கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi
கவிதையில் யாப்பு
ரமணி
1. உறுப்பியல்
2.00. செய்யுள் உறுப்புகள்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பதின் நான்கில்
சொல்வதைக் கவிதை மரபில் முனையும்
வல்லோர் நாடும் அடிப்படை உறுப்புகள்
வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே. ... 1
மாத்திரை, எழுத்தும், அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம், பயன்,மெய்ப் பாடு,
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்துடன், இயைபு,
புலனும், இழைபும் என்னும் இவையே
தொல்காப் பியம்தரும் முப்பதின் நான்கே. ... 2
2.01. செய்யுள் இயற்ற
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுள் என்ப தியாதெனக் கேட்பின்
மெய்யில் தங்கும் உயிரை நோக்கிச்
செய்யுள் இலக்கணம் நன்னூல் சொலுமே. ... 1
பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள். ... 2
தோலும் இரத்தமும் தசையும் சதையும்
எலும்பும் மச்சையும் வீரியம் என்னும்
எழுவகைத் தாதுவால் இயன்றிடும் உடல்போல்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
என்னும் நால்வகைச் சொற்களில் அமைந்து
அகம்புறம் பொருளினை அணிபெற விளக்கிக்
கல்வியில் வல்லோர் உணர்வினை உரைத்தல்
செய்யுள் என்னும் இலக்கிய வடிவே. ... 3
எழுத்தால் ஆவது சொல்லென் பதனால்
எழுத்தும் சொல்லும் பொருளும் அணியும்
பழுதற நான்காய் நடப்ப தியாப்பே. ... 4
செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே. ... 5
பாவே செய்யுளாய்ப் பாடப் படுவது
அந்தப் பாவும் அளவுடன் வருவது;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாமே. ... 6
இந்த ஏழு உறுப்புகள் யாவும்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் செவ்விதின் கட்டும்.
வழக்கென் பதுவே பேச்சு வழக்காம்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே. ... 7
2.02. வரிகள் அமைக்க
(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுள் அமைக்க ஏழெனும் உறுப்பெனில்
வரிகள் அமைக்கப் பன்னி ரண்டாம்
வனப்பு தொடையே, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, இழைபு, புலனே
என்பன அந்தப் பன்னி ரண்டாம். ... 1
(குறள் வெண்செந்துறை)
வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு. ... 2
விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டெனும் உறுப்பே. ... 3
வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி. ... 4
எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகென் பதுவாம். ... 5
தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு. ... 6
[பொற்பு = பொலிவு, அழகு]
விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும். ... 7
வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
குறிப்பால் பயின்று சொல்வது புலனாம். ... 8
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபெனச் சொல்வரே. ... 9
2.03. பொருள் உணர்த்த
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பதிமூன் றாமே.
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்றிவை பதிமூன் றாமே. ... 1
நோக்கென் பதுவே கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டார் ஈர்த்தே
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பே. ... 2
அகமும் புறமும் திணையென் றாகும்;
அகமாம் மனத்தின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரமே. ... 3
கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.
கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்றென் பதுவாம் அவர்களின் பேச்சே. ... 4
சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே. ... 5
மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையே. ... 6
முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.
துறையென் பதுவாம் மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறுப டுதலே. ... 7
2.04. யாப்பும் தூக்கும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பென் பதுவாம் பாட்டின் செயல்வகை;
தூக்கென் பதுவாம் ஓசையில் இடைவெளி:
’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... ... ... [தொல்.பொ.313]
தூக்கென் பதுவே தாளமும் குறிக்கும்.
தூக்கின் தாளம் எழுவகை யாகும்.
மரபெனப் படுவது நிறுவிய வழக்கெனில்
தூக்கெனப் படுவது மதிப்பாய் தலுமே. ... 1
செய்யுள் உறுப்புகள் முப்பதின் நான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து,
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாய் உள்ள உறுப்புகள்.
மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவதே. ... 2
2.05. யாப்பியல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்துடன் அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபும், இழைபும் என்று மொத்தம்
பத்தும் நான்கும் யாப்பியல் அமைப்பாம். ... 1
பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.
மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவதே. ... 2
2.06. மூவகை யாப்பு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.
அடிப்படை உறுப்புகள் ஏழென் றாகும்:
மாத்திரை, எழுத்துடன், அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்றே. ... 1
செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபே. ... 2
2.09. செய்யுள் உறுப்புகள் பயிற்சி
(நேரிசை ஆசிரியப்பா)
செய்யுள் உறுப்புகள் தேர்ந்துளம் அறியச்
செய்முறைப் பயிற்சி தேறுவீர்
கைமனப் பயிற்சிகள் காணுவீர் இங்கே:
பயிற்சிகள்
*** *** ***