக்குறள் 1263
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்.

தொல்காப்பியம், பொருள்.அகத். 39
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ 
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி

நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

திருக்குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

3.14. ஒற்றள பெடை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுளில் ஓசை குறையு மிடத்து
மெய்யெழுத் தொன்று மிகுந்தொ லித்தே
ஒசை நிரப்புதல் ஒற்றள பெடையாம். ... 1

செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய-இடை கடையள பெடுத்தே
நீண்டொ லித்திடும் பதினோ ரெழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததனால் மீண்டும் எழுதுவர். ... 2

தனிக்குறில் குறிலிணைக் கீழ்வரும் ஒற்றே
இடைகடை அளபெடுத்து மிக்கு வருமே.
’எஃஃகிலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள். ... 3

’எஃஃகிலங்கிய’ என்றது தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க. ... 4

சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளோசை நிறைத்தல் காண்க. ... 5

சான்றுகள்
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
வெஃஃகுவார்க் கில்லைவீடு.

சிதம்பரச் செய்யுட் கோவை 12
பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்

அளபெடைச் சீர்களை அலகிடும் போது
தளைகள் தட்டில் அலகு பெறுமே
தளைகள் ஒன்றின் அலகு பெறாதே. ... 6

அளபெடை மாத்திரை யாதென நோக்கில்
உயிரள பெடையெனில் மும்மாத் திரையிலும்
ஒற்றள பெடையெனில் ஒருமாத் திரையிலும்
தனதியல் பொலியின் மிக்கு வருமே. ... 7

*****

Wednesday, August 10, 2016

3.03. எழுத்தின் வகைகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.03. எழுத்தின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுத்தெனப் படுவது எழுதப் படுவது 
என்றே இலக்கண நூல்குறிப் பாமே. ... 1

எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
உயிரும் மெய்யும் சார்பும் என்றே.
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
முதலைச் சார்ந்தது சார்பெழுத் தாமே. ... 2

முதலாய் வருவது மொத்தம் முப்பது
உயிரெழுத் துகளாய்ப் பன்னிரண் டாமே
மெய்யெழுத் துகளாய்ப் பதினெட் டாமே. ... 3

3.04. உயிரின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
உயிரெழுத் துகளில் மூவகை யுண்டு
குறிலும் நெடிலும் அளபெடை யுமென்று.
குறில்கள் ஐந்தாம்: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழாம்: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.
அளபெடை வகைகள் அறிவோம் பின்னே. ... 1

3.05. மெய்யின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
மெய்யெழுத் துகளில் மூவகை யுண்டு
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே. ... 1

கசட தபற வல்லின மாகும்
ஙஞண நமன மெல்லின மாகும்
யரல வழள இடையின மாகும்
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே. ... 2

3.06. சார்பின் வகைகள்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

சார்பெழுத் தென்பது வகையில் பத்தே
உயிர்மெய் ஆய்தம் 
உயிரள பெடையும் ஒற்றள பெடையும்
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் 
என்பன அந்தப் பத்து வகையே. ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முதலெழுத் துகளைச் சார்ந்தே வருதலால்
சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
மேலுள பத்து வகையாய் வருமே. ... 2

3.07. உயிர்மெய்
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்தே
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாய்
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகுமே
சான்றாக
ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
கௌ-எனக் க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே. ... 1

3.08. ஆய்தம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

உயிரில் மெய்யில் உயிர்மெய்யில் சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்தே 
முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
என்று வேறு பெயர்களும் பெறுமே. ... 1

முன்னொரு குறிலுடன் பின்னொரு வல்லினம்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
சான்றாய் அஃது, எஃகு, எனவரும்.
தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய் தமாகும். ... 2

*****

Saturday, August 6, 2016

3.00 அடிப்படை உறுப்புகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

3.00 அடிப்படை உறுப்புகள்

(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

முன்பே சொன்னதை நினைவிற் கொணர
அளவும் பாவும் அடியும் சீரும்
அசையும் எழுத்தும் மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழென் றறிவீர். ... 1
[பார்க்க 2.01.05]

(தனிச்சொல் பெற்ற நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்களைத் தளைத்தலால் எழுந்திடும் ஒலியாய்ச்
சீர்களின் இடையே பயில்வரும் தளையும்
செய்யுள் அடிகள் மனதில் நிற்கச்
செய்யும் எதுகை மோனை போன்ற
தொடைகளும் அடிப்படை உறுப்பாய்ச் சேருமே.

இங்ஙனம்

மாத்திரை, எழுத்தும், அசையும் சீரும்
தளையும் அடியும் தொடையும் என்னும்
உறுப்புகள் யாவும் உறுப்பிய லாமே. ... 2

3.01. மாத்திரை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மாத்திரை என்பது கால அளவாம்
கண்ணிமை கைநொடிச் செயலின் காலம்
மாத்திரை ஒன்றாம் என்பதை அறிக. ... 1

எழுத்தொலிக் காலமாய் யாப்பின் மாத்திரை
எழுத்தினம் பொறுத்தே எழுந்திடும் அளவில்;
எழுத்தின் மாத்திரை இவ்வகை யாகுமே. ... 2

உயிரின் குறிலும் உயிர்மெய்க் குறிலும்
ஒருமாத் திரையெனும் அளவில் ஒலிக்க,
உயிரின் நெடிலும் உயிர்மெய் நெடிலும்
இருமாத் திரையெனும் அளவில் ஒலிக்க,
மெய்யெனும் ஒற்றுள எழுத்துகள் மற்றும்
ஆய்த எழுத்தும் அரைமாத் திரையாம். ... 3

உயிரள பெடையின் மாத்திரை மூன்றே
ஒற்றள பெடையொலி ஒருமாத் திரையாம்
ஐ-ஔ காரக் குறுக்கம் ஒலியும்
அளவில் ஒருமாத் திரையாய் ஒலிக்கும்
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
அரைமாத் திரையெனும் அளவில் ஒலிக்கும்
மகர ஆய்தக் குறுக்கம் இரண்டும்
அளவில் கால்மாத் திரையாய் ஒலிக்குமே. ... 4

3.02. எழுத்து
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாய்
எழுத்தெனும் சொல்லது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே. ... 1

எண்ணம் உருப்பெறத் தோன்றுவ தெழுத்தாம்.
உருவறு ஒலியாய்க் கேட்டதை வரைந்தே
உருவுடன் பார்க்க வைப்ப(து) எழுத்தே. ... 2

எண்ணம் அலைமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணம் விரிந்தே காண்மனம் நிறைக்கும்.
எழுத்தென் பதின்றேல் இலக்கியம் இல்லை. ... 3

எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்குவ தாமே
எழுத்தே முதலில் ஒலிவரி வடிவே. ... 4

எழுது வதையும் எழுதி யதையும்
எண்ணம் உருப்பெறச் செய்யும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்தே. ... 5

எண்ணென் பவேனை யெழுத்தென் பவென்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போதில்
இலக்கணம் என்றே பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமே
என்றே ஔவையும் குறள்வழிக் கூறுவார். ... 6

எழுதும் எழுத்து வரிவடி வென்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரம் சுட்டுமே. ... 7

கண்மை யெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனத்தில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனத்தில் எழுதுமே. ... 8

*****

Thursday, August 4, 2016

2.00. செய்யுள் உறுப்புகள்

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

1. உறுப்பியல்
2.00. செய்யுள் உறுப்புகள்

(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பதின் நான்கில்
சொல்வதைக் கவிதை மரபில் முனையும்
வல்லோர் நாடும் அடிப்படை உறுப்புகள்
வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே. ... 1

மாத்திரை, எழுத்தும், அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம்,  பயன்,மெய்ப் பாடு, 
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்துடன், இயைபு,
புலனும், இழைபும் என்னும் இவையே
தொல்காப் பியம்தரும் முப்பதின் நான்கே. ... 2

2.01. செய்யுள் இயற்ற
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுள் என்ப தியாதெனக் கேட்பின்
மெய்யில் தங்கும் உயிரை நோக்கிச்
செய்யுள் இலக்கணம் நன்னூல் சொலுமே. ... 1

பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள். ... 2

தோலும் இரத்தமும் தசையும் சதையும்
எலும்பும் மச்சையும் வீரியம் என்னும்
எழுவகைத் தாதுவால் இயன்றிடும் உடல்போல்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
என்னும் நால்வகைச் சொற்களில் அமைந்து
அகம்புறம் பொருளினை அணிபெற விளக்கிக்
கல்வியில் வல்லோர் உணர்வினை உரைத்தல்
செய்யுள் என்னும் இலக்கிய வடிவே. ... 3

எழுத்தால் ஆவது சொல்லென் பதனால்
எழுத்தும் சொல்லும் பொருளும் அணியும்
பழுதற நான்காய் நடப்ப தியாப்பே. ... 4

செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே. ... 5

பாவே செய்யுளாய்ப் பாடப் படுவது
அந்தப் பாவும் அளவுடன் வருவது;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாமே. ... 6

இந்த ஏழு உறுப்புகள் யாவும்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் செவ்விதின் கட்டும்.
வழக்கென் பதுவே பேச்சு வழக்காம்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே. ... 7

2.02. வரிகள் அமைக்க
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுள் அமைக்க ஏழெனும் உறுப்பெனில்
வரிகள் அமைக்கப் பன்னி ரண்டாம்
வனப்பு தொடையே, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, இழைபு, புலனே 
என்பன அந்தப் பன்னி ரண்டாம். ... 1

(குறள் வெண்செந்துறை)
வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு. ... 2

விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டெனும் உறுப்பே. ... 3

வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி. ... 4

எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகென் பதுவாம். ... 5

தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு. ... 6
[பொற்பு = பொலிவு, அழகு]

விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும். ... 7

வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
குறிப்பால் பயின்று சொல்வது புலனாம். ... 8

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபெனச் சொல்வரே. ... 9

2.03. பொருள் உணர்த்த
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பதிமூன் றாமே.
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்றிவை பதிமூன் றாமே. ... 1

நோக்கென் பதுவே கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டார் ஈர்த்தே
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பே. ... 2

அகமும் புறமும் திணையென் றாகும்;
அகமாம் மனத்தின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரமே. ... 3

கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.
கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்றென் பதுவாம் அவர்களின் பேச்சே. ... 4

சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே. ... 5

மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையே. ... 6

முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.
துறையென் பதுவாம் மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறுப டுதலே. ... 7

2.04. யாப்பும் தூக்கும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பென் பதுவாம் பாட்டின் செயல்வகை;
தூக்கென் பதுவாம் ஓசையில் இடைவெளி:
’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... ... ... [தொல்.பொ.313]
தூக்கென் பதுவே தாளமும் குறிக்கும்.
தூக்கின் தாளம் எழுவகை யாகும்.
மரபெனப் படுவது நிறுவிய வழக்கெனில்
தூக்கெனப் படுவது மதிப்பாய் தலுமே. ... 1

செய்யுள் உறுப்புகள் முப்பதின் நான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து, 
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாய் உள்ள உறுப்புகள்.
மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவதே. ... 2

2.05. யாப்பியல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்துடன் அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபும், இழைபும் என்று மொத்தம்
பத்தும் நான்கும் யாப்பியல் அமைப்பாம். ... 1

பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.
மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவதே. ... 2

2.06. மூவகை யாப்பு
(நிலைமண்டில ஆசிரியப்பா)

யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.
அடிப்படை உறுப்புகள் ஏழென் றாகும்:
மாத்திரை, எழுத்துடன், அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்றே. ... 1

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபே. ... 2

2.09. செய்யுள் உறுப்புகள் பயிற்சி
(நேரிசை ஆசிரியப்பா)

செய்யுள் உறுப்புகள் தேர்ந்துளம் அறியச்
செய்முறைப் பயிற்சி தேறுவீர் 
கைமனப் பயிற்சிகள் காணுவீர் இங்கே:

பயிற்சிகள்

*** *** ***

Tuesday, August 2, 2016

1.00. கடவுள் வாழ்த்து

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

1. உறுப்பியல்
1.00. கடவுள் வாழ்த்து

கணபதி தியானம்
(கலிவிருத்தம்: கூவிளம் விளம் விளம் விளம்)

வெண்துகில் உடுத்தவர் வெளியெனப் பரந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் விளங்குநாற் கரத்தினர்
கண்ணுறும் ஓங்காரர் கழல்தியா னித்துநான்
பண்ணுநூல் பொருளுடன் பயனுறப் பணிவனே! ... 1

1.01. அவையடக்கம்
(அளவியல் நேரிசை வெண்பா)

கற்றறிந்தோர் நூல்களைச் சற்றேனும் கற்பதில்
பெற்றசில செய்திகளின் பெற்றியை - மற்றவரும்
பார்த்துப் படித்தறிந்து பாக்கள் முனையவே
யாத்தேன் ’கவிதையில் யாப்பு’. ... 1

கற்றதைச் செய்முறையாய்க் காட்டும் குழந்தைநான்!
குற்றம் பொறுத்தே குறைநிறை கொண்டென்றன்
நூலைப் படித்துநீர் நூதனமாய் யாப்பறிந்தே
கால்நிற்கச் செய்வீர் கவி! ... 2

1.02. பாயிரம்
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)

யாப்பின் இலக்கணம் ஏதோ பிலாக்கணமாய்
ஆப்பை அசைத்த அரியெனவே - மூப்பில்
புதுக்கவிதை என்றே புனையும் கலைப்பு
பொதுவாகும் இற்றைநாள் போக்கு. ... 1

[அரி = குரங்கு; மூப்பில் = பிடிவாதத்தில்]

மென்பொருள் யாப்பதில் மேவும் இலக்கணம்
பின்பற் றுவதில் பெருமையைக் காண்போர்
இலக்கணச் செய்யுள் இயற்று வதிலே
மலைத்தே விலகலெவண் மாண்பு? ... 2

வெண்பா அகவல் விதரணையில் ஓசையின்
பண்பிலே மேவும் பவித்திரம் - எண்ணம்
எழுத்தில் இசைந்தே எழுவதுபோல் இந்த
ஒழுங்கற்ற பாவிலுறு மோ? ... 3

உடைத்தே இடுவதை ஓசையுடன் சொன்னால்
வடிவுறும் யாப்பில் வனப்பாய்க் - கடைத்தேறும்
உள்ளத்தில் சொற்களின் ஓசை மனனமாய்த்
தெள்ளியே காணும் திரு. ... 4

கலைத்தே எழுதியும் கட்ட அகவல்
கலையென் றிணைக்குறள் காணுமே! சற்றுநீர்
சோம்பலை நீக்கியே சொல்வதைக் கட்டினால்
காம்பீரம் கொள்ளும் கவி. ... 5

யாப்பை உரைநடை யாகத் தருவதன்
கோப்பில் உறும்சொல் குறைத்துநான் - யாப்பைக்
கவிதையில் செய்வதில் கல்லாய் மனதில்
கவிந்தே நிலைக்கும் கருத்து. ... 6

அறிமுகமே இன்னூல் அறுதியென் றில்லை
பிறநூல் பழம்நூல் பிடித்தே - அறிவின்
வறுமையைப் போக்கும் வளங்களைக் கண்டே
நிறைவதைக் கொள்ளுவீர் நேர். ... 7

1.03. செய்யுளும் கவிதையும்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

குறிப்பு
வெறும்பா (blank verse) என்பது செந்தொடையாகக்
குறிப்பிட்ட பாவகை/பாவினம் பயிலும் செய்யுள்.

செந்தொடை என்பது, எதுகை, மோனை போன்ற தொடைகள் 
இன்றியே சொற்களின் இயல்பான தன்மையால் சொல்லும், ஒலியும், 
பொருளும் அழகுற அமைவது.

யாப்பெனச் சொல்வது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்த தியாப்பே. ... 1

[பிறந்தது + யாப்பே = பிறந்ததியாப்பே = குற்றியலிகரப் புணர்ச்சி]

எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்தே அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். ... 2

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் சிலநேர் சொல்லே. ... 3

கவிதை என்பது கவினுற விதைத்தல்
கவிஞர் உணர்வைக் கண்படக் கலித்தல்
பாட்டென் பதுவாம் பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. ... 4

[கலித்தல் = ஒலித்தல்]

மலர்மருக் கொழுந்தும் மருவித் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். ... 5

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் நாரெனச் சொன்னால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம். ... 6

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாம் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் கருப்பொருள் மனமே. ... 7

கவிதையில் மனத்தைக் கலந்துரை யாட
கவிதையும் மனத்தைக் கவர்ந்துயிர் கொள்ள
செய்யுள் யாக்கையைக் செறிவுடன் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
ஊடக ஓசையை, முழுவதும் துய்ப்போம். ... 8

*** *** ***